Thursday, December 30, 2010

சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 (இறுதித் தேதி: 15 .01 . 2011)



சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 (இறுதித் தேதி: 15 .01 . 2011)

எதிர் வரும் 2011 வருடம் சனவரி திங்கள் 22 ஆம் நாள் சேலத்தில் நடக்க இருக்கும் சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 உங்கள் படைப்புகள் வரவேற்கபடுகின்றன . அனுமதி இலவசம் . படைப்புகள் சமுக கருத்துள்ள வகையில் இருக்க வேண்டும் .
பரிசுகள்:

முதல் பரிசு: ரூபாய் 10000
இரண்டாம் பரிசு: ரூபாய் 5000
மூன்றாம் பரிசு: ரூபாய் 3000

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் எத்தனை படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் போட்டிக்காக ஒன்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.

2. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.

3. சிறந்த மூன்று படங்களுக்கு மேற்கண்ட மூன்று பரிசுத் தொகையும், போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 சான்றிதல்களும் வழங்கப்படும்.

4. போட்டியில் கலந்துக் கொண்ட சிறந்தப் படைப்புகளை 22 .01 .2011 அன்று சேலம் ஜெயராம் கல்லூரி அரங்கில் திரைட்டு, படைப்பாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும். பரிசுத் தொகைகளும் அன்றே வழங்கப்படும்.

5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

6. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் திருப்பி அனுப்ப இயலாது.

அனுப்ப வேண்டியவை:

1. படைப்பாளிகளின் பெயர் உள்ளிட்ட முழு விபரம், தொடர்பு முகவரி மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.

2. படைப்புகளை DVD/VCD யாக அனுப்பி வைக்க வேண்டும்.

3. படைப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அதன் படைப்பாளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதி மொழிக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

4. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 15 .01 . 2011

* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

ஒருகினைப்பாளர் ,
மிர்த் மீடியா மையம் ,
218/F3 பஞ்சநாதன் தெரு ,
குப்தா நகர்,அங்கம்மாள் காலனி,
சேலம் 636 009.
செல் = 9952667395
மின்னஞ்சல் : leopaulsalem@gmail.com




Friday, December 24, 2010

நாநா.. - கலாப்ரியா

நாநா..

கலாப்ரியா

‘நரிப்பல் நாராயணசாமி’யும் ராமமூர்த்தியும் வந்த போது, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.” என்னா தம்பீ, மாத்திரை மயக்கம் இன்னும் போகலியா” என்ற சிரிப்புடன் கலந்த குரல் கனவுக்குள் மறுபடி மறுபடி கேட்டது. “இது நரிப்பல்லின் குரலல்லவா” என்றவாறே விழிப்புத் தட்டியது. ‘நாநா’வைப் பார்க்கவே வெட்கமாயிருந்தது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்லி விடுகிறவர் அவர். கெட்ட வார்த்தைக்கு பஞ்சமே இருக்காது. பஸ்ஸை அந்தக் கடைசி நிறுத்தத்தில், சந்திப்பிள்ளையார் முக்கில், நிறுத்திவிட்டு எல்லா டவுண் பஸ் கண்டக்டர்களும், டிரைவர்களும் காபி, டீ, சிகரெட்,பீடி,வெற்றிலை பாக்கு புகையிலை என்று பத்து நிமிட ஓய்வெடுக்கிற இடமும் நாங்கள் சந்திக்கிற இடமும் அதுதான்.

ஒரு காலத்தில் ’டிஎம்.பி.எஸ்’(திருநெல்வேலி மோட்டார் பஸ் சர்வீஸ்) என்று தொழிலாளர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து ஆரம்பித்த பஸ் சர்வீஸ்தான் டவுண் பஸ்களாக ஓடிக்கொண்டிருந்தது.. டி.வி.எஸ்.கம்பெனி பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாமம் போட்ட ஐயங்கார், சதுரமான சிறிய மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட டைம்பீஸ் சகிதம் அவருக்கான ஒரு ஷெட்டில் உட்கார்ந்திருப்பார். பஸ் கரெக்டாக வரவேண்டிய நேரத்திற்கு வந்து, புறப்படவேண்டிய நேரத்திற்குப் புறப்படும். டைம்பீஸைப் பார்த்து விட்டு அய்யங்கார் நிமிர்ந்தால், கரெக்டாக வரவேண்டிய ரெண்டாம் நம்பர் பாளை பஸ்ஸ்டாண்ட் பஸ் வந்து நிற்கும். அவர் தலையை அசைத்தால், ”சரி நேரமாச்சு கிளம்பலாம்” என்று அர்த்தம், பஸ் கிளம்பிவிடும். அவர் வாய் பேசி நான் பார்த்ததே இல்லை. கூட்டம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் கூட்டமும் கிடையாது. வீரராகவபுரம் என்கிற ஜங்‌ஷனுக்கு நடந்தே போய்விடுவார்கள். அதிகம் போனால் சைக்கிள்.

மருத மர நிழலை அனுபவித்த படியும், பசுமையான வய(ல்)க்காட்டிலிருந்து வீசுகிற குளிர்ந்த காற்றை சுவாசித்தபடியேயும் ஜங்ஷன் ரோட்டில் நடப்பது பரமானந்தம் என்பார், சின்னத்தாத்தா.அப்புறம் தனியார் பஸ்கள் என்று பாலசரஸ்வதி டிரான்ஸ்போர்ட், ஆண்ட்ருஸ் பஸ் எல்லாம் வந்துவிட்டது. மூன்றாம் நம்பர், பாலசரஸ்வதி பஸ், கடிகாரம் வைத்த பஸ் என்றே பிரபலமாகிவிட்டது. அதன் உரிமையாளர் பையன் நறுவிசான நடையுடை பாவனையோடு, போத்தி ஓட்டல் முன் நிற்பார். அவர் சாப்பிடுவதும் அவ்வளவு அழகாயிருக்கும். கல்யாணியண்ணனின் வகுப்புத் தோழர். பேட்டைக்கு ஏழாம் நம்பர் பஸ்.அதுவும் அபூர்வம். அப்போதுதான் பேட்டைக்கு ‘ஷண்டிங் சைக்கிளை’ அறிமுகப்படுத்தினார், எங்கள் தெரு முனையில் வாடகை சைக்கிள்க் கடை வைத்திருந்த “வீ.ம” சைக்கிள் ஷாப் கடை முஸ்லிம் பாய். ’வீனா. மானா’ பள்ளிவாசல் மேலரதவீதியில் இன்றும் பிரபலம். அங்கே முஹர்ரம் திருவிழா விமரிசையாக இருக்கும். நான் சிறுவனாக இருந்த போது,’ அல்லாகோயில் திருழா’வான முஹர்ரம், என்றால் ஸ்கூலில் கடைசிப்பீரியட் இருக்காது. அன்று சாயந்தரம் மார்பிள் தாள் ஒட்டிய ஒரு சப்பரம் போல ஒன்றை எடுத்துச் செல்வார்கள். அதில், ஒரு உருவமுமே இருக்காது. முஹரத்துக்கு இரண்டு நாளைக்கு முன் எங்கள் தெருவில் உள்ள வீடுகளிலெல்லாம், ஒரு மௌலவி வந்து ஜீனி வாங்கிப் போவார். இந்து. முஸ்லிம் என்றெல்லாம் பேதம் கிடையாது. முஸ்லிம்களே தெருவில் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், இஸ்மாயில் சாயுபு என்று ஒருவர் மட்டும் உண்டு, அவர் கமெர்ஷியல் டேக்ஸ் ஆபிஸில் வேலை பார்த்தார்.

சீனியை வைத்து ஒரு வகையான உருண்டை செய்வார்கள். லேசான வாசனையோடு குளிர்ச்சியாக இருக்கும். முஹர்ரம் முடிந்ததும் கொஞ்சம் போல் மௌலவி கொண்டுவந்து தருவார். மௌலவி என்பதெல்லாம் இப்போது தெரிந்து கொண்ட நாமகரணங்கள். முஸ்லிம் பாய் என்றுதான் அப்போது தெரியும். இதெல்லாம் இன்றைக்கு ஐம்பது வருஷத்துக்கு முந்திய சமாச்சாரம்.

வீனாமானா ஷண்டிங் சைக்கிள்கடை பேட்டையிலும் உண்டு. அங்கே சைக்கிளை எடுக்கும் போது ஒரு சிகரெட் அட்டையில் அந்நேரத்தைக் குறித்து, ஒரு தேதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் நன்கு அறிமுகமானவர்களுக்கே சைக்கிளை வாடகைக்கு கொடுப்பார்கள். சைக்கிளை இங்கே வந்து ஒப்படைத்துவிட்டு அரைமணிநேர வாடகை பத்துப் பைசா என்றால் இருபது பைசா தரவேண்டும். இரண்டு மடங்கு வாடகை. கொஞ்ச நாளைக்கு ’வீ.ம ஷண்டிங் சைக்கிள் ஷாப்’ பிரபலமாய் இருந்தது. ஒன்றிரண்டு சைக்கிள் காணாமல்ப் போய்விட்டது. அதோடு அதை நிறுத்தி விட்டார்கள். கதை வேறெங்கோ போகிறது. ’நாநா’வும் ராம மூர்த்தியும் செத்துப்பிழைத்த என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். இரண்டு பேருமே யூனிஃபாரத்தில் இருந்தார்கள். பஸ்ஸை நிறுத்திவிட்டு சாப்பிடுகிற நேரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. பெண்கள் கல்லூரியின் இரண்டாவது ட்ரிப்பை முடித்து வந்திருக்கிறார்கள்.

காலையில் ஏழே முக்காலுக்கு அந்தக் கல்லூரிக்கான முதல் ட்ரிப். அதில்தான் எனக்கு ’வேலை.’ அவள் கல்லூரிக்கு காரில் போகாத...


more: http://koodu.thamizhstudio.com/thodargal_7_14.php



Thursday, December 23, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (13)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (13)

வெங்கட் சுவாமிநாதன்

கமல் ஹாஸன் சாரைப்பற்றி எழுத வேண்டும் என்று அன்பர்கள் சொல்கிறார்கள். எழுதலாம் தான். சினிமா சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரைப் பற்றியும் எழுத நிறையவே இருக்கும். அது சுவாரஸ்யமாகவும் மாத்திரமே இங்கு தமிழ் சினிமாவைப் பற்றி விஷயத்தில் இருக்கும். சுவாரஸ்யம் என்று நான் சொன்னது அவர்களது கலை பற்றி அல்ல. அது பற்றிச் சொல்ல யாரைப்பற்றியும் என்ன இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ் சினிமாவில் கலைஞராக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள் என்று சொல்லப் புகுந்தால், ஒரு சிலர் இருக்கிறார்கள் தான். அது அவர்களது சங்கீத ஆளுமை, வியாபகம் பற்றியதாகத்தான் இருக்கும். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு கால கட்டம் வரை அதில் இடம்பெற்ற சங்கீதம் மாத்திரமே இன்று தமிழ் சினிமாவை இன்றும் பொருட்படுத்தத் தகுதியான ஒன்றாக ஆக்கியிருக்கிறது. அது தவிர, வேறு காரணங்களுக்காக, ஒரு சிலர் தனி மனிதராக உயர்ந்து நிற்பவராகக் காணப்படுவார்கள். அந்த தனிமனித குணச் சிறப்புக்களைப் பற்றிச் சொலவதாக இருக்கும்.

1930-லிருந்து இன்று வரை ஒரு 80 வருட கால தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி கலைஞர்களாக (சங்கீதம்), தனிமனிதர்களாகப் போற்றுதற்குரியவர்கள் என ஒரு சிலர் தான் கிடைப்பார்கள். இத்தகைய பாக்கியம் பெற்றது தமிழ் சினிமா என்பது நம் பெருமைக்குரிய விஷயம் இல்லை. ஆனால் நடிகர்களாக, சினிமா கலைக்கு வளம் சேர்த்தவர்களாக எத்தனை பேரைச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இதை நான் எப்படி விளக்கிச் சொல்வது புரிய வைப்பது, புரிய வைப்பது என்றால் நான் ஏதோ Unified Field theory ஐப் பற்றிச் சொல்லப் புகுந்து உங்களுக்குப் புரியாமல் போய் விடுமோ என்ற வகையான கவலை இல்லை. நான் இங்கு சொல்வதெல்லாம் மிகச் சாதாரண, பொதுப்புத்திக்குப் புலப்படும் விஷயங்கள் தான். உண்மையில் மூடி மறைக்காமல் சொல்வதென்றால், இந்த தமிழ் சினிமாவும், அரசியலும் - (இரண்டும் ஒரே பைத்தியக்காரத்தனத்தின் இருமுகங்கள் தான்) – தமிழ் நாட்டில் எல்லோரையும் கரும்புள்ளி செம்புள்ளி குத்திய சட்டியைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு ,கோமாளித்தனமாக தெருவில் நடந்துகொண்டு செல்லும் மனிதர்களாக ஆக்கியிருக்கின்றன. நான் சொல்வது, இந்தத் தலையில் கவிழ்த்துக்கொண்ட சட்டி, கோமாளித்தனம் எல்லாம் வேண்டாம், சாதாரணமாக இருங்கள் என்பது மட்டுமே.

எனவே இதில் புரிவதற்கும் புரியாது போவதற்கும் ஏதும் இல்லை. மேலும் இதை நான் தான் சொல்லவேண்டுமென்பதும் இல்லை. தமிழ் சினிமாவின் காட்சி ஒவ்வொன்றையும் சாதாரண பொதுப்புத்தி உள்ள, அவன் படிக்காதவனாக இருந்தாலும் கூட, “ஏங்க இவங்க இப்படியெல்லாம் செய்யறாங்க?” மறை கழண்ட கேசுங்களா இவங்கள்ளாம்” என்றுதான் கேட்பான். இப்படிக் கேட்காத ஜீவன்கள் படித்தவர்களும், சினிமாக்காரர்களும் தான் அவர்கள் எல்லாம் மேதைகள், புத்தி ஜீவிகள் என்று உலா வருகிறவர்கள்.

ஒரு பெரிய சிக்கல், தமிழ் மொழி சினிமாக் காரர்களாலும், அரசியல் தலைவர்களாலும் மிகவும் கேவலப்பட்டு, ஆபாசப் படுத்தப்பட்டு, மிகவும் மலினப்பட்டு, அர்த்தமிழந்து கிடக்கிறது. கலை, நடிப்பு, உணர்ச்சி, கலைஞர், சினிமா என்றெல்லாம் வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படும் போது தமிழர்களுக்கு, இந்த வார்த்தைகள் தரும் அர்த்தங்கள், தமிழ் மொழி ஒருகாலத்தில் கொண்ட அர்த்தங்களுக்கு முற்றிலும் வேறாக, ஆபாசமும் மலினமும் படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கெல்லாம் அகராதி அர்த்தம் சொல்லி விளக்கி புரியவைப்பது என்பது சாத்தியமில்லாதது. அவ்வப்போது நான் எழுதி வரும்போது எந்த வார்த்தைகளை எதற்கு உபயோகப்படுத்துகிறேன் என்று பார்த்து அவரவர்களே யூகித்துப் பொருள் கொண்டால் தான் உண்டு. .

நடிப்பு என்றால், அதிலும் சினிமாவில் நடிப்பு என்றால் நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன்?. தமிழ் சினிமாவும் ஹிந்தி சினிமாவும் பார்த்துப் பழகிய மனங்களுக்கு நடிப்பு என்றால் என்ன பதிவுகள் இருக்கும்? இடையில் நமக்குப் பாலமாக இருக்கும் மொழி இதில் என்ன உதவி செய்யக் கூடும்? என்ற சந்தேகங்கள் தான். Good Earth படத்தில் பால் முனி வாங் லங்காக நடித்துப் பார்த்தது ஏதோ ஜன்மத்தில். இருப்பினும் அந்த ஒரு நாள் பால் முனியை இன்னமும் நினைவுகள் அழிக்கவில்லை. Becket Larence of Arabia, Last Emperor போன்ற படங்களில் பார்த்த நினவுகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை எப்படிச் சொல்வது?. நம்ம ஊருக்கே திரும்பலாம். நஸருதீன் ஷா தில்லி தேசிய நாடகப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றவர். நாடகப் பயிற்சிதான் பெற்றவர். இருப்பினும், அவரை ஸாம்வேல் பெக்கெட்டின் Waiting for Godot நாடகத்திலும் பார்த்திருக்கிறேன்.

