Sunday, April 26, 2009

ஜி.என்.பாலசுப்ரமணியம் (G.N.B) - லலிதா ராம்


செப்டம்பர் 24-ஆம் தேதி, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இசைக் கருத்தரங்கில் ஜி.என்.பி-யைப் பற்றி பேச ஒரு வாய்ப்புக் கிட்டியது. அக்கருத்தரங்கில் வெளியான ஆய்வுக் கோவையில் இக்கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. டபுள் லைன் ஸ்பேசிங்கில் ஐந்து பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டியிருந்த்தால் பல விஷயங்களை மேலோட்டமாகவே இக்கட்டுரை தொடுகிறது. By no standards this could be considered a research article. Just an attempt to show the tip of the ice berg.

கர்நாடக இசைக் கச்சேரி முறையை தமிழுக்கு ஒப்பிட்டோமெனில், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் கச்சேரிகள் தொல்காப்பியத்திற்கிணையாகும். தொல்காப்பியம் படித்தவர் பலரிருப்பினும், காலத்தை கடந்து நிற்கும் வெண்பாக்களையும் விருத்தங்களையும் அகவல்களையும் படைத்திருப்பவர் சிலரே. அதே போல், அரியக்குடி இராமானுஜர் ஐயங்கார் அமைத்துக் கொடுத்த கச்சேரி முறையை பின்பற்றியவர் பலரெனினும், இசையுலகில் என்றுமழியாச் சுவடை விட்டுச் சென்றவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் முதன்மையாக விளங்குபவர் 'ஜி.என்.பி' என்று பரவலாய் அழைக்கப்பெற்ற கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.

ஜி.என்.பி என்னும் இசையுலக இளவரசரின் தோற்றம், ஜி.வி.நாராயணசாமி ஐயர் விசாலம் அம்மாள் தம்பதியினரின் வீட்டில், 1910-ஆம் வருடம் ஜூன் 6-ஆம் நாள் நிகழ்ந்தது. பார்த்தசாரதி சங்கீத சபையின் காரியதரிசியாகவும் ம்யூசிக் அகாடமியின் 'experts commitee' உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த நாராயணசாமி ஐயரின் வீட்டில், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பல்லடம் சஞ்சீவ ராவ், பூச்சி ஸ்ர்நிவாச ஐயங்கார் போன்ற சங்கீத ஜாம்பவான்களின் கூட்டம் எப்பொழுதும் குழுமியிருக்கும். இச்சூழலில் வளர்ந்த ஜி.என்.பி-யின் மனம் சங்கீதத்தின்பால் ஈர்க்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை

1957-ஆம் வருடம் வெளியான 'My First Concert' என்ற ஜி.என்.பி-யின் கட்டுரையில் (தமிழாக்கம் பின்வருமாறு), " நான் பிறந்த நாள் முதல் எனைச் சுற்றியிருந்த சூழல் சங்கீத மயமாகவே இருந்தது. இதனால் எனது சங்கீத ஞானமும் அதன் பால் இருந்த ஈர்ப்பும் கிளைவிட்டு நாளுக்கு நாள் வளர்ந்தபடியிருந்தது. என் வீட்டிலிருந்தபடியே அற்புதமான சங்கீதத்தைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. நல்ல சங்கீதத்தில் ஊறியதன் பயனாய் சஹானா, செஞ்சுருட்டி, பேகடா, சாவேரி போன்ற இராகங்களை பிழையின்றி பாட முடிந்தது. ஒரு குருவிடம் சென்று முறையாகப் பயிலாவிடினும் எனக்கு ஸ்வர ஞானம் சிறு வயதிலேயே கைக்கூடியது. இதற்குக் காரணம் பெரியோர்களின் ஆசியே என்பது என் கருத்து.' என்கிறார்.

ஜி.வி.நாராயணசாமி ஐயர் தனது மகன் வழக்கறிஞராவதையே விரும்பினாரெனினும் ஜி.என்.பி-யிடமிருந்த சங்கீத தாகத்தை உணர்ந்தவராய் சங்கீத சிக்ஷையுமளித்தார். அந்நிலையில், அவர் குடியியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் வயலின் வித்வான் மதுரை சுப்ரமணிய ஐயர் குடியேர, அவரிடமும் சில காலம் ஜி.என்.பி சங்கீதம் பயின்றார்.

1928-ஆம் வருடம், மயிலை கபாலீசுவரர் கோயில் வசந்த உத்சவத்தில் ஏற்பாடாகியிருந்த முசிறி சுப்ரமண்ய ஐயரின் கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகிவிட, அக்காலத்தில் இசைத் தோண்டில் ஆழ்திருந்த ஏ.கே.இராமசந்திர ஐயரும் மதுரை சுப்ரமணிய ஐயரும், நாராயணசாமி ஐயரிடம் ஜி.என்.பி-யின் கச்சேரிக்கு அனுமதியளிக்க வேண்டினர். நாராயணசாமி ஐயர் முதலில் சிறிது தயங்கினாலும், பின்பு அனுமதியளித்தார். சங்கீத வித்வானாவதையே இலட்சியமாய் கொண்டிருந்த ஜி.என்.பி-க்கு இவ்வாய்ப்பு மகிழ்வளித்தாலும், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்ற ஜாம்பவானின் இடத்தை தன்னால் நிரப்ப முடியமா, என்ற அச்சமும் கூடவேயிருந்தது. ஜி.என்.பி, மானசீக குருவாக உருவகித்திருந்த அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் இசையுலகப் பயணம், திருப்பரங்குன்றத்தில் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை ஏற்பாடு செய்திருந்த மதுரை புஷ்பவனத்தின் கச்சேரி ரத்தான பொழுது, அங்கிருந்த இளைஞரான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி புகழின் உச்சியை அடைய வைத்த நிகழ்வை, மதுரை சுப்ரமண்ய ஐயர் எடுத்துரைத்தவுடன், ஜி.என்.பி-யின் தயக்கம் தளர்ந்து கச்சேரிக்குத் தயாரானார். அக்கச்சேரியைக் கேட்ட கே.எஸ்.முத்துராமன் தனது புத்தகத்தில், “ஜி.என்.பி பாடிய பந்துவராளியும், பைரவியும், அடாணாவும் ஒரு மஹாவித்வானின் இசை சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டின", என்கிறார்.

ஜி.என்.பி என்று நினைத்ததும் மனதில் முதலில் தோன்றுவது அவரின் கந்தர்வ குரல்தான். ஆழ்ந்த சங்கீத ஞானமும், அதீத கற்பனையும், அக்கற்பனையில் தோன்றுவதையெல்லாம் வெளிக்கொணரக் கூடிய அதிசயக் குரலும் கொண்ட அபூர்வ கலவையே ஜி.என்.பி. இக்கூற்றிற்கு அவர்தன் இளம் வயதில் கொடுத்திருக்கும் 'வாசுதேவயனி' கிராம்போன் ரிக்கார்டு ஒன்றே சான்று. வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றும் மக்களிடையில் பிரபலாமாக இருக்கும் இப்பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை. கல்யாணி இராகம் ஒரு பிரவாகம் போன்றது. அதன் முழு ஸ்வரூபமும் பல மணி நேரம் பாடினால் கூட முழுமையாய்க் கொண்டு வருவது துர்லபம். பத்து நிமிடத்திற்குள், ஒரு மின்னல் வேக ஆலாபனை, மத்யம கால கீர்த்தனை, ஸ்வர ப்ரஸ்தாரம் எல்லாம் பாடி, கேட்பவர் மனதில் நிறைவை ஏற்படுத்தியிருக்கும் ஜி.என்.பி-யின் அந்த ஒரு வெளியீடே அவரின் இசையாற்றலுக்கு தக்கச் சான்று.

இன்று கேட்கக் கிடைக்கும் ஜி.என்.பி-யின் கச்சேரிகளை பலமுறை அலுக்காமல் கேட்டிருப்பவன் என்னும் முறையில், அவரது கச்சேரியைப் பற்றிய சில குறிப்புகள் பின் வருமாறு. கச்சேரிகளில் ‘களை கட்டுதல்’ என்றொரு பதம் உண்டு. அதை விளக்க முயல்வது வீண் முயற்சி. அதன் பொருள் உணர ஜி.என்.பி-யின் கச்சேரியின் முதல் உருப்படியைக் கேட்டால் போதும். அவரது கச்சேரிகளில் இன்று நமக்கு அதிகம் கேட்கக் கிடைப்பது அவரது கடைசி 10 வருட வாழ்வில் பாடிய கச்சேரிகளே. அவற்றை மட்டும் ஆராய்ந்தால், விறுவிறுப்பான வர்ணம் அல்லது ‘யோசனா’, ‘தெலிசி ராம’ போன்ற மின்னல் வேகக் கீர்த்தனை அல்லது ‘வாதாபி கணபதிம்’ போன்ற மத்யம காலக் கீர்த்தனை, அல்லது சஹானா போன்ற ரக்தி ராகத்தில் அமைந்த ‘ஈ வசுதா நீவண்டி’ போன்ற கீர்த்தனை, என்று பல வகைகளில் கச்சேரி தொடங்கும். எப்படித் தொடங்கினும் கச்சேரியைக் களை கட்டும்படிச் செய்வது அவரது தனிச் சிறப்பாகும்.

அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் பத்ததியின் படி மத்யம காலக் கீர்த்தனங்களே ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் நிறைந்திருக்கும். சவுக்க கால கீர்த்தனங்களும் கச்சேரியின் விறுவிறுப்பை குறைத்திடா வண்ணம் இடம் பெறும். ஜி.என்பி-யின் கற்பனையைப் பறைசாற்றும் வகையில் ஒரே இராகத்தின் ஆலாபனை கச்சேரிக்கு கச்சேரி அல்லது அவர் பாடும் கீர்த்தனத்திற்குக் கீர்த்தனம் மாறுபடும். அவரது ஆலாபனைகள் இரசிகரைக் குழப்பாமல், முதல் பிடியிலேயே இராக ஸ்வரூபத்தை தெளிவாகக் காட்டிவிடும். பல பிரபலமான இராகங்களில் புதிதாய் சில பிரயோகங்கள் பாடியிருப்பதும் (உ.தா கல்யாணி, காம்போஜி ராக ஆலாபனைகள்), அந்நாளில் புழக்கத்திலில்லா இராகங்களை புழக்கத்திற்கு கொண்டு வந்திருப்பதும் (உ.தா: மாளவி, செஞ்சு காம்போஜி, காபி நாராயணி, டக்கா, தீபகம்) ஜி.என்.பி-யின் பல இசைத் தொண்டுகளுள் குறிப்பிடத்தக்கவை. வாழ்நாள் முழுவதும் தன்னையொரு மாணவனாகவே கருதிக் கொண்ட ஜி.என்.பி, தனது கடைசி காலம் வரை புதிய கீர்த்தனங்கள் கற்றபடியிருந்தார். 'சோபில்லு', 'சரஸ சாம தான', 'மறுகேலரா', 'தாமதமேன்', 'ப்ரோசேவா', 'மா ரமணன்' போன்ற பாடல்களைப் பிரபலப் படுத்தியதுடன், பல கீர்த்தனங்களில் நிரவல், கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பல புதுமைகள் புரிந்துள்ளார். உதாரணமாக, ‘ ஸ்ர் சுப்ரமண்யாய நமஸ்தே' பாடலில் பெரும்பான்மையானவர்கள் நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் இடம் 'வாசவாதி சகல தேவ' என்பதாகும். ஜி.என்.பி-யின் நுண்ணறிவு 'தாபத்ரய ஹரண' என்னும் இடத்தில் 'தா பா' என்னும் ஸ்வராக்ஷரப் பிரயோகம் ஒளிந்திருப்பதைவுணர்ந்திருக்கிறது. இதே போல 'மீனாக்ஷி மேமுதம்', 'நிதி சால சுகமா' போன்ற பாடல் நிரவல்களிலும் ஜி.என்.பி-யின் கற்பனைத் திறன் உள்ளங்கை நெல்லிக்கனி. கல்பனை ஸ்வரங்கள் பாட அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தின் பொருத்தம் பலரின் பாராட்டைப் பெற்றவொன்று. ஜி.என்.பி-யின் சங்கீதத்தில் லயத்தில் உறுதியான பிடியிருப்பினும், ஸ்வரம் பாடும் பொழுது சர்வ லகு முறையையே பின்பற்றப் பட்டு இராக பாவம் கெடா வண்ணம் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும்.

ஜி.என்.பி-யின் இசையுலகிற்குப் பல புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்திருப்பினும், அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'ஸ்ருதி பேதம்' அல்லது 'கிரஹ பேதம்' ஆகும். நமது நாட்டின் இசை வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஒரு தாய் இராகத்தின் கிரஹ பேதத்திலிருந்து பிறந்தவையே பல இராகங்கள் என்று இலக்கியங்களின் மூலம் தெரிய வருகிறது. காலப் போக்கில் வழக்கொழிந்து போன இம்முறையைக் கச்சேரியில் ஜி.என்.பி பிரயோகித்த பொழுது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஜி.என்.பி-யின் செயலில் தகுந்த நியாயம் இருப்பதாக முத்தையா பாகவதர் தலைமையில் குழுமியிருந்த அறிஞர் குழு முடிவு கூறியது. ஓர் ராகத்தில் 'ஸ்ருதி பேதம்' செய்யும் பொழுது அதுவரை உருவாக்கிய பாவம் கெடாமல் இருப்பது அவசியம். இக்கம்பி மேல் நடக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்ற முதல் கலைஞர் ஜி.என்.பி எனலாம்.

ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் பிரதான உருப்படியாக 'ராகம் தானம் பல்லவி' பெரும்பாலும் இடம் பெறும். பெரும்பாலும் இப்பகுதிக்கு முன் 'நெனருஞ்சினானு', 'விடஜால', 'ராமசந்திரம் பாவயாமி' போன்ற அதி துரித கீர்த்தனை இடம் பெறும். கச்சேரி களை கட்டி, குரலும் நல்ல பதத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜி.என்.பி பல பகுதிகளாய் பிரித்துக் கொண்டு ஒரு இராகத்தை ஆலாபனம் செய்வது வழக்கம்.

ஓவியர், தான் வரையப் போகும் விஷயத்தை சில கீற்றுகளாய் முதலில் நிரப்புவது போல, விஸ்தரிக்கப்படும் இராகத்தின் ஸ்வரூபம் சில கீற்றுகளில் காட்டப்படும். இரண்டாம் கட்ட ஆலாபனையில் மந்திர ஸ்தாயியில் உள்ள பிரயோகங்களில் கவனம் செலுத்தப்பட்ட, நாதஸ்வரப் பாணியில் பல அழகிய ஸ்வரக் கோர்வைகள் கோக்கப்படும். மூன்றாம் கட்டமாக தார ஸ்தாயிப் பிரயோகங்கள் இடம் பெறும். அவரது சங்கீத வாழ்வின் உச்சியில் இருந்த சமயத்தில் தார ஸ்தாயி தைவதம், நிஷாதம் போன்ற எட்டாக் கனிகளைக்கூட எட்டிப்பிடிக்கும் அற்புதக் குரலாய் அவர் குரல் விளங்கியதென்று அவர் கச்சேரிகளைக் கேட்ட பலர் கூறுகின்றனர். தார ஸ்தாயி ப்ரயோகங்களைத் தொடர்ந்து குரலை முதலில் பம்பரமாய் சுழலவிட்டு, அதன் பின் ராட்டினமாய் மூன்று ஸ்தாயிகளிலும் சுழலவிட்டு, கடைசியில் ஓர் சூறாவளி போல் ராகத்தின் பல இடங்களில் சஞ்சரித்து கேட்பவர் மனதில், அந்த ராகத்தில் பாட இனி ஒன்றுமில்லை என்னும் நிறைவு ஏற்படும்படியான சூழலை உருவாக்கிவிடும். குறைந்த பட்சம் 40 நிமிட ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானமும் அதன் பின் பல்லவியும் பாடுவார். பல்லவிக்கு எடுத்துக் கொள்ளும் இராகங்களில் கல்யாணி, தோடி, காம்போஜி, பைரவி போன்ற கன இராகங்கள், தேவ மனோஹரி, சஹானா, ஆந்தோளிகா போன்ற அதிகம் பாடப்படாத இராகங்கள் என்று பல வகைகளில் பாடியிருக்கிறார். பல்லவியமைப்பும் 2 களை, 4 களை போன்ற கடினமான அமைப்பில் பாடியிருப்பினும் பல ஒரு களை பல்லவிகளும் பாடியிருக்கிறார். ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸ்தாரம் அனைத்துமே இராக ஸ்வரூபத்தை வெளிக் கொணரும் பொருட்டேயிருக்கும். பல்லவிக்கு ஸ்வரம் பாடும்பொழுது வரும் இராகமாலிகை ஸ்வரங்களுக்கு இரசிகர்களிடையில் அதீத வரவேற்பிருந்தது.

ஜி.என்.பி கச்சேரிகளில், பல்லவியைத் தொடர்ந்து வரும் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. பல இராகங்களில் அழகிய படப்பிடிப்பாய் விளங்கும் விருத்தங்கள், ஸ்லோகங்கள் தவிர அவரே மெட்டமைத்த 'திக்குத் தெரியாத காட்டில்', 'சொன்னதைச் செய்திட சாகசமா', போன்ற துக்கடாக்கள் இடம் பெறும், கச்சேரி முடியும் பொழுது பாமரரும் பண்டிதரும் மன நிறைவுடன் செல்வதென்பதுறுதி.

சாரீர அமைப்பைப் போலவே சரீர அமைப்பும் பெற்றிருந்த ஜி.என்.பி, திரைப்படத்துறையில் 1934 முதல் 1937 வரை 'சகுந்தலை', 'ருக்மாங்கதன்', 'பாமா விஜயம்', 'உதயணன் வாசவதத்தா' போன்ற திரைப்படங்களில் நடித்தும் பாடியும் பெரும் பிராபல்யம் அடைந்தார். இவரது வாழ்வில் பல கௌரவங்களைப் பெற்றிருப்பினும் 1958-ஆம் வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை இவருக்கு வழங்கி மியூசிக் அகாடெமி பெருமை தேடிக் கொண்டது. வாகேயக்காரராய் ஜி.என்.பி இசைக்கு ஆற்றிய தொண்டு அளப்பெரியதாகும். ‘சிவ சக்தி’, ‘அம்ருத பேஹாக்’ போன்ற அரிய இராகங்களிலிம், பிரபலமான இராகங்களில் சில அரிய பிரயோகங்கள் உபயோகித்தும், மிஸ்ர ஜம்பை போன்ற சுட்பமான தாள அமைப்பிலும் அவர் அமைத்திருக்கும் கீர்த்தனங்கள் இன்று பரவலாய் பாடப்படுகின்றன. ஜி.என்.பி, பாடகராக மட்டுமல்லாமல் சங்கீத ஆச்சாரியராகவும் மிகவும் பிரபலமாக இருந்தவராவார். அவரது பாணியை நிலை நிறுத்தும் வண்ணம் எம்.எல்.வி, திருச்சூர் இராமசந்திரன், தஞ்சாவூர் எஸ், கல்யாணராமன் போன்ற சிஷ்யர்களை இசையுலகிற்குத் தந்த பெருமையும் ஜி.என்.பி-யைச் சேரும். பாடகராய், வாகேயக்காரராய், குருவாய், நடிகராய் பல சாதனை புரிந்த ஜி.என்.பி-யின் வாழ்க்கை 55 வருட காலம் மட்டுமேயிருந்தது இசையுலகின் துர்பாக்யம் ஆகும்.

