Monday, March 21, 2011

வலது புறம் செல்லவும் - இயக்குனர் அகத்தியன்





இயக்குனர் அகத்தியன்21-03-2011, 11.45 PM

வணக்கம்

உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி, சுஜாதா சார் ஒரு சிறுகதை எழுதியிருக்காரு, ஒரு பொண்ணு பாண்டிபஜார்ல பஸ்சை விட்டு இறங்குவா, பின்னால வந்தவன் செருப்பை மிதிச்சு அறுத்துருவான், செருப்பு வாங்கிக் கொடுப்பான், ஆறுமாசத்தில வயித்துல ஒரு கொழுந்தையோட தற்கொலை பண்ணிக்கப்போவா, மேலே இருந்து ஒரு தேவதூதன் வருவான், தற்கொலையை நிறுத்துவான், என்ன வரம் வேணும் கேளும்பான், ஆறுமாசத்துக்கு முன்னால இருந்த மாதிரி ஆகணும்பா, அப்படியே ஆயிடுவா.

அதுசரி, இங்க, இப்ப, இந்தக் கதை எதுக்கு?

எனக்கும் ஒரு ஆசை, மேலே இருந்து ஒரு தேவ தூதன் வரவேண்டும், என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க வேண்டும், எல்லோரும் நல்லவர்களாக மாற வேண்டும், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கேட்க வேண்டும், அது கிடைக்க வேண்டும்,

“அப்படி ஒண்ணு கெடைச்சுட்டா அதை வச்சிகிட்டு என்ன பண்ணப் போறீங்க”,

“அப்படி ஒண்ணு கெடைச்சிருச்சுனு வைச்சுக்குங்களேன். இந்த நிமிஷத்துலேர்ந்து உலகத்துல இருக்குற எல்லோரும் நல்லவங்க ஆயிடுவாங்க, உண்மையை மட்டுந்தான் பேசுவாங்க”,

“மாறிட்டா?”
“ஆமாம்,,”
“சரி சொல்லுங்க”

ஆடு திருடிய வழக்கில் கைதான ராசா மட்டன் பிரியாணி யார் யார் சாப்பிட்டாங்கனு சொல்லிடுவாரு (நன்றி: kolaaru@twitter.com)

சுப்ரமணிய சாமி நான் பேசுனா , என்னனு சொல்லிடுவாரு,

63 நாயன்மார்களை எப்படி நாத்திகம் ஒத்துக்குச்சுனு நாட்டுக்குத் தெரிஞ்சிடும், அதவிடுங்க, போனவாரம் போன் பண்ணி இன்னும் பத்து நாள்ல குடும்பத்தோட ஊருக்கு வர்றேன் மாமானு சொன்ன பொண்ணு. “மாமா எலக்ஷன் வருது. ஆறு ஓட்டு, ரெண்டு பக்கமும் ஆறுரெண்டு பன்னிரெண்டு, எலக்ஷன் முடிஞ்சு வர்றேன்”னு சொல்லிருச்சு, நான் சொன்ன மாதிரி வரம் கெடைச்சா,

“மாமா நேர்மையாயிட்டேன், நாளைக்கே வர்றேன்,

“நாளைக்கு எப்படி வருவே, ஆறுபேரு, டிக்கெட் கிடைக்கணுமே”

“எல்லோரும் நல்லவங்க ஆயிட்டாங்க மாமா,”

“ஏஜெண்டெல்லாம் புக்கிங்கை கேன்சல் பண்ணிட்டாங்க கவுண்டர்லயே டிக்கெட் கெடைக்குது,,,”

கொஞ்சம் கண்மூடிப் பாருங்கள், எத்தனையோ நிர்வாணமான பெண்கள் சேதப்படுத்தப்படாமல் உடைகள் அணிந்து கொள்கிறார்கள், அதில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கலாம்,

“சத்தியமா நான் உன்னை ஏமாத்தத்தான் காதலிச்சேன் என்னை மன்னிச்சிடு”

“நான் உன்னைக் காதலிக்கும்போதே அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுடா”,

“அய்யோ,,, நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேங்க,"

“போன வாரம் நான் இதுமாதிரி நல்லவனா மாறி இருக்கக் கூடாதா, உன் தங்கச்சியையும் என்னையும் மன்னிச்சிடு,,,,”