அங்கூரிலிருந்து இன்று வரை பல ஹிந்தி படங்களிலும் பார்த்திருக்கிறேன். நாடகப் பயிற்சியே பெற்றிருந்தாலும், சினிமாவில் நடிக்கும் போது அவர் நடிப்பு படத்திற்குப் படம், ஏற்கும் பாத்திரத்திற்கு பாத்திரம் பெறும் மாற்றங்களையும், பார்த்திருக்கிறேன். பின் இடையில் பெக்கெட்டின் Waiting for Godot நாடகத்தில் நடிக்கும் போது அவர் நடிப்பு மறுபடியும் சினிமாவை மறந்து நாடக மேடையில் ஏறியதும் நாடகத்திற்கும் அதில் தான் ஏற்றுள்ள பாத்திரத்திற்கும் ஏற்ப அவர் நடிப்பும் மாறுவதையும் பார்த்திருக்கிறேன். இது நடிகராக மாத்திரமே. இந்த மாற்றங்களை நாம் எத்தனை பேரிடம் தமிழ் நாட்டில் பார்த்திருக்கிறோம் என்றும் நினைத்துப் பார்க்கிறேன். பதில் எனக்குக் கிடைப்பதில்லை.

இதன் பின்னும் அவர் சினிமாவையும், நாடகத்தையும், தியேட்டரை விட்டு வெளியே நின்று ஒரு சாதாரண வெளி உலக மனிதனாக நாடகத்தையும் சினிமாவையும் தனக்கும் அவற்றுக்கும், பின் அவற்றிற்கும் வெளியே உள்ள சமூகத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான அர்த்தங்களையும், உறவுகளையும் பற்றி சிந்திப்பதையும் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இது போல ஹிந்தி சினிமா உலகில் இன்னும் சிலர், ஆனால் வெகு சிலர் இருக்கின்றனர். ஓம் பூரி, ஷாப்னா அஸ்மி, சௌமித்ரா சட்டர்ஜீ, போன்ற நடிகர்கள்,, பின் ஷ்யாம் பெனெகல், மிருணால் சென் போன்ற இயக்குனர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். அதிலும் ஷ்யாம் பெனெகல் விளம்பரத் துறையிலிருந்து வந்தவர். இவர்களெல்லாம் சினிமாவைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் ஒரே நோக்கில் பார்ப்பவர்கள். ஒன்றில் மற்றதன் தாக்கத்தைக் காட்டுபவர்கள்.

அதே சமயம் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் மிகத் திறமை உள்ள ஒரு நடிகர் என்று நான் எண்ணி பரவசம் அடைந்திருந்த ஷிவ் புரி என்ற நடிகர், அவரை அறுபதுகளிலிருந்து தர்ம் வீர் பாரதியின் அந்தா யுக், மோலியேரின் கஞ்சூஸ் போன்ற நாடகங்களில் பார்த்து மலைத்து வாய் பிளந்த வியப்பில் இருந்த எனக்கு அவர் பிழைப்பை நாடி ஹிந்தி சினிமாவுக்கு போய் நம் தமிழ் சினிமா வீரப்பன், ரங்கா ராவ் போல ஹிந்தி சினிமா, அப்பாவாகி, வில்லனாகி பாழாய் போனதையும் பார்க்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.. சினிமாவுக்கு தன் நடிப்பை மாற்றிக்கொள்ள முடியுமா என்பதை அறிய முடியாதவாறு ஹிந்தி சினிமா வில்லன் பாத்திரங்கள் தான் அவருக்குக் கிடைத்தது. அதற்கு ஒரு நம்பகமான உருத் தரும் வகையில் ஹிந்தி சினிமா இருக்கவில்லை. அப்போது ஹிந்தி சினிமாவில் ஷ்யாம் பெனெகலோ, மிருணால் சென்னோ, அபர்ணா சென்னோ இன்னும் உதயமாகியிருக்கவில்லை. அது ராஜ் கபூர், தேவ் ஆனந்த் காலம்.

எதற்காக இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், சினிமா, நாடகம், நடிப்பு இவற்றை அர்த்தமுள்ளதாக ஆக்கி, அவற்றுக்கும் வெளி உலக வாழ்க்கைக்கும், தன் சொந்த வாழ்க்கைக்கும் இடையேயான உறவையும் அர்த்தமுள்ளதாகக் காணும், ஆக்கும் சிந்தனைகள் உள்ள மனிதர்கள் இவர்கள். அப்படி யாரும் தமிழ் சினிமா, உலகில் இருக்கவில்லை அன்றும் இன்றும். அந்நிலையில் தான் நான் சினிமாவில் இருப்பவரை அவரது நடிப்பைக் கலையாக, அவரை கலைஞராக நான் காண்பது, சொல்வது சாத்தியம்.

ஒரு காலத்தில் இருந்தார்கள். தமிழ் நாடக உலகில். அக்கால நாடகங்களை நாடகங்களாக நாம் இன்று மதிக்க மாட்டோம். ஆனால் அவர்களில் சிலருக்கு பாஸ்கர தாஸ் போன்றவர்களுக்கு ஒரு தாகம் இருந்தது. தாம் வாழும் வாழ்க்கைக்கு, சார்ந்திருக்கும் நாடகங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். தனிப்பட்ட முறையில் அவர்கள் கூத்தாடிகள் இல்லை. பெரிய மனிதர்கள். லக்ஷிய புருஷர்கள். தாம் வாழும் வாழ்க்கையால், தாம் பிழைக்க வந்த நாடகத்தால், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க வந்தவர்கள். ஆனால் அதெல்லாம் பிரச்சாரமாகப் போயிற்று. கலையாக இருக்கவில்லை. பிரச்சாரத்தால் பிழைத்தவர்கள் இல்லை. ஆனால் தம் பிரச்சாரத்தால் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவர்கள். அப்படி இருந்த நாடக சினிமா கலைஞர்கள் தமிழ் நாட்டில் சென்ற நூற்றாண்டு முப்பது நாற்பதுகளில் ஒரு சிலர் இருந்தார்கள்.

இன்னும் அதிக எண்ணிக்கையில் தம் சங்கீதத் திறத்தால் நாடகத்தையும் சினிமாவையும் அந்த நாடகங்களும், சினிமாவும் கலை சார்ந்ததாக இல்லாது போனாலும், ஏதோ ஒரு கலை அம்சம், சங்கீதம் என்ற கலை அம்சம் உள்ளடக்கிய ஒன்றாக ஆக்கியிருந்தார்கள். அவை அந்நாளைய நாடக ரூபத்திலும், பின்னர் அவை புகைப்படம் எடுக்கப்பட்ட நாடகமாக ஆன அந்நாளைய சினிமாவிலும், கலைஅனுபவம் தரும், இசை ரூபத்தில் கதை சொல்லப்பட்டதால், அவற்றை இசை நாடகம் என்ற கலைவடிவாக ஏற்றுக்கொள்வதில் தடை ஏதும் இல்லை. அவை சினிமாவாக இல்லாது போனாலும். மேலும் அதில் பங்கு பெற்ற சங்கீத கலைஞர்கள் கலைஞர்களாகவே இருந்தார்கள். தண்டபாணி தேசிகர் தண்டபாணி தேசிகராகவே இருக்க முடிந்திருக்கிறது அந்த நாற்பதுக்களில். அவரை யாரும் ”கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லை ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா? என்று பாடச் சொல்லவில்லை. சொல்லியிருந்தாலும் அவர் பாடியிருக்க மாட்டார். பாபநாசம் சிவன் சினிமாவுக்கும் தான் பாட்டு எழுதினார். இசை அமைத்தார். ஆனால் அவரை யாரும் ருக்குமணி ருக்குமணி ஷாதிகி ராத் க்யா ஹுவா” என்றெழுதி அதற்கு இசை அமைக்கச் சொல்லவில்லை. அதற்கு இந்த யுகத்தில் ஒரு ரஹ்மான் ஸார் வரவிருக்கிறார். ”ரண்டக்கா ரண்டக்கா, அண்டங்காக்கா கொண்டைக்காரி” என்றும் பாட்டெழுத இந்த யுகத்தில் ஒருவர் தோன்றவிருக்கிறார்.

ஒரு காலத்தில் தான் கதை எழுதும் பாட்டு எழுதும் படத்திற்கு கே.பி.சுந்தராம்பாள் தான் பாடவேண்டும் என்று அன்றைய கருணாநிதி சொல்ல, அதற்கு கே.பி.சுந்தராம்பாள், ”தெய்வத்தைப் பழிக்கும் எந்தப் பாடலையும் நான் பாடமாட்டேன்,” என்று மறுத்ததும் உண்டு. பின் கருணாநிதி சுந்தராம்பாளை தன் வாய் ஜாலத்தால் தாஜா செய்ததும் உண்டு. அது அறுபது வருடங்களுக்கு முந்திய காலம். இப்போது அதற்கெல்லாம் அவசியமில்லை. சினிமா உலகமே கந்த சஷ்டிக்கு முருகன் ஆலயத்துக்கு முன் கூடும் பக்த கோடிகளாக கோபாலபுரத்தாரை வாழ்த்தி பாசுரம் பாடும் கூட்டமாகியுள்ளது. அது ஒரு காலம். அந்த சினிமா என்னவோ வாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் நடிக்கத் தெரியாத ஒருவராக இருந்த போதிலும் பாடத்தெரிந்த ஒருவர் “மாட்டேன்” என்று சொன்ன காலம் அது. அவர்களுக்கும் தம் வாழ்க்கைக்கும் பிழைக்க வந்த நாடகமோ சினிமாவோ அதற்கும் ஒரு உறவு உண்டு, அர்த்தம் உண்டு என்று நினைத்தார்கள். கே.பி.சுந்தராம்பாள் பள்ளிப் படிப்பு கூட இல்லாதவர் தான். படிப்பில்லாதவர்களிடமும் ஒரு கலாசாரமும் பண்பாடும் நாகரீகமும் ரத்தத்தில் ஊறியிருந்த காலம் அந்தநாகரீகமும் கலாசாரமும் இப்போதைய சந்தர்ப்பத்தில் நமது கமல்சாரிடமும் இல்லை என்பதைத் தான் சொல்ல வருகிறேன். அதற்குத்தான் இவ்வளவு பீடிகையும்..

வெளி உலகில் வயிறு பிழைக்க கால்வைக்கத் தான் வேண்டும். ஆனால் அதே சமயம் அந்த வெளி உலகத்துடன் அவனுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அது தன்னையும் தான் வாழும் உலகத்துடனான தன் உறவுக்கு அர்த்தம் இருக்கச் செய்யவேண்டும். இரண்டையும் தனனையும் தான் வாழும் உலகத்தையும் மேம்படுத்த வேண்டும். வளப்படுத்த வேண்டும்

என்ற சிந்தனை பரவலாக இருந்த காலம்..

(தொடரும்)




Wednesday, December 22, 2010

சய்லேன்ஸ் - 5 - கட்டியங்காரன்


‘ஒற்றன்’ - நாவலும் தயிர்வடை எழுத்துக்களும்

அசோகமித்ரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்தது ஓர் தண்டனை யென்றே சொல்லவேண்டும். அசோகமித்ரனை அயோவா பல்கலைக்கழகம் அழைத்ததும், அங்கு நிகழ்ந்த சர்வதேச எழுத்தாளர்
சந்திப்புமே கதைக்களம்.

பயணக் கட்டுரையும் புனைகதையும் கலந்து செய்த கலவையாக படிக்கும்போது, பரோட்டாவுக்கு
சாம்பார் தொட்டு கொண்டு சாப்பிடுவதைப் போன்ற உணர்வு,

நாவலின் (!) பல்வேறு பகுதிகளிலும் சைவ உணவு கிடைக்காத அவஸ்தையை பக்கம் பக்கமாக பாலும் ரொட்டியும் கலந்து எழுதுகிறவர். எதற்காக அடுத்த நாட்டுக் காரர் சாப்பிடும் அசைவ உணவுகள் மேல்
துவேஷம் பாராட்டுகிறார் என்றேத் தெரியவில்லை.

மோர் சாதமும் மாவடுவும் போதுமெனில் ஏதோ ஓர் அக்கிர(ம)காரத்திலேயே இருந்து கொள்ள வேண்டியது தானே. ஏன் அனாவசியத்துக்கு அசைவ உணவுகளையும், அசைவம் உண்பவர்களையும் நிந்திக்க வேண்டும்?

ஓர் வெளிநாட்டு எழுத்தாளர், ‘டகரஜானை’ (அச்சோகமித்ரனின் இயற்பெயர் தியாகராஜன்) சாப்பிட அழைக்கிறார். அதற்கு டகரஜானின் பதிலிது:

‘சாப்பிடுகிறேன். ஆனால் நீ எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் உன் சமையல் அசைவமாயிருக்கும் பட்சத்தில் சாப்பிட மாட்டேன்’

‘மாயவரம்’ என்கிற ஹைபுன் தொகுதியிலை படித்த கவிதை நினைவுக்கு வருகிறது-

‘சைவமென்பதில்
அப்படியென்ன பெருமிதமுனக்கு
அசைவம் வெறுக்கத்தக்கதல்ல

மச்சமும் வராகமும் அவதாரங்களல்லவோ
சேவலோ குமரன்கொடி
ரிஷப வாகனத்தின் சக்தியை அறிவாய் நீ
வறட்சியின் வறுமையில் விவசாயிகள் பசிதீர்க்கும்
எலிகளும் ப்ரியவாகனமன்றோ பிள்ளையாருக்கு
தாவரங்களுக்கும் உயிர் உண்டு -
நிரூபித்து விருது பெற்றான் ஜகதீஷ் சந்திரபோஸ்...

- பிள்ளைக்கறி தின்ற ஈசனை அறிவோம் நாம்
குகன் தந்த மீனையும் தேனையும் அங்கீகரித்து
தோழமை பூண்டான் புருஷோத்தமன்

கன்றுக்கான, பாலை, தயிராய், நெய்யாய்
வெண்ணெயாய்த் தின்றால கொழுப்புதான் சேரும்!
வாய்க்கொழுப்பு!
சாருநிவேதிதா அடிக்கடி எழுதுவார்-

‘தமிழில் எழுதும் பலரும் தயிர்வடை எழுத்தாளர்கள்’ என ஒற்றனைப் படித்ததும் அந்த
உண்மை புரிந்தது.

தயிர்வடையிலும், காராபூந்தி கூட தூவாத தயிர்ர்ர் வடை....!

வர்ர கோவத்துல தில்லக்கேணி சீலார்ட் ஓட்டல்ல, ஆப்பம் பாயா வாங்கி ‘லெக் பீஸை’ உறிஞ்சனும் போல இருக்கு!

2. இன்றைக்கும் பொருந்துகிற மிருகங்கள் பண்ணை (ANIMAL FARM)

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ANIMAL FARM ‘மிருகங்கள் பண்ணை’ என்ற தலைப்பில் க.நா.சு. வினால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பண்ணைச் சொந்தகாரானான ஜோன்ஸை அடித்து துரத்திவிட்டு மிருகங்களும் பறவைகளும் பண்ணையாட்சியைப் பிடிப்பது தான் கதை! ஆனால் பாருங்க!

அங்கேயும் பன்றிகளே(!) அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றன!

ஆட்சிக்கு வந்தவுடன் ஏழு முக்கிய விதிகள் உருவாக்கப் படுகின்றன.

1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்

2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும்
நமது நண்பர்கள்

3. மிருகம் எதுவும் துணிகள் அணியக் கூடாது.

4. மிருகம் எதுவும் படுக்கையில படுத்து உறங்கக் கூடாது.

5. மிருகம் எதுவும் மது அருந்தாக் கூடாது.

6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக் கூடாது.

7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.

ஆனால் அதிகாரம் கைக்கு கிடைத்தவுடன் நாற்காலி சுவையை ருசித்தவுடன் பதவியின் சக்தி எப்படி மாற்றி விடுகிறது என்பதை ருசிகரமாய் சொல்கிற புதினத்தை வாசிக்கையில் சமகால அரசியல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

1946-ல் மிருகங்கள் பண்ணையை உருவாக்கிய ஜார்ஜ் ஆர்வெல் நிச்சயமாய் தீர்க்கதரிசிதான்!

கூடு வாசகர்கள் கண்டிப்பாக இந்நூலை வாசிக்க வேண்டும். ஆனால் வாசிக்கும்போது நினைவில் கொள்ளக் கூடாத ஏழு விதிகள் இதோ-

1. தேசிய நீரோட்டம்

2. அண்ணாயிசம்

3. ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே

4. அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர பகைவனுமில்லை

5. புரட்சி ஓங்குக!