தொடர்ந்து இசைப்போம்...


மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com



1.வில்லுப்பாட்டு - புதிய பாரதி: 13-04-09: 10: 30 PM



போர் மனிதனை விலங்காக்குகிறது. கலை மனிதனின் மனதை லேசாக்கி, கருணையையும், கனிவையும் புகுத்தி தெய்வமாக்குகிறது. கால் போக்கில் நடந்து, மனம் போன போக்கில் இயங்கிய ஆதிகால மனிதன், வேட்டைக்கருவியாக 'வில்'லை இனங்கண்ட காலத்திலேயே இசைக்கருவியாகவும் அது பரிணமித்து விட்டது. பசியாறிய களைப்பு நீங்க, வில்லை திருப்பி வைத்து நாணால் தட்டி கானகத்தை கலங்க வைத்த ஆதி மனிதனே முதல் வில்லிசைக்காரன்.

அதன் பின் போர்க்கருவியாக 'வில்' பரிமாணம் பெற்றபோது, வில்லடியும் களம் மாறியது. வில்லிசை, வெற்றியாளனின் குதுகலமாக அவதரித்தது. தொடர்ச்சியாக, நாகரீகம் மனித இனத்தின் பாதையை மாற்றி, இயந்திரவியல், மின்னணுவியல் சகாப்தங்களில் நிறுத்தி விட்ட தருணத்திலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து, உருவ, உள்ளடக்க மாற்றங்களுடன் மிஞ்சி காலத்தோடு இன்றும் கலந்திருக்கிறது வில்லிசை.

வில்லிசை உக்கிரமான மகிழ்ச்சி. எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் குரலும், மனமும் போன போக்கில் உதித்த இந்தக் கலை போர்க்களத்தில் தொய்ந்து நிற்கும் போர்வீரர்களின் களைப்பை நீக்கவும், தங்கள் மூதாதைகளின் வீர வரலாற்றை போதித்து உரமேற்றவும் பயன்படுத்தப்பட்டது தான் ஜனரஞ்சகமான வரலாற்றின் தொடக்கம். 

இந்த கலையை முறைப்படுத்தி, இலக்கணமிட்டு அறங்கேற்றியவர் 15ம் நூற்றாண்டை சேர்ந்த பெயர் தெரியாத ஒரு அரசவைப்புலவர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொரு தரப்பு, அருதக்குட்டி புலவர் தான் வில்லிசையை இலக்கணச் சுத்தமாக முழுமைப்படுத்தினார் என்கிறார்கள். இக்கலை கி.பி.1550ம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்ட கொடை விழாக்களில் இன்றளவும் வில்லிசை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என வட்டாரத்துக்கேற்ப பெயரிட்டு அழைக்கின்றனர். தற்காலத்தில் கோவில் சார்ந்த நாட்டார் கலையாக இதன் வடிவம் சுருங்கி விட்டது. 

இந்த கலைக்குறிய மேடை, தெய்வத்தின் நேர் எதிரில் அமைக்கப்படும். வில்லுப்பாட்டு நடத்தப்படும் கோவிலின் தலைமை தெய்வத்தைப் பற்றிய கதையே பாடலில் முதன்மை பெறும். பனங்கம்பு, மூங்கில் ஆகிய மரங்களில் வில் செய்யப்படுகிறது. வில்லிசை கருவியின் நாண் இல்லாத பகுதி வில் கதிர் எனப்படுகிறது. ஏழு அடி நீளமுள்ள வில்கதிரின் நடுப்பகுதி பெரிதாகவும், வில்லோடு இணையும் அதன் முனைகள் சிறிதாகவும் இருக்கும். கதிரின் மேல் வண்ணத்துணிகளை கட்டி அழகுபடுத்தி சாயம் பூசப்படுகிறது. கதிரின் இரு முனைகளிலும் வெண்கலத்தால் இரண்டு பூண்கள் பொருத்தப்பட்டு அதில் நாண் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். விற்கதிரின் பின்னால் வளைந்த பகுதியில் நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டு அதில் வெண்கல மணிகள் இணைக்கப்பட்டிருக்கும். வில்க்கதிரின் நாண் மாட்டுத்தோளால் செய்யப்படும். 

பாடும் போது இசைவாணர் வில்லின் நாண் மீது வீசி இசையெழுப்பும் கம்புக்கு "வீசுகோல்" என்று பெயர். குழாய் போன்ற வடிவத்தில் இருக்கும் அந்த கோலின் உள்ளே வெண்கல பரல்கள் இடப்பட்டிருக்கும். நாணில் இந்த வீசுகோல் விழும்போது சலசலவென்று பரல்கள் ஒலியெழுப்பி வசீகரிக்கும். வில்லிசையின் முக்கிய துணைக்கருவி குடம். இதை கடம் என்றும் சொல்வதுண்டு. மண்ணால் செய்யப்பட்டு சுட்டு வடிவாக்கப்படும் குடத்தை இசையெழுப்பும் கருவியாக்க சில சித்து வேலைகள் செய்யப்படும். வாழை நார் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட பந்தடையில் குடத்தை வைத்து இசைக்கலைஞர் பாடலுக்கு தகுந்தவாறு இசையெழுப்புவார். குடத்தில் அடித்து இசையெழுப்ப "பத்தி" என்ற கோலை பயன்படுத்துவர். பத்தியால் அடித்தால் குடத்திற்கு பாதிப்பு வருவதில்லை. தற்காலத்தில் வசதி குறைந்த கலைஞர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் குடங்களையே இசைக்கவும் பயன்படுத்துகின்றனர். 

வில்லிசையின் இன்னொரு முக்கிய துணை இசைக்கருவி உடுக்கை. இடை சுருங்கியும், வாய் பெருத்தும் இருக்கும் உடுக்கையின் இரு முகப்புகளிலும் பனங்கிழங்கு நாரால் வளையங்கள் செய்து கோர்த்து, கன்றுக்குட்டியின் தோலைக் கட்டி காய வைத்து இசைப்பார்கள். உடுக்கை தான் இசையை உக்கிரமாக்கும். பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிக்கு கொண்டு சென்று, மேடையை தெய்வீகமயமாக்குவது இந்த இசைக்கருவி தான்.

அடுத்த துணை இசைக்கருவி ஜால்ரா. இது தவிர தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கட்டை என்ற இசைக்கருவியும் வில்லுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது மரபு வழி இசைக்கருவிகள் தவிர, ஆர்மோனியம், தபேலா, ஆல்ரவுண்ட், பம்பை உள்ளிட்ட பல கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. பாடல் பாடுபவரை "அண்ணாவி" என்கிறார்கள். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருவிகளுக்கு பூஜை நடைபெறும். முதலில் அண்ணாவி அமருவார். பின் பிற கலைஞர்கள் அமருவர். தொடக்கத்தில், அனைத்து கலைஞர்களும் ஒரு சேர "ராஜமேளம்" இசைப்பார்கள். பின் காப்புப்பாடல், குரு வணக்கம், அவை வணக்கம். பிறகு கதை தொடங்கும். பெரும்பாலும், 

"தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட 
ஆமா வில்லினில் பாட.. வந்தருள்வாய் கணபதியே.." என்றே நிகழ்ச்சியை தொடங்குவார் அண்ணாவி. 5 அல்லது 6 மணி நேரத்துக்கு நீளும் வில்லிசை. அண்ணாவி வில்லில் அடித்து இசையெழுப்பிக்கொண்டே அபிநயத்தோடும், வார்த்தைகளுக்கு தகுந்த ஏற்ற இறக்கங்களோடும் பாட, மற்றவர்கள் சுவாரசியமாக "ஆமா.." என்பார்கள். சில நேரங்களில் இடக்காகவும் பேசி அவையை நகைப்பூட்டுவார்கள். பரம்பரைக் கலைஞர்கள் ஒத்திகை பார்க்கும் வழக்கமில்லை. இசையில் மிகவும் லயித்துப்போய் பாடுவார்கள். 

ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் இக்கலையில் ஒரு சில பெண்களும் ஜொலித்திருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் பல இளம் பெண்கள் பாடுகிறார்கள். திரைப்படத்தின் தாக்கங்களுக்கு உட்பட்டும் நசிந்து போகாமல் இன்று வரை சிற்சில சிதைவுகளோடு மிஞ்சியிருப்பது வில்லிசையின் சிறப்பு. தொழில்முறையாக வில்லிசையைக் கைகொண்ட கலைஞர்கள் இன்று வறுமையில் வாடி வருகிறார்கள். சிற்சில நெளிவு சுழிவுகளோடு திரையுலகம் சார்ந்து இயங்கும் சில கலைஞர்கள் செழிப்போடு இருக்கிறார்கள். பலர் எயிட்ஸ் விழிப்புணர்வு, காச நோய் விழிப்புணர்வு என்று வடிவத்தை மாற்றி வயிறு வளர்க்கும் சூழலும் நிலவுகிறது. ஆனாலும், எந்த சமரசமும் இல்லாமல் இன்னும் இதை தெயவீக கலையாக உருமாற்றாமல் பயன்படுத்தும் கலைஞர்களும் கொஞ்சம் மிஞ்சியிருக்கவே செய்கிறார்கள்.

