Monday, March 28, 2011

வலது புறம் செல்லவும் - 1

வலது புறம் செல்லவும் - 1


இயக்குனர் அகத்தியன்28-03-2011, 08.00 PM


கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாகவே அனைத்தையும் படைத்து விட்டீர்கள். அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு கெட்டதையும் அவர்களுக்காக படைத்து விடுங்கள் என்றனர். கெட்டதை அவர்களே படைத்துக் கொள்வார்கள். கீழே எட்டிப் பாருங்கள் என்றார் கடவுள். கீழே எட்டிப்பார்த்தனர்.

"மனிதர்கள் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்’’.

செய்முறை மட்டும் தான் நாம். மூலப்பொருட்கள் எல்லாம் கடவுள்தான். இதற்காகத்தான் இந்த மூலப்பொருள் என்று கடவுள் படைக்கவில்லை. ஆனால் இது இதற்குப் பயன்படும் என்று கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம்.

நிலையாக ஓரிடத்தில் மனிதன் தங்கிவாழ ஆரம்பித்த பின் தேவைக்காக சேமிக்க ஆரம்பித்தான். பழ உணவுகளைப் பானையில் இட்டு எதிரிக்குப் பயந்து பூமியில் புதைத்து வைத்தான். அடையாள மிட்டான். திடீரென எதிரிகளின் தாக்குதல் நிகழ இடம் பெயர்ந்தான். மீண்டும் தன் இருப்பிடம் வந்து அடையாளம் வைத்ததைத் தோண்ட மது உருவானது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. இங்கே மனிதனின் புத்திசாலித்தனம் என்று மேலே சொன்னதை மறுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலே சொன்ன "கடவுள் படைப்பில் எல்லாம் நல்லது’’ என்பதும் தவறுதான். எல்லா நன்மைக்குள்ளும் தீமை வைத்துதான் கடவுள் படைத்திருக்கிறார்.

இங்கிலாந்து, பிரான்ஸ் , போர்ச்சுகீசிய நாடுகள், ரோம சாம்ராஜ்யம், மெசபெடோமியா பகுதிகள் இங்கெல்லாம் முறையாக ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் போதையும் கலந்தார்கள். அது ராஜரீக பானம் என்றழைக்கப்பட்டது.

அரண்மனை விருந்துகளின் வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே இந்த "ராஜரீக’’ பானம் பரிமாறப்பட்டது. பின்பெரும் வணிகர்கள் அயல்நாட்டுத் தூதர்கள் என அது சற்று தன் எல்லையை விரித்துக் கொண்டது. தயாரித்தவன் அதைக் குடித்தாலும் தலை சீவப்பட்டது. அரண்மனையில் அதைக் கண்டுபிடித்தவனோ தயாரித்தவனோ வயதாகி ஓய்வு பெறும்போது அவர்கள் உயிரோடு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். பிரான்சில் ஓய்வு கொடுத்து அனுப்பும்போது நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் மது ஒரு கௌரவம் மிக்க பானமாகக் கருதப்பட்டது.

எல்லைகளில் குளிரில் காவல் காக்கும் வீரர்களுக்காக சாராயம் தயாரிக்கப்பட்டது. அதை பீப்பாய்களில் ஊற்றி, முத்திரை பதித்து ஒருவருக்கு இத்தனை அவுன்ஸ் என்று அளந்து கொடுத்தார்கள்.

மரபுகளை மீறுபவன்தான் மனிதன். அதைப்பிடித்து இதைப்பிடித்து காக்காய் பிடித்து தயாரிப்பு ரகசியத்தைக் கண்டறிந்தான் ஒருவன். கும்பலாக காட்டுக்குள் சென்று, காய்ச்சி, மாதக்கணக்கில் உருண்டு கிடந்து கை கால் தளர்ந்ததும் இல்லம் திரும்பினார்கள். உழைக்க மனித சக்தி இல்லையென்றதும் யோசித்த அரச வம்சம் முத்திரையோடு அலுமினியக் குழாய்களில் சரக்கை அடைத்து தானியமோ, பட்டுப்புழுக்களோ, துணியோ கொடுத்து இரவுகளில் வந்து வாங்கிச் செல்லலாம் என்றது. பட்டுப்புழுக்கள் கொடுப்பவருக்கு அளவின்றி குழாய்கள் கிடைத்தன. பட்டுப்புழுக்களுக்காகவும் பருத்திக்காகவும் மனிதர்கள் அலைய ஆரம்பித்தனர். உழைப்புக்கு ஊதியம் சாராயம் என்றானது.

முழுமையான நாகரீகம் தோன்றியதும் எல்லா விருந்துகளிலும் மது அனுமதிக்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண்டு வரை கிடைத்தற்கரிய பொருள் மது என்பதால் அதற்கு கௌரவம் கொடுத்து குடித்தார்கள். அப்படியே அனுபவித்தார்கள். விழாக் காலங்களில் மதுவிருந்து கொண்டாடினார்கள். மீண்டும் விழாக் காலத்தை எதிர்நோக்கினார்கள்.

