Tuesday, January 11, 2011

வியாழனில் வெங்காயம்!


வியாழனில் வெங்காயம்!


பூபதி

தொலைநோக்கு சிந்தனை இல்லாத மக்கள் குடிமக்களாக அமைந்துவிட்டால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அமைதி என்பதே அரிதான விசயமாக அமைந்துவிடும்.

எதிர்க்காற்றில் நின்றுகொண்டு எச்சில் துப்புவதுபோல, அன்றும் மக்கள் வழக்கம்போல காலிக்குடங்களுடன் காலை நேரத்தில் சாலையில் அமர்ந்து சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பள்ளிகளுக்கு செல்ல முடியாமல், அலுவலகங்களுக்கு செல்லமுடியாமல் அனைவரும் கைக்கடிகாரத்தை கவணித்தபடியே கடுமையான கோபத்தோடு நின்றுகொண்டிருந்தார்கள். இதுபோன்ற அவசியமான நேரத்தில் அமைதியை கெடுத்தால்தான் நம் கோரிக்கைகள் கோட்டையை நோக்கி செல்லும் என மக்கள் மனக்கோட்டை கட்டுவதில் தவறில்லை ஆனால் அவர்கள் செயல்பாடுகளால் பாதிக்கப்படுவது ஒருவகையில் அவர்களேதானே! அது ஏன் அவர்களுக்கு புரிவதில்லை என தெரியவில்லை.

புதியதாக பிறந்துள்ள பிரச்சனையா இது! சூரியனின் திசைக்கேற்ப அளவில் மாறுபடும் நம் நிழல்போல, காலத்திற்கேற்ப, காலநிலைகளுக்கேற்ப இந்த பிரச்சனை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்துகொண்டேதானே இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் அறிவு ஜீவிகளாக தங்களை அனுமானித்துகொள்பவர்கள் அலோசனை கூறத்தொடங்குவது வழக்கம். அதி புத்திசாலியாக இருந்தால் ”நதிகளை இணையுங்கள்” என்பார்கள். அளவான புத்திசாலியாக இருந்தால் “மழை நீரை சேமிக்க வேண்டும்” என்பார்கள். அடித்தட்டு மக்களாக இருந்தால், ஆற்று நீர் யாருக்கும் பயண்படாமல் கடலை நோக்கி பயணமாவதை குறித்து பேசுவார்கள். அவர்களின் பேச்சை கேட்டு அரசு செயல்பட்டால் பிறகு அல்லல் படவேண்டியதுதான் மக்களுக்கு நன்றாக மழை பெய்தாலும் தண்ணீர் பிரச்சனைதான், மழை பெய்யா விட்டாலும் தண்ணீர் பிரச்சனைதான்.

நதிகளை இணைக்க முடியாதா? மழை நீரை சேமிக்க முடியாதா? ஆற்று நீரை அவசியமான முறையில் பயண்படுத்திக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் நம் மக்கள் புதியதாக கண்டுபிடித்த விசயங்களா!. ஒரு நாட்டை ஆள்பவர்களுக்கு இதுபோன்ற விசயங்களை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! இதுகூட தெரியாமலா ஆட்சியில் அமர்ந்திருக்கின்றாகள். உண்மையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அனைத்தும் தெரியும். ஆனால் அவர்கள் அவ்வப்போது தோன்றும் பிரச்சனைக்கு அதை அடியோடு நீக்கும் நிரந்தரமான தீர்வுகளை மட்டுமே யோசிப்பார்களே ஒழிய, நிரந்தரமற்ற தீர்வுகளை உண்டாக்கும் அலட்சிய சிந்தனை கொண்டவர்கள் அல்ல. பிறகு தவறு எங்கே உண்டாகிறது? மக்களிடம்தான், மக்களின் மனநிலையில்தன் தவறு உண்டாகிறது.

மக்களை பொருத்தவரையில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இன்றே தீர்வு வேண்டும் என்பார்கள். அந்த தீர்வு நிரந்தரமானதா அல்லது நிரந்தரமற்றதா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இருப்பதில்லை. நிரந்தரமற்ற தீர்வுகளை பெற்றுக்கொண்ட பிறகு நித்தம் நித்தம் அரசை அவதூறு செய்வாகள். ஆனால் ஒரு அரசாங்கத்தால் அப்படியெல்லாம் பொருப்பில்லாமல் செயல்பட முடியாது. அரச்சாங்கம் எதையும் நிரந்தரமான ஒன்றாக நிலைநாட்டவே விரும்பும்.

ஒரு சீன பழமொழி உண்டு “புதரில் இருக்கும் இரண்டு புறாக்களை வீட, கையில் இருக்கும் ஒரு புறா மேலானது” நம்மவூர் பாசையில் சொல்லவேண்டுமானால் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயலக்கூடாது என்பார்கள். இதுபோன்ற பழமொழிகளை படித்துவிட்டு இருப்பதையே இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தால் பின்னர் பறப்பதை யார் பிடிப்பது?