வில்லிசையில் சாத்தூர் பிச்சைக்குட்டியை மிகவும் பிரசித்தி பெற்ற கலைஞராக அடையாளப்படுத்தலாம். திரையுலகம் பிச்சைக்குட்டியின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பிச்சைக்குட்டியிடம் வில்லிசை பயின்றவர்கள். இடைக்காலத்தில் நாடார் இன மக்களிடம் செழிப்புற்றிருந்த இக்கலை இடையில் நசிவுற்று பிற்காலத்தில் பிள்ளைமார்கள் மீட்டு வளர்த்தெடுத்ததாக சொல்கிறார்கள். 

நாகர்கோவில், திருநெல்வேலி வட்டாரங்களில் அண்மைக்கால ஊடகத்தாக்கங்களைத் தாண்டி பலத்த ரசிகர் கூட்டத்தினிடையே இன்றளவுக்கும் நடைபெற்று வருகிறது வில்லுப்பாட்டு.

அடுத்த வாரம் கணியன்கூத்து.

மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com


சீனப் பயணக் கட்டுரைகள் - சக்தி ஜோதி

மகளிர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக செயல்பட்டதற்காக 2007 –- 2008ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விருது தேனி நேருயுவகேந்திரா நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்தியா முழுவதும் மாநில அளவில் விருது பெற்றவர்களில் இருந்து 15 சமூகப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் ஒருவராக தமிழ்நாட்டின் சார்பாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாநில விளையாட்டுத் துறை மூலமாக அருள்கண்மணி என்ற மாணவியும் பரதம் மற்றும் சிலம்பக் கலைக்காக தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்திலிருந்து நாங்கள் இரண்டு பேர் மட்டும் இந்த தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்தோம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அமைச்சர் Dr. M.S. Gill மற்றும் இந்தியாவிற்கான சீனத்தூதர் (Ambassodor of China) Mr.H.E .ஷெங்யாங் (H.E.Zhang young) வழியனுப்ப Mr.S.K..அரோரா தலைமையில் டில்லியிலிருந்து புறப்பட்ட நாங்கள் முதலாவதாக சீனாவின் தலைநகரம் பெய்ஜிங் சென்றடைந்தோம்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த அரசு உயர் அதிகாரிகளான திரு.நேதுஜெய்பாய், திருமதி. சாரதா அலிகான், திரு. கேவல்யா மற்றும் திரு. ஞானராஜசேகரன் அவர்களும், நியமிக்கப்பட்டிருந்தார்கள்.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.ஞான ராஜசேகரன் அவர்களும், திரு.S.K..அரோரா அவர்களுக்குப் பதிலாக ப்யூஷோ நகரில் எங்களோடு இணைந்து கொண்டார்.

மொத்த குழுவையும் தன் பக்கம் கவனம் திருப்ப வைத்த இன்னொரு நபர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன். இவர் ஆங்கிலம் தெரியாத, ஹிந்தி மட்டுமே தெரிந்த சிலரிடம் பேசி அசத்துவதில் வல்லவர். (கமலக்கண்ணனுக்கு ஹிந்தியில் ஒரு வார்த்தையும் தெரியாது) டெல்லியில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நித்யா வாத்வா (பஞ்சாப்) என் அறைத் தோழியாக அமைந்ததில் இருவரும் மகிழ்ந்தோம். நித்யா தன் கல்லூரி படிப்பு முடித்த பின்பு சமூகப் பணியில் முழுநேரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்திலிருப்பவர். இப்போதே நிறைய சமூகப் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

ஐந்து நிமிடம் தாமதமாக கிளம்பியதில் நானும், நித்யாவும் முதல் நாளே வழிநடத்துனர்களாக உள்ள அதிகாரிகளிடம் நன்கு அறிமுகமாகிவிட்டோம். நேரம் தவறாமை என்பது பொதுவாகவே வெளிநாட்டு பயணங்களில் தீவிரமாகவே கடைபிடிக்கப்படுவதுண்டு.

அறுபது சதவீதம் மாணவ மாணவிரும், நாற்பது சதவீதம் சமூகப்பணி மற்றும் பஞ்சாயத்ராஜ் பணியாளர்களும் கலந்து கொண்ட வித்தியாசமான இந்த குழு சீனாவிற்கான இந்திய தூதர் திருமதி. நிருபமா ராவ் அளித்த வரவேற்பு இரவு விருந்தில் கலை நிகழ்ச்சிகளால் சீனர்களை வியப்பிலாழ்த்தினோம். நான் 2005ம் ஆண்டு ஸ்ரீலங்கா சென்றிருந்த போது அப்போது இலங்கையின் இந்திய தூதராக நிருபமாராவ் இருந்தார்.

அவர், அப்போது நடந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசியிருந்தார். இந்தியாவிலிருந்து வந்திருந்ததால் என்னிடம், என் கட்டுரையை பாராட்டி பேசியிருந்தார்;. எனவே தற்சமயம் சீனாவின் இந்திய தூதராக இருக்கும் திருமதி.நிருபமாராவை மீண்டும் சந்திப்பதில் என் மனதில் பரபரப்பு கூடியிருந்தது.

துவக்க உரை முடிந்த பின்பு இரவு விருந்திற்கு முன்பு நிருபமாராவை சந்தித்து இலங்கை நிகழ்ச்சியை நினைவு படுத்தினேன். அவர் அந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்திருந்தது மட்டுமின்றி, இலங்கையில் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய லங்கா மகிளாசமிதியின் நிர்வாகி ராணிஹெராத் பற்றியும் என்னிடம் விசாரித்தார். அவர் என்னை நினைவில் வைத்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இரவு உணவிற்கு பின்பு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் லோக்கல் சிம்கார்டு கிடைக்காதலால், வேறு எங்கே வாங்கலாம் எனறு விசாரித்தோம். ஹோட்டலின் வரவேற்பு பெண்மணி எழுதிக் கொடுத்த முகவரியை கண்டதும் அதிர்ச்சியடைந்தோம். ஏனெனில் அவர் சைனீஸ் மொழியில் எழுதிக் கொடுத்திருந்தார்.மேலும் அவர், கடைகளின் பெயர் பலகைகள் அனைத்தும் சைனீஸ் மொழியில்    தான்   இருக்கும்   என்றும்   கூறி

எங்களை மேலும் குழம்ப வைத்தார். ஆனால் அங்கு செல்வதற்கான பாதையை வரைபடமாக வரைந்து கொடுத்து உதவி செய்தார்.

எங்களோடு இருந்த சிலர் பயந்து பின்வாங்க, சிம்கார்டு வாங்குவதற்காக என்னுடன் கமலக்கண்ணன், அருள் கண்மணி மற்றும் ஹசன் (அலிகார்க்) மட்டும் வந்தனர். ஏதோ தைரியத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் நாங்கள் நடந்து சென்றோம். டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பாதை காட்ட, பதினைந்து நிமிட நடைப்பயணத்திற்கு பின்பு ஒரு வழியாக மூடியிருந்த கடையை கண்டுபிடித்தோம். என்ன செய்வதென்று அறியாமல், ஒருவித ஏமாற்றத்தில் திரும்பலாம் என நினைத்த போது எதிரில், இருந்த ஒரு புத்தக கடையில் விசாரிப்போம் என்று ஹசன் கூற நாங்கள் அங்கு சென்றோம்.

ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியில் கூறி சிம்கார்டு கேட்டாலும் புரியாமல் திணறிய கடைக்கார பெண்மணி விளக்கம் கேட்பதற்காக ஒரு சிறிய கூட்டத்தையே கூட்டி விட்டார். திடீரென எனக்கு தோன்றிய யோசனை, மொபைல் போனிலிருந்து சிம்கார்டை கழட்டி காட்டி கேட்டவுடன் புரிந்து கொண்டு சிம்கார்டை அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த மிகப்பெரிய பிரச்சனை, சிம்கார்டு எவ்வளவு பணம் என்பது தான்.

சைனீஷ் மட்டுமே தெரிந்த அவர்களிடமிருந்து என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் எங்களிடம் இருந்தது அமெரிக்கன் டாலர். அவர்கள் யுவான் தான் வேண்டும் என்று கூற, ஒருவழியாக அவர்களை புரியவைத்து, ஒரு சிம் கார்டுக்காக இந்திய பணம் RS.1200/- கொடுத்து வாங்கினோம். வீட்டிற்கு போன் செய்து பேசியவுடன் எனக்கும், என் வீட்டினருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அனைவரை விடவும் வீட்டோடு அதிக தொடர்புடன் இருந்து நானும், அருள் கண்மணியும் தான்.

தொலைபேசியில் பேசுவதை விடவும் மிக எளிதாக தொடர்பில் நான் இருந்தால், தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த உணர்வு துளியும் ஏற்படவில்லை. என் அலுவலக பணிகளும் கூட தேக்கம் இன்றி இருந்தது. அலைபேசி தமிழகத்திற்கும் சீனாவிற்குமான தூரத்தை குறைத்து விட்டது. சீனப் பயணத்தில் பெறப்போகிற அனுபவங்கள் பற்றிய கனவுகளோடு முதல் நாள் நிறைவுற்றது.

பயணிப்போம்...


மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com

யாவரும் கேளிர் - பகுதி - 1 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)


ஓவியம்: மு. ராஜ்குமார்

செல்லப்பா வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து செல்லத்துக்கு அப்பாவாகி போனவன். ஆறு முடிந்து ஏழைத் தொடும் வயது. தண்ணீரை கையால் அள்ளி தனக்கு மட்டுமே சொந்தமென சுயநலம் கொண்டாடும் குணம். அவன் வயது பிள்ளைகள் அவன் விரும்பியதை வைத்திருந்தால், அதைப்பிடுங்கி தன்னுடையது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, தனது பெட்டகமாக வைத்துள்ள குடிசை வீட்டினுள் குன்றுபோல நிற்கும் குளுமைக்கும், குட்டிச்சுவருக்கும் இடையில் மறைத்து வைத்துக்கொள்வான். 