6. மதச் சார்பற்ற இயக்கம்

7. ஜனநாயக சோசலிசக் குடியரசு.

3. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....

கோவையில் கூடிய செம்மொழி மாநாட்டில் தமிழின் கவியரசுகளும், கவிபேரரசுகளும் கவிச் சக்ரவர்த்திகளும், கவிதை வரிகளால் ஆள்பவர் முதுகு சொறியும் முக்கியப் பண்யாற்ற தமிழக் கவிதை உலகில் சுரணையுள்ள கவிஞனும் இருக்கிறான் என்பதை நிரூபித்து இருக்கிறார் ந. முத்து

‘மணல்வீடு’ அக் 2010 இதழில் வெளிவந்துள்ள முத்து-வின் கவிதை, ஆள்பவரின் பொய் முகத்தை அம்பலப்படுத்துகிறது.

உண்மை புரியாத உடன்பிறப்புகள் தமிழின் பெயரால் நடக்கும் தகிடுதத்தங்களை உணர்ந்தால் நல்லது, இல்லையென்றாலும் இருக்கவே இருக்கு பாரதியின் வரிகள் -

‘வாழிய செந்தமிழ்
வாழிய தமிழர்
வாழிய பாரதமணித்திருநாடு’

சுரணையிருக்கும் மீதித்தமிழருக்காய் ந. முத்துவின் கவிதை.

‘அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர்தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாலும் அமைச்சருக்கும்
அவர்தம் அன்னைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இனிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப் பணி அலுவலர்களுக்கும்
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள் பூத்திருக்கும்
வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....

தொடரும்...



Monday, December 20, 2010

கதை சொல்லி - அய்யப்ப மாதவன் (Aiyappa Madhavan)



கதை சொல்லி - அய்யப்ப மாதவன் (Aiyappa Madhavan)

லிவி



மழையைப் பற்றி எழுதாமல் இந்த கட்டுரைகளை தொடங்க இயல்வதில்லை. சென்னையில் இது போன்ற அழகான மழைக்காலம் இருந்ததா எனத் தெரியவில்லை. அடுத்து வரும் பருவ காலங்களும் இதைப் போன்றே இருக்குமாவென சொல்லத் தெரியவில்லை. நமது மன நிலைக்கும் காலத்திற்கும் ஏதேனும் சங்கேதக் குறிகள் இருக்க வேண்டும். சோகம் அல்லது மரணம் படர்ந்த நாட்களில் கவனிக்கையில் சூரியன் அன்று மந்தமானதாகவும் வானம் வெறும் வெறுமையை கக்கிக் கொண்டிருக்கும். வாசகன் ஒரு எழுத்தாளனை சந்திக்கப் போகும் மன நிலையும் மிக நுண்மையானது. அவனை எழுத்தாளன் எப்படி எதிர்கொள்வான் என்ற நினைப்பு சாகசம் செய்யத் துணிந்து அடிவயிற்றில் உருவாரும் ஒரு அரூப கணங்கள் போலவே இருக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் உலகம் சட்டென கருமேகங்களால் புகைக் கண்ணாடி வழியே பார்ப்பது போல் சாம்பல் நிறம் கொள்ளத் தொடங்கிவிடும். அன்றும் கவிஞர் அய்யப்ப மாதவனை சந்திக்கச் செல்லும் போதும் வானம் அவ்வாறே இருந்தது.

அய்யப்ப மாதவன் தமிழில் ஆகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இன்றுள்ள கவிஞர்களின் கவிதை மொழி கவித்துவம் இழந்து, உரைநடைகளை உடைத்துப் போட்டலே கவிதை என்றாகிவிட்டது. ஒரு பரிசோதனை முயற்சிக்கு அவர்களின் கவிதை வரிகளை உடைக்காமல் தொடர்ந்து ஒரு வரியிலே எழுதிப் பாருங்கள் அது உரை நடை தவிர்த்து வேறொன்றுமில்லை என்பது புரியும். அய்யப்ப மாதவன் வரிகள் கவித்துவம் இழக்காதவை. அய்யப்ப மாதவன் பெயரை யார் உச்சரித்தாலும் தவறாமல் இந்த கவிதை எனக்குள் ஞாபகம் வரும்.

" ஒரு மழை நாளில்
சிறுமியின் இதயத்தில் ஓட்டை
உதவுங்கள் எனச் செய்தி வருகிறது.
அவன் என்ன செய்வான்
அவனிடம் ஒரு செல்போன்
ஒரு வாகனம்
ஒரு மனைவி
ஒரு வாடகைவீடு
சொற்ப பணம்
இருக்கிறது.
துயறுற்றவன்
எவ்வித யோசனைகளுமற்று
அமர்ந்திருக்கிறான்.
கடவுளைப் பிராத்திக்கக்
கடவுளை நம்பவில்லை
அந்த குழந்தை
பிழைத்துக் கொள்ளட்டும்
என்று மட்டும் நினைத்துக் கொள்கிறான்.
பிறகு மனித இயந்திரம் போல
சிகரெட் புகைகிறான்
மூத்திரம் போவது பற்றி
யோசித்துக் கொண்டிருக்கிறான்.
மழை எப்பொழுதும் போல்
எவ்வித அக்கறையுமின்றி
இன்னும் பெய்து கொண்டிருக்கிறது. "


அய்யப்ப மாதவனை ராயப்பேட்டையில் உள்ள மீசன்பேட் மார்கெட் அருகில் உள்ள அவர் வாடகை வீட்டில் கதை சொல்லிக்காக‌ சந்தித்தோம். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். தேனீர் கடையில் தேத்தண்ணியோடு கதைக்கத் தொடங்கினோம். முகரம் பண்டிகையாதலால் அரபிப் பாடலோடு கருஞ்சட்டை அணிந்தவர்கள் பாடிக்கொண்டு ஊர்வலம் கடந்து சென்றது. அதில் சிலருக்கு தங்களை வருத்தியதால் காயாத பச்சை ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இறுதியாக ஒரு குதிரை அதன் வயிற்றுப் பகுதியில் கேடயம் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்குப் போது ஊர்வலம் மறைந்தது.

அய்யப்ப மாதவனின் வீடு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள இரு சிறு அறைகளைக் கொண்ட வீடு. கவிதை எழுதிவிட்டு மாட மாளிகைகளையா கட்டிவிட முடியும். சங்க காலம் தொட்டு இன்றுவரை புலவனும் வறுமையும் சேர்ந்தே இருக்க வேண்டுமென மருவாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பெருமையை உடையது தமிழ்ச் சமூகம். புரவலர் துதி மற்றும் மன்னர் பெருமை பாடும் சினிமா சில்லரை சிங்குச்சாக்களை தவிர்த்து இங்கு தன்னம்பிக்கை புத்தகம், எண்கணித கைரேகை ஜாதகப் புத்தகம், வார மாத பாக்கெட் நாவல், சமையல் புத்தகம், கோலப் புத்தகம் எழுதும் எழுத்தாளர்களே பிழைத்துக் கொள்ள இயலும். மேற் சொன்னவர்கள் எல்லாம் எழுத்தாளர்களாவென என்னை தயவு செய்து கேட்காதீர்கள். இங்கு சுய கழிவிரக்கம் மிகக் கொடுமையானவற்றில் ஒன்று.

அய்யப்ப மாதவன் பேசிக் கொண்டிருக்கையில் 'சொல்லு நண்பா' , ஆமா நண்பா' , 'இல்லை நண்பா' என இத்யாதி நண்பாக்களோடு நம்மை அவருடன் நெருக்கமாக உணரச் செய்து விடுகிறார். கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது வாகன இரைச்சல் மின்வசிறிச் சத்தம் எதுவும் வரக் கூடாதென்பதற்காக கதவை தாழிட்டுக் கொண்டு மின் விசிறியை நிறுத்திக் கொண்டு கதை தொடங்கியது. சரியாக கதை ஆரம்பித்ததும் அருகில் இருக்கும் ஆட்டோ ஷெட் ஒன்றில் தகரத்தை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'நாள் முழுதும் இவ்வாறே இரைச்சலுடன் தான் இருக்கும்' என்றார். அதனால் மறுநாள் கோடம்பாக்கத்தில் உள்ள ஆழிப் பதிப்பகத்தில் கதை சொல்லிக் கொள்ளலாம் என முடிவானது. கவிதைகள பற்றி பேசிக் கொண்டிருக்கத் தொடங்கினோம்.

கவிஞனின் தேடல் எல்லாம் ஒரு முழுமையான கவிதையை எழுதிவிடுவதிலேயே இருக்கிறது." நான் என்றும் முழுமையானதொரு கவிதையை எழுதிவிட்டேன் என நினைக்கவில்லை. எத்தனை கவிதைகள் எழுதப்பட்டுவிட்டது எத்தனை கவிதைகள் திரும்பத் திரும்ப நில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். யாராலும் அந்த முழுமையை அடைய முடியாது.இன்னும் எழுதிக் கொண்டே தான் இருப்பார்கள். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்" என்றார் அய்யப்ப மாதவன். "ஒரு பறைவையின் குரல் நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது அதை மிக இனிமையானதென எண்ணுவோம் ஆனால் இன்னுமொரு பறவையின் குரலை கேட்க நேரும்போது அதுவே மிகச் சிறந்தாக இருக்கிறது. இசையையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்" என்று கவிதை நேர்த்தியுடன் முடித்தார் அய்யப்.

எது கவிதை? என்ற கேள்வி இன்றைய சமகாலத்தில் மிக முக்கியமானது. இதை கவிதை வாசகனும் கவிதை எழுதத் தெரிந்தவனும் கவிதை விமர்சகனும் தனக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறான். நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா முதலிய மாக்களையும் வெண்பா ஆசிரியப்பா போன்ற பாக்களையும் உடைய மரபு வழி கவிதைகளை உடைத்து புதுக்கவிதைகளின் வழி இன்று பின் நவீனத்துவ கோட்பாட்டினை அடைந்துள்ளோம். மரபை பழமைச் சிந்தனையாக மறுத்த நாம் ஜப்பானிய கவிதை நடைமொழியான "ஹைக்கூ" இங்கே தூக்கிப்பிடிப்பது சரியான ஒன்றாக ஆகுமா என்கிற ஐயம் எழுகிறது. அய்யப்ப மாதவனின் "ஹைக்கூ" கவிதைத் தொகுதியும் இந்த முறை புத்தக கண்காட்சியில் வெளியாகிறது. "ஹைக்கூ" பற்றிய விவாதங்கள் மாதவனுடன் நடந்தது ஒரு கவி மனதின் நிலையை அருகில் சென்று காட்டியது.

"ஒரு கவிஞனின் கவிதைத் தொகுப்பு அக்காலத்தில் அம்மனிதனின் மன நிலைகளால் உருவாவது. குறிப்பிட்ட அந்த கால கட்டத்தில் அவன் கவிதை மொழியும் ஒரே வித பாணியில் இருக்கும். சமூக கருத்துக்களைச் சொல்வது 'ஹைக்கூ' ஆகாது. மேலும் 'ஹைக்கூ' வுக்கு இருக்கும் இலக்கணத்தை இங்கு யாரும் கடைபிடிப்பதில்லை. அது 'ஹைக்கூ' இல்லை 'பொய்கூ'" என்றார் அய்யப்.
'ஹைக்கூ' கவிதையில் முதல் வரியில் ஐந்து அசைகளும், இரண்டாவது வரியில் ஏழு அசைகளும் மூன்றாவது வரியில் ஐந்து வரிகளும் இருக்கும் என 'ஹைக்கூ' இலக்கணத்தைச் சொன்னார்.

கவிதை என்பதை திட்டமிடுதலின் நிகழ்வாக ஒப்புக் கொள்ள மனம் மறுத்தது. இதற்கான பதிலையும் அவரே சொன்னார். "'ஹைக்கூ'விற்கான பயிற்சி எனக்கு இருக்கிறது. கவிதை வரிகள் எனக்குள்ளாக உருவாகுப்போது மிகப் பொருத்தாமான சொற்களை அசைகளாடு என்னால் கொண்டு வர முடிகிறது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு வரி குறிப்பிட்டார் 'ஒரு கல் சாதாரணமாக கீழே கிடைக்கும் போது ஒன்றுமேயில்லை அது தண்ணீரில் விழும்போது அதற்கு அசைவு வருகிறது. அழகாகிறது' . இந்த வரிக்கான 'ஹைக்கூ' ஒன்றையும் சொன்னார்.

"கையில் எடுத்திருந்த
அசையாக் க‌ல் நீரில் எறிய‌
அசையும் பெரிய‌குள‌ம்"

அய்ய‌ப்ப‌ மாத‌வ‌னின் ம‌ற்றுமொரு 'ஹைக்கூ' வாசிக்க‌த் த‌ந்தார்,

"ச‌ருகிலையில் ச‌ருக்கும்
பெய்திருந்த‌ ம‌ழையின் துளிக‌ள்
இலையுதிர்க்கும் ப‌ருவ‌ம்"

ஒரு கவிஞனிடம் தன் மொழியிம் சமகாலக் கவிதைகள் பற்றிய எண்ணம் எதுவாக இருக்கும்?. அய்யப்ப மாதவன் தனக்குப் பிடித்த கவிஞர்களில் வரிசைப் படி மூவரை மட்டும் தேர்வு செய்யக் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுத்த கவிஞர்கள் ஆத்மநாம் , கலாப்பிரியா மற்றும் தேவதச்சன். மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி அவருக்கு மிகப் பெரிய அனுமானங்கள் எதுவும் இல்லை. "அவர் முதல் இரண்டு தொகுப்புகள் பிடித்திருந்தது. ஆனால் அவர் இன்று எழுதுபவைகள் கவிதைகள் இல்லை" என்றார். "ஓவரா அடிச்சா இப்பிடித்தான் எழுத வரும்" என்று பகடியாய்ச் சொன்னார்.

மறுநாள் கதைசொல்லிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள ஆழி பதிப்பகத்தில் சந்தித்தோம். அய்யப்ப மாதவனின் குரல் மிக மென்மையானது. அவர் வாழ்வில் யாரையும் வெருட்டி மிரட்டி இருக்க மாட்டார் போல. அய்யப்ப மாதவன் "தானாய் நிரம்பும் கிணற்றடி" என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அந்த தொகுப்பில் இருந்தே கதைகளைச் சொன்னார். இரண்டாவது மூன்றாவது சிறுகதைகள் தன் வாழ்வில் நிகழ்ந்ததொரு சம்பவம் ஆகையால் கதை சொல்லிக் கொண்டிருக்கையில் அவரின் சிரிப்பு கதைகளுக்கு மேலும் அழகூட்டின. அய்யப்ப மாதவனின் புகைப்படங்கள் கலை நேர்த்தியுடன் இருந்தது. அதைப் பற்றி கேட்கும் போது தான் சொன்னார் அந்த புகைப்படங்கள் ஒளிப்பதிவாளர் செழியன் எடுத்தவை. அவ‌ரிட‌ம் விடை பெற்றுக் கொண்டு கிள‌ம்பினாலும் நெருக்கமாய் உண‌ரும் ம‌னிதர்களில் அவ‌ரும் ஒருவ‌ர்.

இதோ அய்யப்ப மாதவன் கதைகளைக் கேட்க கீழே உள்ள ப்ளேயரில் ப்ளே ஐக்கானைத் தட்டுங்கள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)


கதை கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_11.php


Sunday, December 19, 2010

அமைப்பியல், எந்திரன், இலக்கிய மகான்கள்



யாயும் ஞாயும் யாரா கியரோ- 1

அமைப்பியல், எந்திரன், இலக்கிய மகான்கள்

தமிழவன்

நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உலகம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.அறிவு இன்று முக்கியம். உலகை ஆள்வது அறிவு.இலக்கிய அறிவு நாம் எப்படி வாழவேண்டும் என்று கூறும்.அதாவது அது புத்தி சொல்லும் என்று தப்பாக நினத்து விடவேண்டாம்.புத்திசொல்லும் எழுத்து குப்பை. இலக்கியம் எதையும் கூறாமலே நம் வாழ்க்கையைச் செப்பனிடும். அதாவது கூறாமல் கூறுதல் இலக்கியத்தின் செயல்.அதாவது இன்றைய போஸ்ட்மாடர்னிச இலக்கியம் பற்றிச் சொல்கிறேன்.

