அகிலன்
'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார். சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டிய தாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக்கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியன்றும் அப்போது வசதியான குடும்பமாக இருக்கவில்லை. மேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரதியிடமும் இவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பள்ளியில் மாணவனாக இருக்கும்போதே கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி காலாண்டு பத்திரிகை ஒன்றில் 'அவன் ஏழை' என்கிற தலைப்பில் இவர் எழுதிய கதைதான் இவரது முதல் படைப்பு. இந்நிலையில் இவரது தகப்பனாரின் மரணம், இவரை பள்ளி இறுதி வகுப்புக்கு மேல், கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிக்கவில்லை. தாயாரையும், தங்கையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்ததால் படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டார். அவரது சொந்த ஊரான பெருங்களுர் கிராமத்திலேயே முதன்முதலில் ஒரு வேலை கிடைத்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் வேலை. இதே வேலையை பின்பு புதுக்கோட்டை பொன்னமராவதி, கீரனூர் போன்ற ஊர்களிலும் தற்காலிகமாகச் சில காலம் பார்க்கவேண்டியதாயிற்று. இவர் எழுதி அச்சில் வெளிவந்த முதல் சிறு கதை 'சரஸியின்ஜாதகம்' 'கல்கி' பத்திரிகை வெளியிட்டது. இவருக்கு 1944 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ரயில்வே சார்டர் வேலை. திருநெல்வேலியில் ஆர்.எம்.எஸ்.பிரிவில் பயிற்சி தொடங்கியது. பிறகு தென்காசிக்கு மாற்றலாகி வந்தார். இவர் எழுதிய முதல் நாவலான 'இன்பநினைவு' முதலில் 'மங்கிய நிலவு' என்ற பெயரில் 1944ல் வெளியிடப்பட்டது. இதுவே சில மாற்றங்களுடன் 1949ல் 'இன்ப நினைவு' என்கிற பெயரில் வெளி வந்தது. இவரது 'காசுமரம்' என்கிற சிறு கதையை 'கலைமகள்' பத்திரிகை வெளியிட்டது. தொடர்ந்து பல சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்தன. 1945ல் 'கலைமகள்' பத்திரிகை, நாவல் போட்டி ஒன்றை அறிவித்தார்கள். நாராயண சாமி அய்யர் நினைவு நாவல் போட்டி என்று பெயர். முதல் போட்டியிலேயே இவரது 'பெண்' என்கிற நாவல் முதல் பரிசைப் பெற்றது. இந்நாவல் சில காலங்களுக்குப் பிறகு சரஸ்வதி ராம் நாத் மொழி பெயர்ப்பில் இந்தியில் வெளி வந்தது. இதே நாவல் கன்னடம், மலையாளம், வங்காளி போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 'கலைமகள்' ஆசிரியர் கி.வா. ஜகன்நாதனின் ஆதரவு இவரது எழுத்திற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இவரது பெரும்பாலான படைப்புகள் 'கலைமகள்' பத்திரிகையில்தான் பிரசுரம் கண்டது. தென்காசியில் சுமார் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபின் அகிலன் திருநெல்வேலிக்கும் பிறகு திருச்சிக்கும் மாற்றலாகி வந்தார். திருச்சி வானொலியில் வேலை பார்த்து வந்த எழுத்தாளர் சுகி சுப்ரமணியம் மற்றும் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்றோரின் நட்பும் தொடர்பும் அங்கு திருச்சி எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தது. இவர்களோடு 'காதல்' என்கிற பத்திரிகையை நடத்தி வந்த அரு.ராமநாதன் அவர்களின் நட்பும் கிடைத்தது. அரு. ராமநாதனும் பிரபலமான பல சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். திருச்சியில் சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆர்.