Monday, August 29, 2011

தமிழ் மகனின் வெட்டுப்புலி - வெங்கட் சாமிநாதன்



தமிழ் மகனின் வெட்டுப்புலி

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு


வெங்கட் சாமிநாதன்

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.

குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை. இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.

ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.

ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.

தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.

இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப்படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.

எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்புலிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.

வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டி தான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்துவத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலேயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சி தான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.

பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.

ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .

ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும். நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.

தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.

“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.

அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”

இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.

பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.

“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”

மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”

இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.

இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்

“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா

“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”

அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.

“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”

பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.

“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”

“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”

இது ஒரு காட்சி.

இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.

இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங்களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார். தமிழ்மகன்

.இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.

.பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.

இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.

ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.

இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.

வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?

அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..

லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.

முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.

லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.

இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.

நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.

அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:

நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?

(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).

எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.

இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”

அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.

“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.

“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.

“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.

நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.

இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.

பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.

“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.

கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.

தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.

அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.

”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”

எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.

இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.

“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?

இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”

“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?

பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.

”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.

”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”

பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…

எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.

திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.

தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.

நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.

தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.

எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.

-------------------------------------------------------------------------------------

வெட்டுப்புலி (நாவல்) : தமிழ் மகன்
உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600018
ப..374 விலை ரூ. 220





Thursday, August 25, 2011

நல்லதோர் வீணை செய்து - ஆர்வலகளுக்கான அழைப்பு


நல்லதோர் வீணை செய்து - ஆர்வலகளுக்கான அழைப்பு

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_3.php

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோவில் உலகின் மிக சிறந்த இலக்கிய சிறுகதைகளை குறும்படங்களாக எடுப்பதற்கு நல்லதோர் வீணை செய்து என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக இலக்கியங்களில் வெளிவந்துள்ள (குறிப்பாக தமிழில்) சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அதனை குறும்படமாக எடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சிறந்த சிறுகதை குறும்படமாக உருமாறும்.

திரைப்படத் துறை மீதும், இலக்கியத்தின் மீதும் ஆர்வமுள்ள பத்து ஆர்வலர்களை தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து அவர்களுக்கு இது தொடர்பாக பயிற்சியளித்து விரைவில் இந்த திட்டத்தை தொடங்க உள்ளது.

இதில் பங்கேற்க உங்களுக்கு ஆர்வமிருப்பின் கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது மின்னஞ்சல் செய்யவும்.

9840698236, 9894422268

editor@thamizhstudio.com

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_3.php


Tuesday, August 23, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்

விக்ரமாதித்தன் நம்பி

பகடியின் உச்சமான கவிதை - ஒரு சிறிய சோப்புப்பெட்டி

நல்வாழ்வின் நற்செதியால் நிரம்பிய
ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
வாழ்வு பற்றிய புனைகதைகளை
எல்லோர்க்கும் பரிசளிக்கும் விதம்
யாரும் அறியாததல்ல
உயிர்த்தெழுதல் பற்றிய அக்கதைகளைக் கேட்போர்
சிறந்த நாவலாசிரியாராகி விடுகிறார்கள்
ஆயினும்
யாரும் எழுதுவதில்லை
ஓர் அழகிய சர்ச்சின் கவலைகளை
கதைகளாகச் சொல்லத் தொடங்குகிறார்கள்
உயிர்த்தெழுதலால் நிரம்பிய பாத்திரங்கள்
நமது வீடுகளில்
குற்றத்தின் பயத்துடன் நடமாடத் தொடங்குகிறார்கள்
அவர்களில் ஒருவரும் மரணிப்பதில்லை
மரித்தாலும்
சவப்பெட்டியை
சோப்புப் பெட்டியாகப் பிறந்து வெளியேறிவிடுவார்கள்
எனவே
உலகம் ஒரு சிறிய சோப்புப் பெட்டியில்
சுற்றிச் சுழல்கிறது.
அதை ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
தன் கையில் வைத்திருக்கிறான்
சடுதியாகப் பெருமழை பெய்யத் தொடங்கினால்
சோப்புப் பெட்டியில் துயிலும் உலகம்
முழுமுற்றாகக் கரைந்துவிட வாய்ப்பியிருக்கிறது அல்லவா?
எனவே
பெருமழை வரும்வரைக்கும்
ஓர் அழகிய சர்ச்
சோப்புப் பெட்டியினுள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது
மரணத்தின் உடலாக

- பாலைநிலவன்
(பறவையிடம் இருக்கிறது வீடு தொகுப்பு, பக்கம் 66-67)

பாலையின் பிற கவிதையிலிருந்து வித்யாசமான கவிதை, இது. பாலைநிலவன் நேர்பேச்சில் பகடி பொங்கி வழியும் (பாலை மட்டுமில்லை, லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், பிரான்சிஸ் கிருபா, ஷங்கர ராம சுப்ரமணியன் ஆகியோர் பேச்சிலும் சிரித்து முடியாது. அந்த நேரம் எந்த ஞாபகமும் வராது? இப்போது இந்தக் கவிதையில் அந்தப் பகடியைப் பார்க்க முடிகிறது..

எவ்வளவு சீரியதான விஷயம் கவிஞன் என்ன நைச்சியமாகச் சொல்கிறான். நவீன தமிழ்க் கவிதையில் இப்படி ஒரு ஏகடியத்தைக் கண்டதேயில்லை. நம்முடைய சமூகத்தில் பகடி பண்ண வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன நவீன கவிஞர்கள் குறைவைக்கலாகாது.

பறவையிடம் இருக்கிறது வீடு, தொகுப்பில் எத்தனையோ சிறந்த கவிதைகள் இருந்தும் - இநத்க் கவிதையை எடுத்துப் பேச முன்வந்திருப்பது, இதன் விஷயத்துக்காகவும் சொல்லியிருக்கும் விதத்துக்காகவும் தாம்..

மதங்கள் எல்லாமே நிறுவனமயமாகிவிட்டன, கவிஞர்கள் விமர்சிக்கிறார்கள். இந்தக் கவிதை, தமிழுக்குப் புதிது இந்தச் சொல்முறை, முற்றிலும் புதிது. நவீன கவிதை எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இது.

கவிதையின் முதல் வாசகமே நல்ல கிண்டல் முதல் வரியே கேலிதான்.
தொடரும் கிண்டலும் கேலியும் சுவாரஸ்யமானவை
உயிர்தெழுதல் பற்றிய அக்கதைகளைக் கேட்போர்
சிறந்த நாவலாசிரியராகிவிடுகிறார்கள்
ஆயினும்
யாரும் எழுதுவதில்லை.
இன்னும் கூடக் கூர்மையானவை இந்த வரிகள்
அவர்களில் ஒருவரும் மரணிப்பதில்லை
மரித்தாலும்
சவப் பெட்டியை
சோப்புப் பெட்டியாகப் பிறந்து வெளியேறிவிடுவார்கள்.
அடுத்தடுத்து புனைவுகளும் கண்டனமும்.
ஓர் அழகிய சர்ச் என்று திரும்ப திரும்ப வருவதைக் கவனிக்க வேண்டும்.
எனவே
உலகம் ஒரு சிறிய சோப்புப் பெட்டியில்
சுற்றிச் சுழல்கிறது
அதை ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
தன் கையில் வைத்திருக்கிறான்
பகடியின் உச்சம் இது.

சடுதியாக பின் பெருமழை பெய்யத் தொடங்கினால்
சோப்புப் பெட்டியில் துயிலும் உலகம்
முழுமுற்றாகக் கரைந்துவிட வாய்ப்பிருக்கிறது அல்லவா?
எனவே
பெருமழை வரும் வரைக்கும்
ஓர் அழகிய சர்ச்
சோப்புப் பெட்டியினுள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது
மரணத்தின் உடலாக,
சுழற்றியடிக்கும் புனைவுகள்.
பாலையின் அழியாத கவிதைகளில் ஒன்றாக இருக்கும் இது.

நவீன கவிதை தந்திருக்கும் சுதந்திரத்தையும், வசதியையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவனே நல்ல கவிஞன். பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறவன் மோசமான கவிஞன். ஒரு விஷயம், எப்போதுமே முன்வரிசைக்குக் கொஞ்சம் பேர்தான் வருகிறார்கள். நிறைய பேருக்குப் பின்வரிசையில் இருப்பதே தெரிவதில்லை. பெயர் சொல்லும்போது மட்டும் விழித்துப் பார்த்துக் கொள்கிறார்கள். நிறைய இருக்கைகள் காலியாகவே கிடக்கின்றன. முன்வரிசையில் நாமாகத்தான் போய் அமர வேண்டும். எப்போது வேண்டுமானால் – பிந்தி – வருவதற்கும் நினைத்தால் எழுந்து போவதற்கும் முன்வரிசை தோதுப்படாது பின்வரிசைதான் சௌகரியம்.

பாலை, தன்னை ஒப்புக்கொடுத்த கலைஞன் தொடர்ந்தும் சீராகவும் இயங்கியே வருகிறார், அவருடைய எம். ஜி. ராமச்சந்திரனும் கார்ல்மார்க்ஸீம் சிறுகதைத் தொகுப்பு. சமீபத்திய சாட்சியம். அவரைப் போன்ற படைப்பாளிகள் கவனிக்கப் பெறுவதும், கௌரவிக்கப் பெறுவதும நிகழும் போதுதான் தமிழ்ச் சூழல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள முடியும்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_3.php


Wednesday, August 17, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்

விக்ரமாதித்தன் நம்பி

சன்னமும் நுணுக்கமான மனம்சார்ந்த கவிதை - ஆச்சி

ஐப்பசி என்கிற துலாமாதம் வந்தது.
சொந்தக்காரர்களுக்கெல்லாம்
துலாஸ்நாநம் செய்து புண்ணியராகும்படிக்கு
அப்பா கடிதம் எழுதிப் போட்டார்
காலரா ஊசியும் கையுமாய் ஒரு வெள்ளைக்காரர்
மற்றும் அவரது உதவியாளர்
தெருவில் தகுந்த இடம் பார்த்து நின்றனர்.
எடுத்துச் செல்லும் அடுப்பில்
வெந்நீர் கொதிக்கிறது. தமிழ் சிப்பந்தி
தெருவில் வருவோர் போவோரை
காலரா ஊசி போட்டுக் கொள்ள
இன்ஸ்பெக்டர் சொல்வதாய் அழைக்கிறான்.
உள்ளுர் வாசிகள் ஓடுகின்றனர்.
சொந்தக்காரர்கள் வந்துவிடுவார்.

செலவுக்குப் பணம் வேண்டும்.
அப்பா என்னை சிவானந்தம் பிள்ளை
வீட்டுக்குப் போய் ட்யூஷன் பணத்தை
முன்கூட்டித் தரும்படி கேட்கச் சொல்கிறார்.