மே மாதம் பிறந்து மேகமூட்டமும் கருமை கட்டத் தொடங்கிவிட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்தாயிற்று. செய்தித்தாளே அறியாத வேலாயிகூட தண்ணீர் வருவதை விளாவாரியாக, தேனீர் அருந்திக்கொண்டு (காந்திக்கணக்கில்) திண்ணைக்கடையில் கதையளந்துக் கொண்டிருக்கிறாள். காத்து வாங்கப்போன அய்யாக்கண்ணு டீக்கடைக்கிட்ட குய்யோ மொய்யோவென கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து ஆச்சர்யத்தோடு வருகிறார். புலவன்காட்டு வெளங்கொண்டார் போனவருஷம் அறுவடை முடிஞ்சி, வட்டியும் மொதலும் வாங்கி வேட்டியில முடிஞ்சிக்கிட்டு பொய்கை கிராமத்தைவிட்டுப் போனவரு இப்பதான் வந்துக்கிட்டு இருக்காரு.

அவர் எப்பவுமே பல கலர்ல டவுசர் போட்டுகிட்டு, தன்னோட வேட்டிய தாமரை ஏரியில நனச்சி, தலைக்கு மேல இரண்டு கையிலும் பிடிச்சு, காத்துல காயவச்சிக்கிட்டுதா வருவாரு. அவர பின்தொடர்ந்து வெள்ளையன், தம்பிக்கண்ணு, சின்னுமொய்ந்தார், தனபால் கவுண்டர் எல்லோரும் வெள்ளையும் சொள்ளையுமா கதர் வேட்டிசட்ட மினுமினுக்க கடன் வாங்க வந்துகிட்டு இருக்காங்க.

ஆனா ஒண்ணு வெளங்கொண்டார் எப்பவுமே கந்துவட்டி கலாச்சாரம் பண்ணுவதே இல்ல. நெல் அறுவடை முடிஞ்சுவுடனே அவர்கிட்டதான் கொள்முதல் பண்ணணும். அவரும் ஆத்து தண்ணி வருமுன்னே கடன் கொடுக்க வந்துட்டாரு. பொன்டுவசட்டி ராமையா வெளங்கொண்டாரப் பார்த்து 

‘வாய்க்குள்ளே வந்துட்டான் வட்டிசெட்டி…ஒரு வருஷமா ஊருகுள்ள வராதவன் ஆத்துல தண்ணி வந்ததும்…அறுத்தவுடனே மரக்காள்ல நெல்ல அளவில்லாம அள்ளிக்கிட்டுப் போறதுக்கு’ என்று முணுமுணுக்க….

"என்ன ராமையா வாய்க்குள்ளயே பேசிக்கிற? 
என்று வெளங்கொண்டார் கேட்க, 
"அது ஒன்னுமில்லன்னே... அதெல்லாம்...அதான் வந்துட்டீங்களே மேட்டூர் தண்ணியோட கடன் கொடுக்க..."

சாரதாம்பாள் கேழ்வரகு சமைக்க, காஞ்சமுள் பொறுக்க, கருவேலங்காட்டுக்கு செல்கிறாள்;. முள்பொறுக்கப்போகும் தாயின் முந்தானயப் புடிச்சிகிட்டு செல்லப்பனும் போகிறான். உச்சிவெயில் முடிஞ்சு பொழுது சாய்கிற நேரம். அவசர அவசரமா முள்ளப்பொறுக்கி முந்தானயில மூட்டைக்கட்டி, தலையில சுமந்துகிட்டு வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள் சாரதாம்மாள், பின்தொடர்ந்து செல்கிறான் செல்லப்பனும். தலையில குத்துற முள்ளின் வலி தாங்க முடியாமல் ஓட்டமும் நடையமுமாக தாய் செல்ல, சப்பாத்திக்கள்ளிப் பழத்த தின்னுக்கிட்டு இரத்த சிவப்பா செவந்துப்போன வாயோட செல்லப்பனும் ஓடுகிறான். வீடு சேர்ந்தாள்; சாரதாம்மாள், சமையல் வேலை முடிந்து வீடே பரபரப்பாகிறது. பலமாதம் கழுவ மறந்த மாட்டுத்தொழுவத்த சுத்தம் செய்து சீர்படுத்துகிறாள். வெள்ளிச்சந்தைக்கு மாடுவாங்கப்போன சாமி அய்யா மயிலக்காளையுடன் விளக்கு வைக்கும் முன்னே வந்துகொண்டிருப்பதை தெருவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனது அப்பா வாங்கிவந்த மாயவரத்து காளைய பார்க்க கன்றுக்குட்டி துள்ளி ஓடிவருவதைப்போல ஓடிவருகிறான் செல்லப்பா. பகலை மறைக்க இரவும் வந்துவிட்டது. மழைய துரத்த மேகமும் கூடிவிட்டது. 

சாமி அய்யா மாடுகளுடன் வாசலில் வந்து நிற்கிறான். ஒரு பக்கம் நாய் குரைக்க மறுபக்கம் மாடுகளுக்கு ஆராதணை செய்து மாட்டுத்தொழுவத்தில் கட்டி விட்டு, மாடு வருமுன்னே அறுத்து வைத்திருந்த புல்லை போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே மாடுகளைப்பற்றி கதை அளந்துகொண்டிருக்கிறான் மகனிடம்.

“டேய் செல்லா…” (சாமி அய்யா செல்லப்பனை செல்லமாக இப்படிதான் கூப்பிடுவான்) 
“என்ன அய்யா?” (கிராமங்களில் அப்பாவை அய்யா என்றழைப்பது வழக்கம்.)
“நீ அந்த மச்சக்காளைகிட்ட மட்டும் போயிடதே. அது பாச்சக் காள. தரவு பாக்க வந்தவனையே பாய்ஞ்சிரிச்சி…”

(பாவம் மாடுகள். சந்தைக்கு வருபவர்கள் எல்லாரும் மாடுகள பல்லப்புடுச்சி பார்க்கிறது; தொடையில தட்டுறது; வாலை முறுக்கிறது; முதுகுல கிள்ளிப்பார்க்கிரதுன்னு கொடுமைகளை பண்றாங்க. அப்புறம் மச்சக் காளைய ஒரு தரவுப்பாக்கற பய வாலை அதுக்கு வலிக்கிறமாதிரி கிள்ளிப்புட்டதால வலி பொறுக்கமுடியாமல் முட்டி தள்ளிடுச்சி அந்த வாயில்லா ஜீவன். முட்டுற மாட்ட   வாங்க ஆளில்லாம     வீச்சு    வெலையில சாமி அய்யா வாங்கிவந்தது வேறு விஷயம்) சாமி அய்யா சாப்பிட்டு முடிக்குமுன்னே, ‘ஏய் செல்லம் போய் படுத்துத் தூங்கு. நாளைக்கு வெள்ளென எந்திரிச்சு படிக்கணும். நாங்களெல்லாம் நாலு எழுத்து படிக்காம பட்டாம் பூச்சி புடிச்சிகிட்டு திரிஞ்சதாலதான், அஞ்சுக்கும் பத்துக்கும் அலையறோம். நீயாவது நல்லாபடிச்சி நாலுபேருக்கு சோறு போடணும்…’

என்று சொல்லி முடிக்கும் முன்னே உறங்குதைப் போல கண்களை மூடிக்கொண்டு, விடிந்தவுடனே காளையை நன்றாகப் பார்த்துவிட வேண்டுமென்ற நினைவுடன் தூங்கிவிடுகிறான். கிராமத்து வீடுகளில் எப்போதும் நடுவீட்டுக்குள் அழுக்குச்சேலை தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு சேலையை எடுத்து திரைச்சீலைபோல தொங்கவிட்டு, மறுபக்கம் படுத்துறங்கும் செல்லப்பாவை மறைத்துவிட்டு, சாமி அய்யாவும் சாரதாம்மாவும் சலனமில்லாமல் சரசமாடத் தொடங்கினா... செல்லப்பா மெதுவாக கண்விழித்தான். திரைச்சீலைக்கு அந்த பக்கம் கிசுகிசு சத்தம் கேட்டது. சில்லென்று மழைக்காற்று கதவு இல்லாத நிலை வழியாக வந்து அவனைத் தழுவியது. படுக்கையைவிட்டு மெல்ல எழுந்து பாய்ச்சக் காளையைப் பார்க்க மாட்டுத்தொழுவத்திற்கச் சென்றான். 

தொடரும்...

மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com

Thursday, April 23, 2009

தீபிகா குறும்பட விழா

சென்னையில் உள்ள டான் பாஸ்கோ நிறுவனம் எதிர் வரும் சனிக்கிழமை அன்று (25-04-09) குறும்பட விழா ஒன்றினை நடத்துகிறார்கள். இதில் சுமார் 25 குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் சிறந்த மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கி பராட்டப்படவிருக்கின்றன. எனவே ஆர்வலர்கள் திரளாக கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

நாள்: (25-04-09) சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி
இடம். தீபிகா தியேட்டர், டைலர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம்..அனைவரும் வருக.......

அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

Tuesday, April 14, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 11 -04 -09 : 12:03 PM

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 11 -04 -09 : 12:03 PM

கடந்த சனிக்கிழமை (11-04-2009)அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம்இனிதே நடைபெற்றது. இந்த மாதம் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது. 