காக்கா குருவிதான் மரத்தில் கூடுகட்டும், கழுகு மலை உச்சியில்தான் கூடுகட்டும் என்பார்கள் அப்படிப்பட்ட உயர்வான சிந்தனை கொண்டதுதான் நம் அரசாங்கம். அதனால்தான் மழை நீரை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை, அடங்க மறுத்து ஓடும் ஆற்று நீரைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை, நம்மிடம் உள்ள நதிகளை இணைப்பதைபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. காரணம் இவை எல்லாம் நிரந்தரமல்ல. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் செலவு செய்யப்பட வேண்டிய விசயங்கள் இவை. சரி அரசின் உயர்வான, சிக்கனமான சிந்தனைதான் என்ன? அவர்கள் சிந்தனைப்படி நிரந்தரமான தீர்வு எங்கே இருக்கிறது? நிலவில் இருக்கிறது. ஆம், நிலவில் தண்ணீர் இருக்கிறதா என தேடிக்கொண்டிருக்கிறார்கள், அறிகுறிகள் கூட தென்பட்டுவிட்டது நிச்சயம் கண்டுபிடித்துவிடுவார்கள். அங்கே மட்டும் தண்ணீர் இருந்துவிட்டால் அடடா! அதற்குப்பிறகு அப்படி ஒரு தண்ணீர் பிரச்சனையே எழாதே. அதுபுரியாமல் குறுகிய மனம்கொண்ட இந்த குடிமக்கள் கோபத்தில் கூத்தடிப்பதை என்னவென்று சொல்வது!.

நிலவில் தண்ணீர்! அதை தேடிக்கொண்டிருப்பது ஒரு தமிழனின் தலைமையிலான குழு. இதை வீட பெருமை வேறென்ன வேண்டும் நமக்கு. தமிழ்னுக்கு தமிழனே துரோகம் செய்வானா! தண்ணீர் கிடைத்தவுடன் முதலில் நமக்குத்தானே கொடுப்பார் இதை புரிந்துகொள்ளாமல் நதிகளை இணை என்று நாள்கணக்கில் புழம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. நதிகளை இணைப்பது எவ்வளவு கடுமையான பணி!. இயற்கைக்கு முரணான விசயமல்லாவா அது. நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய காரியமா அது. திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அதனால்தானே பெரிய பெரிய அறிவாளிகள் கூட அந்த விசயத்தை அலட்சியம் செய்துவிட்டு அதற்கு பதிலாக அருகில் இருக்கும் நிலவில் தண்ணீரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சுலபமாக நிலவில் இருந்து தண்ணீர் எடுத்து மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, தெருத்தெருவாக தண்ணீரை கொண்டு செல்லலாமே! இதெல்லாம் யாருக்காக? யார் செய்வது? நமக்காக நம் அரசு செய்கிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டாமா! தலைக்குமேலே தண்ணீர் இருக்கும்போது அடுத்த மாநிலத்தை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்!. என்ன ஒரு பிரச்சனை தோன்றும் என்றால், நிலவில் தண்ணீர் இருந்துவிட்டால் நமக்கு இரவு நேரத்தில்தான் தண்ணீர் கிடைக்கும். பரவாயில்லை இதைக்கூடவா நம்மால் சகித்துக்கொள்ள முடியாது?.

எதற்கெடுத்தாலும் உடனடித்தீர்வு வேண்டும் என்றால் இதெல்லாம் எப்படி செய்வது. இதோ வெங்காயம் விலை அதிகரித்துவிட்டது. உடனே அதற்கு தீர்வு என்னவென்று கேட்டால் அரசாங்கம் ஆத்திரப்படாமல் என்ன செய்யும்? வியாழன் கிரகத்தில் வெங்காயம் இருப்பதாக ஒரு செய்தி உண்டு. எனவே இன்னும் கொஞ்ச நாட்களில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் கோடி செலவில வியாழன் கிரகத்திற்கு ஒரு விண்கலம் அனுப்புவார்கள். இந்த தொகை போதுமா என தெரியவில்லை காரணம் அன்றாட செலவிற்கே நமக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி தேவைப்படும்போது, அடுத்த கிரகத்தை ஆராய்ச்சி செய்ய எவ்வளவு தேவைப்படுமென தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அந்த விண்களம் வியாழனில் இருந்து வெற்றியோடு இல்லை இல்லை வெங்காயத்தோடு திரும்பி வரும். அதுவரை கூடவா நாம் பொருத்திருக்க கூடாது?

இந்த பிரச்சனைக்கு மக்களின் குறுகிய மனம் மட்டும்தான் காரணம். அதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஐயா சொன்னபடி பெரியாரிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்.



http://koodu.thamizhstudio.com/thodargal_5_30.php


No comments:

Post a Comment