பிள்ளைமார் பையன்களை நானறிவேன்.
அவர்கள் வீட்டைப் பார்த்ததில்லை.

சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
வீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.
வைக்கோல் மேயும் பெரிய காளைகள்.
பிள்ளைக்குக் குதிரை பிடிக்காதாம்.
உள்ளே யாரென்று கூவினேன்.

உள்ளே யாரென்று கூவினேன்.
மாமா என்பதா மாமி என்பதா?
ஆச்சி வெளியே வந்தார். என்னை
யாரென்று கேட்டார். வந்த காரணம்
என்ன என்றார். வீட்டுக்குள்
கிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று
வானொலிப் பெட்டியோ கிராம போனோ.

உள்ளே வா என்றார். வெளியிலேயே
இருக்கிறேன் என்றேன் அரிசி மாவினாலா
இழைத்த கோலங்கள் எங்கும் தெரிந்தன.
அரிசி, காய்கறி, சாப்பாட்டுப்
பலா இலை ஒரு கட்டு
வாழைப்பழங்கள்,. வெல்லம் இவற்றைப்
பையில் போட்டு ஆச்சி வைத்தார்.
ட்யூஷன் பணத்தை எண்ணிக் காட்டினார்
வாங்கிக் கொண்டு புறப்படும் போது
காப்பி சாப்பிடு தம்பி என்றார்.
தாமதம் இல்லாமல் வேண்டாம் என்றேன்.
குடிக்கக் கூடாதென்று அம்மா, அப்பா
சொன்னார்களா என்றார் ஆச்சி
இல்லை என்றேன் தலையை நிமிர்த்திப்
பேசு தம்பி என்றார் ஆச்சி.
அப்பா குடிப்பாரா? சீண்டவா? உண்மையா?
எனக்கு வேண்டாம் என்றேன்
உறுதியாக மறுத்ததில் எனக்கு சந்தோஷம்.

அம்மா எப்படி இருப்பார்? என்றார் ஆச்சி.
பூவுடன் சம்பந்தப் படாத
வாசனை ஒன்று ஆச்சிக்கிருந்தது.
அம்மாவின் உருவம் மனதில் வந்தது.
அம்மா அழகுதான் என்றார் ஆச்சி.
உண்மைதான். ஆனால்
ஆச்சி அழகாய் இருப்பதைப் பார்க்க
மனத்தில் எனக்குக் குறை.

- ஞானக்கூத்தன்
(பென்சில் படங்கள் தொகுப்பு, பக்கம் 76-77)


சிறுவயது நிகழ்ச்சி ஒன்று, சித்திரமாக – விவரிப்புகள் வழியே. மனம்சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு மனநுட்பம் கூடியதும் ஆகும். கடைசிப் பத்திதான் கவிதையின் மையமே. பொதுவாக, ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாமே எளிமையானவையும் நேரடியானவையும் தாம் - சோதனை முயற்சியாலனவை நீங்கலாக. இதுவும் அப்படித்தான். இந்த இயல்புகளாலேயே எல்லோரையும் சென்றடையக் கூடியவை. தமிழ் வாழ்வைச் சொல்லும் கவிஞன் அங்கீகாரம் பெறுவது, தன்னைப் போலவே நடக்கும், நவீன தமிழ்க் கவிதையில் ஞானக்கூத்தன் ஸ்தானம் இப்படித்தான்.

மாயூரத்தில் துலாஸ்னானம் விசேஷம். முந்தைய தலைமுறையினர் தங்கள் ஊர்த் திருவிழா, தேரோட்டம் முதலானவற்றிற்கு உறவினர்களை அழைப்பது வழமை. அதுபோலத்தான், இந்தக் கவிதையில் வரும் அப்பாவும் கடிதம் எழுதுகிறார்.

விருந்தாளிகள் வந்தால் கூடுதல் செலவாகத்தானே செய்யும். தத்தம் சக்திக்கேற்பப் புரட்டிக் கொள்வதும் வழக்கம் தான். இங்கே ட்யூஷன் பணம் முன்கூட்டிக் கேட்டு வாங்கும்படியாகிறது. பையனை அனுப்பி வைக்கிறார்.

கவிதையே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.
எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துப் பேசத்தானே கவிதைரசனை.

கவிதையின் இரண்டாவது பத்தியில் காலம் காண்பிக்கப் பட்டிருப்பதைச் சுட்ட வேண்டும், அந்தக் காலத்தில் காலரா ஊசி போடுவார்கள், ஊர் ஊருக்கும், கவிதையில் உள்ள நிகழ்வு எந்தக் காலத்தில் என்பதை அறிய உதவுகிறது, .இது.

பிள்ளைமார் பையன்களை நானறிவேன்
அவர்கள் வீட்டைப் பார்த்ததில்லை.
இந்த வரிகள் சொல்வதும் நுணுக்கமானதுதான்.

சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
வீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.
வைக்கோல் மேயும் பெரிய காளைகள்.
பிள்ளைக்குக் குதிரை பிடிக்காதாம்.
வெற்று விவரணங்கள் இல்லை இவை – கடைசி வரி கூறிவிடுகிறது.
கிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று என்பதிலும் காலத்தைக் காணலாம்.
உள்ளே யாரென்று கூவினேன்.
மாமா என்பதா மாமி என்பதா
மனம் கொள்ளும் தயக்கம்.
இதே போலத்தான் -

உள்ளே வா என்றார். வெளியிலேயே
இருக்கிறேன் என்றேன் என்ற வரிகளும்.

கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தி முழுக்கச் சின்ன வயதின் கூச்சமும் பாரம்பர்யமிக்க குடும்பத்தின் குண நலனும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
கடைசிப்பத்திதான் கவியுளம்.
கடைசி வரிதான் கவியழகு.

யோசிக்கும் வேளையில், ஞானக் கூத்தனின் மனம் சார்ந்த கவிதைகள் அத்தனையுமே சன்னமும் நுணுக்கமும் கூடியவை என்பதை உணரமுடிகிறது. காலத்தில் நின்று நிலைக்கக் கூடியவையும் அவையாகத்தாம் இருக்கும். மனம் சார்ந்த கவிதைகள்தாம் எப்பொழுதுமே மன்பதையில் நிலைபேறு கொண்டிருக்கின்றன - ஒரு கவிஞன் என்னென்ன எழுதினாலும்.

பென்சில் படங்கள் தொகுப்பிலேயே நிறைய நல்ல கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. முதலில் கவிதைகள் படிப்பதற்குத்தான் பிறகு, ரசிப்பதற்கு அதாவது, Reading pleasure க்குத்தான். அப்படிப் பார்க்கையில், ஞானக்கூத்தன் ஏமாற்றமளிக்காத கவிஞர்தான். வேறென்ன வேண்டும்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_2.php





Thursday, August 11, 2011

படைப்பாளிகள் - ஆர்.ஆர். சீனிவாசன்



படைப்பாளிகள் - ஆர்.ஆர். சீனிவாசன்

செந்தூரன் (படிமை மாணவர்)


"யாருடனும் பேச இயலாத நபர்களுக்காகவும், யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்காகவும் என் படைப்புகள் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்."
- ஆர். ஆர். சீனிவாசன்.


மொழியும் கூட ஒரு ஊடகம்தான். மனிதர்களின் உணர்வுகளை, அவர்களின் சுய உணர்வாகவே கடத்தி செல்ல மொழி ஒரு ஊடகமாகத்தான் பயன்படுகிறது. ஆனால் காட்சி ஊடகம் அப்படியல்ல.. அது மனிதனின் உணர்வுகளை, நியாய அநியாயங்களை பகுத்து திரும்ப அவனிடமே கடத்துகிறது. கேமரா என்பது தன்னை கையிலெடுக்கும் கலைஞனை பொருத்து தன் வீரியத்தை தகவமைத்துக் கொள்கிறது. ஆர். ஆர். சீனிவாசனின் கேமரா, தான் சொல் வந்ததை நேர்மையாக சொல்வதோடு, சமூக புரட்சிக்கு தேவையான விதையையும் விட்டு செல்கிறது.

எந்த ஒரு கலைஞனும் தான் தேர்ந்தெடுத்த துறை தாண்டி தனது அறிவை விசாலப்படுத்தினால் மட்டுமே தன் துறை சார்ந்து, ஆழமாகவும், நேர்த்தியான அறிவோடும், சில கட்டுகளை உடைத்தும் தன் படைப்பை வெளிப்படுத்த முடியும். சீனிவாசன் தனது அறிவுத் திறத்தால் எடுத்துக் கொண்ட படைப்பை அதன் உச்சபட்ச வீரியத்தோடு படைக்கும் பேராற்றல் உடைய ஆவணப்பட கலைஞன். மொழி தாண்டி ஒரு கலைஞனாக, கலகக்காரனாக இந்த சமூகத்தின் வேர்களை ஒழுங்கமைக்க இந்த ஆவணப்படங்களின் மூலம் தன்னாலான பங்களிப்பை செய்தவர். அவரது முதல் படைப்பான "நதியின் மரணம்" தொடங்கி அண்ணா பற்றிய ஆவணப்படம் வரை இந்த ஒழுங்கமைவு தொடர்கிறது.

ஒரு ஆவணப்படம் எடுக்க அது சார்ந்து பல்வேறு ஆய்வுப்பணிகளை செய்து இறுதியில் சரி, தவறுகளை ஆராய்ந்து ஒரு சுயமதிப்பீடு செய்துக் கொண்டு களப்பணியில் ஈடுபட்டு பின்னர் அதனை ஒரு படைப்பாக கொண்டு வருவது சில கலைஞர்களால் மட்டுமே சாத்தியப்படக் கூடும். அந்த வகையில் சீனிவாசன் ஆவணப்பட துறையில் மிக முக்கியமான ஆளுமையே.

இனி திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. உங்களுக்கு எப்படி திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது?

என் குடும்பம் ஒரு சாதாரண வியாபாரம் சார்ந்த குடும்பம். என் தந்தை ஓர் வியாபார நிறுவனம் வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை அந்த வியாபாரத்தையும் கவனித்து வந்தேன். அந்த நேரத்தில் என் அப்பா, அம்மாவோடு இருந்த நாட்களை விட என் பாட்டி, தாத்தாவோடு இருந்த நாட்கள்தான் அதிகம். எனக்கு என் பாட்டிமேல் அதிகபடியான பிரியம் இருந்தது. எனக்கு என் பாட்டி ஒரு படிமமாய் இருந்தார்கள். அதனாலேயே நான் அவர்களோடு இருந்து வளர்ந்து வந்தேன். என் பாட்டி ஒரு பெரியஆளுமை. அவர்களின் மனம் சார் பழக்கங்களும், உடல் சார் பழக்கங்களும் இப்போதும் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்களின் அதீத அன்பினால்ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். என் பதினேழு வயதில் பாட்டி இறந்துபோய்விட்டார். அவரின் சாவு மிகவும் இயற்கையான சாவாகவே இருந்தது. ஆனாலும் எனக்கு அந்த வயதில் அது ஒரு பெரிய இழப்பாகவே இருந்தது. என்னை என்னாலேயே தேற்றமுடியாத சாவாகவே அது இருந்தது. நான் மிகவும் நிலை குலைந்து போயிருந்தேன்.