முதலில் பத்து குறும்படங்கள் திரையிடப்பட்டன. பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. காலையில் பத்து குறும்படங்கள் பின்னர், மாலையில் மூன்று குறும்படங்கள் என இந்த மாதம் குறும்படத் திருவிழாவாக அமைந்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாசகர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர். குறும்பட உலகில் புதிய வரவாக செல்வி. திவ்யா அவர்கள் நுழைந்துள்ளார். இவர் இயக்கிய "இருண்ட வீடு" குறும்படம் இம்மாதம் காலையில் திரையிடப்பட்டது. தொடர்ந்து "Future","மரணக்குழி", "சத்தமில்லாத மரணங்கள்"போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டன.

குறும்படங்கள் திரையிடப்பட்டதும், அந்தக் குறும்படங்களின் இயக்குனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். 

பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. 

முதல் பகுதி:

இம்மாதம் இலக்கியப் பகுதிக்காக திரு. சுசி திருஞானம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். தன்னம்பிக்கை கதைகள் பழக கூறி, வந்திருந்த பல படைப்பாளிகளை ஊக்குவித்தார். தொய்வு நிலையில் இருக்கும் பல படைப்பாளிகள் இவரது பேச்சால் உத்வேகம் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர் எழுதிய புத்தகத்தில் இருந்து இவர் கூறிய மதுரா ட்ராவல் இயக்குனர் திரு. பாலாவின் உண்மைக்

கதையும், சன் டிவி திரு. கலாநிதி மாறனின் கதையும் ஆர்வலர்களுக்கு மேலும் தெம்பை ஊட்டியது. தொடர்ந்து பேசிய சுசி திருஞானம் அவர்கள் படிக்க வேண்டிய ஐந்து புத்தகனளை ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

சிறந்த பதிவர் விருதளிக்கும் நிகழ்வு:

இந்த முறை சிறந்த விருது திரு. வினோத் அக்னிப் பார்வை என்கிற அவரது வலைப்பூவிற்காக வழங்கப்பட்டது. இவர் நமது தமிழ் ஸ்டுடியோ.காமில் சார்லி சாப்ளின் தொடரை எழுதி வருகிறார் என்பது குறிப்படத்தக்கது. இவருக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் திரு. குணசேகரன் அவர்கள் விருது வழங்க அதைப் பெற்றுக் கொண்ட திரு. வினோத் அவர்கள் 15 மணித்துளிகள்

ஆர்வலர்களிடையே பேசி பல நல்லக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு ஒரு நல்லாப் பதிவாக அமைந்தது. மனிதருக்கு உண்மையில் நல்ல குரல் வளம் அமைந்துள்ளது. பாராட்டுகள். ஆனால் இந்த மாதம் சிறந்த பதிவருக்கு எங்களால் ஊக்கத் தொகை ஏதும் வழங்க முடியவில்லை. காரணம் தொடர்ந்து இணையதளத்தை எந்தவித வருமானமும் இன்றி நடத்தி வருவதாலும், குறும்பட வட்டம் நிகழ்ச்சிக்கு போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தினால், சில ஆயிரங்கள் நட்டம் ஏற்பட்டு விட்டதாலும் பதிவருக்கும் மற்ற குறும்பட படைப்பாளிகளுக்கும் எங்களால் ஊக்கத் தொகை வழங்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

இரண்டாம் பகுதி:

குறும்பட வழிகாட்டலுக்காக நாம் அழைத்திருந்த திரு. மாணிக்கம் அவர்கள் வர இயலாத காரணத்தால் இம்முறை நமக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர் இயக்குனர். திரு. அருண் மொழி அவர்கள். இவர் திரைக்கதை அமைப்பது பற்றிய கலந்துரையாடலை நடத்தினார். உண்மையில் வழிகாட்டல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பல ஆர்வலர்கள் நம்மிடையே தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

அந்த அளவுக்கு இந்த மாத வழிகாட்டல் பகுதியை மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொடுத்தார் அருண் மொழி அவர்கள். தொடர்ந்து ஆர்வலர்களின் வினாக்களுக்கு விடையளித்துப் பேசினார். குறும்படங்களுக்கு சென்சார் அங்கிகாரம் வாங்குவது குறித்து அவர் அளித்த விளக்கம் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. 

மூன்றாம் பகுதி:

இந்த மாதம் மூன்றாவது சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் திரு. ஜெயபாரதி அவர்கள் வந்திருந்தார். திரையிடப்பட்ட மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அவர் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

முதலாவதாக திரையிடப்பட்ட குறும்படம் "திரு. விஜிக்குமார்" அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்" என்கிறக் குறும்படம் திரையிடப்பட்டது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தந்தையின் கடைசிக் கட்ட வாழ்க்கை நிலையை இயக்குனர் படம் பிடித்திருந்தார். தன் மகனை படிக்க வைத்து பெரிய அரசாங்க பதிவியில் அமர வைத்த தந்தை இறுதியில் இறந்த பின்னர் குப்பைத்

தொட்டியில் தீமூட்டப்படுவதாக அமைந்திருந்தது இக்குறும்படம். ஆங்காங்கே சிலக் குறைகள் தென்பட்டாலும் இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது.

இரண்டாவதாக திரையிடப்பட்ட குறும்படம்"திரு. சக்தி பாரதி" அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்". சமூகத்தின் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை நிலைதான் இக்குறும்படம். இயக்குனர் இக்குறும்படத்தில் நடித்திருந்தார்.

கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருந்தால் இக்குறும்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். இயக்குனருக்கு வாழ்த்துகள்.

மூன்றாவதாக திரையிடப்பட்ட குறும்படம்"திரு. நீலகண்டன்" அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்து..." கண் தானத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் நல்லதொருப் பதிவாக அமைந்தது. முன்னரே நாம் பார்த்திருந்த ஒரு சிலக் காட்சிகள் படத்தில் தொய்வு ஏற்படத்தி இருந்தாலும் இயக்குனரின் நல்ல முயற்சிக்கு நமது வாழ்த்துகள்.

மூன்று குறும்படங்களும் திரையிடப்பட்ட பின்னர் அக்குறும்படங்களின் இயக்குனர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. திரையிடப்பட்ட மூன்று குறும்படங்களுக்கும் பாராட்டி தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

இறுதியாக மூன்று குறும்படங்கள் பற்றியும்இயக்குனர் "திரு. ஜெயபாரதி" அவர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். சற்றே காட்டமாக விமர்சித்தாலும் இறுதியில் இயக்குனர்களை தட்டிக்கொடுத்து அவர்களின் நல்ல எதிகாலத்துக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்தார். குறும்படங்களில் இசையை சத்தமாக வைத்து ஏன் படுத்தி எடுக்கிறீர்கள்..

ஒரு சிலக் காட்சிகளுக்கு இசையை விட மௌனமே சிறந்தது என்கிற கருத்தை பதிவு செய்தார். அனைத்து படைப்பாளிகளும் அதிகமாக இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்றும், இலக்கியத்தைப் படிக்காதத்தின் விளைவே இது போன்ற புரிதல் இல்லாத தவறுகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். உண்மையில் ஒரு நல்லாப் படைப்பாளியை சீர்படுத்தும் முயற்சியாக அவரது பேச்சு அமைந்தது. 

குறும்பட வட்டத்தின் இறுதி பகுதியாக ஆர்வலர்கள் தங்களை, தங்களின் திறமைகளை அறிமுகப் படுத்துக் கொள்ளும் பகுதி நடைபெற்றது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, என தங்களின் திறமைகளை ஆர்வலர்கள் அறிமுகப்படுத்த அவர்களின் தேவை இருக்கும் அனைவரும் அவர்களின் பெயர் மற்று தொலைபேசி என்னை குறித்துக் கொண்டனர்.

Saturday, April 4, 2009

தமிழ் ஸ்டுடியோவின் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு

தமிழ் ஸ்டுடியோ.காம் இல் வெளிவரு கேமரா தொழிழ்நுட்ப பயிற்சி வகுப்புகள், நேரடி வகுப்புகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உரிமம் இந்த முறை சென்னையை சேர்ந்தA.S.K. ஸ்டுடியோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

நாள்: மே 15 - 16, 2009 (மூன்று நாட்கள்) 
இடம்: A.S.K. ஸ்டுடியோ, சென்னை. (இந்த ஸ்டுடியோ சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் அமைந்துள்ளது.)


கட்டணம்: ரூபாய் 1750 மட்டும் (மதிய உணவு, திரைப்பட கேமரா பயிற்சி உள்ளிட்டவைகளுக்கும் சேர்த்து) தங்குமிடம் தேவை இருப்பவர்களுக்கு குறைந்த செலவில் இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

நேரடி வகுப்பின் பாடத்திட்டங்கள்.

1. ஒளிப்படம் மற்றும் திரைப்படக் கலை வரலாறு.
2. கேமரா வகைகள்
3. பிலிம் தோற்றமும் வளர்ச்சியும்
4. பிலிம் வகைகள் 
5. கேமராக் கோணங்களும், அதனை இயக்குதலும்
6. லென்ஸ் வகைகளும், அதன் செயல்பாடுகளும்

மேலும், திரைப்படத் தயாரிப்பின்

முன்னேற்பாடுகள் (Pre-Production) 
படப்பிடிப்பு (Shooting) 
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production)

ஆகியவையும் இதில் அடங்கும். இது மட்டுமின்றி மூன்று நாட்களும் திரைப்படங்களில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறும்.

மூன்றாம் நாள் குழுவாக பிரித்து கேமாராக்கள் கொடுக்கப்பட்டு மாதிரி குறும்படங்கள் எடுக்க பணிக்கப்படும். இதன் அடிப்படையில் சிறந்த ஒளிப்பதிவில் தேறும் ஒருவருக்கு உதவி கேமராமேன் வாய்ப்பு பெற்றுத் தர முயற்சிக்கப்படும். 

