Wednesday, March 23, 2011

வெட்கத்திலான காதல் - அய்யப்ப மாதவன்


வெட்கத்திலான காதல்

அய்யப்ப மாதவன்

மல்லிகை சரத்தினைச் சூடிக்கொள்ளும் காட்சியிலிருந்து
முறிந்திருந்த அவள் காதலை மீட்கிறேன்
வெட்கத்தில் அலர்ந்தவளிடம் என் முழு உடலை
அன்பளிப்பாக்க முடிவுசெய்கிறேன்
ஈரச்சேலையுடன் மேலாடை அணியாமல்
குளியலறையிலிருந்து என்னைக் கடந்து செல்கிறாள்
நீள்கிற கற்பனையில் அடங்க மறுத்த உடலை
குளிர்விக்கப் பார்க்கிறேன்
மென்மேலும் அரைநிர்வாணத்தினழகில் கடக்கும் அவளின்
நினைவில் அவள் மீதான பற்றில் இறுகுகிறேன்
என் முன் குவியும் உதடுகளால்
சொர்க்கத்தின் அதீத சுகத்தை வழங்குகிறாள்
விதி பூட்டிய இரும்புச் சங்கிலியில்
ஒரு பைத்தியமென அவளற்ற அறையில்
வேறொரு பெண்ணுடன் பிதற்றுகிறேன்
விரும்பிய போதையோ பெண்ணோ கிடைக்காத
அபாக்யத்தில் காலம் நரைத்துக்கொண்டிருக்கிறது
புனைவு செய்கிற ஆற்றலில்லாத மனிதனாயிருந்திருந்தால்
எப்போதோ நான் தற்கொலை செய்திருக்கக்கூடும்
கசப்பேறிய வாழ்வைக் கடக்க என் புனைவுருவாக்கத்தில்
என் காதலியுடனான பழைய ஞாபகங்களை மீட்டு
ஆயுளை நீட்டித்துக்கொள்கிறேன்
இக்கணம் அவளின் கன்னங்களில்
என்னை எழுதுகிறேன்
அவள் உடலை காகிதங்களாக்கி எண்ணற்ற
கற்பனைகளை வரையுறுமாறு பணிக்கிறாள்
அக்கூடாரத்தினிடையே கலவியின் கூக்குரல்
என் பித்தேறிய காதலின் சாட்சியாகிறது
நான் பகலினூடே அகத்தில்
புரண்டோடும் நதிபோல அவளைச் சுமந்து
நகரினூடே அன்றாட வலியுடன் கரைகிறேன்
அவளின் நாணத்துடனான சிரிப்பு
என்னை உயிர்ப்பித்தவாறு தினமுமிருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------

சுடுநீர் பச்சை நீர்

தாமதமாய்ப் பிடிக்கும் நித்திரையில்
அழுத்தி நசுக்கும் வாழ்வின் இடர்கள்
கனவுகளாகும் சமயம் அரண்டு எழுந்திருக்கிறாள்
வழக்கமாய் விரைந்தோடும் குருதியினுள் ஓடி
அலுவலகத்தைச் சபித்துக்கொண்டு
பேருந்தில் ஒடுங்கி மறைகிறாள்
எனக்காய் இரவின் மீந்தவற்றை
காலை மதியம் உணவாக்கிக் கொள்ளுமாறு
கேட்டுச் சென்றிருந்தாள்
நளபாகனாயில்லாத நான் அவளுக்காய் தினமும்
காப்பிமட்டும் போட்டுத்தந்துகொண்டிருக்கிறேன்
அப்புறம் பாத்திரங்களைக் கழுவித் தந்துக்கொண்டிருக்கிறேன்
நீர் அடித்துக்கொடுப்பேன்
குளியலுக்கான சுடுநீர் பாத்திரத்தை
பச்சைநீரோடு கலந்துகொடுக்கிறேன்
நேரம் ஆக ஆக என் ஒப்பேறாத வாழ்வினைக் குடைய
நான் அவளுக்கு அளித்த சுடுநீர் பாத்திரம்போலாவேன்
நாழிகைக்கு பின் அப்பாத்திரம்போல் குளிர்ந்துதான் போவேன்
பலசரக்கு வாங்கி வைக்க பட்டியல் தந்திருப்பாள்
அவளுக்கான விஸ்பரையும்
காகிதம் சுற்றி வாங்கிக்கொள்வேன்
மீதமாகும் காசுகளைக் கொடுத்து
நாணயஸ்தன் என்ற பெயர் எடுத்துவிட்டேன்
மாலைப்பொழுதின் வரவில் இரவின் குளிர்ச்சியுடன்
அலுவலகம் முடித்த திருப்தியுடன் வருவாள்
பால் காய்ச்சி சுடச்சுட காப்பி தருவேன்
காப்பிக்கிடையே அவளின் அலுவலகத்தின் வேதனைகளை
என் கபாலத்தினுள் அள்ளி எறிவாள்

more: http://koodu.thamizhstudio.com/ep_kavithaigal_3.php



No comments:

Post a Comment