காதுகளில் மன்னிப்புகளின் மணி அடித்துக் கொண்டே இருக்கும்,

பெரியோர்களே, தாய்மார்களே,

“இதுவரை அரசியல் வாழ்க்கையில் நான்செய்த கற்பழிப்புகள். கொலைகள். மோசடிகள். ஏமாற்றுக்கள். சம்பாதித்த பணம் இப்படி எல்லாவற்றையும் இந்த மக்கள் மன்றத்தில் சொல்லி உங்கள் மன்னிப்பைக் கோர வந்திருக்கிறேன்”,

ஒரு அரசியல் மேடையில் இப்படியும் கேட்கலாம்,

சிக்னலை மீறாத போக்குவரத்து. சிக்னலை விட்டு தள்ளி மறைந்து நின்று வாகனங்களை புலிபோல் பாய்ந்து மடக்கி பணம் பறிக்காத போக்குவரத்துத்துறை, காவல்நிலையத்தில் உண்மை பேசும் குற்றவாளி, குற்றவாளியை அவனது அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்காத காவலர், இப்படி எல்லா இடங்களிலும் ஒழுக்கம். உண்மை. நேர்மை, யோசிக்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னவோ இடிக்கிறது,

“எல்லோருமே நல்லவங்க ஆயிட்டா அப்புறம் எதுக்கு காவல்துறை - நீதிமன்றம்?”

அப்துல்கலாமுக்கு அரெஸ்ட் வாரண்டும். குஷ்புவுக்கு Community Certificate-ம் வாங்கி அப்புறம் மீடியா எப்பிடி பொழப்பு நடத்துறது, தினத்தந்தியில கள்ளக்காதல் வராது, சதக் சதக் வராது, அது இல்லாம யாரு படிப்பாங்க? வனிதாவும் விஜயகுமாரும் சண்டை போட்டுக்கிட்டாதானே News, சமாதானம் ஆயிட்டா Loss இல்லீங்களா? N.D.T.V., CNNIBN, Times Now, Headlines Today எல்லாத்தையும் இழுத்து மூடிடணும், தினமும் 9 மணி Debated க்கு எந்த விஷயமும் கெடைக்காது, அப்பறம் கத்திக்கத்தி எப்படிப் பேசுறது,

தாடி வச்சுகிட்டு பக்கத்துல அமர்ந்து பயணிக்கிற முஸ்லிம் நண்பனை தீவிரவாதியோ என சந்தேகிக்க முடியாது, நற்செய்திக் கூட்டங்களில் முடவர்கள் நடக்க மாட்டார்கள், குருடர்கள் பார்க்க மாட்டார்கள், வாயும் பேசாது, காதும் கேளாது, தேவன் யாருக்காகவும் 12B பஸ்-ஐ 5 நிமிடம் தாமதப்படுத்திய காட்சி இருக்காது. முஸ்லிம் நாட்டில் முஸ்லிமைப் பிடிக்காமல் முஸ்லிமே குண்டுவைக்க மாட்டான், ராமஜென்ம பூமியும் ராமர்பாலமும் உண்மையைச் சொல்லி விடுதலை அடையும், இந்திய சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமிப்பதும் இல்லை என்ற ஆணவம் மறைந்துபோகும்,

நீதிமன்றங்களை மூடி விடலாம், காவல்நிலையங்களை மூடிவிடலாம், முதல்வர் பேருந்தில் பயணிப்பார், இலவசங்கள் இல்லாமல்போகும், நேரடி. மறைமுக பிச்சைக்காரர்கள் மறைந்து போவார்கள், உலக நாடுகள் ஆயுதச் செலவை ஒழிக்கும், ஒபாமா குனிந்து இன்னொரு முறை எந்தப் பெண்ணின் பின்னழகையும் ரசிக்க மாட்டார்,