அப்பொழுது அந்த வாழ்க்கையே சிக்கலுக்களுக்குரியதாய் மாறியிருந்தது. அந்த நிலையில் இருந்து வெளிவர நான் நிறைய காரியங்கள் செய்ய வேண்டியதாயிருந்தது. அதிலே முக்கியமான காரியமாக நான் அதிகமாக சைக்கிள் ஓட்டினேன். எங்கேயாவது சென்றுகொண்டே இருக்கவேண்டும். சைக்கிளிலேயே பல மணி நேரங்கள் திருநெல்வேலியின் தெருக்களுக்குள்ளாகவே ஓட்டிக்கொண்டிருப்பேன். என் மன நிலையை மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருந்தேன். எங்கேயாவது பயணம் போய்க்கொண்டே இருக்கவேண்டும், அல்லது தனிமை கோரமாயும் சிக்கலானாதகவும் இருந்தது. என் தெருவில் எனக்கு மிகவும் அற்புதமான நண்பர்கள் இருந்தார்கள்.அவர்களோடு இணைந்து காடுகளுக்கு அதிகமாய் பயணம் செய்தேன். தாமிரபரணியின் அனைத்து இடங்களிலும் குளிப்பது, மேற்கு தொடர்ச்சி மலை என் வாழிடமாக இருந்தது. வாரா வாரம் சென்றுகொண்டிருப்போம். குற்றாலத்துக்கு மட்டுமே கணக்கிலடங்கா முறை சென்றிருப்பேன். தொடர்ச்சியாய் இந்த துயரங்களை மாற்றுவதற்கு ஏதேதோ செய்துகொண்டிருந்தேன்.

அதற்கு முன்னைய காலத்தில் நான் சிறுவனாய் இருந்தபோது என்னுடைய அப்பா ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அதைவைத்து நிறையபுகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.அந்த காமெராவை இன்றும் வைத்திருக்கிறேன். இந்த காலகட்டத்தில்தான் என் பயணமும், புகைப்படக்கலையும் என்னையும் அறியாமல் ஒன்றாய் இணைந்தது. நிறைய புகைப்படம் எடுக்கிறேன், ஊரெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறேன், ஆனாலும் அந்த துயரம் என்னை விட்டகன்றாற்போல் தெரியவில்லை. துயரத்தில் இருந்து மீளமுடியாத்தன்மை. அது எப்படி இருக்குமென்றால் நிற்கும் இடத்திலேயே நிலம் இரண்டாக பிளந்து உள்ளே சென்றுகொண்டிருந்தால் எப்படி இருக்கும், அப்படிதான் அந்த துயர். ஆனாலும் நாம் ஒருமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். என்னை அந்த வழியிலிருந்து மீட்டெடுக்க யாரும் இருக்கவில்லை, உதவி செய்யவும் முன்வரவில்லை. எல்லோரிடமும் நன்றாய் பழகுவேன், நன்றாய் பேசுவேன், பார்ப்பதற்கு சாதாரணமாய் இருப்பவன் போன்றே இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அந்த துயரத்திலிருந்து மீள என்னால் முடியவில்லை. 1980களின் பிற்பகுதியில் எஸ்.வி.ராஜதுரை "இனி" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் எனது நண்பர்களான தர்மராஜ், ரமேஷ் போன்றவர்கள் எழுதிக்கொண்டு இருந்தனர். அந்த பத்திரிக்கையை நான் கவனிக்க ஆரம்பித்தேன். அந்த புத்தகத்தில் என்னை ஈர்த்தது கட்டுரையோ, கதையோ, கவிதையோ அல்ல. அந்த புத்தகத்தின்அட்டையில் ஜான் ஐசக் என்னும் புகழ் பெற்ற புகைப்படக்காரரின் புகைப்படங்கள்தான். அந்த படங்களை பார்த்து நான் வியந்தேன். எப்படி இந்த புகைப்படங்களை எடுக்கிறார்? அதுவரைக்கும் நான் எடுக்கும் புகைப்படங்கள் பயணம் சார்ந்தே இருந்தது. ஆனால் இந்த புகைப்படங்கள் வேறு ஓர் தளத்தில் இருந்தன. அந்த தளத்தை எட்டுவதென்பது எனக்கு சிரமமானதாய் இருந்தது.

பின்னாளில் அது ஒன்றும் பெரிய தொழில்நுட்ப விடயம் கிடையாது என்பதை உணரமுடிந்தது. அதன் பின் என் புகைப்படங்களில் அவரை தேட ஆரம்பித்தேன். அந்த புத்தகத்தை திரும்ப திரும்பப் பார்த்ததில் அந்த பத்திரிக்கை ஓர் மாற்று இலக்கிய பத்திரிக்கையாய் இருந்தது. அதாவது குமுதம், ஆனந்த விகடன் அல்லாத அதே வேளையில் யாத்ரா, கொல்லிப்பாவைமாதிரி அல்லாமல், ஆனால் அதிகப்படியான புகைப்படங்களுடனும், ஓவியங்களுடனும் இருந்தது. எண்பத்தேழுகளில் இந்த பத்திரிக்கை முக்கியமானதாய் இருந்தது. அப்பொழுதான் அதில் இருக்கக்கூடிய இலக்கிய விடயங்களை படிக்க ஆரம்பித்திருந்தேன். என் துயரை நீக்கக்கூடிய ஒன்றாய் இலக்கியத்தை பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின் ஒருநாளில் இருபது மணி நேரம் வாசித்தேன். அதற்கு பின்னான காலங்களில் முழுநீள இலக்கியவாதியாய் மாறினேன். அதைத் தொடர்ந்து அதன்படியே நான்கு வருடங்களுக்கு மேல் புத்தகங்களையே படித்துக்கொண்டே இருந்தேன். அதை விடுத்து வேறு எந்த வேலையும் பார்க்கத் தோன்றவில்லை.அந்த நேரங்களில் நான் நிறைய எழுத்தாளர்களை சந்தித்தேன். அதில் முக்கியமானவர் தேவதேவன். என்னுடைய நண்பர்கள் தர்மராஜ், ரமேஷ் மற்றைய நண்பர்கள் நிறைய விடயங்களை பேசுவார்கள் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். தமுஎச எழுத்தாளர்கள் முக்கியமாக தமிழ்ச்செல்வன், கோணங்கி, கிருஷி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருநாள் என் நண்பர்களும், தேவதேவனும் ஒரு வீதியில் நடந்துகொண்டிருந்தோம். முதல்தடவையாக என் ஆளுமையாகவும், என்னோடு பொருந்திப்போககூடிய ஒருவராய் தேவதேவனைப் பார்த்தேன். அவரின் பேச்சினால்.அவரின் கவிதைகள் எனக்குள் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது. அதற்குபிறகு நான் நிறைய இலக்கியங்கள், நவீன இலக்கிய கோட்பாடுகள் படித்து முடித்திருந்தேன். ஆனாலும் அவர்தான் என்னை அதிகம் பாதித்தவர் இன்றுவரைக்கும்.

நாங்கள் நடந்து போகும்போது அவர் எப்படிபட்ட நபர் என்பதை கூறிக்கொண்டுவந்தார். என் வாழ்வில் நடந்த விடயங்களையே அவரும் கூறுவது போன்றே இருந்தது. அதுவே என்னிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் பின் நிறைய படிக்கவும், எழுதவும் ஆரம்பித்தேன். நமது வாழ்க்கை இலக்கியமாகவே இருக்கவேண்டும் என்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறேன். "இனி" இதழின் மூன்றாவது, நான்காவது இதழிலிலேயே ஜான் ஐசக்குடைய புகைப்படமும், நேர்காணலும் வெளிவந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அவர் நான்கைந்து காமெராக்களை தோளில் சுமந்தபடி அழகாய் நின்றிருந்தார். அவரின் அந்த புகைப்படம் என்னை வெகுவாக ஈர்த்தது. அவர் ஐக்கிய நாடுகள் சபையின் புகைப்பட நிருபராய் இருந்தார். அவரின் வாழ்வு என்றும் நாடோடியைப் போன்றுதான். குறிப்பாக அவர் நரிக்குறவர்களைப் பற்றி நிறைய எழுதியிருந்தார். நானும் அந்த நேரத்தில் நரிக்குறவர்களைப்பற்றி ஆய்வுசெய்து கொண்டிருந்தேன். இதெல்லாம் சேர்ந்து எனக்கொரு விடயம் தெளிவாய் தெரிந்தது. நான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பு முடிந்ததும் எந்த வேலையும் செய்யக்கூடாது, ஒரு நாடோடியைப்போல, புகைப்படக்காரனாக உலகம் முழுவதும் சுற்றவேண்டும், இதைத்தவிர வேற எந்த காரியமும் செய்யகூடாது என்பது உறுதியாகிவிட்டிருந்தது. அதன் பிறகு நான் எந்தவிதமான வேலைக்கும் போகவேயில்லை. இந்த நேரத்தில் இலக்கியங்கள் பலதும் படித்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது என் நண்பர்கள் சிவகுமார், அருணன் போன்றோர் வளவனூரில் சினிமா பட்டறை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் ஜான் ஆப்ரஹாமின் ஒடேசா இயக்கத்தினர். நான் அந்த வொர்க் ஷாப்பில் நான்கு நாள் கலந்துகொண்டேன். நிறைய படங்கள் பார்த்தேன். அதாவது முதல் தடவையாக நிறைய நல்ல படங்கள் பார்த்தேன். அந்த படங்களை பார்க்கும்போது எனக்குள் ஒரு பெரிய மாற்றம்நிகழ்ந்தது. அந்த படவிழாவில் என்னை மிகவும் பாதித்த படம் 'the glass' என்கிற படம்தான். அதை இயக்கியவர் பெர்ட் ஹன்ஸ்ட்ரா இன்று வரைக்கும் அந்த படம் பாதித்தது போன்று எந்தபடமும் பாதித்ததில்லை. அது ஏன் பாதித்தது என்று இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். பதில் கிடைத்தபாடில்லை. அதன் இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்றவை என்னுள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த ஒடேசா இயக்கத்தினரில் பலர் எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள். அந்த வொர்க் ஷாப் முடியும்போது எனக்குள் ஓர் தெளிவு ஏற்பட்டது. அதாவது என்னுடைய தளம் இலக்கியமோ, புகைப்படமோ இல்லை, அது சினிமாதான் என்பது உறுதியாக தெரிந்தது. இனிமேல் சினிமாவைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று முடிவுசெய்துகொண்டேன். என்னுடைய மாற்றங்கள் எல்லாமுமே ஒரு மனிதரைப்பார்த்து வரவில்லை, நல்ல படைப்புகளைப் பார்த்தே என்னுள் மாற்றம் பிறந்தது. அந்த பட்டறை முடிந்தவுடன்அவரவர் தங்கள் ஊர்களில் திரைப்பட சங்கங்கள் உருவாக்குவதென முடிவானது. நான், மணி, ஷங்கர் அனைவரும் சேர்ந்து 1991ல் காஞ்சனை திரைப்பட இயக்கத்தை ஆரம்பித்தோம்.