சுஜாதா போன்ற இலக்கியமல்லாத எழுத்தைப் பற்றிச் சொல்லவில்லை நான். அந்த ஆளை வியாபாரிகள் தவறாகப் பயன்படுத்து கிறார்கள்.நான் சொல்வது இலக்கியம் பற்றி.செத்துப் போன மனுசனை வைத்து வியாபாரம் செய்வது பற்றிச் சொல்லவில்லை நான்.

இன்று அறிவு என்பது கலைத்துறை அறிவு என்றும் விஞ்ஞான அறிவு என்றும் பிரிந்து நிற்கவில்லை.

இலக்கியம் தரும் அறிவும் தத்துவம் தரும் அறிவும் ஒன்றாய் இணைந்துள்ளன. இத்தகைய புதிய தொடக்கம் அமைப்பியலிலிருந்து வருகிறது என்பதுதான் என் கருத்து.அதைத்தான் இங்கே சொல்லப் போகிறேன்.அமைப்பியல் தமிழுக்கு வரும் வரை இலக்கியவிமரிசனம் என்றபெயரில் சல்லியடித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு பட்டியல் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் பழையமாதிரி இலக்கிய விமரிசனம் ஏற்றுக் கொண்ட இலக்கியம் மேல்சாதிக்காரர்கள் எழுதியது.

அதுவரை தமிழில் சிலர் மனதில் தோன்றியதையெல்லாம் இலக்கிய விமரிசனம் என்று எழுதினார்கள். இது எண்பதுகளில் கேள்விக்குள்ளாக்கப் பட்டது.நிரம்பவும் உணர்ச்சிவயப் பட்டு எழுதுவார்கள். பிறரைத்தாக்கி யெல்லாம் எழுதுவார்கள்; மடையன் முட்டாள் என்றெல்லாம் எழுதுவார்கள்.நீ சிங்கப்பூர் மைனர் என்றெல்லாம் எழுதுவார்கள். இதெல்லாம் அமைப்பியல் தமிழில் எண்பதுகளில் வருவதுவரை இருந்தது. பின்னாடி இது மறைந்தது.

அமைப்பியல் என்றால் என்ன என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றும்.

அமைப்பியல் என்பது மொழியை அடிப்படைச் சிந்தனை முறையாகக் கொண்டது. மொழி என்றால் அதுக்கு இரண்டு அம்சங்கள் இருக்கும்.ஒன்று விளக்கக் கூடியது; இன்னொன்று விளக்க முடியாதது.

விளக்கக் கூடியதை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி அறியமுடியும். தமிழில் இருக்கும் இலக்கிய அறிவு நிலப்பிரபுத்துவ காலகட்டத்திலிருந்து வந்தது. கொஞ்சம் சமஸ்கிருதத்திலிருந்தும் கொஞ்சம் அலங்காரநூல்களிலிருந்தும் கிடைத்தது.தமிழில் முதலில் அலங்கார நூல்கள் இருக்கவில்லை. மத்தியகாலத்தில் தான் அலங்கார நூல்மரபு வந்துசேர்ந்தது. மகாராசர்களின் மரபு அது.அமைப்பியல் தொல்காப்பிய மரபை மீட்டுக்கொண்டுவந்துள்ளது. சங்ககாலத் தத்துவம் அது.சங்ககாலக் குறுநிலமன்னர்கள் சனநாயக மனநிலை கொண்டவர்கள்.தொல்காப்பியம் சொல்லும் "பொய்டிக்ஸ்"இந்த சனநாயக பொய்டிக்ஸ். சம்ஸ்கிருதத்திற்கு மாற்றானது.

தமிழகத்தில் புதியவகுப்பினர் படித்துவந்தபின் பழைய தமிழைத் தன் அறிவுக்குப் பயன்படுத்தினார்கள்.

இன்று கவிதையையும் சினிமாவையும் நாவலையும் ஒரேவித அளவுகோல்களால் பார்க்கிறது அமைப்பியல்.தொல்கப்பியத்தில் உள்ளுறைந்து இருக்கும் பார்வை இது.கிரிஸ்டியான் மெட்ஸ் என்ற பிரஞ்சு திரைப்பட கோட்பாட்டாளர் ஒருவர் சினிமாவையும் நாம் ஒரு மொழிபோல் பார்க்கவேண்டும் என்கிறார்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் மொழியாய் நாவலையும் கவிதையையும் சினிமாவையும் பார்க்கலாம். கட்டடக் கலையையும் இப்படிப் பார்க்கலாம்.உலகம் ரொம்பதூரம் வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு துறையும் பலவருட பயிற்சிக்குப் பிறகே புரியும்.இலக்கிய விமரிசனமும் அப்படித்தான்.அமைப்பியலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் நூல்படிப்பு வேண்டும்.தமிழில் பரிதாபம், இலக்கியம் படிக்காதவர்களிடம் மட்டிகொண்டது. முதலில் அப்படி இருக்கவில்லை. க.நா.சு. ரொம்ப படித்தவர்.கடந்த பத்து வருடமாய் ஒரு ஆங்கில நாவலைக் கூட படிக்காத நபர் தமிழ்நாவல் பற்றி எழுதினால் நான் அதைப் புன்னகையோடு ஒதுக்கிவிடுவேன்.உலகநாவல் அறிவின் ஒரு பகுதிதான் தமிழ் நாவல்.

ஆங்கிலம் தெரியாத கோணங்கி கூட உலக நாவல் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். வலைப்பூவில் ஒன்றும் தெரியாத "ப்ராட்"கள் எல்லாம் பெரிய இலக்கிய மேதை போல வேசம் போடுகிறார்கள்.இதைதட்டிக் கேட்க யாரும் முன்வருவது இல்லை.பொய்சொன்னால் யாரும் கண்டுபிடிக்காத துறை தமிழிலக்கியம் தான்.

தமிழ் இலக்கியவிமரிசனத்தில் சமூகப் பார்வைக்காரர்கள் இருந்தார்கள்;கலைப் பார்வையாளர்கள் இருந்தார்கள்.அமைப்பியல் இரண்டையும் இணைத்தது. எண்பதுகளில் அமைப்பியல் வந்தது. அது சமூகத்துக்குத் தேவையாக இருந்தது. எவ்வளவு கேலி செய்தார்கள்?இன்று கட்டமைப்பு என்றும் சொல்லாடல் என்றும் சொல்லாதவர்களில்லை. இவைகள் எல்லாம் அமைப்பியலில் இருந்து வந்தவை தானே?

அதாவது நான் சொல்லவருவது கணினி வந்தபிறகுள்ள புதிய காலத்தில் நாம் வாழவேண்டும் என்பது தான். அதற்கு அமைப்பியல் தமிழில் வந்து வழிகாட்டியது.எனவே நாம் நம் கண்ணைத் திறக்கவேண்டும் என்று கூறுகிறேன்.நிலப்பிரபுத்துவ மனோநிலையைக் களையவேண்டும். வலைப்பூ வைத்திருப்பவர்களில் நாகார்ச்சுனன் போன்றவர்களின் வலைப் பூவை எத்தனைபேர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதைநான் ஏன் சொல்கிறேன் என்றால் இன்றையகாலம் மாறிவிட்டது.விளம்பரங்கள் புதிய அழகியலாகிவிட்டது.உதாரணமாக எந்த்ரன் திரைப்படத்தை விமரிசித்த இலக்கியக்காரர்கள் எலோரும் எந்திரனை ஒரு ART என்று பார்த்தார்கள்.அடிப்படையே தவறு.அப்படிப் பார்க்கக் கூடாது. ஒருத்தர் ரஜனிகாந்த் ரோபோவாக வரும் போது போட்டிருந்த வேஷம் சரியில்லை என்றார். நம்மூரில் சினிமா தியேட்டரில் சினிமாபார்த்துவிட்டு வருபவர்களை வெளியில் டிக்கட் எடுக்க காத்திருப்பவர்கள் "அண்ணே, படம் எப்படி "என்று கேட்பார். அதுக்கு அவர் " நல்லா இருக்கு, நாம பாக்கிறது படத்தில அப்படியே இருக்கு " என்று காரணம் சொல்வார். அதாவது எதார்த்தவாதம் கிராமம் வரை தத்துவமாய் பரவியிருக்கிறது.

நம் இலக்கிய பிரம்மாக்களும் இதையே வேறுவிதமாகச் சொல்கிறார்கள்.

நான் மேலே குறிப்பிட்ட கிறிஸ்டியன் மெட்ஸ் திரைப்படத்தை இப்படி பார்க்கக் கூடாது என்கிறார். சிமியாட்டிக்ஸ் முறையில் சினிமாவைப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர். அதாவது சிமியாட்டிக்ஸ் அமைப்பியலில் ஒரு பிரிவு. அந்த காட்சியை ஒரு குறியியல் (சிமியாட்டிக்ஸ்) முறையில் பார்த்தால் எந்திரனாக வரும் ரஜனியின் வேஷம் ஒரு அ-மனிதத்தைக்(Non-human) காட்டுறது. இதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அதாவது நம் மக்களுக்குத் தெரிந்தது கூட இலக்கிய மகான்களுக்குத் தெரியவில்லை.

இப்படத்தை எடுத்த முதலாளிகளுக்கு இந்தமாதிரி "கான்ட்ரொவர்ஸி" வேண்டும்.சிலவருடங்ககளுக்கு முன்பு அமிதாப் பச்சன் பெங்களூரில் நடத்திய அழகு போட்டிக்கு எதிர்ப்பை அவர்களே செட்-அப் செய்து விளம்பரம் தேடியது சிலருக்காவது ஞாபகம் இருக்கும்.

பாவம் நம் போலி இலக்கியவாதிகள்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 11வது பௌர்ணமி இரவு


தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 11வது பௌர்ணமி இரவு

(11th Full Moon Day Film Screening)


20-12-2010


திங்கள், 20-12-2010

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ஏழுமலை ஜமா (பவா செல்லத்துரை அவர்களின் சிறுகதை ஏழுமலை ஜமாவாக திருவண்ணாமலையை சேர்ந்த கருணா என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது).

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்: Bigas Luna இயக்கிய The Tit & The Moon (1995) Min: 90

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt0111403/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268




Thursday, December 16, 2010

தி போஸ்ட்மேன் - குறும்பட விமர்சனம்

ஆதிரை

இயக்கம்: மனோகர்
தயாரிப்பு: L.V. பிரசாத் டி.வி. அண்ட் பிலிம் அகாடெமி
ஒளிப்பதிவு: அபிநந்தன்
படத்தொகுப்பு: லோயெஸ்வரன்



வாழ்வின் யதார்த்தங்களை தாண்டி, ஒரு மாயயை உருவாக்கும் கூறுகளைத்தான் திரைப்படம் முதலில் முன்னெடுத்து சென்றது. ஆனால் எத்துனை காலம்தான் மேகத் திரள்கள் சூரியனை மறைத்து விடமுடியும். மாயத் திரைகள் விலகி திரைப்படம் யதார்த்தவாதத்தை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கியது. இந்த பரிணாம வளர்ச்சி ஏனோ தமிழ் சினிமாவை மட்டும் எட்டாமல் போனது. அல்லது எட்டவிடாமல் செய்யப்பட்டது.

இயல்பாக நடக்க வேண்டிய சில விடயங்கள் சில நேரங்களில், மிகப்படுத்தப்படுவது அதன் வீரியம் சரியாய்ப் போய் சேரவே.. ஆனால் மிகைப்படுத்தப்படுவதால் அதன் வீரியம் குறையும் என்றால் பின் மிகைப்படுத்தப்படுவதன் அவசியம் என்ன என்பதை தமிழ் சமூகம் ஏனோ உணரவில்லை.

திரைப்படங்களை தாண்டி தற்போது, அதற்கு மாற்றாக குறும்படங்கள் அதற்கான சாத்தியங்களை உருவாக்கி வருவது கவனிக்கத்தக்க ஒன்று. அந்த வகையில் யதார்த்தவாதத்தை முன்னெடுத்து செல்லும் தமிழின் மற்றுமொரு குறும்படம் போஸ்ட்மேன்.

தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் பதிவு செய்யப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை விட, அப்படியான ஒரு செயல் இங்கே இன்னும் தொடங்கவே இல்லை என்பதுதான் உண்மை. பாலா போன்றோர் தங்கள் படங்களில் காட்டும் விளிம்பு நிலை மனிதர்கள் கூட உண்மையின் பக்கம் வராத கொஞ்சம் மெருகேற்றப்பட்ட, கற்பனை புகுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள் தான். அதேபோல் மனோகர் இயக்கி இருக்கும் இந்த குறும்படத்தில் போஸ்ட்மேனாக வருபவரும் கொஞ்சம் இயல்பு தன்மையை மீறி வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த மீறல் எடுத்துக் கொண்ட களத்திற்கு நியாயம் கற்பிப்பதாகவே உள்ளது. கடிதம் எழுதும் பழக்கம் அறவே அழிந்து வரும் இந்த சூழலில் இதுப் போன்ற படங்கள் கொஞ்சமாவது அதன் தேவையை உயிர்த்து இருக்க செய்யும்.

ஊரில் போஸ்ட்மேனாக பணிபுரிபவர் தன் பணியை சுய விருப்போடு, அதற்கான தேவையோடு, தனிமையின் கிறக்கத்தை கொஞ்சம் தள்ளி வைக்கும் முயற்சியோடு செய்யும்போது, விஞ்ஞான வளர்ச்சியாக உள்ளே நுழையும் தொலைபேசியால் யாருக்கும் கடிதம் வராமல் போவதால், அல்லது வருகின்ற கடிதங்கள் கூட தொலைபேசி பில்லாக வருவதால் அவன் மனம் பித்துப் பிடித்து அலைகிறது. ஒரு போஸ்ட்மேனாக பணிபுரிபவர் அந்த கிரமாத்தின் ஒட்டுமொத்த மனிதர்களிடத்திலும் அன்பு செய்பவராக இருக்கும் பட்சத்தில் ஏற்படும் பிணைப்புகள் மிக சுவாரசியமானவை. அப்படியாக பேரனை பிரிந்து வாழும் பாட்டிக்கு இவனே கடிதம் எழுதி அதை வாசித்துக் காட்டி பாட்டியின் சிரிப்பில் ஆனந்தம் கொள்ளும் இடங்கள் பல படங்களில் பார்த்து இருந்தாலும், இங்கேயும் அதன் நேரத்தின் நம்மை வாயடைக்க செய்கிறது. கொஞ்சம் ரசிக்கவும் செய்கிறது. தான் விரும்பும் பெண் தனக்கே தன்னுடைய திருமண அழைப்பிதழை கொடுக்கும்போது, அவளுக்காக இவன் எழுதி வைத்திருந்த கடிதத்தை பாட்டிக்காக அவள் பேரன் எழுதியது போன்று மாற்றி படிக்கும் தருணங்கள் இனிமையானவை.

இறுதிக் காட்சி கொஞ்சம் கனமாகவே இருந்தாலும், தொடர்ந்து இந்த துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் சராசரிக்கும் மேற்பட்ட பார்வையாளனுக்கு முடிவு தெரிந்து விடுவதால் படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் ஏற்படுத்தி இருக்க வேண்டிய பாதிப்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் இக்குறும்படத்தின் குறியீடுகள் பல நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒரு காட்சியில் உடைந்துப் போன கண்ணாடியை மாற்றி புதுக்கன்னாடியை வைத்துவிட்டு அவன் சிரித்துக் கொண்டே நகரும் காட்சி, அடுத்து நிகழவிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியை இவன் அதே புன்னகையுடன் ஏற்றுக் கொள்வானா என்கிற கேள்வியை முன்வைத்து நகர்கிறது. அழகியல் சார்ந்து மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம், அதன் கதாப்பாத்திர தேர்வில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போஸ்ட்மேனாக நடித்தயுர்ப்பவருக்கு நடிப்பு ஆங்காங்கே பல்லைக் காட்டிக் கொண்டு வருவேனா என்கிறது. தான் விரும்பும் ஒருத்தி தன்னிடமே அவளின் திருமண அழைப்பிதழை கொடுக்கும்போது ஏற்பட்டிருக்க வேண்டிய இயல்பான ஏக்கம், துடிப்பு எதுவுமே இல்லாமல் தேமே என விளிப்பதை கொஞ்சமாவது தவிர்த்து இருக்கலாம். அல்லது சேரனை போல் கைகளால் கண்ணை மறைத்துக் கொண்டு அழுவது போல் உள்ளுக்குள் சிரித்து இருக்கலாம். (மீடியாக்கள் முன்னிலையில் கூட சேரன் நன்றாக அழுகிறார்.. படங்களில் ஏனோ அவருக்கு அழத் தெரிவதில்லை).

