Sunday, March 27, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (20)



வெங்கட் சுவாமிநாதன்

மீண்டும் நான் சொல்ல விரும்புகிறேன். மிஷ்கினை மாத்திரம் பலியாடாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. இதைவிட மகா பாமரத்தனமான, அசிங்கமுமான சமாசாரங்களையெல்லாம் திணித்து சந்தைப் பொருளாக்கி அதே சமயம் ஏதோ தான் பெரிதாக ஒரு சாதனை செய்துவிட்டதாக மயக்கத்தில் மிதந்து கொண்டிருக்கும் அனேகர், - (இவர்கள் தான் நம் திரைப்படத் துறையில் நிறைந்திருக்கின்றனர், இவர்கள் தான் பட்டங்களும் விருதுகளும் பெற்று கொள்ளையாகச் சம்பாதித்து சமூகத்தில் பெரிய மனிதர்களாகின்றனர். அதிகார பீடங்கள் முன்னிலையில் இவர்கள் குழைவும் பல்லிளிப்பும் மகா கோரமானவை. அசிங்கமானவை. தமிழ்நாட்டின் நாகரீகத்தையும் பண்பாட்டையும் சீர்குலைத்தவை. எந்த அதிகார பீடங்களுக்கு முன் குழைகிறார்களோ அவர்களாலேயே “வெறும் காக்காக் கூட்டம்” என்று இழிந்து நகையாடப்பட்டவர்கள். இந்த காக்காக் கூட்டத்தை தேர்தலின் போது தமக்கு பிரசாரம் செய்ய வேண்டுபவர்கள். இந்தக் காக்காக் கூட்டமும் யார் அதிகாரத்திலிருக்கிறார்களோ அவர்கள் கட்டளைக்கு வளையும்.

இந்த விஷ வட்டத்திலிருந்து வெளியே ஒருவர் செயல் படுவது என்பது எழுபது வருட காலமாக நாம் வளர்த்து செழித்து இருக்கும் நிலையில் சாத்தியமில்லை. ஏனெனில் இந்த செயல் பாடுகளுக்கு ஒரே அளவு கோல் இன்னும் அதிக வருமானம், இன்னும் அதிக மக்களை எட்டுதல். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வருமானத்தையும் மக்கள் தொகையையும் வேண்டுகிறோமே அவ்வளவுக்கு நாம் தாழ்ந்து தான் போக வேண்டும். அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை ஏனெனில் எவ்வளவு தாழ்ந்தாலும் அது வெற்றிப் படமாகிவிட்டால், அதோடு சமூக அந்தஸ்து, பணம், புகழ், அதிகார மையங்களின் நெருக்கம் எல்லாம் கிட்டி விடுகின்றன.

பாலசந்தரும், கமலஹாஸனும் தான் என்னவோ உலகத்தரமான படங்களைப் பார்ப்பதாகவும் தமிழ்த் திரைப்பட உலகில் இவர்கள் பெரிய மாற்றங்களையும், புரட்சியையும் சாதித்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டாலும் அதை இந்த தமிழ் சமூகமும் அங்கீகரித்து விட்டாலும், அவர்கள் தமிழ் சினிமாவை சினிமாவாக மாற்றிவிடவில்லை. இன்னமும் அவர்களுக்கு அது சந்தைப் பொருள் தான். சந்தைக்கேற்ப தயாரிக்கும், தயாரிக்கப் படும் பொருள் தான். சந்தைக்காகத் தயாரிப்பது வேறு. தான் நினைத்ததைத் தயாரித்து அதைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வேறு. இது வார்த்தைகளில் விளையாடும் சமாசாரமில்லை. இரண்டும் வேறு வேறு குணத்தவை. வேறு வேறு உலகைச் சார்ந்தவை.

இதைப் புரியவைப்பது கடினம். அவரவர்களாக தாமே புரிந்து கொண்டால் தான் உண்டு. நிஜமும் பாவனைகளும் ஒன்றே போலத் தான் தோன்றும். சார்ஜ் உள்ள பாட்டரியும் சார்ஜ் தீர்ந்த பாட்டரியும் ஒன்று மாதிரித்தானே இருக்கும். ஒன்றில் உயிர் இருக்கும். மற்றது அதை இழந்தது. கவிதையும் அப்படித்தான். கவிதை போலவே இருக்கும் செய்யுளும். ஒன்று உணர்வுள்ளது. மற்றது வார்த்தைகளின் கூட்டம். பொய்யான சிரிப்புக்கும் ஆத்மார்த்தமாக மனம் மலர்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை நிரூபிக்க இயலாது. எல்லாம் ஒன்றே போல இருக்கும். சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்த போதே ஒரு அசிங்கமான, வார்த்தை வாந்தி பேதியுடன் தான் வந்தார். அதற்கேற்ற முக பாவங்களுடன். அது கலையல்ல. ஆபாசம் என்பது இன்று வரை புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் தோன்றுகிறது. அதன் ஆட்சி இரண்டு தலைமுறைக்கு நீண்டு விட்டது. அந்த வார்த்தை வாந்தி பேதியும் அதோடு வந்த இது பேதி தான் என்று சொல்லும் முக பவனையும் லட்சியமாயிற்று. சிகரமாயிற்று. அவர் திலகமும் ஆனார். இன்று அந்த புள்ளியிலிருந்து தள்ளி நகர்ந்து வந்துவிட்டாலும், அந்த திலகத்துக்கு ஆராதனையும் அபிஷேகங்களும் நிற்கவில்லை. இது சொல்வது என்ன? சிவாஜி மறைந்து விட்டாலும் அவரைப் பிரநிதிதத்துவப்படுத்திய உலகம் மாறவேயில்லை. அதெல்லாம் பிதற்றல் என்று சொல்லும் ஒரு ஜீவனை இன்றைய சினிமா உலகத்தில் காணமுடியாது. அந்த பீடத்திற்கு மலர் மாலை சார்த்துவது தொடர்கிறது.