2600 வருடங்களாக புத்தரை இறுக்கி கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பது நாம் தவறாக இருப்பதால்தான், நல்லவர்கள் ஆனதும் புத்தரைத் தூக்கிப்போட்டு விடலாம், இயேசு தேவைப்படமாட்டார், நபிகள் நாயகம், ம்ஹும்... வேண்டவே வேண்டாம், காந்தி, எதுக்குங்க அவரெல்லாம் நாம ஒவ்வொருவருமே ஒரு சத்தியசோதனை எழுதுவோம், அவ்வளவு உண்மை, நித்யானந்தா கூட கல்யாணம் செய்து கொள்வார், யாரை என்பது கேள்வியாக இருக்காது, எத்தனை பேரை என்பதுதான் கேள்வியாக இருக்கும், ஒன்றுமட்டும் உண்மை, உலகம் காவி கட்டாத சாமியாராகி விடும், “நித்யானந்தா சாமியார் இல்ல, இமயமலை சாமியார்”,

“என்னங்க உலகம் சாமியாராயிட்டா போரடிக்காதா”,

“கண்டிப்பா,” நம்பியார் இல்லாத எம்ஜிஆர் சினிமா மாதிரி போரடிக்கும்,

பைபிளே பொய்யிலயும் கொலையிலயும் தான் ஆரம்பிக்குது, கண்ணன் அர்ச்சுனனைக் கூப்பிட்டு கொலை பண்ணச் சொல்றான், நபிகள் வாளேந்தித்தான் இஸ்லாத்தை வாழவச்சாரு,

ராமன் வந்தது ராவணனைக் கொல்றதுக்கு, ஆனா புத்தர் வந்தது கொல்லாமையை போதிக்கிறதுக்கு, பாண்டவர்கள் அஞ்சு ஊரோ அஞ்சு வீடோதான் கேட்டாங்க, கொடுத்திருக்கலாம், நூறு அண்ணன் தம்பிக்கும் ஆசை - பேராசை, ஆசையே துன்பத்துக்கு காரணம்னு அப்ப புத்தர் வந்து ஏன் சொல்லலை?

சரி, நமக்கு எதுக்குங்க அதெல்லாம் எல்லோரும் நல்லவங்க ஆயிட்டா உலகம் இமயமலை சாமியாரா ஆயிடும், நம்பியார் இல்லாத எம்,ஜி,ஆர், படம் மாதிரி போரடிக்கும்,

அப்பறம், அரசாங்கமே குற்றம் செய்தால் பரிசுனு அறிவிக்கும், மஞ்சள்கோட்டை தாண்டினால் 50 ரூபாய் பரிசு, கற்பழித்தால் தங்கமெடல்,

அப்பத்தானே இயக்கம் இருக்கும், எதிர்விசை இல்லா இயக்கம் எப்படி சாத்தியம், கர்த்தருக்கும் சாத்தானுக்கும் தானே உடன்படிக்கை,

அப்பிடின்னா "சரி” மட்டும் இருந்தா போதாது, “தவறும்” இருக்கணும், அப்பத்தான் இயக்கம், புத்தர். ஏசு. நபிகள் பேச்சைக் கேட்டு எல்லோரும் திருந்திட்டா பூமி போரடிச்சிடும்,

நல்லதுங்கிறது உதாரணத்துக்கு கெட்டதுங்கிறது உபயோகத்துக்கு, 'கோட்சே'ங்கிற கெட்டதுனால காந்திங்கிற நல்லது உதாரணமா இருக்கு, கோட்சே மட்டும் சுடலைனா காந்தி ரொம்ப நாள் இருந்து நெறைய வம்புல மாட்டி இருப்பாரு,

ஆஸ்வால்ட் கென்னடியை சுடலைன்னா பில்கிளிண்டன் ரேஞ்சுக்கு காணாம போயிருப்பாரு, இப்ப மோனிகா லெவின்ஸ்கினா அப்ப மர்லின் மன்றோவா இருந்திருக்கும், அப்ப யார் யாருக்கெல்லாம் கெட்டது நடந்துச்சோ,

அதனோட உபயோகமா நல்லது உதாரணம் ஆயிடுச்சு, பைபிள்ல யோவான்ல இருந்து - நம்ம அன்னை இந்திரா காந்தி உட்பட,

ஐ.கே. குஜ்ரால். தேவகௌடா. நரசிம்மராவ். மொரார்ஜிதேசாய். வாஜ்பாய் இவங்களை எல்லாம் யாருனு ஞாபகம் இருக்கா?