இக்குறும்படத்தில் கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட இசை தான் என்றாலும், அதன் ஓசை நமது ஜீவ நாடியை கொஞ்சமாவது வருடிப் பார்க்கிறது. ஒட்டு மொத்தமாக படத்தின் பின்னணி இசையால் சிலக் காட்சி பிழைகளைக் கூட கவனிக்க விடாமல் செய்து விட்டது இசை கோர்த்தவரின் திறமை. ஏதோ ஒரு கிலுகிலுப்பை, கிளர்ச்சியை இந்த இசை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல..

படத்தொகுப்பு கச்சிதம் தான். படத்தொகுப்பு நடந்திருக்கிறது என்கிற உணவேர் இல்லாமல் அந்த வேலையை செய்வது தேர்ந்த கலைஞனுக்கு மட்டுமே கை வரும் கலை. அந்த வகையில் லோயெஸ்வரன் கவனிக்கப்பட வேண்டியவரே..

படத்தின் இயக்குனரை விட மிக அதிகமாக பாராட்டப்பட வேண்டியவர் இப்படத்தின் ஒளி ஓவியர். நேர்த்தியான ஷாட்டுகள், அழகான காட்சியமைப்புகள், காட்சிகளுக்கு தேவையான ஒளி அளவு என மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். சில நேரங்களில் கேமெரா பயணிப்பதை விட நாமே அந்தக் காட்சிகளுடன் பயணித்து விடுகிறோம். ஒரு ஒளிப்பதிவாளரின் ஆக சிறந்த வெற்றி இதுதான். கண்களை ஒளியால் நிரப்பும் அபிநந்தன் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களில் நிச்சயம் பிரகாமாய் ஒளிரப்போகும் சூரியன்தான்.

இயக்குனர் மிக சரியான களத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு தேவையான நியாயங்களை செய்திருக்கிறார் (கதாபாத்திர தேர்வைத் தவிர). இதுப் போன்ற படங்களுக்கு தேவையான இடங்களை (Location) தெரிவு செய்ததிலிருந்தே படத்தின் வெற்றிக்கான படிகள் தொடங்கி விட்டன. ஒரு நல்லக் களத்தை கையாண்ட குறும்படம் என்றாலும், தேசிய விருது பெருமளவுக்கு இப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. ஒளிப்பதிவுக்காக வேண்டுமானால் அந்த ஆச்சர்யம் நடந்திருக்கலாம்.

இருந்தாலும் குறும்படம் என்கிற பெயரில் நிறைய அபத்தங்கள் நடந்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், கையில் கேமெரா எடுத்தவரெல்லாம் இயக்குனர் என்று உரக்கக் கூவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுப் போன்ற படங்கள் குறும்பட துறையை கொஞ்சமாவது புத்துணர்ச்சியூட்டும் வகையில் வெளிவர வேண்டுமென்பதே நமது விருப்பம். அந்த வகையில் இயக்குனர் மனோகருக்குகையில் ஒரு பூங்கொத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதில் தவறேதும் இருக்க வாய்ப்பில்லை, தேசிய விருதே கையில் கிடைத்திருக்கும்போது.!


http://thamizhstudio.com/shortfilm_review_17.php



ஆதிரை



Wednesday, December 15, 2010

யாயும் ஞாயும் யாரா கியரோ - அறிமுகம்



தமிழவன்


தமிழவன் தமிழ் ஆய்வாளர்களில் முக்கியமானவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர். தமிழ‌வன் 80களில் தமிழ் இல‌க்கிய‌த்தில் அமைப்பிய‌ல்வாத‌த்தை முன்னெடுத்துச் சென்ற‌வ‌ர். த‌மிழ் ஆய்வில் முன்சென்ற‌ த‌லைமுறையைத் தாண்டி ஆய்வுமுறையில் த‌ன‌க்கென்ற‌ த‌னியிட‌த்தைப் பிடித்த‌வ‌ர்.

அமைப்பியலிலும் பின் ந‌வீன‌த்துவ‌திலும் தேர்ந்த‌ இவ‌ர் த‌மிழின் மிக‌ச் சிற‌ந்த‌ ஆய்வு நூல்க‌ளை எழுதியுள்ளார். த‌மிழ‌வ‌ன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள், ஜி.கே. எழுதிய மர்மநாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் போன்ற நாவல்களையும் பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமிழவன் ஸ்ட்ரக்சுரலிசம், படைப்பும் படைப்பாளியும், தமிழும் குறியியலும், தமிழில் மொழிதல் கோட்பாடு போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழவன் தொடர்ந்து தீராநதியில் "மரமும் ஓயாத காற்றும்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் வாழ்வும் அதன் மரபுத் தொடர்ச்சி சங்க காலம் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இன்றளவும் தொடரும் உயிர்ப்பும் தமிழ் தேசியம் என அவர் எழுதும் கட்டுரைகள் தமிழ் பதிவுகளில் மிக நுட்பமானது.அவர் ஓர்மை என்ற சொல்லாடலை கட்டமைக்கிறார். ஓர்மை என்பது தமிழ் ஞாபகம். அது தொடர் ஓட்டம் போல் நூற்றாண்டுகள் கழிந்தும் மரபைக் கடத்தி மொழியை அதன் உன்னதத்துடன் இயங்க வைத்துக் கொண்டு இருப்பது. தொல்காப்பியனிடம் தொடங்கி அது எவ்வாறு பாரதி, அண்ணா, பிரபாகரன், பாரதிதாசன் , நேசமணி, க.நா.சு, புதுமைப்பித்தன் ஏனைய தமிழ் எழுத்தாளர்கள், போராளிகள் எனத் தொடர்ந்து தமிழ் தன் இருப்பை அர்த்தப்படுத்திக் கொண்டு இருப்பதன் அழகியலை நுண் சிந்தனையால் தருவிக்கிறார். மொழியென்பது சொற்கள் என்னும் அதிர்வலைகளால் கட்டப்பட்டிருக்கும் ஒரு மந்திரம். அதன் புலன் நம் மரபணுக்களில் உள் நுழைந்து மறைந்து கொள்கிறது.

தமிழவன் கூடு இணையதளத்திற்காக எழுதும் இக்கட்டுரையின் நோக்கம் தமிழின் புதிய தலைமுறைக்கு இலக்கியத்தை எடுத்துரைத்தலும் பொய்மையாக இலக்கியமென வியாபாரிகளால் கட்டமைக்கப்பட போலி பிரதிகளின் கட்டமைப்பை உடைத்தலும். அமைப்பியலிலும் பின் நவீன போக்கின் வழியிலும் திறனாய்வை நவீன வாசகர்களும், மொட்டுவிரிக்கும் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்தலே இதன் அடிப்படை. விவாதங்களும் தத்துவ மோதல்களும் என்பதே இக்கட்டுரைகளின் ஊடாட்டமாக இருக்கும். இதன் வழி தமிழில் திறனாய்வை கற்றுக் கொடுத்தல், சரியான இலக்கியப் புரிதலை ஏற்படுத்துதல், உலக இலக்கியங்களைக் காட்டிலும் தமிழில் ஒரு சிறந்த படைப்புமுறைமையை உருவாக்குதலே இதன் எண்ணம்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com



Monday, December 13, 2010

கதை சொல்லி - பவா செல்லதுரை (Bava Chelladurai)

கதை சொல்லி - பவா செல்லதுரை (Bava Chelladurai)

லிவி

மிகச் சிலரே தன் இருப்பை எந்தவொரு சுயநலமின்றி மொழிக்காக இலக்கியத்திற்காக தம் வாழ்க்கை முழுமையும் கலைச் செயல்பாடுகளோடு அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.அந்த தமிழ் ஞாபகமே ஓர்மையின் தொடர்ச்சியின் ஒன்றே திருவண்ணாமலையில் உள்ள பவா செல்லதுரையும் அவர் குடும்பமும். கதை சொல்லிக்காக பவாசெல்லதுரையை சந்திக்கச் செல்ல இருந்த அன்றைய பொழுது சென்னையை புயல் தாக்குவதான அறிகுறிகளோடு சிறு தூறலையும் சேர்த்துக் கொண்டது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கான நான்கரை மணி நேரப் பயணமும் மழை நேரக் கிளர்ச்சியை தந்து கொண்டிருந்தது.திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் வெள்ளை அல்லது காவி உடை அணிந்து ஆன்மீகத்தை தேடி தியானம் செய்து கொண்டிருக்கும் அயல் நாட்டவரைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.இந்த மண்ணே தனக்கு உவப்பானதாய் ஆன்மீகத்தையும் இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறது போல‌!

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வீட்டை அவர் ஊரில் யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள் என்று வாசித்த ஞாபகம் இருக்கிறது.பவாவை செல்போனில் அழைத்து, வந்திருப்பதைச் சொல்லியவுடன் "ஆட்டோ ஒன்றை பிடித்து ஓட்டுனரிடம் செல்போனைக் கொடுங்கள் நான் முகவரி சொல்கிறேன்" என்றார்.அவ்வாறே செய்ததும் பவா முகவரியை சொல்லத் தொடங்கினார்.ஆட்டோகாரர் தான் பேசுவது பவா என்பது தெரியாமல் "எதுங்க? பவா சார் வீடுங்களா ?" என்றார்.ஆட்டோக்காரர் திருப்பி சவாரி முறைப்படி நிற்கும் ஆட்டோகாரரிடம் "பவா சார் வீடு" என்று மட்டும் சொன்னார்.திருவ‌ண்ணாம‌லையில் ந‌ன்கு தெரிந்த‌ பிர‌ப‌ல‌மாக‌ பவா செல்ல‌த்துரை இருக்கிறார். த‌மிழ் எழுத்தாள‌னுக்கு மிக‌ ஆச்சரிய‌மாக‌.....


More: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_10.php





Saturday, December 11, 2010

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010,கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010,கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000

மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு

நுழைவுக் கட்டணம் இல்லை.


போட்டிக்கான விதிமுறைகள்:

* குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பி..


more: http://thamizhstudio.com/competitions_22.php


மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)

வெங்கட் சுவாமிநாதன்

எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக் கிறார்கள். வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த் ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம் நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று. நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று.

ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.

இன்னம் ஒன்று. ஏந்திரன் பற்றி எழுதியது போதும் என்று சில அன்பர்கள் சொன்னது இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், எந்திரன் பற்றி நான் எழுதியதைப் பொறுக்கமாட்டாது ஆபாசமாகத் திட்டி வந்த பின்னூட்டங்கள் நிறையவென்றும், ஆனால் அவை ஆபாசமாக இருந்ததால் அவற்றை வெளியிடவில்லை என்று அருண் சொல்கிறார். மாதிரிக்கென்று ஒன்றிரண்டை வெளியிட்டிருந்தால், அவை எத்தனையில் ஒன்றிரண்டு என்றும் சொல்லியிருந்தால் நம் தமிழ் சமூகத்தில் ரஜனி சாரின் ரசிகர்கள், எப்படிப்பட்ட எதிர்வினையைக் காட்டுபவர்கள் என்பதோடு நம் தமிழ் சமூகத்தின் சீரழிவு எத்தனை ஆழ வேர்கொண்டதும், பரவலானதும், கொடூரமானதும் என்பது தெரிந்திருக்கும். நம் ஆபாசங்களை, நம்மைப் பீடித்திருக்கும் பயங்கர நோய்களை நாம் அறியாது மூடி மறைப்பானேன்?. நம் வியாதியைப் பற்றி நாம் அறியாதிருப்பதும் கண்மூடிக்கொள்வதும், நோயை பயங்கரமாக முற்றச் செய்துவிடும். செய்துவிடும் என்ன, முற்றிவிட்டது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

எந்திரனைப் பற்றி இன்னம் கொஞ்சம் சொல்லி விட்டு பின் மற்றவற்றிற்கு நகர்கிறேன். ஏனெனில் இது பற்றி நாம் மிகவும் பெருமைப் பட்டுக்கொள்கிறோம். தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே இப்படத்தின் தொழில் நுட்பமும், கற்பனையும் விஞ்ஞானத்தைக் கலையாக்கியதாகவும், எல்லாம் ஒரு உச்ச கட்ட சாதனையென்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. குத்தாட்டம், ஸ்டண்ட் காட்சிகள், வட்டாரப் பேச்சு, கிராமம் , காமிக் என்று எந்த ஒன்று ரசிகப் பெருமக்களின் வரவேற்பைப் பெற்று அதிக வரும்படிக்கு வழி காட்டுகிறதோ, அதையே பின் வரும் நிறைய படங்கள் காப்பி அடிப்பது நம் சினிமா மரபு ஆதலால், இனி நிறைய எந்திரன் காப்பிகள் வருவதை எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அதன் ஒவ்வொரு அத்தியாயமும் இப்படித்தான் நீளும். எந்த மசாலா சரக்கு வெற்றியடைந்து, காபி செய்யப்பட்டு எத்தனை வருடங்களுக்கு எத்தனை படங்களுக்கு அது நீடித்தது பின் எந்த மசாலா எந்த வருடம் எந்தப் படத்தில் புகுந்து வெற்றிக்கு வழிவகுத்தது என்று அந்த அத்தியாயங்கள் நீளும்.

ஆனால் இது எப்படி ஒரு தமிழ் சினிமாவின் சாதனையாகும் என்பது முக்கியமான கேள்வி. இந்த படத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகச் சொல்லப்படும் சமாசாரங்கள் எதுவும் தமிழ் மண்ணைச் சேர்ந்ததில்லை. தமிழனின் படைப்பல்ல. நான் ரஜனி சாரைச் சொல்லவில்லை. அவர் இங்கு தான் தன் சினிமா வாழ்வையும் வளத்தையும் கண்டவர். அவரும் நம் தமிழ் அரசியல் வாதிகளைப் போல, தமிழைக் கோஷமாக்கியே தன் அனேக காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அவர் மூச்சிலே தமிழ் இருக்கும் என்று பிரகடனம் செய்தவர். தமிழ் தான் இருக்குமே தவிர காவிரித் தண்ணி இருக்காது. அது கன்னடம் தான் பேசும். ஆக, காவிரித்தண்ணி பற்றி மட்டும் பேசிவிடக்கூடாது. அதற்கு அவரை மட்டும் தனித்துக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நம் அரசியல் தலைவர்களும், தமிழினத் தலைவர்களும் மிகவும் அடக்கித் தான் வாசிக்கிறார்கள். காவிரி, பாலாறு, ஈழத் தமிழர் பற்றியெல்லாம் ஏதும் வீராவேச முழக்கங்கள், அறை கூவல்கள் விடுவதில்லை.

ஆனால் எப்படி, நமது உலக நாயகனின் ஒவ்வொரு படத்துக்கான அவதார வேடங்கள் அனைத்துக்கும் ஹாலிவுட் ஒப்பனைக் காரர் எவராவது அழைத்து வரப்பட்டால் அது எப்படி தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப அல்லது கலைநுட்ப சாதனையாகும்? இதுகாறும் அனேகமாக எல்லா வேஷங்களும் போட்டுத் தீர்ந்துவிட்டதால், உலக நாயகன் இஸ்பானிய காளைச் சண்டை வீரராகிறார். மன்மதன் விட்ட அம்பு படத்தில் எம்ஜிஆர் சிங்கத்தோடு சண்டை போடவில்லையா? அதுக்கும், முன்னால், எப்பவோ முப்பது நாற்பதுக்களில், ஒரு சிறு குழந்தையாக, மூன்று வயசுக் குழந்தை, கண்ணன் ஒரு ராக்ஷஸ பாம்பை வளைத்துப் பிடித்து அதன் மேல் காளிங்க நர்த்தனம் செய்யவில்லையா? வேண்டியது ஒரு தேர்ந்த காமிராமேன். அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரோ இல்லை உலக நாயகனோ, பாகிஸ்தானிலிருந்து வரும் கோரி, கஜனி ஏவு கணைகளை அவை வரும் வழியிலேயே ஆகாயத்துக்கு எம்பி குதித்து அவை தாக்கும் முன்னரே தம் ஒற்றைக் கையில் பிடித்து விடுவார்கள். பாபா படத்தில் இதன் ஆரம்பங்களைப் பார்க்கவில்லையா என்ன?