நாமறிந்த வரலாறுகளில் வெள்ளையர்களின் விருந்து என்றால் மது பிரதானம். இப்படி கௌரவத்தின் அடையாளமாக இருந்த மது மாறத் துவங்கியது மொகலாயர்களால். ஓபியம் கிடைத்தாலும் சரி சாராயம் கிடைத்தாலும் சரி முழுநேர உணவாக ஆகிப்போனது அவர்களுக்கு. குடிப்பதும் தின்பதும் மட்டுமே அரசலட்சணம். இப்போது அது புருஷலட்சணம். அறுபதுகள் வரை புருஷலட்சணத்திற்கு பர்மிட் என்ற ஒன்று தேவைப்பட்டது. ரேசனில் குடிக்கும்போது ஆசை இருந்தாலும் அளவாய்க் குடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

மறப்போர் புரியும் வீரர்களுக்கு போர்க்காலங்களில் பசியைப் பொருட்படுத்தாமல் வெறிகொண்டு எதிரியைத் தாக்க மது கட்டாயமாகப் பரிமாறப்பட்டது. பின்னாளில் அதே மறவர்கள் ஜாதிக் கலவரங்களில் குடியை பிரயோகித்தனர். ஒரே ஊருக்குள் பிரிந்து சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட இருதரப்பும் குடித்தனர். குடித்தால் வீரம் வரும் என்று விதைக்கப்பட்டது.

இன்னும் பின்னால் பர்மிட் எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு கடையில் வாங்கலாம் பாரில் குடிக்கலாம் என்றானபோது குடிப்பவக்ளின் எல்லை விரிந்தது. வயது வித்தியாசமின்றி குடிப்பழக்கம் தொற்றியது.

வானொலி இல்லாக் கிராமங்களில் வேலை இல்லாதோர் சாராயம் குடித்து விட்டு பகல் இரவு என்று சீட்டாடினார்கள். நகரங்களில் வருமானம் இல்லாதோர் அதற்காகக் கவலைப்பட்டுக் குடிக்க ஆரம்பித்தனர். வசதி உள்ளவர்கள் குடித்துவிட்டு "கிளப்’’ புகளில் சீட்டாடுவதை வேலையாக மாற்றிக்கொண்டனர்.

அரசின் உறவினர்கள் காய்ச்ச, அரசு அதை விற்க ஒரு பழக்கம் உருவானபோது மதுக்கடை இருக்கும் இடத்தில் திருவிழாக் கூட்டம் தோன்றியது. முகவரி கேட்பவருக்கு அடையாளமாக இருந்த கோவிலும், பள்ளிக்கூடமும், சைக்கிள் கடையும் மாறிப்போய் மதுக்கடை என்றானது. மதுக்கடைகளில் குடிக்கும் போதெல்லாம் வெட்டிப்பேச்சும், தகராறும் என்றாகிப்போனது. ரோட்டில் விழுந்து கிடப்பதும் காலையில் எழுந்து தள்ளாடி வீடு போவதும் சராசரிகளின் சராசரியானது. காலை ஆறுமணிக்கு குடிப்பவர்களுக்காக தெருவோரங்களில் அரசியல்வாதிகளால் மதுவிற்பனை அமோகமானது.

குடிப்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். விற்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். குடிப்பவனைத் திட்டினாள், விற்பவனை வாழ்த்தினாள். குடிப்பவன் குழந்தைகள் பட்டினி கிடந்தனர். வேலைக்கு சென்றனர், விற்பவன் குழந்தைகள் கறிச்சோறு தின்றனர். கான்வென்ட் சென்றனர். அரசு எழுபத்தைந்து ரூபாய்க்கு குவாட்டரை ஒருவனுக்கு விற்று ஒரு ரூபாய்க்கு அவனுக்கு அரிசி கொடுத்தது. ஸ்டார் ஓட்டல்களில் காக்டெய்ல் பார்ட்டி வைத்து விழாக்களுக்கு படித்தவர்களை அழைத்தார்கள். மாநாடுகளுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து அரசியல்வாதிகள் மக்களை அழைத்தார்கள். ரேசன் கடைகளிலும் பொது இடங்களிலும் போராட்டம் நடத்த மது லஞ்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. திருமணங்களுக்கும் மரண நிகழ்வுகளுக்கும் குடிப்பதற்காக ஒரு கூட்டம் வந்தது. ஒரு குவாட்டர் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனது. ராஜரீக பானம் தனது ராஜபாட்டையில் தேரேறி வந்து, இறங்கி, நடந்து, தடுமாறி, லஞ்சமாக மாறி அழுக்காகி ரோட்டில் விழுந்து கிடக்கிறது.

more: http://koodu.thamizhstudio.com/thodargal_16_1.php



No comments:

Post a Comment