எம்.எஸ்.ஸில் வேலை பார்த்த அகிலன் 1958ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தார். இவரது 'பாவை விளக்கு' என்னும் புதினம் அப்போது 'கல்கி'யில் தொடராக வெளிவந்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. திரைப்பட இயக்குனர் கே. சோமு இவரது நண்பர். இவர் மூலமாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான ஏ.பி. நாகராஜனின் தொடர்பும், நட்பும் கிடைத்தது. ஏ.பி.நாகராஜனுக்கு 'பாவை விளக்கு' நாவல் பிடித்திருந்தது. எனவே இவரது யூனிட்டைச் சேர்ந்த கோபண்ணா, விஜயரங்கம் ஆகியோர் தயாரிக்க கே. சோமு இயக்கத்தில் 'பாவை விளக்கு' திரைப்படம் உருவாக ஆரம்பித்தது. தமிழ் வெகுஜன வாசகர்களிடையே இந்த நாவல் மாபெரும் வெற்றியடைந்திருந்ததால், தமிழ் திரைப்பட ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தார்கள். சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய், எம்.என். ராஜம், போன்ற தேர்ந்த நடிகர்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. சில பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, 'காவியமா இல்லை ஓவியமா?' என்கிற பாடலும், 'வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்எதிரே வந்தாள்' என்கிற பாடலும் மிகவும் பிரபலமாயிற்று. இதே நேரத்தில் இவரது 'வாழ்வு எங்கே? என்கிற நாவலைப் படமாக்கும் உரிமையை ஸ்பைடர் பிலிம்ஸ் கம்பெனி பெற்று படப்பிடிப்பைத் தொடங்கினர். பல்வேறு காரணங்களில் திரைப்பட வேலைகள் இழுத்துக் கொண்டே போய் கடைசியில் 1963ல் 'குலமகள் ராதை' என்கிற பெயரில் வெளிவந்த இப்படமும், சிவாஜி, தேவிகா நடித்திருந்தும் சொல்லும்படியான வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில் 1962ல் 'பட்டினத்தார்' என்றொரு படம் வெளி வந்தது. பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் பட்டினத்தாராக நடித்திருந்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தஞ்சை ராமய்யாதாசுடன் இணைந்து அகிலன் கவனித்துக் கொண்டார். திரைப்படத்தை நிரந்தரமானதல்ல என்பதை அறிந்து வைத்திருந்த அகிலன் மறுபடியும் நிரந்தரமான ஒரு வேலைக்குப் போவது என முடிவெடுத்தார். திரு கி.வா. ஜகன்னாதனின் நட்பு இவருக்குப் பேருதவியாக இருந்தது. கி.வா.ஜ.வின் சிபாரிசில் சென்னை வானொலி நிலையத்தில் சொற்பொழிவுத் துறையில் அமைப்பாளராகச் சேர்ந்து பின் முதன்மை அமைப்பாளராகவும் உயர்வு பெற்று ஓய்வு பெறுவது வரையிலும் பணியாற்றினார். 1966ல் வானொலியில் வேலை கிடைப்பது வரை திரைப்படத்துறையிலிருந்து சற்று விலகி, 'கல்கி', இதழுக்கு ஒரு சரித்திர நாவல் எழுத முற்பட்டு 'வேங்கையின் மைந்தன்' என்கிற சரித்திர நாவலைத் தொடராக எழுதினார். இந்நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்நாவலுக்காக அகிலனுக்கு 'சாகித்திய அகாடமி' விருதும் வழங்கப்பட்டது. அகிலனின் மற்றுமொரு நாவல் 'சித்திரப்பாவை' இது ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது. இந்நூலுக்காக 'ஞானபீட பரிசு' இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்களில் முதன் முதலாக 'ஞான பீட பரிசு பெற்ற எழுத்தாளர் அகிலன். இவரது 'கயல்விழி' என்கிற நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது. இப்புதினத்தை எம்.ஜி.