இதெல்லாம் கிடக்கட்டும். சினிமாவில் வரும் பீதாம்பர வித்தைகள் இவை. அந்த வித்தை காட்டுபவரோ நம்மூரில் பிறந்தவர், வளர்ந்தவர். வித்தை கற்றுக் கொண்டவர். எனவே அதைத் தமிழனின் சாதனையாகக் கொள்ளலாம். ஆனால் உலக நாயகன் படங்களுக்கு வந்து அவருக்கு ஒப்பனை செய்யும் ஹாலிவுட் காரர் யாரோ ஒருத்தர். அதை நம்மது என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது? சன் பிக்சர்ஸ் காரரிடம் 150 கோடியோ என்னவோ அநாயசமாக அள்ளிவிட பணம் அம்பாரம் அம்பாரமாகக் கொட்டிக்கிடக்கிற காரணத்தால் சங்கர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்கு (எனக்கு இதற்கெல்லாம் தமிழில் என்ன சொல்வது என்று தெரியாது. இந்த என் குறைபாட்டை கேடிவி, சன் பிக்ஸர்ஸ் நடத்துபவரோ, அல்லது அவரது தாத்தாவுமோ கோவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எந்திரன் படத்துக்கான மொத்த செலவில் 40 சதவிகிதம் செலவழிக்க முடிகிறது. .சாகஸ காட்சிகளை உருவாக்க மாட்ரிக்ஸ் படத்தில் வேலை செய்த யுவென் வோ பிங்கையும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவை க்ராஃபிக்ஸ்க்கும், அழைத்து வந்து செய்து கொண்டால் அது எப்படி சங்கருக்கோ சன் பிக்சர்ஸ்க்கோ, ரஜனி சாருக்குமோ பெருமை சேர்க்கும்?. இதெல்லாம் போகட்டும். ஐஸ்வர்யா ராய் இதில் காட்சி தரும் 57 வித உடையலங்காரங்களையும் சூப்பர் ஸ்டார் ரஜனி ஸார் தோன்றும் 55 வித உடைகளையும் வடிவமைத்து தயார் செய்து கொடுத்தது மேரி ஈ.வொட் என்பவர். எங்கிருந்து வந்தாரோ தெரியாது.

ஆக ரோபோ வும் இறக்குமதி. அதன் இயக்கமும் தந்திர, சாகஸக் காட்சிகளும் இறக்குமதி செய்த பல தொழில் நுட்ப மூளைகளின் வேலைகள். போயும் போயும் உடையலங்காரங்கள் கூட இறக்குமதி, என்றால் அதில் நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அதிலும் அந்த உடைகள் எந்த நியாயத்துக்கோ தர்க்கத்துக்கோ கட்டுப் பட்டவை அல்ல. ஏதோ இஷடத்துக்கு கற்பனை செய்து கொள்ளப் பட்டவை. க்ராஃபிக்ஸூக்கு இந்தியா தான் சிறந்த இடம் என்றும் அதிலும் சென்னை தான் முன்னணியில் இருக்கிறது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவையும் யுவென் வோ பிங்கையும் தான் நாடவேண்டியிருந்திருக்கிறது. ஏனெனில் நம்ம படம் 150 கோடி படம் உலகத் தரத்துக்கு இருக்கவேண்டுமே. இவ்வளவையும் இறக்குமதி செய்துவிட்டு உலகத் தரத்துக்கு தயாரித்திருக்கிறோம் என்று பெருமையடித்துக்கொள்வது எப்படி சாத்தியமாகிறது? அதில் என்ன நியாயம் இருக்கிறது. பணம் தான் நம்மது. ஐஸ்வர்யா ராயைக் காதலிக்க ரோபோவுக்கும் ரஜனிசாருக்கும் போட்டி என்ற கற்பனையும் நம்மூர் கற்பனை. தான். சரி. வேறு எது இதில் நம்மது? பணம் கொடுத்து அமெரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கியதைக் காட்டி இது உலகத் தரத்துக்கு நான் செய்ததாக்கும் என்றால் அது கேலிக்கூத்தல்லவா? வெட்கப் படவேண்டாமா? I

ஆக, இதில் நம்மது, தமிழ் சினிமா சம்பந்தப்பட்டது எது? கலப்படமில்லாத தமிழ்ச் சரக்கு எது என்று பார்த்தால் அது ரஜனி சாரும், சங்கரின் கற்பனை வளமும், வழக்கமான தமிழ் வெற்றிப் படத்துக்கான ஆவி வந்த ஃபார்முலாக் கதை இருக்கே பின்னர் அந்தக் கதைக்கு தாளிக்கப்படும் கடுகு உளுத்தம் பருப்பு சமாசாரமாக, பாட்டு, டான்ஸ், சாகஸ காட்சிகள், எல்லாம். அது தான். அது இந்தப் படத்துக்கு மாத்திரம் இல்லை. எல்லாத் தமிழ் படத்துக்குமான தாளிப்பு தான். மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்கள். ஆக எந்திரன் படத்தை மாத்திரம் தனிப்படுத்திப் பேசுவதில் அர்த்தமில்லை. எல்லா தமிழ் சினிமா படங்களையும் கணக்கில் கொண்டு தான் சொல்கிறேன்.

தமிழ் சினிமா மாறிக்கொண்டு வருகிறதாக்கும். என்னென்னவோ புது புது சோதனைகள் செய்கிறார்களாக்கும் என்கிறார்கள். சமீபத்தில் மகிழ்ச்சி என்று ஒரு படம். நீல பத்மனாபனின் தலைமுறைகள் என்னும் நாவலை படமாக்கியது என்றார்கள். தமிழ் சினிமாக் கதைகளுக்கும் தலைமுறை நாவலுக்கும் எப்படி முடிச்சு போட முடியும், ஒன்று மொட்டைத் தலை, இன்னொன்று முழங்கால், என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அதில் வரும் ஒரு ஆச்சி பிரமாதமான சிருஷ்டி. நாவல் முழுதும் வியாபித்து இருப்பவள். தலைமுறைகள் நாவலின் மைய பாத்திரம். தமிழ் இலக்கியத்திலேயே உன்னத சிருஷ்டிகளில் ஒன்று. ஜானகிராமனின், ஜமுனா போல, புதுமைப் பித்தனின் கந்தசாமிப் பிள்ளை போல, இமையத்தின் ஆரோக்கியம் போல. இந்த ஆச்சியைத் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வர, தமிழ் சினிமாக் காரர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லை. அவர்கள் புத்தி சுவாதீனத்தில் உள்ளவர்கள் தான் தம் வழிவந்த வெற்றிக்கு உத்தரவாதம் தரும் மரபைப் பேணுபவர்கள் தான். ஆகவே, கஞ்சா கருப்புக்கு தலைமுறை நாவலில் என்ன வேலை என்று கேட்கமுடியாது. அதன் சினிமா அவதாரமான மகிழ்ச்சியில் அவசிய வேலை உண்டு. நான் பார்த்த இரண்டு அல்லது மூன்று நிமிட துணுக்கில் அந்த ஆச்சி நூற்றுக்கு நூறு சதவிகித தமிழ் சினிமாவில் ஆகி வந்த ஆச்சி தான். தலைமுறை நாவலின் ஆச்சி அல்லள்.

நந்த லாலா பாருங்கள். இது உலகத் தரம் வாய்ந்த க்ளாஸிக் என்று இங்கு சில அன்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சிபாரிசுக்காகக் கட்டாயம் பார்ப்பேன். அது தொலைக் காட்சியில் வரும்போது. தியேட்டருக்கு போய் அல்ல. ஆனாலும் நான் பார்க்கக் கிடைத்த சில நிமிட துணுக்கு எனக்கு உற்சாகம் தருவதாக இல்லை. இயல்பு என்பது நம் வசத்தில் சிக்க மறுக்கிறது. எதைச் செய்தாலும் ஒரு நாடகத் தன்மை கட்டாயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அது படம் முழுதும் வியாபித்து பயமுறுத்துகிறது. இயல்பாக இருப்பது என்பது தமிழனுக்கு என்றுமே சாத்தியமாகாத ஒன்று என்று தோன்றுகிறது. இது என்ன இன்று நேற்று பீடித்த வியாதியா என்ன? இதன் உச்ச கட்டமே “அவள் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள்” சமாசாரத்தை அறுபது வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட உலக நாயகன் அதில் தான் கண்ட சினிமா நயத்தை இன்றும் நினைத்து மலைத்து நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். யார் சொன்னது? உலக நாயகன் தான். ஆக, முன்னால் ஜெயகாந்தன் சொன்னது போல, திடீரென தமிழன் எட்டடிக்கு உயர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பார்க்கவேண்டும்.

(தொடரும்)




Thursday, December 9, 2010

பிரமிள் நூலகம்



பிரமிள் நூலகம்

தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்காக விரைவில் தனது அலுவலகத்தில் நூலகம் ஒன்றை அமைக்கவிருக்கிறது. இந்த நூலகத்தின் மூலம் விரிவானதொரு வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தோறும் "வாசிப்பு அனுபவத்தை" ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது கிராமத்தில் பிரமிள் நூலக வாசகர் வட்ட வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் பரவலான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள் பற்றி கிராம மக்களும், மாணவர்களும் அறிந்துக் கொள்ள இந்த நிகழ்வுகள் உதவும். தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிளின் பெயரில் இயங்கவிருக்கும் இந்த நூலகத்திற்காக நீங்களும் உங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம், அது ஒரே ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி. புத்தகங்கள் தர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236..


வெளிநாடுகளில் வசிப்பவர்களும் புத்தகங்கள் கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com


தமிழ் ஸ்டுடியோ.காம் 27வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)




நாள்: சனிக்கிழமை (11-12-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த மாதம் முதல் புதிய பகுதியாக "களம்" என்கிற பகுதியில் இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உள்ளிட்ட துறைகளில் உதவியாளராக பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் திரைப்பட அனுபவங்களை குறும்பட ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். இதன் மூலம் திரைப்படத் துறையின் தற்காலப் போக்கு, குறும்பட துறையில் எந்தெந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற தெளிவு ஆர்வலர்களுக்கு ஏற்படும்.

மேலும், ஒரு உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி படத்தொகுப்பாளர் உள்ளிட்ட கலைஞர்களின் பணி என்ன என்கிற தெளிவும் இதன் மூல ஏற்படும்.

இதில் இந்த மாதம் கௌதம் மேனன், லிங்குசாமி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு. நாகராஜ் பங்கு பெறுகிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சென்னை திரைப்பட கல்லூரி ஒளிப்பதிவு துறை பேராசிரியர் திரு. கிருஷ்ணா G.P. அவர்கள் பங்கு பெறுகிறார்.

குறும்படங்களில் ஒளிப்பதிவில் ஷாட் தொடர்பாகவும், எந்த ஷாட்டை எங்கே, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கவுள்ளார். ஒளிப்பதிவு தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிப்பார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

அட்சயம்

கணபதி

12 நிமிடங்கள்

தீராத பக்கங்கள்

ஷரன்

5 நிமிடங்கள்
ETC.,

ரவி பிரகாஷ்

9 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப் பட்டி ராசா, துள்ளுவதே இளமை, கரிசக் காட்டுப் பூவே போன்ற படைகளின் இயக்குனர் ஆவார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


Tuesday, December 7, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் மூன்றாமாண்டு தொடக்க விழா... (பதிவு எண்: 475/2009)




சா.ரு. மணிவில்லன்

தமிழ் ஸ்டுடியோ.காம்-ன் 26வது குறும்பட வட்டம் மற்றும் தமிழ் ஸ்டியோ.காம் மூன்றாவது ஆண்டு துவக்க விழா சென்னை இக்சா மையத்தில் 23.11.2010 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் மாலன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குனர் பிரபு சாலமன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘தமிழ் ஸ்டியோ’ குணா வரவேற்புரை வழங்கினார்.

முதல் நிகழ்வாக இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
1. பயணம் - சுப்புராஜ்
2. ஒரு ஊர்ல - பொன்ராஜ்

தமிழ் ஸ்டுடியோ மூன்றாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நிமிட குறும்பட போட்டியில் பரிசு பெற்ற படங்கள்

1. பொதி - சுப்புராஜ் (முதல் பரிசு) ரூ.2000
2. request - விஜயபாஸ்கர் (இரண்டாம் பரிசு) ரூ.1000
3. Festival - குறிஞ்சி பிரபா (இரண்டாம் பரிசு) ரூ.1000
4. ஜன்னலுக்கு வெளியே - பொன்ராஜ் (இரண்டாம் பரிசு) ரூ.1000

தமிழ் ஸ்டியோ அருண்

தமிழ் ஸ்டியோ காம் பற்றி சில வதந்திகள் உலவுகின்றன. இதற்கு பின்னணியில் எந்த நிறுவனமும் கிடையாது. எந்த NGO அமைப்புடனும் தொடர்பு கிடையாது. தமிழ் ஸ்டுடியோ ஒரு சுயேச்சியான அமைப்பாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் குணாவும் எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு முதல் லிவிங்சன், தயாளன் இருவரும் எங்களுடன் சேர்ந்துக் கொள்கின்றனர்.

தமிழ் ஸ்டியோ.காம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குறும்பட வட்டம் நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த 25 மாதங்களாக நடத்தி வருகிறது. இதன் நோக்கம் குறும்பட ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை அளிப்பது மற்றும் குறும்பட இயக்குனர்களை கவுரப்படுத்துவது ஆகும்.

கடந்த 10 மாதங்களாக பவுர்ணமி கூட்டம் நடத்தி வருகிறோம். பவுர்ணமி இரவில் ஒரு குறும்படம் மற்றும் ஒரு உலக படம் திரையிட்டு விவாதிக்கிறோம். இதன் நோக்கம் குறும்பட ஆர்வலர்களுக்கு திரைப்பட ரசனையை வளர்க்க வேண்டும் என்பதாகும்.

குறுந்திரை பயணம் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமங்களுக்கு குறும்படங்களை கொண்டு செல்கிறோம். கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர். நீங்கள் ஒத்துழைப்பு அளித்தால் உங்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்லலாம்.

கொஞ்சம் தேநீர் நிறைய அரட்டை மூலம் குறும்பட ஆர்வலர்களை இலக்கிய வாதிகளுடன் சந்திக்க வைக்கிறோம். குறும்பட ஆர்வலர்களின் இலக்கிய ரசனை மேம்பட இது உதவியாக இருக்குமென நம்புகிறோம்.

வரும் 27ந் தேதி முதல் புதுச்சேரியில் தமிழ் ஸ்டுடியோ.காம் கிளை செயல்பட இருக்கிறது. துவக்க விழாவிற்கு விருப்பம் உள்ளவர்கள் வரலாம்.

படம் எடுக்கலாம் வாங்க என்ற திட்டத்தின் மூலம் குறும்படம் எடுக்க காமிரா, படத்தொகுப்பு உதவிகள் செய்து தருகிறோம்.

குறும்பட இயக்குனர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் படிமை என்ற பயிற்சி இயக்கத்தை இந்த மாதம் தொடங்க இருக்கிறோம். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.

குறும்படங்களை விற்பனை செய்வது சம்மந்தமான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் குறும்பட விற்பனை தொடங்கப்படும். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் குறும்பட விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

குறும்பட ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் நூலகம் (புத்தகங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் உலக படங்கள்) அமைக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.

எல்லா நிகழ்ச்சிகளையும் எவ்வித வியாபார நோக்கமும் இல்லாமல்தான் செய்து வருகிறோம். ஆர்வலர்கள் அவற்றை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குனர் பிரபு சாலமன்

எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு முதலில் நன்றி கூறி விடுகிறேன். நிறைய பேர் கதை சொல்லி விட்டால் தன்னை இயக்குனர் என நினைத்துக் கொள்கின்றனர். என்னுடைய பாட்டிக்கூட நிறைய கதைகள் சொல்வார். கதை சொல்வது என்பது வேறு, இயக்கம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இயக்குனராக கடுமையாக உழைக்க வேண்டும். என்னுடைய 16 வருட உழைப்பு மூலம் நான் கற்ற விசயங்கள்தான் இன்று மைனா திரைப்படம் வெற்றிகரமாக ஓட காரணமாகும். மைனா படம் திராவிடர்களின் சினிமா என ரஜினி பாராட்டினார். இப்படத்திற்காக சுமார் 1200 கிலோ மீட்டர் பயணம் செய்தோம். யதார்த்தமாக அதேசமயம் வியபாரத்தனம் குறையாமலும் மைனாவை எடுக்க விரும்பினேன். அதை சிறப்பாக செய்துள்ளேன் என்பதை தான் மைனாவின் வெற்றி நிரூபிக்கிறது.