காஞ்சனை திரைப்பட இயக்கம் ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகின்றன. என்னிடம் யாராவது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் முதலில் கூறும் பதில் காஞ்சனை திரைப்பட சங்கம் என்றுதான் கூறுவேன். அதுதான் எனக்கு மகிழ்வைத் தரக்கூடியது. தொண்ணூற்று ஒன்றிலிருந்து, தொன்னூற்றொன்பது வரை திரைப்பட இயக்கத்தில் நாங்கள் செய்த வேலைகள் நினைத்துப் பார்க்கமுடியாதவை. இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இயக்கத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் திரையிட்டிருக்கிறோம். தொல்லியல் தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நிறையவே நடத்தியிருக்கிறோம். அதே போன்றுயாரிடமும் பணம் வாங்காமல் வெறும் நூறு ரூபாய் வாங்கி ஆவணப்பட பயிற்சி பட்டறை நடத்தினோம். சர்வதேச திரைப்படங்கள் பலவற்றை திரையிட்டோம்.இந்த நிகழ்வுகளெல்லாம் என் இருபதெட்டு வயதில் நிகழ்ந்து முடிந்துவிட்டது. அந்த எட்டு, ஒன்பது வருடங்களில் நாங்கள் காஞ்சனை இயக்கத்தின் மூலம் செய்த வேலைகளைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

அந்த பணியைப் பார்த்து பலர் என்னை தொடர்புகொண்டனர். சிலர் என்னை நேரில் சந்திக்கும்போது சீனிவாசன் என்பவன் இவ்வளவு சின்னப்பையனா என்று சந்தேகப்பட்டார்கள். அவர்கள் மனதில் இவ்வளவு வேலைகளை செய்பவன் நிச்சயமாய் ஒரு கண்ணாடிபோட்ட ஒரு பெரியவர் என்ற பிம்பம் உருவாகியிருந்தது. நாங்கள் செய்த வேலைகள் வெறும் திரைப்பட சங்கம் மட்டுமின்றி "அகவிழி" எனும் திரைப்பட பத்திரிகை, புத்தக வெளியீடுகள், காடுகளுக்கு பயணம், தொல்லியல் ஆய்வுகள் என தொடர்ச்சியான பணிகள் காஞ்சனை மூலம் நடைபெற்றது. அந்த நேரத்தில் எங்களுடன் மாணவர்கள் பலர் இணைந்து பணியாற்றினார். அவர்கள் இன்று பலர் வெளி நாடுகளில் உள்ளனர். அவர்கள் எல்லோரும் சொல்லும் விடயம் எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான காலகட்டம் காஞ்சனை காலகட்டம்தான் என்பார்கள்.

அதன் பின்னான காலங்களில் இது போன்ற என் செயல்பாடுகளினால் பலபல்கலைக்கழகங்களில் இருந்து பேசக் கூப்பிடுவார்கள். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் என்னுடைய நண்பர்கள் அருட்செல்வன், நடராஜன், ரவீந்திரன் போன்றோர் என்னை பேச அழைப்பார்கள். அதன் பின் சிறிது காலம் அங்கே பகுதிநேர வகுப்பெடுத்தேன். குறிப்பாக திரைப்பட வகுப்புகளும்,காமெரா சார்ந்த வகுப்புகளும் எடுத்தேன்.தொடர்ந்து இருவருடங்கள் அங்கே பணியாற்றினேன். பல்கலைக்கழகத்திலும் ஒரு திரைப்பட சங்கம் ஆரம்பித்தோம். வகுப்பெடுப்பது என்பது எனக்கு என்னைப் புரிந்து கொள்ள உதவியது. இன்று வரைக்கும்பல கல்லூரிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறேன்.நான் இன்றையபொழுதினில் நடக்ககூடிய நிகழ்வு வரை தெரிந்து வைத்திருக்கிறேன் என்றால் நான் வகுப்பெடுப்பதும், திரைப்படத்தை திரையிடுவதும்தான் காரணம். திரைப்பட சங்கங்களை மக்கள் எப்படி பார்க்க வேண்டுமெனில் தாங்கள் எப்போதும் பயிற்றுவிக்க கூடிய ஒன்றாயும், கற்றுக்கொள்ள கூடிய ஒன்றாயும் பார்க்கவேண்டும். மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பதும் சரி, திரையிடுவதும் சரி நாமும் கற்றுக்கொள்ளகூடிய அளவிலேயே இருக்க வேண்டும். நான் சமூகத்துக்கு சேவை செய்கிறேன் என்று கூறினால் நீங்கள் வெகுவிரைவிலேயே வறண்டுபோய் விடுவீர்கள். அப்படி இல்லாமல் நீங்கள் நிறைய படம் பார்க்க வேண்டும். நிறைய விவாதங்கள் செய்யவேண்டும் அப்போதுதான் உங்களை நீங்களேசெழுமைப் படுத்திக்கொள்ளமுடியும்.

நான் சுற்று சூழல், திரைப்பட இயக்கம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போதுதான் தாமிரபரணி சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்பவம் நிகழும்போது நாங்கள் அங்கு இல்லை. அந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மணி நேரத்தில் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டோம். நாங்கள் போனபோது இரண்டு பேர் இறந்துவிட்டதாக கூறினார்கள்,அடுத்தநாள் இரண்டு பத்தாயிற்று, அதற்கு அடுத்தநாள் பத்து பதினேழாக ஆயிற்று. தாமிரபரணியில் இருந்து பிரேதங்களை எடுப்பதை நான் கண்டேன். அது மிகவும் பயங்கரமாய் இருந்தது. இந்த விடயத்தை பத்திரிகைகள் மிக நேர்மையாய் பதிவு செய்தன. ஆனாலும் காவல்துறை அதற்கு நேர் எதிரான செய்திகளை பரப்பிக்கொண்டிருந்தனர். இந்த பிரச்சனை நடந்தபோது இந்த பிரச்சனைக்கு எப்படி முகம் கொடுப்பது என பேசிக்கொண்டிருந்தோம். இந்த விடயத்தை ஆவணமாக்கி அனைவருக்கும் கொடுக்கலாம் என எண்ணினோம். ஆவணப்படம் பண்ணுவதென்பது எங்கள் நோக்கம் கிடையாது. அடிபட்டவர்கள் அனைவரையும் நேர்காணல் செய்து அதை நீதிமன்றத்திற்கு கொடுக்கலாம் என்பது எங்கள் நோக்கம். அதைப்போலவே அடிபட்ட பலரிடம் பதிவு செய்தபோது, என்டிடிவி (NDTV) யில் இருந்து ஒருவர் வந்திருந்தார் அவர் பெயர் நூபூர் பாசு. இந்த விடயத்தை முற்று முழுதாய் வெளிக்கொணர அவரோடு இணைந்து உதவி செய்து நிறைய விஷயங்களை அவரிடம் கொடுத்தேன். அப்போது அவர்தான் கூறினார் நீங்கள் ஏன் இந்த விடயத்தை ஓர் ஆவணப்படமாக எடுக்ககூடாது என்றார். நான் கூறினேன் ஆவணப்படம் எடுப்பது போன்று நாங்கள் படம்பிடிக்கவில்லை. அதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி எனக்கு அதிகப்படியாக தெரியாது என்றேன். மேலும் நான் ஒரு திரைப்பட இயக்கத்தில் இருக்கக்கூடிய ஆள்தான், இருந்தாலும் தாமிரபரணி சம்பவத்தில் இருக்கக்கூடிய அரசியல் தன்மை எனக்கு தெரியாது என்றேன்.

அவர்தான் என்னை ஊக்குவித்தார். மேலும் இதை நீங்கள் படம் பண்ணவில்லை என்றால், நீங்கள் ஓர் திரைப்பட சங்க ஆர்வலர் என்று வெளியில் கூறாதீர்கள் என்றார்.பின் நான் சென்னை வந்து தோழர் டி.எஸ்.எஸ் மணி,இயக்குனர் ஜனநாதன் ஆகியோருடன் இணைந்து அந்தபடத்தை உருவாக்கி, வெளியிட்டோம். வெளியிட்ட பின் அந்த திரைப்படம் பெரிய பிரச்சனையை கொணர்ந்தது. தோழர் டி.எஸ்.எஸ் மணியை பதினைந்து நாள் சிறையில் அடைத்தார்கள், அந்த திரையங்க மேலாளரையும் சிறையில் அடைத்தனர். நான் தப்பித்து பெங்களுர் சென்றுவிட்டேன்.என் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டன. அந்த "நதியின் மரணம்" செய்வதற்கு முன்னமே நான் சின்ன சின்ன படங்கள் பண்ண ஆரம்பித்திருந்தேன். தொன்னூற்று எட்டுகளில் பார்வையற்ற குழந்தைகளைப் பற்றி மாணவர்களோடு இணைந்து "விழிகளை மூடுங்கள்" என்னும் படமும் பின்னைய நாட்களில் நான் தனித்து "சிதிலம்" என்ற பெயரில் ஒரு பாழடைந்த கோவிலைப் பற்றி அதன் புகைப்படங்களோடும், படிமங்களை வைத்தும் எடுத்தேன். திருநெல்வேலியில் படத்தொகுப்பு செய்யும் வசதிகள் அன்று இருக்கவில்லை. எனவே முன்னைய படங்களின் அனுபவங்கள் மூலமே நான் சென்னை வந்திருந்தேன். படத்தொகுப்பு முடிந்தவுடன் ஊர் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன் ஆனாலும் வழக்கு முடிவதற்கே இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இங்கேயே தங்கி படங்கள் எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் இங்கேயே இருந்துவிட்டேன்.

2. திரைப்படங்களை எங்கே திரையிட்டீர்கள்?