ஆக “கெட்டது” என்பதும் வாழ்க்கையோட ஒருபகுதி, ஒருவனை மற்றவன் அடித்ததனால்தான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற அகிம்சையை ஏசுவால் போதிக்க முடிந்தது,

ஒருத்தி பாலியல் தொழிலாளியாக இருந்த காரணத்தினால்தான் உங்களில் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியட்டும் என்ற உன்னதமான தீர்ப்பினை வழங்க முடிந்தது,

மனிதாபிமானமற்ற சமூகம் இருந்ததினால்தான் உன்னைப் போல் பிறரை நேசி என்ற மனிதவளச் சிந்தனை ஏசுவுக்கு தோன்றியது,

ஆசைப்பட்டதினால்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னார்,

“நாம தப்பு பண்ணுனாத்தான் மகான்களுக்கே பூமியில வேலை, இல்லேனா நாமளே மகான்கள் ஆயிடுவோம்”,

சரி! இவர்களை மகான்கள் ஆக்குவதற்கு நாம் செய்கின்ற தப்பை ஒழுங்காச் செய்கிறோமா? கூட்டிக் கழித்துப் பார்த்தால் “இல்லை” (லா,சா,ரா, வுடையது)

“பண்ற தப்பை எப்படி ஒழுங்கா பண்றது?”

வணக்கம்..

உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி, பண்ற தப்பை எப்படி ஒழுங்காப் பண்றதுனு நாம கொஞ்சம் பேசப் போறோம், இந்த இரண்டாவது வணக்கம் இதைத்தொடர்ந்து படிப்பவர்களுக்காக.

அந்தக் கதையில - அதாங்க சுஜாதா சார் கதையில வரம் கெடைச்ச உடனே அந்தப் பொண்ணு அவ கேட்டபடி ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி அதாவது பழைய மாதிரி ஆயிடுவா, அப்பறம்?, மறுபடியும் அவ பாண்டிபஜார்லேர்ந்து பஸ்ஸ விட்டு இறங்குவா.

“அப்படினா நடக்கணும்னு இருக்குறது நடந்தே தீருமா?”

“அதப்பத்தியெல்லாம் நாம இப்ப பேச வேணாம்”

“சரிங்க”

“நீங்க குடிப்பீங்களா?”

“ம், குடிப்பேன்”

“அது தப்புனு நெனைக்கிறீங்களா?” எல்லோரும் சொல்றாங்க, அதுனால நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்.

அப்ப ஜீசஸ் ஒயின் குடிச்சாரு, கல்யாணத்துல ஒயின் பத்தலைன உடனே தயாரிச்சாரு, அவருகிட்டே கேட்டிருந்தா இப்பிடித்தான் பதில் சொல்லியிருப்பாரா?

ஆனா Contrast பாருங்க, நபிகள் குடிக்கிறது தப்புனு சொன்னாரு,

காந்தி நபிகளை follow பண்ணுனாரு, பக்கத்துல இருந்த ஜின்னா ஜீசஸ் follow பண்ணுனாரு, குடிக்கிற விஷயத்துல மட்டும் விஸ்கிக்கும் மூன்றெழுத்து - ஜின்னாவுக்கும் மூன்றெழுத்துனு யாராவது கவிதை கூட எழுதலாம்,

நம்ம ஊரு ஐயனாரு சாராயம் குடிக்கிறாரு, இப்ப கொஞ்சம் Brandy, Whiskey வரைக்கும் வந்திருக்காரு, டெல்லியில காளிமாதா Brandy குடிக்கிறாங்க, எல்லா சாமியுமே சோம பானம். சுராபானம் குடிச்சவங்கதான்.

எனவே தோழர்களே பெரியர்கள் எல்லாம் குடித்த ஒன்றைத்தான் நாமும் குடிக்கிறோம், (விருப்பமுள்ள தோழியர்கள் தோழர்களுக்குப் பக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம்,)

ஆனா ஒரு பிரச்சனை, அவங்க குடிச்சா வரலாறு ஆகுது, நாம குடிச்சா வாந்தி ஆகுது,

ஆக பண்ற தப்பை நமக்கு ஒழுங்காப் பண்ணத் தெரியலை,

ரொம்பப் பேசிட்டேன்..

இந்த வாரம் வரைக்கும் இதுவரையில குடிச்ச மாதிரியே குடிங்க..

அடுத்தவாரம் மாத்திக்கலாம்..

அன்புடன்
அகத்தியன்.


No comments:

Post a Comment