குறும்பட, திரைப்பட ஆர்வலர்களுக்கு தமிழ் ஸ்டியோ.காம் ஒரு பெரிய வாய்ப்பை தருகிறது. அதை நீங்கள்தான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் நானும் தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து செயல்படுவேன் என கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.

நடிகர் ரமேஷ் கண்ணா

இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைத்தனர். வர முடியாமல் போய்விட்டது. இன்று கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அருண், குணா இருவரின் முயற்சிகள் கனவுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். குறும்பட ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னிடம் சுமார் 5000 உலக படங்கள் உள்ளன. அதை தமிழ் ஸ்டுடியோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

எனக்கு எழுதுவது எளிது, மேடையில் பேசுவது சிரமம். இருந்தாலும் சுருக்கமாக பேசிவிடுகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை ஒரு தொடர் எழுத அருண் கேட்டார். நானும் எழுதுவதாக ஒப்புக்கொண்டு யாவரும் கேளிர் என்ற தொடரை எழுதினேன். எழுதும்போது பல விசயங்களை கற்றுக் கொண்டேன். நான் தான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அருண் இங்கு பேசும்போது மிகவும் தன்னம்பிக்கையாக பேசினார். அவருடைய தன்னம்பிக்கைக்கு காரணம், திரை ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வழிக்காட்டல் நிகழ்ச்சியாகும். ஆர்வலர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர் மாலன்

இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தார்கள் என அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இங்குள்ள அனைவரும் சினிமா சார்ந்தவர்கள். நான் சினிமா மீது கடும் விமர்சனம் வைத்துள்ளவன். இன்னும் கொஞ்ச நாளில் பெரியார் சொன்னது போல் ஐந்து பாவங்களில் ஒன்று சினிமா என்ற மனநிலைக்கு கூட சென்றுவிடலாம்.

எழுபதுகளில் உலக படங்களை தொடர்ந்து பார்த்து இருக்கிறேன். உலக படங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் திரையிடலுக்குக் கூட ஏற்பாடு செய்துள்ளோம்.

16எம்எம் -ல் குறும்படம் எடுத்தேன். அதில் ஏற்பட்ட அனுபவங்கள் பல. சினிமா நமக்கானது அல்ல. எழுத்துதான் நான் பயணிக்க வேண்டிய பாதை என்ற முடிவுக்கு வந்தது மிக முக்கியமான அனுபவமாகும்.

குறும்படம் என்பது ஒரு பாதிப்பை தரக்கூடியது. உங்களை பாதித்த ஒரு விசயத்தை மட்டும் கூறுவது.

என்னை பொறுத்தவரை ஊடகங்கள் செய்தியை சுமந்து செல்ல வேண்டும். அது எப்படி என்பது படைப்பாளியின் சுதந்திரம்.

இறுதியாக தமிழ் ஸ்டுடியோ அருண் நன்றி கூறினார். பண்பலை வானொலி தொகுப்பாளர் ராஜசேகர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

நிகழ்வு சார்ந்து மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/pmSa

எழுத்து - சா.ரு. மணிவில்லன்




Monday, December 6, 2010

கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita)

லிவி

செவ்வாய்க்கிழமை பின்னேரம் 5.00 மணிக்கு கடிகார முள்ளோடு இதயமும் சேர்ந்து துடித்தது.மூச்சை சில நிமிடங்கள் சிறிது இழுத்து விட்டுக்கொண்டேன். கதை சொல்லிக்காக சாரு அன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ராயப்பேட்டையில் உள்ள அமிதிஸ்ட் கஃபே (Amithist) யில் இரவு சந்திப்பதென முடிவாகியிருந்தது. அடர் நீலமாய் வானம் மாறும்போது தொடங்கிய பயணம் சரியாக இருள் கவிந்ததும் கஃபே க்கு சென்றடைந்திருந்தோம். தகவல் தெரிவித்ததும் சாருவும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கைக் குலுக்கல்களுடன் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். மரங்களில் தொங்கும் லாந்தர் விளக்குகளைப் போன்ற உருளை பல்புகளும் பூவின் அமைப்பையொத்த ஸ்டாண்டில் (stand) இதழ்களையொத்த மங்கிய வெளிச்சம் தரும் மின்சார விளக்குகளுமென சூழ்ந்து நின்ற விருட்சங்களுக்கு கீழ் உள்ள ஒரு மேஜையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.

முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன் அல்ல.ஆனால் அவனுக்கு சாருவை பிடித்தருக்கிறது.அவரைத் தொடர்ந்து இணையத்தில் வாசிக்கிறான்.

போலியாக க‌ட்ட‌மைக்க‌ப்பட்ட‌ அமைப்பை மீறுத‌லே சாருவின் எழுத்தின் அர‌சியல். மிக‌த் துல்லிய‌மாய் தேர்ந்தெடுகப்பட்ட ஆணாதிக்க‌ மற்றும் ச‌மூக‌ இறுக்க‌ங்க‌ள் கொண்ட நம் ச‌மூக‌ம் அவ‌ரை ஏற்றுக் கொண்ட‌தே மிக‌ வினோத‌மான‌து. த‌மிழ்ச் ச‌மூக‌ம் சில‌ அற்புத‌ங்க‌ளை செய்து கொண்டே இருக்கும். பெரியாரை எவ்வாறு உயிரோடு விட்டார்க‌ள் என்ற‌ ச‌ந்தேக‌ம் அவ்வ‌ப்போது எழாம‌ல் இல்லை. சாருவையும் இச்சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிற‌து என்றால் அவ‌ரே ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவார்.லாண்ட்மார்க் (land mark) புத்தகக் க‌டையில் ஒருமுறை புத்த‌க‌ங்க‌ளை தேர்வு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.கையில் சில‌ சாருவின் புத்த‌க‌ங்க‌ளை வைத்திருந்தார். தீவிர‌ வாசிப்பாள‌ர் என‌ எண்ணி அவ‌ரிட‌ம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் சொன்னாவைகள் தான் மிக‌ ஆச்சிரிய‌மானது "எல்லாப் புத்தக‌ங்க‌ளும் ப‌டிக்க‌ மாட்டேன் சாரு நிவேதித்தாவையும் சுஜாதாவையும் ம‌ட்டும் நேரம் கிடைக்கையில்


More: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_9.php




Thursday, December 2, 2010

ஊரே கேளு நாடே கேளு - எஸ். இலட்சுமணப் பெருமாள் கொட்டகை அனுபவங்கள்




எஸ். இலட்சுமணப்பெருமாள்

எஸ். இலட்சுமணப்பெருமாள்

எஸ். இலட்சுமணப்பெருமாள் முன்னுரை

சினிமா கொட்டகை அனுபவத்துல எங்க ஊருக்குன்னு தனிப் பாரம்பரியமே உண்டு. ஊரே கேளு நாடே கேளுன்னு சினிமாவும் புவியும் வதக்கழிஞ்சி போய்க் கிடக்கையிலெ இன்னுங்கூட எங்க ஊர்ல சினிமா டிவி பாக்காத ஆளுகள் உண்டு அப்படி ஓரு ஊரான்னு நீங்க அதிசயிக்கலாம்.

ஒரு தடவை பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரா இருக்கும்போது எங்க ஊருக்கு வந்திருந்தார். ஊரு மந்தையிலெ சனங்களெல்லாம் கூடி நின்னாங்க ஆளுகளோட ஆளா அவரும் நின்னுக்கிட்டு, ‘ஏன்யா இந்த ஊர்ல காலரா கீலரா வந்திருக்கா’ அப்படீன்னு கேட்டார்.

ஒரு பெரிய மனுசர் எழுந்திரிச்சி கையைக் கட்டி ‘ஐயா நாஞ்சொல்றேன்னு சடைக்கப்படாது. பக்கத்து சம்சாரி ஊர்களில் தெருலைட்டு, தண்ணிடாங்கி, வாறுகாலு- ன்னு என்னென்னமோ வந்திருச்சி, இந்த ஊருக்குன்னு ஒண்ணும் இது வரைக்கும் வந்தபாடில்லை. காலரா மட்டும் இங்கெ எப்படி முன்னக்கூடி வந்திரும் மகாராசா!' அப்படீன்னார்.

அவரு காலரான்னா ஏதோ அரசு நலத்திட்டம்ன்னு நெனச்சிட்டார். அப்பேர்கொத்த அன்னாடுகாய்ச்சிக இருக்கிற ஊரு. போக்குவரத்துக நாகரீகம் சினிமாங்கிறவுல்லாம் சன்னஞ்சன்னமாத்தான் வந்து சேந்தது.

அப்பொவெல்லாம் பக்கத்து டவுனான சாத்தூருக்கு வருசத்துக்கு ரெண்டு வாட்டிதான் சனங்க போய்வருவாங்க. தீபாவளி, தைப்பொங்க, அந்த ரெண்டு நாளுக்குத்தான் அரிசிச்சோறு. அந்த அரிசி பருப்பு எண்ணை புண்ணை வாங்க அஞ்சு கல் தொலைவு நடந்தே போய் நடந்தே வருவாங்க.

சாமான்கள் வாங்கி திரும்பும்போது அஞ்சாறு பேரு சேந்தாத்தான் நடந்து வருவாங்க ரப்பட்டுல நேரங்கெட்டநேரத்துல வழிப்பறிகாரங்களுக்கு பயந்து ஒண்ணுரெண்டு பேருன்னா மால்ல படுத்திருந்துட்டு காலையில ‘பள்’ ஜன்னு விடியவும்தான் கிளம்பி வருவாங்க..

இப்படி சமயத்துலதான் சாத்தூர்ல ரெயில்வே லயனுக்கும் பக்கமா மொதமொத சினிமாக் கொட்டாயி வந்திச்சு. அப்பொ ரெண்டு பேரு சாமான்க வாங்க வந்தாங்க மாலுக்கு ஏம்போவானே சினிமா சினிமாங்கிறாங்களே அதையும் என்னான்னு சித்த பாத்திட்டு வருவோம்ன்னு போயிருக்காங்க.

சினிமாவுல ஒரு கட்டத்துல ‘ஹோ’ன்னு சத்தங்கொடுத்த மட்டுல ரெயிறு கிஜீகிஜீன்னு வந்திருக்கு. கொட்டாய்க்கி பின்னாடி ரெயில்வே லைன் இருக்கா. ஆஹா ரயிலுதடம் விலகி கொட்டாய்க்குள்ள புகுந்திருச்சின்னு இந்த ரெண்டு பேரும் ஓடுறா ஓடுறான்னு விழுந்தடிச்சி வெளியே ஓடியாந்துட்டாங்க.

வெளியே வந்து கொட்டாய திரும்பிப் பாத்து ‘நல்ல வேளடா தப்பிச்சோம். உள்ளே பூராம் நசுங்கி செத்துக்கிடக்காங்கடா. போலீசு கேஸுன்னு ஆகுமுன்னே அரம்படாம ஊருக்கு நடந்திருவோம்ன்னு வந்துட்டாங்க. அவங்க தவங்குற காலம் வணக்கும் விசயத்தை வெளியே விடலை.

வெள்ளக்காரன் போலீசு எத்தனையோ கொலை பாதங்களை மறைச்சமாதிரி இதையும் போட்டு மூடிருச்சின்னு ரொம்ப வேண்டிய ஆளுக்கிட்டெ சொல்லியிருக்காங்க செவலக்குடும்பணும் குருசாமித்தேவரும் ரொம்ப சிநேகிதகாரங்க. ஒருத்தர் பெரிய பண்ண வீட்டுலயும் ஒருத்தர் சின்னப்பண்ணெ வீட்டுலயும் சேந்த மட்டுல வேலை செய்றாங்க. வேல தீந்த நேரம் ரெண்டு பேரும் ஒண்ணாவே திரியுவாங்க. அதும் ரப்படல சாத்தூருக்குப் போயி டவுன்ல வேடிக்கை பாக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்.

அங்கே டீக்கடையில தலைக்குமேல கையைத்தூக்கி டீ ஆத்துறதும். ஓட்டல்கள்ல பெரிய தோசைக்கில்லுல விளக்குமாறுவச்சி தொடச்சி வளைய வளையழா கல்தோசை போடுறது வேடிக்கையா இருக்கும்.

சைக்கிள்ல ஒருத்தன் இவங்களை கடந்து போகும்போது ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. ‘யோவ் தேவரே இங்கே பாரும் அரிசியத்த! அந்த விசையை (சைக்கிள்) ரெண்டு காலுக்கு உடே கவுட்டுக்குள்ளே வச்சிப்போகும்போதே இந்தப் போக்கு போறானே! அதைத்தூக்கி தலையில வச்சிக்கிட்டுப் போனா இன்னும கதி போக்காவில்லெ போவாம் போலுக்கு’.

‘அதுமட்டுமா சுவஞ் சோத்தங்கைப் பக்கம் ஒண்ணு ஆளுகளை விலகச் சொல்லி லவ லவன்னு குலைக்கிறதப்பாரு.

களத்துல மிளகாய்ப்பழம் காயப்போட்டிருந்தாங்க. ரெண்டு பண்ணைகளும் ஆளுக்கு ஒரு ஏக்கர் நீள அகலத்துக்கு பரப்பி விட்டு ஒரு வாரமா வெயில்ல காய்ஞ்சதுல பழம் வத்தலாகி நாளைக்கு வியாபாரியை வரச்சொல்லி களத்துலேயே எடைபோட்டு மருகு போட்டிருவாங்க. இன்னும் ஒருநா காய்ச்சதான்.

அங்கெ ஒரு வாரமா காவலிருந்த செவலைக்குரும்பனும் குருசாமித்தேவரும் சாத்தூருக்கு போகாம ரப்பட்டு காவலிருந்தது கிறுக்குப்பிடிச்ச மாதிரி ஆகிப்போச்சி.

‘ஏம்ப்பா செவலை! அப்படியே டவுனுக்கு போலி ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு வருவோம். இத்தன நாள் வராத கள்ளனா இன்னக்கி வரப்போறான் அப்படீன்னதும் அவரும் எப்படான்னு காத்திருந்த மாதிரி ‘ம்போவோம்’ ன்னு கிளம்பிட்டாங்க. ஆள்படுத்திருந்த மாதிரி தட்டை முடியில போர்வையைப் போட்டு மூடிவச்சிட்டு செம கொட்டாய்க்கு வந்து «ச்நதுட்டாங்க.

படத்துல ஒரு கட்டம்போல காத்தும் மழையும்ன்னா சொல்லி முடியாது. இடியும் மின்னலும் ரவ்வாளி போட்டு குமுறுது. மழைக்கு பெரிய பெரிய மரங்களெல்லாம் தூரோடு சாயுது. எங்கெ பாத்தாலும் தண்ணிக்காடு, மழை விட்டபாடில்லை. நேரமாக ஆக மேகங்க கரேர்ன்னு கவிந்து மழை குஞ்சு பொரிச்சுக்கிட்டு நாலா திசையும் அடைச்சி ‘ஜோ’ன்னு பெய்ஞ்சி தள்ளிட்டிருந்தது.

திடீர்ன்னு குருசாமித்தேவரு தடபுடலா எழுந்திரிச்சி பெரீசா அவயம்போட்டு, ‘ஐயையோ ஏம்ப்பா செவலை ஏய் நல்லா வேடிக்கை பாத்தே களத்துல வத்தல கிடக்கிறதை மறந்துட்டம்ல்லா’.

‘அட நாசமாப்போக. அயத்தே போச்சே... ஒரு வார காய்ச்சல்ல கிடந்த வத்தலு. என்னைத்துக்காகும்.. நானும் மெம்மறந்து போனேனே... அடக்கடவுளே! ரெண்டு பேரும் அங்கெ பிடிச்ச ஓட்டந்தான். அஞ்சுகல் தொலவு இருட்டுல மேடு பள்ளம் தெரியாம கீழே மேல விழுந்து ஓடு ஓடுன்னு ஓடிவந்து கேஸ§மூளிரன்னு இளைச்ச மட்டுல களத்துல வந்து நின்னாங்க. செங்கடல் மாதிரி வந்தல் விரிப்பு அப்படியே கிடந்தது.