கல்லூரிகள், திரையரங்குகள், பொது இடங்கள் பலவற்றில் திரையிட்டோம். அதாவது காஞ்சனை திரைப்பட இயக்கம் பற்றி கூறுகிறேன். பள்ளிகளிலும், ஒரு அறைக்கு வெளியேயும் பல இடங்களில் திரையிட்டிருக்கிறோம். ஒரு தெருவில் திரையிடுவது என்னும் ஒரு நிகழ்வினையும் உருவாக்கி, பல தெருக்களில் திரையிட்டோம். மற்றைய இயக்கங்கள் படம் போடுவது மட்டுமே அவர்களின் வேலையாய் இருந்தது. நாங்கள் படங்கள் திரையிடுவதை கலாச்சார நகர்வை போன்று நடத்தினோம். இது எல்லாமுமே டிவிடி வருவதற்கு முந்தைய காலங்களில். 16mm இல் திரையிட்டோம். நான் பெங்களூர் சென்று அதன் பிரிண்டுகளை வாங்கிவருவேன், பூனா சென்று வாங்கிவருவது, திருவனந்தபுரம் சென்று வாங்கிவருவது பின் அதை பள்ளி, கல்லூரிகளில் திரையிடுவோம். இதற்கெல்லாம் எப்படி பணம் வசூலித்தோம் என்பது இன்றும் ஆச்சரியமான ஒன்றுதான். அதை நாங்கள் கலாச்சார நகர்வாய் நடாத்தினோம். திடீரென ஒருநாள் காமெரா பயிற்சி பட்டறைகள் நடாத்துவோம், காடுகளுக்கு பயணம் செய்தல், ஆவணப்பட பயிற்சி பட்டறை இதெல்லாம் காஞ்சனை மூலமாய் நடைபெறும். அந்த பட்டறைகளை நிறைய விதமான தொழில்நுட்ப வல்லுனர்கள் நடத்துவர், சில வேளைகளில் காமெரா, சினிமா சார்ந்த வகுப்புகள் நான் நடத்துவேன், தொல்லியல் என்றால் அது வேறு வல்லுனர்கள் வகுப்பெடுப்பர்.

3. ஆவணப்படங்களின் நோக்கம் என்ன?

நான் இதுவரைக்கும் எந்த குறும்படங்களும் செய்ததில்லை. எல்லாமுமே ஆவணப்படங்கள்தான். என்னுடைய ஆவணப்படங்கள் அனைத்தையுமே வெற்று திரைப்படமாய் மட்டும் கருதாமல், அது சமூகத்தில் போராடக் கூடியவர்களுக்கு உதவியாய் இருக்கவேண்டும் என நாங்கள் எண்ணினோம். பதினேழு பேர் இறக்கிறார்கள்.எனவே அவர்களின் போராட்டத்துக்கு எங்கள் படம் ஒரு கருவியாய் இருக்கவேண்டும். அதே போன்று கருவியாயும் இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்பொழுது அந்த இறப்புகளுக்கு ஓர் சாட்சியாய் இருந்தது. அது வெறும் ஆவணமாயும், வெறுமையாய் வெளியில் எடுத்து கூறுவதாக மட்டுமே அமையவில்லை. நீதிமன்றத்தில் அதை சாட்சியாய் நிறுத்தினோம். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. நீதியரசர் மோகன் தலைமையில் நீதிபதிகள் கேவலமான தீர்ப்பு வழங்கினர். இந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்கள், பின் அப்படி ஒரு விடயமே அங்கு நடைபெறவில்லை என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

இப்படி ஓர் படம் செய்து அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்து நீதிக்காக போராடியது எனக்கு தெரிந்து எந்த படமும் இல்லை. நீங்கள் ஒரு பிரச்சனை நடந்து அதை பத்து வருடங்களுக்கு பின் படம் பிடிக்கலாம். ஆனால் அது ஆதாரமாய் இராது. வெறும் படமாய் மட்டுமே இருக்கும். அந்த வழக்கு முடிவடைந்தவுடன் அந்த படத்தை ஊர் ஊராக திரையிட்டு அந்த மக்களை பற்றி பேசி, போராட்டம் என்றால் என்ன, தலித் பிரச்சனை என்றால் என்ன என்பதைப்பற்றி அப்பொழுதான் அறிகிறேன். சொல்லப்போனால் படம் பண்ணிய பிறகுதான் படிக்க ஆரம்பிக்கிறேன். இதுவரை பதினைந்து ஆவணப்படம் பண்ணியிருக்கிறேன். இந்த பதினைந்து படங்களிலும் அதிகமாய் பயன்பெற்றது யாரெனில் அது நானாகத்தானிருக்கும். அவ்வளவு தூரம் அந்த பிரச்சனைகளை பற்றி படித்து தெரிந்துகொண்டேன். ஒரு ஆவணப்படம் பண்ணும்போது ஒரு முனைவர் தர மாணவர் எவ்வளவு படிக்கிறாரோ, அவ்வளவு நான் படித்து ஆய்வு செய்துபடம் செய்கிறேன். இந்த படம் வெளிவந்து சமூகத்தில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியது.

4. குறும்படங்களின் வளர்ச்சி, ஆவணப்படங்களில் இல்லை. என்ன காரணம்?

இல்லை, நான் 2000களில் அதற்கான வேலைகளை ஈடுபட்டிருக்கிறேன். அதாவது நதியின் மரணம் படத்தின் பின்னான காலங்களில் இந்த சமூக விழிப்புணர்வை சரியாய் பயன்படுத்தவேண்டும் என எண்ணினேன். அந்த நேரங்களில் பலரும் குறும்படங்கள் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் எதுவுமே சரியான கட்டமைப்புக்குள் அடங்காமலே அங்கேயும் இங்கேயுமாய் உதிரியாய் கிடந்தது. அது சரியான முறையில் திரையிடப்படாமலே இருந்தது. படங்கள் எதுவுமே வெளிக்கொணர ஆட்கள் இன்றியும்,இது ஓர் புதிய சினிமா, முன்னையதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்னும் விளக்கமான கோட்பாடுகள் ஏதும் யாராலும் கொடுக்கப்படவில்லை. இந்த நேரத்தில் இரண்டாயிரமாம் ஆண்டு "தீபிகா" இயக்கத்தோடு இணைந்து "உலகில் தமிழின் முதல் குறும்பட, ஆவணப்பட நிகழ்வை" நடத்தினோம். நானே நேரடியாக குறும்படம், ஆவணப்படங்கள் செய்தவர்களின் வீடுகளுக்கு சென்று அந்த படங்களை சேகரித்து அது தொடர்பான ஓர் அறிக்கை எழுதி அதாவது மற்றைய சாதாரண சினிமாக்களை விட இந்த படம் மிகவும் முக்கியமானது என ஓர் அறிக்கை எழுதி, அந்த படங்களின் கதைக்குறிப்புகளை எழுதி அதை சரியாக பரவலாக கிடைக்கும்படி செய்து, அரும்பு பத்திரிகையில் அதைப்பற்றிய ஒரு பதிவாக குட்டி ரேவதி மூலமாய் பதிவு செய்தோம் "அறியபடாத சினிமா" என்னும் தலைப்பில். ஆவணப்படம் என்றால் என்ன, அதன் வரலாறு பற்றிய பதிவுகளை பகிர்ந்தோம். அந்த படங்களை பற்றி கூறி, அந்த நாற்பது படங்கள் அனைத்தையுமே திரையிட்டபோது அரங்கு நிறைந்த காட்சிகளாக மூன்று நாட்கள் இருந்தது. அந்த நேரங்களில் அனைத்து பத்திரிகைகளிலும் அந்த நிகழ்வுபற்றி "முதல்முயற்சி " என எழுதப்பட்டது. இந்த நிகழ்வு என்னை பொருத்தமட்டில் மிக முக்கியமான தருணம். இப்போதும் நண்பர்கள் தொடர்ந்து காஞ்சனை திரைப்பட இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் திரைப்பட இயக்கம் வேறு, வேறு மாதிரியான அமைப்பில்,வேறு வேறு ஆட்களுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆவணப்படமும், அதில் இருக்ககூடிய வரலாறும், பதிவு செய்யக்கூடிய காலமும் மிக முக்கியமான ஒன்றாய் நான் கருதுகிறேன். நான் கதைப் படங்கள் எடுத்தாலும் ஆவணப்படங்களை தொடர்ந்து இயக்குவேன்.

5. சாதி எதிர்ப்பு சார்ந்த உங்கள் ஆவணப்படங்கள் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும்?

பதில்: தாமிரபரணி கொடுமை நடப்பதற்கு முன்பாக நான் ஒரு காந்தியவாதி. காந்தி, ஜே.சி. குமரப்பா இவர்களின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த வாழ்க்கையே வாழ விரும்பும் ஓர் நபர். என் இருபத்தெட்டு வயது வரைக்கும் அப்படித்தான் இருந்தேன். தொன்னூற்று ஒன்பதாம் ஆண்டு நடைபெற்ற இந்த தாமிரபரணி பிரச்சனை எல்லாவற்றையும் பிரித்துப்போட்டது. கொல்லப்பட்ட பதினேழு பேரின் வீட்டிற்கும் நான் சென்றிருக்கிறேன். பதினேழுபேரும் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார்கள் என யோசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் என்னை அதை விட ஒரு விடயம் அதிக அதிர்ச்சிக்கும், நான் இப்பொழுது வேகமாய் வேலை செய்வதற்கும் தூண்டியது. நீங்கள் கேள்விப்பட்டாலே அதிர்ச்சியாவீர்கள். அந்த பதினேழு பேரும் கொல்லப்பட்டதுக்கு திருநெல்வேலியில் எந்தவிதமான எதிர்ப்புணர்வும் எழவில்லை. எங்கள் தெருவில் இருந்தவர்கள், பொது மக்கள், என் நண்பர்கள் என யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

என் வாழ்வில் முதன் முறையாக சாதியின் கொடூரத்தன்மையையும், அதன் மோசமான விளைவையும் காணும்போது மிகவும் வேதனை கவிந்ததாய் இருந்தது. ஏன் அப்படியென்றால் திருநெல்வேலி என்பது என் ஊர், மிகவும் பாரம்பரியமான ஊர், பெரிய இலக்கியவாதிகள் இருக்கிறார்கள், தாமிரபரணி ஓடுகிறது என்பது போன்ற ஊர்ப்பாசம் இருந்தது. தாமிரபரணி கொடுமையின் பின்னான காலத்தில் இவ்வளவு கேவலமான ஒரு ஊரிலா இருக்கிறோம் என வெட்கமாய் இருந்தது. திருநெல்வேலி என்னுடைய சொந்த ஊர் என்று சொல்வதை இன்றும் அருவருப்பானதாகவே உண்ர்கிறேன். ஆனாலும் இதற்கு முன்னரும் நான் நிறைய ஜாதிக்கலவரங்கள் பார்த்திருக்கிறேன். பத்திரிகைகளில், நேரடியாய் தெருக்களில். ஆனால் இதையெல்லாம் மீறி இந்த பிரச்சனை என்னை வேறு ஒரு விதத்தில் பாதித்தது. இதில் மற்றுமொரு கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் இந்த பதினேழுபேருமே கொல்லப்பட்டதை விரும்பினார்கள். அந்த ஊர்வலம் அடித்துக் கலைக்கப்பட்டதை விரும்பினார்கள். அந்த ஊர்வலத்தில் பதினேழுபேர் கொல்லப்பட்டது நியாமானதுதான் என்பது பொது மக்களின் மனோபாவமாக இருந்தது.

