Thursday, March 10, 2011

ஒற்றைச் சாளரம் - பிரபலங்களின் சிறுகதைகள்

ஒற்றைச் சாளரம் - பிரபலங்களின் சிறுகதைகள்

கொலைக்கு பின் சில தத்துவ காரணங்கள் - அஜயன் பாலா

அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன். மிகவும் சிறியவன் அவன். தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான் பெருந்துக்கம் அவனை மிகவும் அலைக்கழித்திருந்தது. கொலைக்கு அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம் என நான் நண்பனிடம் கூறினேன். நண்பன் மறுத்தான் இல்லை இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுதான் . வீட்டுநாயை கொல்பவன் மனிதனே அல்ல. அவனை நண்பனாக பெற்றமைகாக வெட்கப்படுகிறேன் என்றான். தேவையில்லாமல் நீ அவனுக்கு காம்யூவின் அந்நியன் முகச்சாயல் தரவேண்டாம். இதோபோலீசார் அவனைத்தேடிக்கொண்டிருப்பதாக செய்திதாள்கள் பேசுவதை பார். அவன் பிடிபட்டுவிடுவான். எல்லா கொலைகளுக்குபின்னாலூம் தத்துவகாராணங்கள் இருக்கத்தான் செய்யும். நியாயங்களை கூறாதே எனக்கூறி நண்பன் என் வாயை அடைத்தான்.

இருவரும் அந்தவீட்டின் வெளிப்புறத்தில் தோட்ட்டத்துக்கு வந்திருந்தோம். கொலை நடந்த வீடுபோல தெரியவில்லை. உள்ளே அவ்வப்போது யாரோ சிரித்துக்கொண்டிருக்கும் சப்தம் வேறு கேட்டது. நண்பனது மனைவியின் தங்கை வெளியேவந்து எங்களை பார்த்தாள். சுமாரன அழகு. அவளை அருகேவரச்சொல்லி அழைத்தேன். ஒருபழைய சினிமா பாடல்போல நடந்துவந்தாள். அவள்முகத்தில் மவுனம். அவள் சொன்னதகவல் என் நண்பனுக்கு ஏற்புடையதாக இல்லை.

நான் எனது நண்பனுக்காக பரிதாபப்பட்டேன். கல்லூரிக்காலத்தில் கால்பந்தாடத்தில் அசுரன் அவன். நாங்கள் மூவரும் இதரகல்லூரிகளில்நடக்கும் போட்டிகளுக்கு செல்லும்போதெல்லாம் அந்த புதியநகரத்தின் மாலப்பொழுதை உற்சாகாமாக முத்தமிட்டு மகிழ்வோம். ஒருமுறை அப்படி இளம் நகரத்துக்கு சென்றபோதுதான் சாலையின் எதிர்கொண்ட பெண்ணின் ஒரே புன்னகையில் தன் எதிர்கால வாழ்வை தீர்மானித்துக் கொண்டான். அவளும் நறுவிசான பெண்தான். அவளது புன்னகைவிலை மதிப்பற்றது. தேனிலவுக்கு சென்ற போது ஒருமுறை அவள் சற்று அளவு மிகுதியுடன் புன்னகைக்கபோய் படகுமுன் அனேக பறவைகள் கூடிவிட்டதாக நண்பன் பெருமை பேசினான். உண்மையில் அவளிடம் அத்தகையதொரு மந்திரசக்தி குடிகொண்டிருந்தது. ஆனாலும் அவளுக்கு என்னவோ மருமகளாக வந்ததிலிருந்து வீட்டின் வளர்ப்பு நாயை பிடிக்கவில்லை. உடன் நாய்க்கும் அவளை பிடிக்காமல் போய்விட்டது. நண்பனின் தாய்க்கு அவ்வப்போது மருமகள் பூசும் நறுமண திரவியங்கள் எரிச்சலை தந்திருக்கின்றன. ஆனால் அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் நாயை மருமகளின் முன் அடிக்கடி உச்சி முகர்வதும் கொஞ்சி குலவுவதுமாக இருந்திருக்கிறாள் .இதனாலேயே நண்பனின் மனைவிக்கு நாயின் மேல் தீராத வெறுப்பு. ஒரு நாள் நண்பனின் தாய் புற்றுநோய் அவதிதாளாமல் இறந்துபோக தனது தாயின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந் தநண்பன், நிம்மதியற்றவனாக உழன்று கொண்டிருந்தான். வீட்டுவாசலில் தனிமையில் கிடந்த நாய்வேறு அவனது துக்கத்தை அதிகபடுத்திக்கொண்டே இருந்தது. இதுதான் நாயை கொலைசெய்ய காரணம் என அந்த மனைவியின் தங்கையும் கூறினாள் .இரவுகளில் நாயின் ஊளை அதிகமாக இருந்ததாகவும் அதுதான் அதன் மரணத்தை நண்பனின் மூலம் தீர்மானித்தது என்றும் அவள் கூறினாள்.

ஆனாலும் உடன் வந்த நண்பனுக்கு இந்த பதிலில் திருப்தியில்லை. இருவரும் வெளியே புறப்பட இருந்த சமயம் போலிசால் தேடப்பட்ட நாயை கொலைசெய்த நண்பன் அவசரமாக உள்ளே வந்தான். அவனை போலிஸ் எப்படி விட்டது என நண்பன் என்னிடம் கேட்டான். நாயை கொலை செய்தவன் எங்களை பார்த்தும் பார்க்காதவனாக வேகமாக மனைவியைத் தேடி வீட்டிற்குள் ஓடினான். நாங்கள் மவுனமாக அங்கிருந்து வெளியேறினோம். அங்கே நாய் கட்டிவைக்கப்பட்டிருந்த சங்கிலி மறுமுனையில் வெற்று வளையத்துடன் அனாதையாக கிடந்தது.

No comments:

Post a Comment