‘’அடச்சே... சினிமவுல தான்யா மழை பெய்ஞ்சிருக்கு அடக்கிறுக்கெழவே எம்புட்டு ஓட்டமய்யா...’’ பைத்தாரத்தனமாகிப்போச்சே... சேய்’’

கண்டியார்க்கிழவி கொட்டகிக்கி அன்னைக்குத்தான் வந்திருக்கா. மருமகா கூப்பிடுதாளேன்னு நண்டுஞ்சிண்டுமா நாலஞ்சு பேரம் பேத்திகளோட சினிமாப் பாக்க வந்திருந்தா. திக்கெட் எடுத்து உள்ளெ நொழஞ்சதுதான் தாம்சம் கிழவிக்கி தண்ணி தாகம் எடுத்தது. சினிமாவுக்கு போகணும்ன்னு காலையிலிருந்து சின்னதுக்கை குளிப்பாட்ட மருமகளுக்கு வெந்நி போட சோறு பொங்கன்னு வேலை சரீயா இருந்தது. இந்தப்பரப்புல தண்ணி குடிக்கக் கூட தேறமில்லை.

மருமகதான் தண்ணி டிரம்மிருக்கிற இடத்தைக் காட்டுனா, அதால குழாய் போட்டி- ருந்தது. நாலஞ்சு பொண்ணுக வரிசையில நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க. ஒரு ஈயத் தம்ளரை நாய்ச்சங்கிலியில போட்டு கட்டி வச்சிருந்தாங்க. இருந்தாலும் குழாயில கையை ஏந்தி வாயால உறிஞ்சிக் குடிச்சிக்கிட்டிருந்தாங்க. ஒவ்வொருத்தரும் குடிச்சிட்டு அடுத்தாளு பின்னாடி நிக்கிறதால குழாயை அடைக்காம அப்படியே விட்டுட்டுப் போக அடுத்தாளு குனிஞ்சு தண்ணி குடிச்சாங்க.

கண்டியார் பாட்டி முறை வந்தது. தண்ணியை வயித்துக்கு குடிச்சதும் போதும்ன்னு தலைய தலைய ஆட்டுனா. குழாயிலிருந்து தண்ணி வந்துக்குட்டேயிருந்தது. இவா போதும் போதும்ங்கிற சாடையில தலையை பலம்மா பலம்மா ஆட்டுனா. நல்லியை திருகி நிறுத்தணும்னு அவளுக்குத் தெரியல பாவம்...

ஊர்ல இவளத்த பொம்பளைங்க காட்டு வேலைக்கு போயிட்டு கையோட முதலாளி வீட்டுக்கு வந்து கூலி வாங்க வருவாங்க. அப்பொ தண்ணி ரொம்ப தவையா இருக்கும். ‘அம்மா தாயி கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்கன்னு கேட்டா மொதலாளியம்மா செம்புல தண்ணி கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே நிறுத்தி கையை ஏந்தச் சொல்லி தண்ணியை ஊத்தும். இவளுக்கு வயிறு நிறைஞ்சி தாகம் அடங்குவதும் போதும்ங்கிறதுக்கு அடையாளமா தலைய தலைய ஆட்டுவா அந்த அம்மா ஊத்துறதை நிறுத்திக்கிடும். அந்த நெனப்புலத்தான் பைப்புக்கு முன்னாடி தலைய தலைய ஆட்டுனா

நல்ல வேளை அந்நேரம் ஒரு பொண்ணு வந்து நல்லியை திருகி அடைச்சாள் கண்டியார்க்கிழவி நிழுந்து ‘அடி சக்கைக்னானா’ இதுல சூச்சாம் இருக்காக்கும் தாயி அப்படீன்னு கொமட்டுல கைய வச்சி அதிசயமா பாத்தா.

நிறைய தண்ணி குடிச்சதுல இவளுக்கு மோலணும் போல இருந்தது. ‘அம்மா தாயி எங்கெ மூத்திரம் பெய்றதுன்னு கேட்டா. ‘அந்தா அந்த கக்கூஸுக்கு போ பாட்டின்னு அந்தப் பொண்ணு போயிட்டா. இவளுக்கு கக்கூஸுன்னா என்ன எழவு தெரியும். அங்கெ போய்ப் பாத்தா. பாத்து பதறிப்போய் ஓடியாந்துட்டா.

நாசமாய் போறவா அடுப்படியப்பாத்து கையக் காட்டீட்டு போறாளேன்னு மொணங்கிக்குட்டெ வந்தா, அவளுக்கு கக்கூறைப்பாத்தா மூணுகல்லு வச்சி அடுப்புக்கூட்டுன மாதிரி தெரிஞ்சது. எப்படி வெளேர்ன்னு பளிச்சின்னு இருக்கே வெள்ளைக்காரன் அடுப்பு மிதமாவா இருக்கும். நல்லவேளை நா ஒரு பைத்தியகாரி போயி நின்னு சேலையை திறைச்சிட்டேன். குனிஞ்சு பாத்தாத்தான் தெரியுது. அடுப்பாங்கரைன்னு

யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நல்ல பிள்ளை மாதிரி அங்குக்கு இங்குட்டு திரும்பாம வந்து தரையில உக்காந்து எல்லோரோடையும் படம் பகித்தாள். ஆட்டம் நடந்திட்டிருக்கும்போது யானை ஒண்ணு ஓடியாந்தது. அதுக்குப் பின்னாடி ஒருத்தன் ஓடியாந்தமட்டுல ‘எல்லோரும் ஓடுங்கள் எல்லாரும் ஓடுங்கள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அப்படீன்னு எச்சரிக்கை பண்ணிக்கிட்டே ஓடியாந்தாம்.

‘ஐயையோ நா என்னாம்பேன் பிள்ளைக் மூலைக்கொன்னா படுத்திருக்கே... மதம் பிடிச்ச யானைங்காகளே அடியேய் பிள்ளைகளை தூக்கிற. இந்த ஓட்டம் ஓடியாருதே.. இப்படி வந்து இக்கல மாட்டிக்கிட்டமே... ரெண்டு கையில ரெண்டு பிள்ளைகளை தூக்கிக்கிட்டு இருட்டுல ஆளுகளை நலுக்கு நலுக்குன்னு மிதிச்சிக்கிட்டு இழுபறியா ஓடுனா. இவா படத்தை மறைக்கிறதனால எல்லாரும்
‘ஒன்னு கத்துனாக. இவரொம்பவும் கலவரி ஆகிட்டா. எல்லாரும் பதறி கூக்காடு போடுறதா அவக்குத்தவக்குன்னு வெளியே வந்தா. மருமகளை திரும்பி அடியே அசமந்தம் பிடிச்சவளே அடியேய்ன்னு அவயம்போட

என்னம்மோ ஏதோன்னு வாட்ச்மேன் ஓடியாந்து ‘ஏய்... உக்காரும்மா ஏ.. பெரிய மனுஷி! உக்கார்றியா இல்லையான்னு கம்பை ஓங்குனான். அந்த இடத்திலேயே உக்காந்து பழையபடிக்கும் படத்தை திரும்பிப்பாத்தா அதுலெ நாலஞ்சு காவலாளி கள் கத்தி ஆயுதங்களோட குதிரையில ‘ஓ’ ன்னு அவயம்போட்ட படிக்கு யானையை விரட்டிப் போனதை கிழவி பாத்து சலசலசன்னு சேலையை நனைச்சிட்டா.

எங்க ஊரு எமிச்சியாரு தாத்தாவை பாத்தவுடனேயே சிரிப்பு வந்திடும். ஆளு தட்டக் குச்சியா இருப்பாரு. கூனு வளசலு. நடக்கும்போது அவரு தலையும் உடம்பும் இட வலிமா ஆடிக்கிட்டே வரும்.

வெறும் மண்ணு வச்சி வீடு கட்ட அவரு மாதிரி யாராலயும் முடியாது. ஊர்ல இருக்கிய முக்கலே மூணுவிசம் வீடுகள் அவரு கட்டுனதுதான். அவருக்கு எம் ஜி ஆர்ன்னா கொள்ளாப்பிரியம். அவரோட ஐயா கூழத்தாத்தாவும் அப்படித்தான்னு சொல்லுவாக. அப்பொ எமிச்சியாருக்கு ஒண்றனா வயசு. சம்சாரம் மொக்கப்பேச்சியோட சினிமாவுக்கு போயிட்டு வந்தார். வரும்போதே பாதை நெடூக எம்ஜிஆர் மாதிரியே சிலா வரிசை போடுறதும் பாட்டுப்பாடுறதுமா ரொம்ப குஷியா வந்தார். சாமம் இருக்கும் வீட்டுக்கு வந்து எமிச்சியாரை தொட்டில்ல போட்டு தூங்க வச்சதும் சாப்படக்கூட பொறாம சினிமாவுல எம்.ஜி.ஆர் காதலியை கட்டில்ல தள்ளிவிட்டு ஓடியே வந்து பாய்ஞ்சி மேலே விழுந்து கொஞசோ கொஞ்சுண்ணு கொஞ்சுவார். அதுமாதிரி வீட்டுலயிருந்த கயித்துக்கட்டில்ல மொக்கப்பேச்சியை தள்ளிவிட்டதும் இவரு பின்னடிச்சிப்போயி திடுதிடுன்னு ஓடிவந்து அந்த அம்மா மேல பொத்துன்னு விழுக கட்டிலு மடார்ன்னு ஒடிஞ்சு கீழே மொந்துன்னு விழுந்து மொக்கப் பேச்சிக்கு கிண்ணி இறங்கிருச்சி. ஐயையோ ஐயையோன்னு அன்னைக்குப் போட்ட கூப்பிடு கடைசி வரைக்கும் நிக்கலை. குறுக்சகெலும்பும் ஒண்ணு சேரவே இல்லை. கடைசி காலம் வரைக்கும் அந்த அம்மாவுக்கு சகல சேவுகமும் இவருதான் பண்ண வேண்டியதாகிப் போச்சி.

காலையில காலையில இவரு ‘வெளிக்கி’ போகும்போது ‘அந்த’ ஓலைக் கொட்டானையும் சுமந்துகிட்டுப் போவாரு. ‘ஏ கூழ! கொட்டானை கொண்டு போய் தள்ளி போடப்பா. ஓடையில கொண்டு போய்போடு.. காலையில எதிர்த்து வர்றவனொல்லாம் அங்கே போடு தூரமாப்போடுன்னு தினோமும் லச்சைகேடுதான்.

இதனாலயோ என்னவோ எமிச்சியாருக்கு யாரும் பொண்ணு கொடுக்கலை எமிச்சியார் தாத்தாவும் லேசுப்பட்ட ஆளு இல்லை.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தை நூறுதரம் பாத்திருப்பார் ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் மொதல்ல பார்க்கிற மாதிரியே பாப்பாரு படத்துல கோழை எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால அடிப்பார். அந்தக்
கட்டம் வந்ததும் மனுசன் எழுந்திரிச்சி குத்துக்கால் வச்சி உட்காந்துக்கிடுவார்.

‘அடிரா டேய் ஙொப்பனோலி அடி.. ஒங்க ஆத்தா புருசன் கொஞ்ச நேரத்துல ஒஞ் சொட்டெலும்பை ஒடிக்க வருவான்டோய்.. தாயோலி.. அடி... வந்து ஒம் முதுகுத்தோலை உரிக்கலையாக்கும்... பிறகு பார்ரா!’

பக்கத்திலிருக்கிற ஆளைத்திரும்பி கையால ஒரு இடி இடிச்சி ‘அடிக்கான்ல்ல அடுது இருக்கு இவனுக்கு வேடிக்கை!’ அந்த ஆள் இவரை சட்டை பண்ணாட்டாலும் ஒரு திருப்தியில் பழையபடி திரையைப் பார்த்து. ‘டேய்...வக்காள வாத்தாளி... வரும்டா உனக்கு வட்டியும் மொதலுமா...’

அடுத்து கொஞ்ச நேரத்துல ஆள்மாறாட்டமாகி கேனைபு எம்ஜிஆர் அங்கே போயி வீர எம்ஜீஆர் இங்கே வந்திடுவார். நம்பியார் வழக்கம்போல கோழை எம்ஜீஅர்தான்னு சவுக்கை எடுத்து வீச அதை லாவகமா பிடுங்குனதும் அடிப்பர் திருப்பி வீர எம்ஜிஆர்.

அவ்வளதான் எமிச்சியாரு சுதாரிச்சி எந்திரிச்சது ‘அப்படி அடி.. போடு .. கொளு அர்ரெ ஙொப்பந் தொண்ணய .. தாட்சண்யம் பாக்காத...’

சுத்தி உட்காந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் அடி... உதை மிதி. இவ்வளவும் செய்துட்டு அவங்ககிட்டெயே ‘எப்படி கிடைக்குது பூசை’ இவனுக்கு இப்பொ விடிஞ்சுபோச்சா இன்னும் இருக்கு வேடிக்கை.

இதனாலதான் எமிச்சியாரு கூட யாரும் சினிமாவுக்கு போறதில்லே போனாலும் பக்கத்துல உக்கார்றதில்லை

பிறகொருநாள் ஒரு நரிக்குறவர் சினிமாவுக்கு வந்திருந்தார். அப்பொவெல்லாம் அவங்களுக்கு துப்பாக்கி வச்சிக்கிடுற உரிமை இருந்தது. அதனால துப்பாக்கியோட வந்து மணலை கூட்டிவச்சி முன்னடியில உட்கார்ந்துக்கிட்டாரு. அது எம்ஜிஆர் நடிச்ச சரித்திரப்படம் கடைசிக்கட்டம். வழக்கம்போல கதாநாயகியை தூக்கி தோள்ல போட்ட மட்டுல நம்பியார் கோஷ்டிகளோட ரொம்ப மும்முரமா வாள்ச்சண்டை
போட்டுகிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட சுழட்டி சுழட்டி அவ்வளவேரையும் விழுத்தாட்டிட்டாரு. கிளம்பிப்போகும்போது ஒரு மூலையிலிருந்து நம்பியார் கத்தியால எம்ஜிஆருக்கு கணக்கா குறிவச்சாரு. நம்ம நரிக்குறவரு துப்பாக்கியெடுத்து நம்பியாருக்கு குறிவச்சிட்டாரு. இமை தட்டுற நேரந்தான் டுமீல்ன்னு குண்டு நம்பியார் மேல பாய்ஞ்சதுதான் தாம்சம்.

வெள்ளத்திரை குபிர்ன்னு தீப்பிடிச்சது. ஜனங்க ஆணும் பெண்ணும் கந்தல்குலமா ஓடுறாங்க. நரிக்குறவர் சொல்றார்.

பிறகென்ன சாமி நானும் நாப்பது அம்பது படம் வரைக்கும் பாக்கேன் சாமே இதே வேலையா பாவம் அந்த மனுசன் இப்பொதான் செத்துப்பொடிச்சி வந்திருக்கார் சாமே(எம்ஆர்ராதா துப்பாக்கியால் சுட்டநேரம்) எவ்வளவுதான் சாமி நானும் பொறுத்து பொறுத்து போறது சாமே போலீஸென்ன சாமி போலீஸு மிலிட்டிரியை வரட்டும் சாமே என்னய அந்த மனுசர் வந்து காப்பாத்திருவாரு சாமோ...

இப்பொ குடிசைகளெல்லாம் கொட்டகையாகிப்போச்சு. பெரிய வீடுகள் பூராம் தியேட்டராகிப் போச்சி. பட்டி தொட்டிகளெல்லாம் டிவிபெட்டிக்குள்ளே அடக்கமாகிப்போச்சி. கோலங்களின்னு ஒரு தொடர் வந்திட்டிருந்த நேரம் ஒரு நா காலையில ரெண்டு பொம்பளைக வாசல் தெளிக்க சாணிக் சட்டியோட எதிர்த்தெதிர்த்து நின்னுக்கிட்டு பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன பேசுவாங்க பட்டி தொட்டி பொம்பளைக எங்கே நடுகைக்கு போகலாம் எங்கே களைக்குப் போகலாம் கடலைபிடுங்க நெத்துப் பெறக்கன்னு பாடுபங்கைத்தவிர வேற பேசுறதுக்கு என்ன இருக்குன்னு கவனிச்சுக் கேட்டேன்.

‘யக்கா ஊருக்குள்ள பன்னிக்காய்ச்ச வருதுங்கிறாங் பறவைக்காய்ச்ச வருதூங்கிறாங்க இந்த ஆதிக்கி ஒரு பேதி வரமாட்டேங்குதேக்கா.

http://thamizhstudio.com/others_tt_6.php