அந்த ஊரில் நான் பேருந்தில் பயணிக்கும்போதும், வீதியில் நடந்து செல்லும்போதும், ஆவணப்படத்திற்க்காக கேள்வி கேட்கும்போதும் மிக வேதனையளிப்பதாய் இருந்தது. பதினேழு பேரும் கொல்லப்பட்டது சரிதான் என்பது அந்த மக்களின் மனநிலை, என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னும் கூறப்போனால் தலித்மக்கள் கேவலமானவர்கள், பொறுக்கிகள், அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதை அனைத்து பொது இடங்களிலும் எல்லோருமே இப்படி பேசுவதை நான் கேட்டேன். திருநெல்வேலி போன்ற வைதீகம் வாய்ந்த ஊர்களில், வைதீகம் என்று சொல்லப்படுகிற ஊர்களிலெல்லாம் ஜாதி ஒடுக்குமுறையும் வன்முறையும் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். ஏன் இவ்வளவு கொடூரமானவர்களாய் இருக்கிறார்கள்? திருநெல்வேலியில் "நீ என்ன ஜாதி" என்பதை கேட்காமல் ஒருவனால் இருந்துவிடவே முடியாது. திருநெல்வேலி காற்றில் கூட ஜாதி வாசனை வீசும்.அவன் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி, அவர்கள் ஆய்வாளர்களாய் இருந்தாலும் சரிதான், அங்கு எல்லாமுமே ஜாதியின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது என்பதை நன்றாய் உணர்ந்தேன். இது போன்ற விஷயங்கள் என்னை வெறுப்பூட்டியது. இந்த நேரத்தில்தான் உலக அரசியலில் நிகழக்கூடிய விஷயங்கள், சமூகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி தெரிந்திருந்தது. தொன்னூற்று ஒன்பதாம் ஆண்டில் ஒரு பெரிய பயங்கரமான ஜாதிப் போராட்டம், வன்முறை வெடித்தது. ஏன் இப்படி நடக்கிறது என்பது பற்றி நான் ஆய்வு செய்துகொண்டிருந்தேன்.

அதன் பின் தலித் முரசுக்காக "untouchable country" எனும் ஆவணப்படத்தை எடுத்தேன். அந்த சந்தர்ப்பத்தில் எங்கெல்லாம் ஜாதிக்கலவரங்கள் நடந்ததோ அதைப்பற்றி பலவிதமான ஆய்வுகள் செய்தேன் .குறிப்பாக முதுகுளத்தூர் கலவரம், குறிஞ்சாங்குளம் கலவரம், கீழ்வெண்மணி என ஒவ்வொரு ஜாதிக்கலவரத்துக்கு பின்னும் என்ன இருக்கிறது என்பது பற்றி தெளிவாய் அறிந்துகொண்டேன். அந்த விஷயங்களை தெரிந்துகொண்டு காந்தியிடமிருந்து மெதுவாய் அம்பேத்கர் பக்கம் நகர்ந்துகொண்டேன். அம்பேத்கர் எவ்வளவு ஆழமான விசயங்களை சிந்தித்திருக்கிறார் என்பதை படிக்க ஆரம்பிக்கிறேன், அதன் பின் நிறைய தெரிந்துகொண்டேன். ஜாதியின் அடிப்படை வேரான இந்து மதம், அதன் அடிப்படையான பார்ப்பனியம் இந்த விடயங்களை ஆழமாய் தெரிந்து கொண்டேன்.ஆனாலும் அது இன்னமும் முடியாமலேயே இருக்கிறது. இதன் மூலமாக திருநெல்வேலி மீதும்,அந்த மக்கள் மீதும் இருத்த கோபம் இந்த நிமிடம் வரையும் குறையவே இல்லை. இவ்வளவு கொடுமையான சமூகத்தில் எப்படி வாழ முடியும்? ஜாதிதான் எல்லாவற்றிலும் பெரிது. வர்க்கப் போராட்டம் என்பதை விட இந்த ஜாதியே பெரிய பாத்திரமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து இன்று வரை ஜாதி குறித்த ஆய்வுகளில் தொடர்ச்சியாய் சென்று அம்பேத்கரில் முடிவடைந்தது. அம்பேத்கரிலிருந்து மகாத்மா ஜோதிராவ் பூலே மிகமுக்கியமான நபராக தெரிந்தார். பூலே, பெரியார் இவர்களெல்லாம் இந்தியாவில் எவ்வளவு பெரிய நகர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக தெரிந்துகொண்டேன்.

6. திரைப்படம், இலக்கியம் இரண்டையுமே எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: பொதுவாக இரண்டையுமே நான் எளிமையாக பார்க்கிறேன். அதாவது எல்லா மனிதனுக்கும் அன்றாட வாழ்விலிருந்து விலகி சற்று தீவிரமான காலகட்டம் என்று உள்ளது. மரணம் எல்லோருக்கும் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது. இப்பிடியான துயரமான காலகட்டத்தில்தான் நான் இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன், சினிமா பார்க்க ஆரம்பித்தேன். எனவே ஒரு மனிதனின் ஆழமான சிக்கலில் இருந்து வெளிவர சினிமா, இலக்கியம் இரண்டுமே மிகவும் முக்கியம்.சினிமா என்றால் சாதாரண படங்கள் இல்லை, நிச்சயமாய் என்னுடைய காலகட்டத்தில் ரித்விக் கடக், சார்லி சாப்ளின் இவர்களின் படங்கள் என் வாழ்வின் துயரமான பகுதிகளில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறது. ஒரு திரைப்படத்தில் இருக்ககூடிய ஏதோ ஒருபடிமம், இசை,ஏதோ ஒரு வசனம், ஏதோ ஒரு காட்சி, ஒருவனை வாழ்கையிலிருந்து காப்பாற்றிவிடும் என முழுமையாக நம்புகிறேன்.

ஒரு துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு திரைப்படம் காரணம் என்பதை நம்பும் ஒருவன் அதே வேலையைத்தான் செய்யமுடியும். அப்படியென்றால் ஆழமான திரைப்படங்கள் மட்டும்தான் மக்களை மீட்டெடுக்கும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். ஒரு நாளைக்கு நான் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. மீட்டெடுக்க முடியாத துயரங்களின் உழல்பவர்களை, நானாக சென்று பார்த்து நிறைய டிவிடிகளை கொடுத்து அவர்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியும் என நம்புகிறேன். இதை இன்றுவரை தொடர்ந்து செய்கிறேன். நான் திரைப்பட வகுப்புகள் எடுப்பதும், என் இயக்கம் இயங்குவதும் இதன் பின்னணியில்தான் இருக்கிறது. இதன் மூலமாக யாராவது ஒரு மனிதனை வெளியில் கொண்டுவர முடியும் என நான் நம்புகிறேன். இதனால் தான் நான் வணிகரீதியான படம் செய்யவில்லை. நான் நிறைய இடங்களில் பயிற்சி பட்டறை நடத்துகிறேன். யாராவது ஒரு மாணவன், கடைசி நாள் "சார் உங்கள என்னால மறக்கமுடியாது நீங்க எனக்கு உதவி செஞ்சிருக்கிங்க" என்று கூறுவான்.

அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கிலே தான் இந்த வேலைகளிலெல்லாம் ஈடுபடுகிறேன். ஏனென்றால் நான் யாருடனும் பேச தெரியாத நபராகவும்,யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ளாத நபராகவும்தான் இருந்திருக்கிறேன். யாருடனும் பேச இயலாத நபர்களுக்காகவும், யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்காகவும் என் படைப்புகள் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இலக்கியம் தெரிந்துகொள்ள விசாலமான மனம் வேண்டும். ஒரு நல்ல இலக்கியவாதியால் மட்டுமே ஒரு தரமான சினிமா தரமுடியுமா என்றால் அது நிச்சயமாய் சந்தேகம்தான். ஒரு திரைப்படம் எடுப்பவருக்கு ஓவியம், புகைப்படக்கலை பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அவர் சினிமாவை ஆழ்ந்து தெரிந்திருக்க வேண்டும். அவரால்தான் நல்ல படம் தரமுடியும். இலக்கியம் படிப்பதன் மூலமாய் நம் அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும், மனதை பண்படுத்திக் கொள்ள முடியும். நல்ல கதையை தேர்வு செய்தால் மட்டுமே அது நல்ல படம் ஆகிவிடாது. இலக்கியம் வேறு ஊடகம், சினிமா வேறு ஊடகம். ஒரு சினிமா இயக்குனர் இலக்கியத்தையே படமாக்குவதால் மட்டுமே அது நல்ல படமாக மாறாது. சினிமா மொழி தெரிந்தவரால் எந்தக் கதையையும் கதையற்றதையும் உயர்ந்த படமாக உருமாற்ற முடியும்!’

நேர்காணல்: செந்தூரன் (படிமை மாணவர்)
படங்கள்: சோமசுந்தரம் (படிமை மாணவர்), ஆர். ஆர். சீனிவாசன்

இவரது ஆவணப்படங்களைக் காண:

http://www.cultureunplugged.com/storyteller/RR%20Srinivasan%20Ramamoorthy

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


http://thamizhstudio.com/creators_29.php

Tuesday, August 9, 2011

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 'லெனின் விருது'



தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 'லெனின் விருது'

http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_2.php


ஆதவன்


வணக்கம் நண்பர்களே...

ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர். அரசியலைப் பிண்ணனியாகக் கொண்டு சமூகக் குரலை முன்வைத்து இயங்குகின்றன அவரது ஆவணப்படங்கள். தொடர்ந்து சாதி ஒழிப்பு என்பது அவரது எல்லா ஆவணப்பட ஆக்கங்களிலும் மையமான சிந்தனையாக இருக்கிறது. சமூக, அதிகாரச் சமரசங்களுக்கு ஆளாகாமல் அடுத்தடுத்த சிந்தனைக் கட்டத்தை நோக்கித் தன்னையும் தன் ஆவணப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும் ஆற்றல் உடைய காட்சிகளை உடையவை அவரது கேமரா கண்கள். காட்சிகளின் வழியாகப் புதிய சிந்தனையை அளிப்பதில் வல்லவர். எதையும் வலிந்து சொல்லாமல் இயல்பான, உயிரோட்டமான மொழியிலும் நீதியின் குரலிலும் வழங்கக்கூடிய அவரின் ஆவணப்படங்கள் தற்காலச் சமூகத்தின் முத்திரைகளாகின்றன. அதன் பொருட்டு, சமூகத்தின் எல்லா அன்றாடச் சிரமங்களை எதிர்கொண்டுவரும் சீனிவாசன் தற்கால இளைஞர்களுக்கு பெரிய உந்து சக்தியுடையவர்!