ஆர் நடித்து இயக்க, 1978ல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்கிற பெயரில் திரைப்படமாக வெளி வந்து மாபெரும் தோல்வியை சந்தித்தது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே அதிகத் தோல்வி கண்ட படமாக இப்படம் பரவலாகப் பேசப்பட்டது. எழுத்தாளராக வாசகர்களைக் கவர்ந்த அளவு இவரது கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படைப்புக்கள் வெற்றி பெறாமல் போயிற்று. தமிழ் நாட்டிலேயே எழுத்துத்துறையில் மிக அதிக எண்ணிக்கையில் விருதுகளை (7 விருதுகள்) தட்டிச் சென்றவர் அகிலன். 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி வெகுஜன வாசகர்களைக் கவர்ந்ததைப் போலவே, 'கல்கி'யின் தொடர்ச்சியாக வெகுஜன வாசகர்களைக் கவர்ந்தவர் அகிலன். 'ஞான பீட' பரிசு கிடைத்தபோது பாராட்டுதல்களும், எதிர்ப்புகளும் குறைவின்றி பதிவு செய்யப்பட்டன. தீவிர இலக்கியவாசர்களும் தீவிர எழுத்தாளர்களும் அகிலனை கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை. அகிலன் நாவல்களும், சிறுகதைகளும் ஏராளமாக எழுதியிருக்கிறார். இவரது 200 கதைகள் அடங்கிய தொகுப்பை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆயிரத்து நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ.1000/-தான். அதிசயமாக இவரது நாவல்கள் பலவும் இப்போது நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. இவர் தனது 66வது வயதில் 1988 ஆம் வருடம் காலமானார். தொடரும் ... | |||
Saturday, October 30, 2010
அகிலன்
Friday, October 29, 2010
அசோகமித்திரன் பங்கேற்ற கேணி இலக்கிய நிகழ்வு (நன்றி: ஞாநி & பாஸ்கர் சக்தி) - பகுதி - 1
Wednesday, October 27, 2010
துலால் டட்டா திட்டம் (படத்தொகுப்பு உதவி) (Dulal Dutta Scheme)
துலால் டட்டா திட்டம் (படத்தொகுப்பு உதவி) (Dulal Dutta Scheme) | ||
தமிழ் ஸ்டுடியோ.காம் முன்னரே படமெடுக்கலாம் வாங்க என்கிற திட்டத்தின் கீழ் காமெரா, மற்றும் படத்தொகுப்பை இலவசமாக வழங்கி வருவது நீங்கள் அறிந்த ஒன்றே. தற்போது குறும்பட படைப்பாளிகளின் சுமையை குறைக்கும் பொருட்டு மேலும் ஒரு உதவியாக குறும்படங்களுக்கு இலவசப் படத்தொகுப்பை(துலால் டட்டா திட்டத்தின் கீழ்) (Dulal Dutta Scheme) செய்துக் கொடுக்க விருக்கிறது. இதற்காக இரண்டு யூனிட்டுகள் அமைத்து தமிழ் ஸ்டுடியோ.காம் செயல்படுகிறது.
யூனிட் ஒன்று: யூனிட் இரண்டு: இத்திட்டத்திற்கான விதிமுறைகள்: * குறும்படங்கள் அதிக பட்சம் 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (படத்தொகுப்பு செய்து முடித்தப் பின்னர்). |
Tuesday, October 26, 2010
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய ஒன்பதாவது பௌர்ணமி இரவு
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய ஒன்பதாவது பௌர்ணமி இரவு http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_9.php | ||
| ||
”தமிழ் ஸ்டூடியோ.காம்” மாற்று ஊடகத்திற்கு களமாய் திகழும் இவர்கள் மேற்கூரிய நம் புலம்பல்களுக்கு தடா போடும் வகையில் உருவாக்கியிருப்பதுதான் “பெளர்ணமி இரவு”.. கோட்டைக்கு வடிகாலாம் கோடம்பாக்கத்தில், அவர்தம் அலுவலக மாடியில் புல்வெளியோடு, மூலிகை செடிகளும் நம்மை சூழ்ந்திருக்க, நிலவு மங்கையின் ஒளிக்கீற்று மட்டுமே மாடியை நிறைத்திருக்க, மெகா ஸ்கிரீனில் திரைப்படங்கள்.. அதுவும் டிஷ்யூம் டுமீல் ரகம் அல்ல, அழுவாச்சி சிரிப்பாச்சி வகையறாவும் அல்ல, இரண்டு படங்களுமே, நம் மனதை