இது மட்டுமின்றி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு பயிற்சி கொடுக்கப்படும்.

தொடர்புக்கு: 9840698236, 9894422268, 9884135344

தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது

நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: காலை 10 முதல் இரவு  7 வரை 


10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம் 

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் 

திரைப்படங்களில் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரியும் திரு. மாணிக்கம் அவர்கள் இம்மாதம் குறும்படங்களுக்கான "ஸ்டோரி போர்ட்" உருவாக்கம் குறித்து வழிகாட்ட உள்ளார். மேலும் இவர் பல படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ கமலஹாசனின் பல படங்களுக்கு இவர்தான் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். விருமாண்டி, வெளிவராத மருதநாயகம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். எனவே வாசகர்கள் அது குறித்த தங்களது ஐயங்களை திரு. மாணிக்கம் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம். இந்நிகழ்வு முழுக்க முழுக்க ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகும். 

மூன்றாம் பகுதி:  (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

தி. நீலகண்டன் அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்வோம்"திரு. விஜிக்குமார்அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்", திரு. சக்தி பாரதி அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்..." ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும். 

மேலும் இம்மாதம் முதல் புதிதாக, குறும்படங்களை காண்பதற்கு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார். குறும்படங்கள் திரையிடப்பட்டு, கலந்துரையாடல் முடிந்த பின்னர் இந்த சிறப்பு விருந்தினர் அக்குறும்படங்கள் குறித்தான தனது பார்வையை வெளிப்படுத்துவார். 

இம்மாதம் இயக்குனர் திரு, ஜெயபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கிய "குருஷத்ரம்" திரைப்படம் இந்திய பாகிஸ்தான் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு இயக்கிய"நண்பா நண்பா" திரைப்படத்தில் நடித்ததற்காக திரு. சந்திரசேகர் அவர்கள் நடுவண் அரசின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.

சிறந்த வலைப்பதிவருக்கு சிறிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268 

Friday, April 3, 2009

சென்னையில் மிக நவீன வசதியுடன் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு

சென்னையில் மிக நவீன வசதியுடன் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு  
   
 
1.திரைப்படக் கேமராவுடன் கூடிய பயிற்சி
2.தொடர்ந்து மூன்று நாட்கள்
3.மூன்று நாட்களும் மூன்று திரைப்பிரபலங்களுடன் 
   கலந்துரையாடல்
4.தேர்ச்சி பெற்ற ஒளிப்பதிவாளர் பயிற்சியாளராக... 
5.மிகக் குறைந்த கட்டணம்


கலர் டெம்பரேச்சர் மற்றும் ஃபிலிம் வகைகள்:- சி. ஜெ. ராஜ்குமார், ஒளிப்பதிவாளர் நாள்:01-04-09 :06:30 AM

ஃபிலிம் பல ஸ்பீட் A.S.A (American Standards Association) களில் தயாரிக்கப்பட்டாலும் அனைத்து ஸ்பீட் வகைகளிலும் இரண்டு முக்கிய டெம்பரேச்சர்களில் தாயாரிக்கப்பட்டு வருகிறது. 

‘T’ ஃபிலிம் மற்றொன்று ‘D’ ஃபிலிம்
‘T’ என்றால் -டங்க்ஸ்டன் (Tungsten) ஃபிலிம்
‘D’ என்றால் -டேலைட் (Day Light) ஃபிலிம்
டேலைட் (D) வகையானது பகல் வெளிச்ச வெப்பத்திற்கு உட்பட்டது.
டங்க்ஸ்டன (T) வகையானது இரவு அல்லது வீட்டில் உள்ளே பயன்படும.

உதாரணத்திற்கு:

குண்டு பல்ப் வெப்பத்திற்கு உட்பட்டது.

ஃபிலிம் தயாரிப்பில் இவ்விரு Kelvin (டிகிரி கெல்வின்) கலர் டெம்பரேச்சர் வெப்பத்திற்கு தயாரிக்கப்படுகிறது.

கலர் டெம்பரேச்சர் எப்படி அறியப்படுகிறது என்றால்?

ஓளிப்படக்கலை ஆய்வாளர்கள் ஒரு இரும்புத்துண்டை(Blackrod) சூடாக்கிக்கொண்டே இருக்கும் போது வெப்பத்தின் அளவு (Kelvin) அதிகரித்துக்கொண்டிருக்கும். அப்போது கருப்பு இரும்புத்துண்டு மெல்ல நிறம் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டு வெப்பத்திற்கு நிறத்தன்மைக்கும் இருக்கும் தொடர்பினை அறிந்தனர்.

பின்னர் கருப்பு (Blackrod) நிறத்துண்டானது சூடாக சூடாக சிகப்பு நிறமாகவும் மஞ்சளாகவும் ஆரஞ்சு நிறமாகவும் மற்றும் நீல நிறமாகவும் மிகுந்த வெப்பத்தில் மாறும் வெந்நிறத்தோற்றத்தை கண்டு பிடித்து இதற்கு ஒரு வரையறை ஒன்றை ஏற்படுத்தினர்.

அதை கலர் டெம்பரேச்சர( Color Temperature) என்றும் அதை அளவிட டிகிரி கெல்வின் (Kelvin) முறையைப் பயன்படுத்தினர்

கலர் டெம்பரேச்சர் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரித்தனர்:

1. பகல் வெளிச்ச்த்தை -5500K டிகிரி கெல்வின் (ஐந்து ஆயிரத்து ஐநூறு டிகிரி கெல்வின்) என்றும்

2. டங்க்ஸ்டன் செயற்கை ஒளியை -3200K டிகிரி கெல்வின் (மூவாயிரத்து இருநூறு டிகிரி கெல்வின்(Tungsten) என்றும் வகைப்படுத்தினர்.

ஒளிப்படக்கலை ஆரம்பத்தில் புகைப்படம் மற்றும் சினிமா ஒளிப்பதிவு செய்ய இரண்டு முக்கிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி பதிவு செய்தனர்.

ஓன்று இயற்கை ஒளி சூரிய வெளிச்சம்-5500டிகிரி கெல்வின் ,

மற்றொன்று செயற்கை ஒளி அன்று பெரும்பாலான வெளிச்ச கருவிகளில் (Light) உள்ள பல்புகளில் டங்க்ஸ்டன் ஃபிலமெண்ட் ( Tungsten Filament ) டை பயன்படுத்தினர் (-3200டிகிரி கெல்வின்).
பின்னர், இன்று பார்த்தால் டியூப்லைட் பல வெளிச்ச கருவிகள் (Tube Light) அன்றாட வாழ்க்கையிலும் சினிமாவிலும் வந்துள்ளது. ஆதலால் ஃபிலிம் தயாரிப்பில் இன்றுவரை இரண்டு கலர் டெம்பரேச்சரில் தயாரிக்கின்றனர். ஓன்று ‘D’ என்ற டேலைட் (Daylight) அடுத்து 'T' என்ற டங்க்ஸ்டன் (Tungsten). சினிமா ஒளிப்பதிவுத்துறையில் பயன்படுத்தப்படும் வெளிச்ச கருவிகளும் (Lights) இவ்விரு கலர் டெம்பரேச்சர்களுக்கு ஏற்ப இருவகையான லைட் கருவிகளும் இருக்கின்றன.

ஃபிலிமில் ஸ்பீட் உடன் ’T’ அல்லது ’D’ என்ற முத்திரை இருக்கும்.

உதாரணத்திற்கு

100 T நூறு ASA ஸ்பீடில் lq;f;];ld; வகையான ஃபிலிம் 
ASA 100 D நூறு ஸ்பீடில் டேலைட் (பகல் வெளிச்ச) வகையான ஃபிலிம்

ASA பயன்பாடு

டங்க்ஸ்டன் (Tungsten) தன்மையுடைய ‘T ’ ஃபிலிமை பயன்படுத்தும் போது அதற்கேற்ப டங்க்ஸ்டன் வெப்பத்தன்மையுடைய வெளிச்சத்தைப்பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பும் சரியான நிறத்தன்மை, (Natural tone) நேச்சுரல் டோன் கிடைக்கும். 

டங்க்ஸ்டன் ’T’ ஃபிலிமை பய்னபடுத்தி டங்க்ஸ்டன் வெளிச்ச கருவிகளை பயன்படுத்தாமல் வேறு வெளிச்சத்தன்மையுடைய லைட் (Lights) கருவிகளை பயன்படுத்தினால் சரியான நிறத்தன்மை கிடைக்காமல் வேறு நிறம் பதிவு செய்யப்பட்டுவிடும்.

கீழே உள்ள அட்டவணை முலம் ’T’ ’D’ ஃபிலிமுக்கு எந்த வெளிச்சம் பயன்படுத்தினால் என்ன நிறத்தன்மை கிடைக்கும் அதை சரி செய்ய காமிராவில் என்ன பில்டர் (Filter) பயன்படுத்தி சரியான நிறத்தன்மை பெறலாம் என்பதை அறிவோம்.

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தீர்கள் என்றால் காமிராவில் டங்க்ஸ்டன் (T) ஃபிலிம் பயன்படுத்தி முதல் கட்டத்தை நோக்கி டங்க்ஸ்டன் வெளிச்சத்தை பயன்படுத்தினர். சரியான நிறத்தன்மை (Natural tone) கிடைக்கும்.