மேலும், கடந்த 15 வருடங்களாக தமிழகத்தின் ஆவணப்படச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆர். ஆர். சீனிவாசன். பிறந்து வளர்ந்த ஊரான திருநெல்வேலியில், காஞ்சனை என்ற திரைப்பட இயக்கத்தை நடத்தி வந்தவர், அதன் தொடர்ச் செயல்பாடாகத்தான் ஆவணப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். காடு, மலை, நதிகளுடன் இவற்றுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தவர், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அதை அதன் இரத்தம் உலரும் முன்பு பதிவு செய்து, ஓர் எதிர்ப்பாக மாற்ற, சென்னை நகர்ந்தார். ‘நதியின் மரணம்’ என்ற ஆவணப்பட மாக்கினார்!
அடிப்படையில், திருநெல்வேலியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பும், நாட்டார் வழக்காற்றில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். இவ்விரண்டு அடிப்படையான கல்வியறிவின் வெளிப்பாடுகளையும் இவரது எல்லா ஆவணப்படங்களிலும் காணமுடியும். ’காணாமல் போவது’, ‘முகமூடிய முகம்’ என்ற இரண்டு ஆவணப்படங்களிலுமே இத்தகைய இலக்கிய நுகர்ச்சியையும் நாட்டார் வழக்காற்று அணுகுமுறையையும் காணமுடியும். ‘சிதிலங்கள்’, ‘சுழற்புதிர்’, ’தெருவின் பாடல்’ போன்ற படங்களும் அம்மாதிரியானவையே.

பிற படங்களான, ’தீண்டாத்தகாத தேசம்’, ’என் பெயர் பாலாறு’, ‘கடலும் மனிதனும்’ மற்றும் பேரறிஞர் அண்ணாதுரை பற்றிய அண்ணா 100 ஆகிய படங்கள் மனிதனின் வேறுபட்ட நிலைகளில் கூடத் தொடர்ந்து இயங்கும் சாதிய ஒடுக்குமுறையை வெறும் தர அளவில் இல்லாமல் நிகழ்வுகள், தாக்கஙக்ள் அடிப்படையில் அணுகுபவை. இப்படங்கள், அரசியல் பார்வையுடயவை என்றாலும், அவை அரசியல் வாதியினுடையவை அன்று. மக்களுடையவை, அந்த முறையில் தான், ’நதியின் மரணம்’ என்ற ஆவணப்படம் முதற்கொண்டு இன்றைய அவரது அத்தனை ஆவணப்படங்களும் அமைந்திருக்கின்றன.

கலை, இலக்கிய நுகர்ச்சியில் தொடர்ந்து நவீனத்தைக் கண்டடையும் முயற்சிகளை இவரது செயல்பாடுகளும் தொடர்ந்து வெளிப்படுவதை இவரது மற்ற படங்களிலிருந்தும், தனது அடுத்தடுத்த செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்வதிலிருந்தும் நாம் உணரக்கூடும். தமிழகத்தின் தன்காலத்தில், இயங்கும் இரண்டு மனிதர்களை இவர் முக்கியமான கலை அரசியல் ஆளுமைகள் என்கிறார். ஒன்று கவிஞர் தேவதேவன். இரண்டு, ஓவியர் சந்ரூ. இவர்கள் நேரடியாக அரசியல் வெளிப்பாடுகளை முன்வைப்பவர்கள் இல்லை. ஆனால், தன் மீது சமகாலம் சுமத்தும் அரசியலை தூக்கியெறியும் கலைக் கூறுகளை தம் படைப்புகளில் அயராது வைத்துக்கொண்டே இருப்பவர்கள். இது தான் இன்றைய எல்லா படைப்பாளிகளும் செய்யவேண்டியது என்பதை அவர் தன் சாதி ஒழிப்பு அரசியலை செயல்படுத்துவதற்கான வழித்தடமாகவும் வைத்திருக்கிறார்.

அவரின் மனோபாவம் ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த கட்புலன் மற்றும் நுண்ணாய்வு பார்வையைக் கொண்டது. இவர், இதழியல், திரைப்படங்கள் பற்றிய வகுப்புகளை எடுக்கும் போது உணரமுடியும். புகைப்பட வரலாறு, சினிமா வரலாறு இரண்டிலும் நாம் இன்று எங்கு நிற்கிறோம் என்ற பார்வையை தயக்கமில்லாத விமர்சனங்களால் எப்பொழுதும் முன் வைத்துக்கொண்டே இருக்கிறார். தன்னுடைய புகைப்படக்கண்காட்சியையும், நூல்களையும், பயிற்சிப்பட்டறையையும் இப்பார்வையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் எதிர்ப்பாகவும் கொண்டிருப்பவர்.

தன்னைக்கவர்ந்த ஆளுமையான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரஹாம் பற்றிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் நிறைந்த ஒரு நூலை தொகுத்து அளித்திருக்கிறார். அந்நூல், சமூகப்பார்வையுடன் திரைப்படங்களை அணுகும் எவருக்கும் ஒரு கையேடாக இருக்கக்கூடியது.

இன்று, ’பூவுலகின் நண்பர்கள்’ என்ற சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் சுற்றுப்புற ஆர்வலராகவும் இயங்கி வரும் இவர், ஏற்கெனவே குறிப்பிட்ட படி காடு, மலை, நதியுடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டவர். கூந்தன் குளம் பால் பாண்டியனுடன் கொண்ட தன் பழைய நட்பால் பறவைகளையும் உயிரினங்களையும் தன் கலைச்செயல்பாட்டின் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பவர். இவ்வாறு ஒரு மனிதன் தன் பல்வகை பரிமாணங்களையும் இணைத்துச் செயல்படும்போது தான் முழு மனிதனாக இயங்க இயலும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்.

இந்நிலையில், இந்த, ‘லெனின் விருது’ நிச்சயமாய், ஆர். ஆர். சீனிவாசனை ஊக்கப்படுத்துவதற்கான விருதே! அவர் இன்னும் இன்னும் கலை வெளிப்பாட்டை விசாலமான உலகமாகக் கண்டறியும் பயணத்திற்கான துணையாகவும் இருக்கும்!
அதுமட்டுமின்றி தற்காலச் சூழலில், ‘லெனின் விருதுக்கான’ முழுமையான தகுதியையும் பெருமையையும் உடையவராக ஆர். ஆர். சீனிவாசனை அடையாளம் காண்பதிலும் இவ்விருதினை அவருக்கு வழங்குவதிலும் தமிழ் ஸ்டுடியோ பெருமைப்படுகிறது. தொடர்ந்து அவர் இப்பாதையில் பயணிப்பதற்கான ஊக்கத்தையும் தளத்தையும் அமைத்துக்கொடுப்பதுடன் தமிழ் ஸ்டுடியோ. காம் என்றென்றும் அவருடன் பயணிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

---------------------------------------------------------------------------------

லெனின் விருது வழங்கும் விழா

இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள்:

இயக்குனர் பாலு மகேந்திரா,

தயாரிப்பாளர் தனஞ்செயன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

கவிஞர் தேவன் தேவன்

மருத்துவர் புகழேந்தி.

நிகழ்வில் செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெறும். இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார்.

அனைவரும் வருக..


http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_2.php




அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர் -- விக்ரமாதித்தன் நம்பி



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர்


விக்ரமாதித்தன் நம்பி

தலைமுறைகளின் வாழ்வைக் கலாபூர்வமாகப் பதிவு செய்திருக்கும் கவிதை

அவள் சிறுமியாயிருந்த போது
பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை
பரிசளித்தனர்
அப்போது அவளுடைய தந்தை ஒரு சிறுநகரத்தில்
ஆசிரியராய் இருந்தார்
வீட்டின் பின்புறம் ராட்டைக் கிணறும்
வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன
வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
பருவமடைந்த போது
தந்தை தலைமையாசிரியராகியிருந்தார்
வெள்ளியோனிக்கு
நகரத்தின் தலைமைச்செயலக உதவி அதிகாரியுடன்
திருமணம் செய்விக்கப்பட்டது
சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின்
சப்தம்
நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில்
ஒலித்துக்கொண்டு இருந்தது
குடித்தனத்தின் சத்தத்தில் கிணற்றின்
முனகல் அமிழ்ந்தே போனது,
இப்போது வெள்ளியோனி தூர்ந்து மந்திர ஜெபங்கள்
முணுமுணுக்கத்
தொடங்கிவிட்டது
ஊரின் கிணற்று ராட்டை சப்தம்வேறு
கனவுகளில் வர ஆரம்பித்திருந்தது
தலைமைச் செயலக அதிகாரியும்
வெள்ளியோனி அம்மாவும்
தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர்
தங்கயோனியை
சிறிதாய் இருந்தபோது
தங்கயோனி பட்டு மென்மையாக
மடிந்தபடி இருந்தது
ஒரு கண்ணில் கனிவு
மறு கண்ணில் குறும்பு
ஒரு கவிதையை அறிவதற்கு முன் அதை உணர்ந்து கொள்வதுதான் முதன்மையாது. கவிதை அறியத்தக்கதாக இல்லாவிட்டாலும் உணரமுடிந்தால் அதுவே வாசகவெற்றி என்று கூடச் சொல்லப்படுவதுண்டு.
- சி.சு. செல்லப்பா
(பிச்சமூர்த்தி கவிதைகள் முன்னுரையில்)

இந்த கவிதை, அனுபவமா. நிச்சயமாக, இல்லை. உணர்வா. அதுவும் இல்லை. பிறகு? கண்டதும் கேட்டதுமான அவதானிப்பு? இருக்கலாம். அப்படியானால், அதுவும் அனுபவம்தான், உணர்வு தான் - ஒரு வகையில். எப்படியோ கவிஞன் கவிப்பொருளை வசப்படுத்திவிடுகிறான். இப்படிதான் சொல்லமுடிகிறது. நம்மால்.

நாமே கூட அநேக குடும்பங்களைப் பார்த்திருப்போம் ஒரு தலைமுறை. சாதாரணமாக இருக்கும், அடுத்த தலைமுறை கொஞ்சம் விருத்தியாகி வந்திருக்கும் அதற்கடுத்த தலைமுறை செல்வச் செழிப்பாக வளர்ந்து நிற்கும்.

கீழ் நடுத்தரவர்க்கம், நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் என்று வசதியை வைத்துத்தானே வகுத்திருக்கிறார்கள்.

ஷங்கர், இந்த விஷயத்தைத்தான் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ஐம்பது - அறுபதாண்டுக் காலத்தில் ஒவ்வொரு தலைமுறையினரும் தழைத்து வளர்ந்துவருவதை கலாபூர்வமாகப் பதிவுசெய்கிறார், இதனாலேயே அருமையான கவிதையாகிவிடுகிறது.