இந்த ஒரு அசிங்கம், ஒரு பிதற்றலைப் பற்றியது இல்லை. வெவ்வேறு வித பிதற்றல்கள், அசிங்கங்கள் காலத்துக்கேற்ப சந்தையின் தேவைகளுக்கேற்ப கண்டுபிடிக்கப்பட்டு அவையே விதிகளாகின்றன. அன்று சிவாஜி டான்ஸ் ஆட வைகை அணையோ உதகையோ போதுமானதாக இருந்தது. இன்று மச்சுபிச்சுவுக்குப் போகவேண்டியிருக்கிறது. சில விதிகள் மீறப் படாதவை. சினிமாவுக்காக கதைகள் தயாரிக்கப்படுகின்றன. கதைகளில் மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. மிஷ்கினையே எடுத்துக் கொள்ளலாம். அவரது யுத்தம் செய் ஒரு தயாரிப்பு கதை. சொந்தமாகத் தயாரித்தாரா, இல்லை கோகோ கோலா, பெப்சி போல வெளிநாட்டு லைசன்ஸ் வாங்கி உள்ளூர் தண்ணி சேர்த்து தயாரிக்கப்பட்டதா என்று தெரியாது. அதில் வரும் எத்தனை திருப்பங்கள், எத்தனை வன்முறைக்காகக் கற்பிக்கப்பட்ட சம்பவங்கள், எந்த திருப்பத்தையாவது, எந்த பாத்திரத்தையாவது நாம் ஒரு தர்க்க ரீதியில் சிந்திக்க முடிகிறதா, அல்லது ஏற்க முடிகிறதா? எல்லாம் தயாரிப்பு. மனித மனம் இப்படியெல்லாம் திடீர் மாற்றங்கள் பெறுமா, பெறுமென்றால் அதற்கான பின்னணி இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாது, அர்த்தமற்ற திடீர் திருப்பங்களும், திடீர் மனித மாற்றங்களும், வலிந்து புகுத்தப்படும் சம்பவங்களும், அந்தசம்பவங்களின் கோரமும், ஏதோ ஒரு எஃபெக்ட்டுக்காக தயாரிக்கப்பட்டவையாகவே தோன்றுகின்றன. டாப் ஆங்கிள் ஷாட் மாதிரி. சிலையாக நெடு நேரம் நிற்பது மாதிரி.

யுத்தம் செய் படத்தில் தெருக்காட்சிகள் சில வருகின்றன. ஒரு தெருக்காட்சி கூட அதன் இயல்பில் நாம் நம்பத்தகுந்த வகையில் இருக்கவில்லை. நாலைந்து பேரை ”நீ இந்தக் கோடியிலிருந்து அந்த முனைக்கு நடந்து போ. அங்கேயிருந்து இந்த முனைக்கு மூணு பேர் நடந்து போகட்டும்,” என்று சொல்லி நடக்க வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஒரு ஜீவன் கூட, ஒருத்தர் நடை கூட இயல்பாக, இல்லை. எல்லாம் சொல்லி நடக்க வைத்தது மாதிரி தான். சேரன் தலையைக் குனிந்து கொண்டு விரைப்பாக நிற்கிறாரே, அதுவும் மிஷ்கினின் புகழ் பெற்ற இயக்கம் போலத் தான் தெருக்காட்சிகளும். அந்தக் காலத்தில் முப்பது நாட்பது களில் இப்படித்தான் ஸ்டுடியோக்குள் அமைத்திருக்கு தெருக் காட்சியில் எதிரும் புதிருமாக சிலரை நடக்க வைப்பார்கள். அதிலிருந்து கொஞ்சம் கூட இயக்குனர்களின் தொழில் திறன் வளரவில்லை. தெருவில் நடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும். மனதில் என்னவோ ஒடிக்கொண்டிருக்கும். அவரது உடை வேறுபட்டிருக்கும். நடை ஒவ்வொருவருக்கும் அவரவர்து அவசரத்தை மன நிலையைப் பொறுத்து மாறும். ஒவ்வொருவரும் தனித் தனி ஜீவன்கள். அவரவர் கவலைகள். சிந்தனைகள். உத்பல் தத்தின் நாடக மேடையில் கூட மனிதர்கள் கூட்டமாகக் காணும் காட்சிகள் ஒவ்வொரு மனிதனையும் தனித் தனி தோற்றங்களில் தனித் தனி பாவனைகளில் காணாமுடிந்திருக்கிறது. முப்பது பேர் முப்பது விதமாக இருப்பார்கள் முப்பது பாவனைகளிள் செயல் தோற்றங்களில் இருப்பார்கள். நாடக மேடையில் பார்வையாளர்களுக்கு கூட்டம் தான் தெரிய வேண்டுமே ஒழிய முப்பது தனி மனிதர்களை அல்ல என்று உத்பல் தத் நினைப்பதில்லை. பார்வையாளர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ, நடப்பு வாழ்க்கையில்...


more: http://thamizhstudio.com/serial_4_20.php



No comments:

Post a Comment