இரண்டாவது கட்டத்தை பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் படமாக்கும் போது பதிவு செய்யப்பட்ட படம் முழுக்க நீலத்தன்மை வந்து விடும். இதை சரி செய்ய அதாவது காமிராவில் டங்க்ஸ்டன் ஃபிலிமை பயன்படுத்தி சூரிய வெளிச்சத்திலோ அல்லது அதன் சார்புடைய வெளிச்ச கருவிகளை கொண்ட லைட் ( Light) பயன்படுத்தி படமாக்கும் போது அந்த நீலநிறத்தன்மையை சரி செய்ய சொல்லப்பட்ட பில்டர் 85 (Filter 85 ) படமாக்கும் போதே காமிராவின் லென்ஸ் முன்னர் அப்பில்டர் (Filter) பயன்படுத்தினால் நீலத்தன்மை போக்கி சரியான நிறம் வந்து விடும்.

மேலே உள்ள அட்டவணையைப்பார்த்தால் டேலைட் (D) ஃபிலிம் சூரிய பகல் வெளிச்சத்தன்மைக் கொண்ட ஃபிலிமைக் காமிராவில் பயன்படுத்தும் போது இயற்கை ஒளியில் சூரிய ஒளியாலோ அல்லது சூரிய ஒளித்தன்மையுடைய லைட் (Light) பயன்படுத்தினால் சரியான நிறத்தன்மை (Natural Tone) கிடைக்கும். ஆனால் டேலைட் ஃபிலிம் (Day Light Film) காமிராவில் பயன்படுத்தி டங்க்ஸ்டன் ஒளி (Tungsten Light) காட்சிகளை பதிவு செய்தால் அப்பதிவில் மஞ்சள் நிறமாக மொத்த படம் இருக்கும். இதை சரி செய்ய வேண்டும் என்றால் காமிராவில் டேலைட் ஃபிலிம் இருந்து டங்க்ஸ்டன் ஒளியில் படமாக்கும் போது காமிரா லென்ஸ் முன்னர் ஃபில்டர் எண் 80 (Filter no 80) பயன்படுத்தினால் மீண்டும் சரியான நிறத்தன்மைக்கிடைக்கும்.

பில்டர் (Filter)

பில்டர் என்றால் அதன் பெயருக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒளியை மட்டுமே வடிகட்டி அவ்வொளியை லென்சுக்குள் அனுப்புவதே பில்டர் (Filter) வேலை. கண்ணாடி போல் உள்ள பில்டர் வட்டமாகவோ அல்லது உருண்டை வடிவத்தில் தயாரிக்கப்படும் பில்டர் லென்ஸ் முன்னர் வைத்து பயன்படுத்தப்படும்.

பில்டர்கள் ஒளிப்பதிவாளரின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. பில்டர்கள் நிறத்தன்மையை மாற்றுவதற்கும் (Color Filters) உருவம் பல உருவமாய் மாற்றுவதற்கும் மல்டி இமேஐ பில்டர் ( Multi Image Filters ) பயன்படுத்தப்படுகிறது. சாப்ட் பில்டர் (Soft Filters) படமாக்கும் முகமோ அல்லது இடமோ மென்மையாகத்தெரியவைக்க உதவுகிறது.

பில்டர் (Filters)

பில்டர் கண்ணாடியில் ஒளி புகும் தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது. காமிரா லென்ஸ் (Camara lens) முன்னர் வைத்து உபகோகிக்கப்படும் பில்டரானது ஒளியின் தன்மையை மாற்றி அமைக்கும் தன்மை வாய்ந்தது.

ஓளிமாற்றம் அடையும் போது ஒளிப்படத்தின் இமேஐ மெருகேற்றப்படுவதே பில்டர்களின் முக்கிய செயல் பில்டர்கள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஓவ்வொரு பில்டர்கள் ஒவ்வொரு குணாதிசியங்களை கொண்டது. சில பில்டர்கள் நிறத்தன்மை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது. ஓளியின் அளவை குறைக்கும் பில்டர்கள் காண்ராஸ்ட் (Contrast) ஒளிப்படத்தில் கருநிறப்பகுதியும் வெளிச்சப்பகுதிகள் உள்ள வேறுபாடு இவ்வேறுபாட்டை மாற்றி அமைக்கும் காண்டராஸ்ட் பில்டர்கள் இப்படி பல வகையான பில்டர்கள் உள்ளன.

Natural Density Filter (N.D) நேச்சுரல்டென்சிட்டி பில்டர்

என.டி (N.D) என்று அழைக்கப்படும் ஒளியை குறைக்கும் பணியைச்செய்கிறது.

ஓளியைக்குறைக்கும் போது நிறத்தன்மையில் எந்த மாற்றமும் அடையாமல் செய்வதுதான் இவ்வகை பில்டர்களின் சிறப்பு.

என்.டி (N.D) பில்டர்கள் மூன்று வகைகளாக உள்ளது.

ND3 என்.டி3 1STOPS
ND6 என்.டி6 2STOPS
ND9 என்.டி9 3STOPS

என்.டி-3 பில்டர் 1STOPS (பகுதி) ஒரு பகுதி வெளிச்சத்தைக்குறைக்கிறது
என்.டி-6 பில்டர் 2STOPS இரண்டு பகுதி வெளிச்சத்தைக் குறைக்கிறது.
ஏன்.டி-9 பில்டர் 3STOPS மூன்று பகுதி வெளிச்சத்தைக்குறைக்கிறது.

போலரைசர் (Polarizer)

வெளிச்சக்கதிர்களானது பல வழிகளில் பிரிவடைந்து செல்கிறது. வெளிச்ச கதிர்களானதை போலரைசர் பில்டர் வழியாகச்சென்றால் ஒரே பாதையில் செல்லும் தன்மை பெற்றுள்ளது. 

காமிரா லென்ஸ் முன்னர் போலரைசர் பில்டர் பொருத்தினால் நாம் தண்ணீர், கண்ணாடி போன்றவற்றிலிருந்து ஏற்படும் ஒளிச்சிதறல் (Glar) அகற்றி தெளிவான பிம்பத்தை பதிவு செய்யலாம். சில பாத்திரங்களில் அல்லது பெயிண்டிலிருந்து ஒளிச்சிதறல் ஏற்பட்டு தெளிவல்லாத இமேஐ கிடைக்க வாய்ப்புண்டு அச்சமயங்களில் போலரைசர் பயன்படுத்தினால் தெளிவான படம் பதிவாகும்.

சில குறிப்பிட்ட நேரங்களில் போலரைசர் பயன்படுத்தினால் கூடுதல் நிறத்தன்மை கிடைக்கும். பகல் நேரங்களில் குறிப்பிட்ட கோணத்தில் போலரைசர் பில்டர் வைத்து பதிவு செய்தால் வானம் நல்ல நிறமாக மாற்றம் ஏற்படும்.

ஸாஃப்ட் பில்டர் (Soft Filter)

ஸாஃப்ட் பில்டரானது மென்மையான ஒளிப்படத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. நடிப்பவர்கள் முகத்தில் உள்ள கோடுகள் போன்றவற்றை அகற்றி அழகாக்கும் தன்மைக்கொண்டது. இவ்வகைப்பில்டர்களை ஒளிப்பதிவாளர்கள் க்ளோசப் ( Close-Up) காட்சிக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்துவது வழக்கும்.

பில்டர் குறியீடு (Filter factor)

பில்டரை காமிரா லென்ஸ் முன் பயன்படுத்தும் போது ஒளியின் அளவு குறைகிறது. ஆதலால் லென்ஸ் உள்ள அப்பேரசர் (Aperature) மூலமாக ஒளியின் அளவை கூட்டவேண்டும். எவ்வளவு ஒளி குறைந்துள்ளது? எவ்வளவு ஒளி கூட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க பில்டர் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

பில்டர் குறியீடு பில்டரின் தன்மைக்கு ஏற்ப 1.2.3.4.5.6 என்று அமைக்கப்பட்டுள்ளது. 
பில்டர் குறியீடு 1.5 என்றால் பகுதி (1/2 Stops) ஒளியை லென்ஸ் உள்ள அப்பரேச்சர் அதிகரிக்க ஒளியின் அளவை அதிகரிக்க வேண்டும.

வண்ண ஒளிப்பதிவிற்கு 

 
பில்டர் வகை
(Filter No)
அதன் பயன்கள்
   
 80AD ஃபிலிம் பயன்படுத்தும் போது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3200 டிகிரி கேல்வின் தன்மை மாற்றுவது
 80BD ஃபிலிம் பயன்படுத்தும் போது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3400டிகிரி கேல்வின் தன்மை மாற்றுவது.
 81Bமஞ்சள் நிறத்தன்மைக்கு (Yellowish)
 82Bஅடர்த்தியான மஞ்சள் நிறத்தன்மைக்கு (more warming than 81)
குளிர்ச்சியான நிறத்தன்மைக்கு
 85'T' டங்ஸ்டன் ஃபிலிம் பயன்படுத்தி சூரிய ஒளிக்கு 5500 டிகிரி கெல்வின் தன்மை மாற்றுவது
 FLBடியூப்லைட் வெளிச்சத்தில் (Fluorescent) படமாக்கும் போது வரும் 
நீல-பச்சை நிறத்தை அகற்றுவதற்கு
 Netural Density (N.D)அதிக ஸ்பீடு பயன்படுத்தும் (High Speed) போது எந்த நிறமாற்றமும் இல்லாமல் அதிக வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த
 CORALமிதமான சிகப்பு நிறத்தன்மைக்கு கதாபாத்திரங்களின் (Skin Tone) 
கூடுதல் நிறத்தன்மைக்கு
 FOGபனிமூட்டம் போல ஒளிப்படத்தன்மைக்கு
 HAZEமலைப்பகுதிகளில் படமாக்கம் போது உருவாகும் அதிக 
நீலநிறத்தை கட்டுப்படுத்த