உள்ளபடியே. கவிதையாக்குவதற்குக் கடினமான பாடுபொருள்தான் கருத்தாக்கக் கவிதையாகச் சரிந்துவிடும் அபாயம் நேர்ந்துவிடும் கவிதையாகத் திரளாமல் போகும் ஆபத்து வந்துவிடும் அதுபோல எல்லாம் ஆகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்திருப்பது திறமான கவித்துவம்தான்.

இவ்வளவும் கவிதையின் பொருள் குறித்து…

இனி, சொல்முறைபற்றி

இந்தக் கவிதையின் பெரிய பலமே இதன் சொல்முறை தான்.

மூன்று தலைமுறையினரின்வாழ்வே கதைச் சுருக்கம் போல - அவர்களின் வளர்ச்சி, மாற்றம், உயர்வு அனைத்தும் ஒரு சேர - செய்தி சொல்லில்பாங்கில் முன் வைக்கப்படுகிறது.

காலமாற்றத்துக்குத் தக, அவர்களின் மனப்பாங்கு வடிவு கொள்வது கட்டாக விவரிக்கப்படுகிறது, வெள்ளியோனி என்ற உருவகம் (குறியீடு/புனைவு), நடுத்தர வர்க்கத்தைச் சுட்டுவதாகவும், தங்கயோனி என்ற உருவகம் உயர் நடுத்தரவர்க்கத்தைக் குறிப்பதாகவும் வருகிறது.

கவிதையின் ஆரம்ப வரியே அதே சமயம், புனைவும் விரவ. அவள் சிறுமியாயிருந்த போது / பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை / பரிசளித்தனர்.
அதே சமயம், புனைவும் விரவ. அப்போது அவளுடைய தந்தை ஒரு சிறுநகரத்தில் ஆசிரியராய் இருந்தார். இந்த வரி முழுக்கச் செய்தி சொல்லல்.

வீட்டின் பின்புறம் நாட்டைக் கிணறும் வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன. தகவல் போலத்தாம் தெரியும், எனில் அப்படியல்ல. அவர்கள் வசதியைக் காட்டுவது மேலும், அவள் வாழ்க்கையில் ராட்டைக் கிணறு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நினைவாக, கனவாக, பழம் பொருள் அலங்காரமாக.

வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
பருவமடைந்த போது
தந்தை தலைமையாசிரியராகியிருந்தார்.
வெள்ளியோனிக்கு
நகரத்தின் தலைமைச்செயலக உதவி அதிகாரியுடன் திருமணம் செய்விக்கப்பட்டது.

இந்த இரண்டு வாசகங்களுமே செய்தி சொல்வது போலத்தாம் சொல்லப்படுகின்றன. இதிலும் கவிதை சொல்லலாம் போல இதுவே தமிழுக்குப் புதிதுதான் நவீன கவிதையின் சாதனைதான்.

சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின் / சப்தம் நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
ஊர் ஞாபகம்? பிறந்தவீட்டு நினைவு?
குடித்தனத்தின் சத்தத்தில் கிணற்றின்
முனகல் அமிழ்ந்தே போனது.
ஏதார்த்தத்தையே அழகாகச் சொல்லிவிடுகிறான் கவிஞன்.
இப்போது வெள்ளியோனி தூர்ந்து மந்திர ஜெபங்களை முணுமுணுக்கத் / தொடங்கிவிட்டது.
ஊரின் கிணற்று ராட்டை சப்தம் வேறு
கனவுகளில் வர ஆரம்பித்திருந்தது,

இந்த கவிதைக்கு தான் சரிபோல தெரிந்தேதான், கவிஞன் இப்படிக் கவிதை கூறல்த் தேர்ந்தெடுத்திருப்பான்போல. இதில் அநேகம் சாதகங்கள் முதலில், நிறைய விஷயங்களை நாசூக்காகச் சொல்ல முடிகிறது, பிறகு பட்டுக்கொள்ளாமல் – விட்டேற்றியாக இருக்க முடிகிறது. அதே வேளை வெறும் சொல்லும் அல்ல இது, நூதனமான பின்னல் வேலை உள்ளதும் தான்.

தலைமைச் செயலக அதிகாரியும் / வெள்ளியோனி அம்மாவும் / தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர் / தங்கயோனியை.
உதவி அதிகாரி, அதிகாரியாகிவிட்டார்.
பரிசளிப்பு, வெள்ளியிலிருந்து தங்கமாகியிருக்கிறது.
சிறிதாய் இருந்தபோது
தங்கயோனி பட்டு மென்மையாக
மடிந்தபடி இருந்தது.
ஒரு கண்ணில் கனிவு
மறு கண்ணில் குறும்பு
மலர்கள் பூத்த உள்ளுடைகள்
மேலுடைகள்
மனதின் உருத்தெரியாத
கைகள் போஷித்தன
தங்க யோனியை.
விவரிப்புகள் வழியே ஓர் ஓவியத்தையே வரைந்திருக்கிறான் கவிஞன் கவித்துவ சாத்யங்களுடன்.

இப்போது வெள்ளியோனி பூஜை பீடமாகி விட்டது
தங்கயோனி பருவத்திற்கு வந்துவிட்டது
உடலெங்கும் பரவுகின்றன அதன்
கட்டளைகள்
நிழல்களை பிரதிபலிக்கும் தங்கயோனி
எந்தக் காதலையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை
சிறுநகரத்தில் வெள்ளியோனியின்
நினைவிலிருந்த ராட்டைக் கிணறு
வீட்டின் நடுவில்
பழம்பொருள் அலங்காரமாய் நிற்கிறது
வெள்ளி யோனி மந்திரங்களை ஜெபித்துக்
கொண்டு இருக்கிறது
தங்க யோனி
நகரத்தை தலைக்கழித்தபடி
சாலையில் விரைகிறது.

தேர்ந்த மொழிதல் பெண்மணியின் இருப்புநிலையை, மனநிலையைச் சொல்லி யுவதியின் வாழ்நிலையை, மனப்போக்கை சித்தரித்து – இரண்டையும் மாறி மாறி / அடுத்தடுத்து பூர்த்தியடையும் கவிதை காட்டும் உலகம் நுட்பமானது.

பெரிய விஷயம் நுணுக்கமான உத்தியினால், எளிமையாகச் சொல்வது போலப் படுகிறது. ஆகச் சிறந்த கவிதை ஆகச் சிறந்த கவிஞன்தான் ஷங்கர்.

வெள்ளியோனி – தங்கயோனி என்று உருவகப்படுத்தியிருக்கும் பெண்களின் மனமும் உலகமும் சுருதிசுத்தமாக – லயம்பிசகாமல் -சொல்லப்ட்டிருப்பதாலேயே இது கவனம் கொள்ள வேண்டிய கவிதை ஆகும். ஷங்கரின் மணிபாப்பா கௌரி / கௌரி அம்மாள் கவிதைகள் போலவே இதுவும் பிறர் பற்றிய கவிதைதான். நவீன தமிழ்க் கவிதையில் பிறர் குறித்த கவிதைகள் குறைவு. ஏனெனில். அது எளிதானதில்லை அதனாலயே கௌரவிக்கப் பெறவேண்டியதும் ஆகும்.

இந்த மூன்று கவிதைகளையுமே, ஷங்கர் இருபத்தெட்டு வயதுக்குள்ளாகவே எழுதிவிட்டார் அவரை சீரிய கவிஞன் என்று அங்கீகரிக்கவும், அவர் °தானத்தை உறுதிப் படுத்தவும் இதுவே போதுமானது. பிறகும், இவை தமிழ் வாழ்வை மையமாகக் கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.

நல்ல கவிஞனுக்குத்தான் பொறுப்புகளும் அதிகம்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_1.php





Monday, August 1, 2011

"லெனின் விருது" விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியான குறும்பட / ஆவணப்பட திரையிடல், கலந்துரையாடல் நிகழ்ச்சி

"லெனின் விருது" விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியான குறும்பட / ஆவணப்பட திரையிடல், கலந்துரையாடல் நிகழ்ச்சி


http://thamizhstudio.com/others_article_19.php



"லெனின் விருது" விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியான குறும்பட / ஆவணப்பட திரையிடல், கலந்துரையாடல் நிகழ்ச்சி.

------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வழங்கி வருகிறது. குறும்பட / ஆவணப்படத்துரையில் மிக சிறப்பாக பங்காற்றி வரும் ஒருவருக்கு வழங்கப்படும் இவ்விருது பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும், கேடயமுள் உள்ளடங்கியது. இந்த ஆண்டு இவ்விருது வழங்கும் விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்று:

இதுவரை தமிழில் வெளிவந்த ஐந்து சிறந்த குறும்படங்கள் திரையிடல்:

நாள்: ஆகஸ்ட் 05, வெள்ளிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்

திரையிடப்படும் குறும்படங்கள்:

நிகழ்ச்சி இரண்டு:

குறும்பட / ஆவணப்படங்களுக்கான தேவை / குறும்பட / ஆவணப்பட வரலாறு குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தல்.

ஒரு சிறப்பு அழைப்பாலருடன் ஐந்து குறும்பட இயக்குனர்கள் கலந்துரையாடும் நிகழ்வு.

சிறப்பு அழைப்பாளர்: சீனு ராமசாமி (திரைப்பட இயக்குனர்)

அறிவழகன் (குறும்பட இயக்குனர்)
சுப்புராஜ் (குறும்பட இயக்குனர்)
பொன்ராஜ் (குறும்பட இயக்குனர்)
ஸ்ரீகணேஷ் (குறும்பட இயக்குனர்)
ஜெயராவ் (நிறுவனர், தியேட்டர் லேப்)

நாள்: ஆகஸ்ட் 07, சனிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்

நிகழ்ச்சி மூன்று:

தமிழ் குறும்பட / ஆவணப்பட வரலாறு, அழகியல், அரசியல், அதன் வளர்ச்சி குறித்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி.

பங்கேற்பு:

கைலாசம் பாலச்சந்தர்
அஜயன் பாலா
பிரசன்னா ராமசாமி
ம. சிவக்குமார்
ஆர். ஆர். சீனிவாசன்
வெளி ரங்கராஜன்
குட்டி ரேவதி
கோவி. லெனின்
அமுதன்
ரமணி
சோமித்ரன்
நிழல் திருநாவுக்கரசு
நுங்கு கங்கைக் குமார்
இன்னும் பலர்..

நாள்: ஆகஸ்ட் 08, ஞாயிற்றுக் கிழமை
இடம்: ஜீவன் ஜோதி அரங்கம், எக்மோர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


http://thamizhstudio.com/others_article_19.php




அனைவரும் வருக..