Monday, May 24, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு

ஆதவன்27-05-2010


வியாழன், 27-05-2010

இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார்.

இவர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'ஆழத்தாக்கம்' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படத்தின் இயக்குனர் திரு. பைசல் அவர்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Huozhe (1994) in english To Live

இயக்கம்: Zhang Ymou

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:

http://www.imdb.com/title/tt0110081/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


Friday, May 21, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..



தமிழ்ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (14-05-2010) தொடங்கி திங்கள் (17-05-2010) காலையில் முடிவடைந்தது.

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கும்போதே அதில் மிக முக்கியப் பகுதியாக இடம்பெற்றது ஊர் சுற்றலாம் வாங்க பகுதி. குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்களையும், அந்த மக்களின் கலாச்சார கூறுகளையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் பயணங்களின் புனிதங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும், ஊர் சுற்றுவது எத்தகைய உயரியப் பண்பு என்பதையும் வாசகர்களுக்கு விவரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்தப் பகுதி. மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல் "காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்யஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.

அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம்பொருளை அதில் காணமுடியும் என்பதுபோலத்தான் அதுவும்.

அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்கவேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.

இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.

ஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே"..

இப்படிப் பட்டதாக பயணங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம். பொறுமை, ஏமாற்றம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவற்றின் பல கூறுகளை ஒரு பயணம் நமக்கு கற்றுக் கொடுத்துவிடும். எவ்வித எதிர்ப்பார்த்தலும் இல்லாத ஒரு பயணமாகவே இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி இருக்க வேண்டும். இதில் பங்கு பெற நீரில் மாட்டிக்கொள்ளும்போது நீரின் சுழளுக்கேர்பவும், புயலில் சிக்கிக் கொள்ளும்போது காற்றின் திசைக்கேற்ப வளைந்துக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ.காம் அத்தகைய உணர்வுகளையே அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் பங்கு பெற நினைக்கும் அனைவரும் இதனை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வுகளும் ஒரு முன்னோட்டமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி நிச்சயம் ஒரு பரவச நிலையை, அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்கும் என்பது திண்ணம்.

இனி இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் சில முக்கிய கூறுகள் உங்களுக்காக,

இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு உதகையில் உள்ள மசினக்குடிக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டதும் அதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பதினைந்து ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. கடைசி நேரத்தில் மூன்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விலகிக் கொள்ள 12 ஆர்வலர்களுடன் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கோவை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

காலை ஒன்பது மணியளவில் கோவையை பேருந்து அடைந்ததும் குறும்பட வட்டம் உறுப்பினரும், நண்பருமான திரு. சாசு அவர்கள் எங்களை வரவேற்றார். கோவையில் இருந்து மசினக்குடி செல்வதற்கான பயண ஏற்பாட்டையும் அவரே செய்திருந்தார்.

மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை வழியாக மசினக்குடியை சென்றடைய சனிக்கிழமை மாலை ஆறு மணியாயிற்று. வழியில் குன்னூர் மற்றும் உதகையில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான இடங்களில் வண்டியை நிறுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

மசினக்குடி சென்றடைந்ததும் அங்கே எங்களுக்காக காத்திருந்த பெங்களூருவை சேர்ந்த பிரசாத் மற்றும் அஷ்வின் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். பின்னர் "Blue Valley " எனும் தாங்கும் விடுதியில் மூன்று அறைகள் எடுத்துக் கொண்டு இரவுப் பொழுதை அங்கே கழிக்கலானோம். காடுப் போன்ற பரப்பில் அங்கேக் குடில் குடிலாக அமைந்துள்ள பகுதிதான் நாங்கள் தங்கியிருந்த குடில்கள். இதில் தங்கியது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை ஆர்வலர்களுக்கு கொடுத்திருக்கும்.

பின்னர் அதிகாலை ஐந்து மணியளவில் விலங்குகளை காண முதுமலை காடுகள் அமைந்துள்ள வனப்பகுதியில் எங்கள் பயணம் தொடங்கியது. பல விலங்குகள் காணக்கிடைக்கும் என்று பலரும் கூறி இருந்தாலும், மான், மயில், பறவைகள், யானைகள் போன்றவற்றை மட்டுமே அங்கேக் காண முடிந்தது. இருந்தாலும் காட்டு வழிப் பயணம் மனதுக்கு ஒரு புத்துணர்வையும், உடலுக்கு நல்லக் காற்றை சுவாசித்த ஆறுதலையும் கொடுத்தது.

மசினக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உதகை, கொடநாடு வழியாக கோவையை வந்தடைந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் உதகை அருகே ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் எங்கள் பயணம் மட்டுமின்றி பலரது பயணமும் சில மணி நேரங்கள் தாமதமானது. இதனால் நாங்கள் பார்க்க வேண்டிய சிலப் பகுதிகளை தாரை வார்த்துவிட்டு கோவை நோக்கி விரைந்தோம். கோவையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டு திங்கள் காலை சென்னை வந்தடைந்தோம்.