மயிலிறகாய் வருடும் இதமான இளையராஜா மெலோடி போன்றவைத்தான். மாடியின் அட்மாஸ்ஃபியரே நம்மை ஆட்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பெளர்ணமி இரவின் வணக்கங்களோடும், விளக்கங்களோடும் அருண் நிகழ்ச்சியைத் தொடங்க, முதலில் திரையிடப்பட்டது ”பயணம்”- எனும் தமிழ் குறும்படம். மூன்று விருதுகளோடு வாகை சூடி வந்திருந்தது அத்திரைப்படம். படத்தின் கர்த்தாவான இயக்குனர் சுப்புராஜும் நம்மோடு படத்தை பார்த்தார். வட மாநிலத்திலிருந்து நான்கு பிள்ளைகளால் துறத்தியடிக்கப்பட்ட ஒரு தந்தையின் மும்பை முதல் கன்னியாக்குமரி வரையிலான ஒரு பயணத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தார். 15 நிமிட படத்தின் ஒளிபரப்பு முடிந்த கையோடு இயக்குனரோடு ஒரு கலந்தாய்வு அவ்விரவை இன்னும் விறுவிறுப்பாக்கியது. ஏன்? எதற்கு? ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? என்று கேள்விகள் அனைத்திற்கும் நிறைவாய், சமாளிப்பாய் பதில் சொல்லி அசத்தினார் இயக்குனர். மேலும் “என்னுடைய தந்தை ஒரு பேங்க் ஆபிஸர். அவரது நீண்ட நாள் கனவான சினிமாவை வைத்து அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க நினைத்தோம். நானும் என் சகோதரர்களும், அதற்காகவே இந்தத் திரைப்படத்தை தந்தை எனும் கருவில் எடுத்து முடித்தோம்” என்று பெருமிதத்தோடு சொன்ன இயக்குனரின் தந்தை பாசத்திற்கு கை கொட்டுகள் ஏராளமாய் விழுந்தன. ஒரு சிறிய இடைவேளை. தொடர்ந்தது இரானிய இயக்குனர் மஸ்ஜித்மஸ்ஜிதி இயக்கத்தில் “தி கலர் ஆஃப் பேரடைஸ்” எனும் உலக சினிமா. ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் ஒரு கண் பார்வையால் சவால்விடப்பட்ட சிறுவனின் கதையை உருக்கமாய் சொல்லியிருந்தார் இயக்குனர். படத்தில் நிறங்கள் பேசின, அசைவுகள் பேசின, ஒளிப்பதிவு ஒரு புறம் பேச, ஒலிச் சேர்ப்பு மறுபுறம் பேசின, காட்சியும், கருமமும்கூட பேசின, உண்மையில் இயக்குனர் பேச நினைத்ததையெல்லாம் பேசாமல் பேசின ஒண்றரை மணி நேர செல்லுலாய்டுப் பதிவுகள். ஒரு உண்மையான பேசும் படத்தைப் பார்த்து முடித்தக் கையோடு, பேசத் தொடங்கினோம் பேச்சில் வல்லுநர்களாகிய நாம். படத்தைப் பற்றிய பல்முனைக் கருத்துக்கள், பார்வைகள், தாக்கல்கள், தூக்கல்கள் என்று படம் பார்த்ததைவிட சிறந்ததொரு அனுபவத்தை அந்த அலசல் தந்தது எனலாம். இரவு மணி 1… இனிய இரவின் காட்சிப் பகுதி நிறைவுக்கு வரவே நன்றிகளோடு அடுத்தடுத்த பெளர்ணமி இரவுக்கான வரவேற்பையும் பகிர்ந்துகொண்டார் அருண். மொட்டை மாடி, நிலா வெளிச்சம், அரட்டை இல்லாமலா? இரவு தங்குபவர்கள் தங்கலாம் என்னும் அறிவிப்பு நம்மைக் குஷிபடுத்த நம்மைப்போலவே தங்குவதற்குத் தயாரானார்கள் பலரும். ஒத்த ரசிப்புத் திறன் கொண்ட இத்தனை பேரை பார்ப்பதே அரிதான இக்காலத்தில் அவர்களோடு நட்பு பாராட்டவும் வழி கிடைத்தால்? டபுள் தமாக்கா ஆஃபர் தந்த தமிழ் ஸ்டூடியோவிற்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லி வணக்கம் போட்டோம் எங்கள் அரட்டைக்கு. எது நல்ல சினிமா? மாற்று ஊடகம் என்றால் என்ன? என்று தொடங்கி டிவி, மீடியா, நாடு, நிலைமை, இணையம், பதிவுலகம், பஞ்சுமிட்டாய் என அத்தனைக்குள்ளும் சென்று வந்த விவாதங்களுக்கு எண்ட் கார்ட் போட்ட நேரம் என்ன தெரியுமா? அதிகாலை 6.30…. சிந்தனை டேங்க் ஓவர்ஃபிளோ ஆகத் தொடங்கியதாலும் மறுநாள் பணிகள் பணித்ததாலும் வலுக்கட்டாயமாக ஒரு டீ குடித்து பிரிவு சோகத்தை ஆற்றி விடைபெற்றோம். இப்படி ஒரு இனிமையான, இதமான, இன்ஃபர்மேட்டிவான இரவு இதுவரை நான் பெற்றதில்லை. பெறச்செய்த தமிழ் ஸ்டூடியோவிற்கு நன்றிகள். இவ்ளோ பெரிய பதிவா? என்று என்னை ஏகவசனத்தில் திட்டிக்கொண்டிருப்பீர்களேயானால், அடுத்த பெளர்ணமி இரவிற்கு வந்து பாருங்கள். நான் பதிய மறந்த விஷயங்கள் எத்தனை இருக்குமென்று தெரியவரும். “பெளர்ணமி இரவு… எதிர்பார்க்கிறது வாழ்வின் ரசனையாளர்களது வரவு….” http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_9.php |
Monday, October 25, 2010
நாளைக்கு மழை பெய்யும் -குறும்பட விமர்சனம்
நாளைக்கு மழை பெய்யும் -குறும்பட விமர்சனம் | ||
| ||
| ||
தமிழ் குறும்படச் சூழலில் பெரும்பாலான படங்கள் சென்னை, சென்னை பிரச்சினைகளைச் சுற்றியும் இளைஞர் பிரச்சினைகளை மையமிட்டும் எடுக்கப்படுகின்றன. கிராமத்துக்குச் செல்லும் படங்களும்கூட ஏற்கெனவே பேசப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றை கவனப்படுத்துவதுடன் நின்றுவிடுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் - மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது அ. வேல்மணி இயக்கியுள்ள "நாளைக்கு மழை பெய்யும்". இப்பகுதியிலுள்ள பெரும்பாலோர் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இவர்கள் சம்சாரி என்றழைக்கப்படுகிறார்கள். திடீரென தந்தை இறந்துவிட்ட சூழ்நிலையில், சிறிதளவு நிலம் வைத்திருக்கும் ஒரு இளம் சம்சாரியின் வாழ்க்கையை பின்தொடர்கிறது இந்தப் படம். பள்ளி செல்லும் வயதைத் தொடாத மகள், இளம் மனைவியுடன் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க முயற்சிக்கிறார் அந்த இளைஞர். ஒரு நண்பரின் உதவியுடன் பக்கத்து நகரத்தில் இருக்கும் மலர் சந்தையில் மண்டி நடத்தும் ஒருவரிடம் கடன் வாங்கி ரோஜா பயிரிட ஆரம்பிக்கிறார். பக்கத்து தோட்டத்துக்காரரிடம் மோட்டார் இரவல் கேட்டு ரோஜாக்கள் வாடாமல் பார்த்துக் கொள்வது முதல், அரசியல் விழாவுக்காக அதிகாலைக் குளிரில் மண்ணெண்ணெய் விளக்கில் மலர்களை மேலும் படிக்க: http://thamizhstudio.com/shortfilm_review_12.php |
Monday, October 18, 2010
ஆவணங்கள் - பிலிம் நியூஸ் ஆனந்தன்
ஆவணங்கள் - பிலிம் நியூஸ் ஆனந்தன் |
வணக்கம் வாசகர்களே, தமிழ் ஸ்டுடியோ.காமின் குறும்பட ஆவணப்பட பயணத்தில் மேலுமொரு பணியாக, தமிழ் நாட்டில் ஆவணப்படுத்தப்படாமல் விடப்பட்ட பல வரலாற்று சின்னங்கள், திரைப்பட ஆளுமைகள், கலையுலகில் யாராலும் கவனிக்கப்படாமல் விடப்பட்டவர்கள், என வரலாறு, திரைக்கலைஞர்கள் சார்ந்த ஆவணக்காப்பகமாக இந்தப் பகுதி தன்னுடைய செயல்பாட்டை தொடங்குகிறது. இது மிகப் பெரிய பணி என்பதால் இதில் ஆர்வலர்களும், வாசகர்களும் தங்களை இணைத்துக் கொண்டு எங்களுக்கு உதவ வேண்டுகிறோம். உங்கள் ஊரில் வரலாறு சார்ந்த பகுதிகள், சின்னங்கள், அல்லது திரைத் துறை சார்ந்த கலைஞர்கள் போன்றவர்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்பலாம். மேலும் இந்த ஆவணப்பட இயக்கத்தில் ஆர்வலர்களும், வாசகர்களும் களப் பணியாற்றவும் வரவேற்கப்படுகிறார்கள். இயக்கம், ஒளிப்பதிவு, கலைஞர்களை சந்தித்தல் போன்ற பல்வேறுப் பணிகளுக்கு நீங்கள் எங்களுடன் சேர்ந்து களப் பணியாற்றலாம். இத்திட்டத்தின் முதல் கலைஞராக திரு. பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இதில் நீங்களும் களப்பணியாற்ற விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு: 9840698236, 9894422268 |