மிக நுட்பமாகவும், மிக நேர்த்தியாகவும், அனைத்து விடயங்களையும் இங்கே பதிவு செய்ய இயலவில்லை. நிச்சயம் அடுத்த ஊர் சுற்றலாம் வாங்கப் பகுதி இன்னும் சிறப்பாக அமையும் என்றே கருதுகிறோம். பயண சிரமங்களை பொறுத்துக் கொண்டும், இடையில் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளையும் பொறுத்துக் கொண்டு பயணத்தின் சங்கடங்களையும் கூட சந்தோசமாக மாற்றியநண்பர்கள், ரமேஷ், கணேஷ், தயாளன், லிவிங்க்ஸ்டன், சத்யானந்தன், ராகோ, நந்தகுமார், சாசு, பிரசாத், அஸ்வின் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள் பல.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/GXfAsJ?authkey=Gv1sRgCOb5j4iG-O2FkQE#



Monday, May 17, 2010

கேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்



கனடாவின் இளம் எழுத்தாளர்களுள் நம்பிக்கை அளிக்கின்ற ஒருவராக விளங்கும் கேரென், 'ஒரு நாடோடிக்கவி' என்று அழைக்கப்படுபவர். தாய்லாந்து, பர்மா, ஸ்பெயின் என்று அலைந்து திரிந்து, கவிதைகளும், பயண நூலும், நாவல்களும் எழுதி இருப்பவர். தீவிரமான வாழ்க்கை அனுபவங்களுக்குள்-பரிசோதகைளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவர். அடுத்த கட்டத்தில், "வீடென்பது குழந்தை வளரும் இடம் மட்டுமல்ல, அகம், விரியும் ஆழமும் கொள்ளும் இடமுமாகும்" என்று உணர்ந்திருப்பவர்.

கேரெனின் தந்தை ரோமன் கத்தோலிக்கர்; தாய் Jehovah's witness-பிரிவைச் சேர்ந்தவர். கேரெனின் குடும்பத்தில் சதா பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்து வந்து கொண்டிருப்பது இந்த சமய உட்பிரிவு பேதம். அத்துடன் தந்தை குடிகாரர். மூத்த சகோதரி ட்ரெஸி போதை மருந்துக்கு அடிமையாகி, 24-வது வயதில் தற்கொலை செய்து கொண்டவர். கேரென் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து, தாய்லாந்து சென்றவர். அடுத்து, ஸ்பெயினில் ஆங்கிலம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.

இவரின் முதல் கவிதைத் தொகுதி 'The small words in my Body'. பிற பண்பாடுகள் பற்றி எழுதுகையில், பார்வையாளரா தன்னை உணர்ந்து கொள்ளும் கேரென், "கவிதை என் குருதியிலிருந்து வெளிப்படுகின்றது. அது ஒவ்வொன்றினுடைய நாடியாகவும் சுவாசிப்பாகவும் உள்ளது" என்கிறார்.
"இது ஐந்தாம் பருவம்
வரலாறு போய்விடும்போது
வார்த்தைகளுக்கு எதிரொலிகளோ
அர்த்தங்களோ இல்லாதபோது
எனது தந்தை காணாதுபோகும்போது
என் அக்கா தனித்து வதைபடும்போது ..."
என்று தொடங்குகிறது அவரது ஒரு கவிதை.

"மக்கள் என்னிடம் கதைகள் சொல்லும்போது, அவற்றை உலகிற்குக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு நான் கூறும்போது, அவை பல்வேறு மக்களின் பல்வேறு காலங்களின் கதைகளாகின்றன" என்று கருதும் கேரென், 1996-இல் பர்மாவுக்கு ஒரு பயணியாக வந்தார். அங்கிருந்த இராணுவ ஆட்சி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், ஆங்-ஸான்-சூ-கீ போன்ற போராளிகள், பௌத்த மதத்தினரும் விலகி நிற்காமல் போராட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது, நாடெங்கிலும் நிலவிய வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்கள் அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து பர்மா மீது அவரது கவனம் குவிந்திருந்தது. Pencanada அமைப்புக்காக 1994-95 இல் அவர் பணியாற்றியபோது, அதில் உறுப்பினராயிருந்த மாதிடா என்னும் எழுத்தாளர் பர்மா அரசுக்கு எதிர்நிலையில் எழுதிவந்தமையால், 20 ஆண்டுகள் தனிக் கொட்டடியில் வைக்கப்பட்டிருந்ததும், அவருக்குள் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

காட்டில் பதுங்கிப் போராட்ட வாழ்வு நடத்தும் போராளிகளைச் சந்தித்தபோது, புரட்சியாளர்களுள் ஒருவருடன் அவர் காதல் வயப்படவும் நேர்கிறது. பல்கலைக்கழகங்கள், மடாலயங்கள்


read more... http://koodu.thamizhstudio.com/ayal_ilakkiyam_thodargal_1_3.php



Tuesday, May 4, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (08-05-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

இவர், திருடா திருடி, பொறி, யோகி போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் படம்:

இந்த மாதம் மூன்றாவது பகுதியில், ஆவணப்பட இயக்குனர் திரு. கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "நீருண்டு நிலமுண்டு" ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கிராமங்களில் நீர் சேகரிப்பின் தேவையை, அதன் சாத்தியங்களை மிக விரிவாக பேசும் ஆவணப்படம். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268