Friday, October 15, 2010
25-வது குறும்பட வட்டம்
Monday, October 4, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்) | ||
| ||
கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் வனப்பு மாறாத, குறையாத இளம் பெண் போல தன் அழகை பராமரித்து வைத்திருக்கும். யார் கண் பட்டதோ அதன் வனப்பு தொலைந்துக் கொண்டே வருகிறது. கல்பாக்கத்திற்கு முன் வழியில் இரண்டு புறமும் மிகப் பிரமாண்டமான இடத்தில் முட்செடிகளும், மரங்களும் வளர்ந்துக் கொண்டு வரும் வேளையில் அங்கே ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருந்த பாலாறு காணாமல் போனதுப் பற்றியோ, அது மீண்டும் வராததுப் பற்றியோ அரசும், மக்களும் கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால் பாலாற்றை தூக்கி வளர்த்த அதன் காலடிச் சுவடுகளை தன் மார்புக்குள் வாங்கிக் கொண்ட அந்த மணல் பிரதேசம் இன்னமும் பாலாற்றின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே கிடக்கும் குழிகளும், மேடுகளும் கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைக் குழந்தைப் போல் காட்சியளிக்கிறது. வருத்தப் பட்டு பாரம் சுமப்பதை விட வேறென்ன செய்து விட முடியும். என்ன செயல் செய்தாலும், என்ன தொழில் செய்தாலும், எல்லோருடைய முதல் இலக்கும் குழந்தைகளைக் கவருவதாகத்தான் இருக்கும். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தப் பகுதி குழந்தைகளுடன் ஒன்றர கலக்க அவர்களுக்கு சில விளையாட்டுகள் வைத்து பரிசுகள் கொடுக்க கலையரசன் முடிவு செய்தார். அவர் ஏற்கனவே என். ஜி. ஒ வில் பணிபுரிந்ததால் அந்த அனுபவம் அவருக்கு கைகொடுத்திருக்கலாம். சிறப்பாக செய்தார். குழந்தைகள் பாடினர், ஆடினார், கதைகள் சொன்னார்கள். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமையை பின்னர்தான் கவனிக்க முடிந்தது. அவர்கள் பாடியது, ஆடியது, சொன்னது எல்லாமும் கிறித்தவம் சார்ந்த அல்லது தழுவியவை மட்டுமே. 98% மேலாக கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்ட குடும்பங்கள் என பின்னர் கேள்விப் பட்டேன். மோனிஷா எனும் சிறுமி மிக நேர்த்தியாக பாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படிக்க : http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_3.php |
Friday, October 1, 2010
கொஞ்சம் தேநீர்... நிறைய அரட்டை... - கி. ராஜநாராயணன்
சா.ரு. மணிவில்லன் |
தமிழ் ஸ்டுடியோ.காம் அங்கமான கூடு இணைய இதழின் கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நடத்துவது என முடிவானது. அதன் படி முதல் சந்திப்பு கரிசல் காட்டுத் தந்தை கி.ரா.வுடன் என முடிவாயிற்று. புதுவையில் வசிக்கும் கி.ரா.வுடன் சந்திப்புக்கு சுமார் 65 ஆர்வலர்கள் பதிவு செய்தனர் அவர்களில் சுமார் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இறுதியில் ஆறு ஆர்வலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். ஆர்வலர்களுக்கு முதலில் இருந்த ஆர்வம் இறுதியில் இல்லாமல் போனது வருத்தப்பட கூடிய நிகழ்வாகும். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 25.9.10 காலை 9 மணிக்கு புறப்படுவது என ஆர்வலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. சரியான நேரத்திற்கு மூன்று பேர்களும், அரைமணி நேர தாமதத்தில் இரண்டு நபர்களும் ஒரு மணி நேர தாமத்தில் மற்றொரு நபரும் என ஒன்று சேர்ந்தோம்.