Tuesday, April 19, 2011

படிமை மாணவர்களுடன் ஒரு பயணம்


படிமை மாணவர்களுடன் ஒரு பயணம்

மணிவில்லன்

`திரு அண்ணாமலை என்றவுடன் கார்த்திகை தீபம், கிரிவலம், ரமணர் ஆசிரமம்’ எல்லாம் நினைவுக்கு வரும். அதே சமயம், இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு பவா செல்லதுரை, கலை இலக்கிய இரவு, முற்றம், வம்சி புக்ஸ் ஆகியவை எல்லாம் நினைவுக்கு வரும். இந்த இரு முனைகளை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

மாற்று சினிமாவை உருவாக்கும் நோக்கில் தமிழ் ஸ்டியோ.காம் படிமை மூலம் பத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. படிமை மாணவர்களின் பயிற்சியின் ஒரு அங்கமாக ஏப்ரல் 2,3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை சென்று வந்தார்கள்.

ஏப்ரல் முதல் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டோம். மறுநாள் காலை ஏழு மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்தோம். அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் சிறு பேருந்தில் பயணம் செய்தோம். பிறகு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து அடி அண்ணாமலையை அடைந்தோம். வேடியப்பனூர் பாதையில் அமைந்திருக்கும் பெயரில்லாத ஆசிரமத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரமம் மிகவும் எளிமையானது. மூங்கில் கொண்டு குடில் அமைத்து மேலை தென்னோலை வேயப்பட்டது, சமைப்பதற்கு சாப்பிடுவதற்கு, பூசை செய்வதற்கு, படுப்பதற்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு என தனித்தனி குடில்கள், நாங்கள் சென்ற வேலையில் வேறு சாமியார்கள் யாருமில்லை.

ஆசிரமத்தின் பொறுப்பாளர் பெயர் மாணிக்கவாசகம். எந்த மத அடையாளங்களும் இல்லை, முதலில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

நாங்கள் மொத்தம் பனிமூன்று பேர் சென்றிருந்தோம். அதில் ஒருவர் பெண். எல்லோரும் உற்சாகமாக குளிக்க தயாரானார்கள். முதலில் குளித்து முடித்த குணாவும் நானும் பக்கத்தில் சிறு நடைப்பயணம் மேற்கொண்டோம்.

திருவண்ணாமலையை மிக அருகில் இருந்து பார்க்கும்போது மலையில் பசுமை ஏதுமில்லை. மரம், செடி, கொடி மிக குறைவாக இருப்பதை காண முடிந்தது. வேடியப்பனூர் செல்லும் பாiயில் நடக்க தொடங்கினோம். பாதையில் இருமருங்கிலும் பெயர் தெரியாத மரங்கள், பறவையினங்களின் குரலோசைகள். நகரத்து பரபரப்பு இல்லாமல் பாதை அமைதியாக இருந்தது. ஒரு வயலில் பசுமையாக நெற்பயிர்கள். மற்றொரு வயலில் கேழ்வரகு விளைந்து கதிர்கள் சாய்ந்து கிடந்தன. பக்கத்திலேயே தரிசு நிலமாக வறண்ட பூமி. விளைநிலங்களை அழித்து சிறு சிறு நவீன சொகுசுவீடுகள் கட்டப்பட்டிருந்தன. செங்கல் சூளையில் ஆட்கள் வேலை செய்கிறார்கள். எதிர்புறம் நிலகடலை சாகுபடி நடந்து கொண்டிருந்தது. நெல்லு, வெங்காயம், எள்ளு, மல்லி என பல வகையான பயிர்களின் விளைச்சல் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

வயதான பெரியவர் ஒருவரை சந்தித்து உரையாடினோம். நகரத்தில் நேரம் கேட்டால் கூட நின்று பதில் சொல்ல நேரமில்லாமல் ஓடும் அவசர மனிதர்கள் போல் அல்லாமல் அப்பெரியவர் எங்களோடு உரையாடுவதில் பெரும் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

கிரிவல பாதையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி உள்ளே இரண்டு கிராமங்கள் உள்ளன. அங்கு சுகாதார நிலையம் ஏதுமில்லை. ஏதாவது ஆத்திரம் அவசரம் என்றால் அடி அண்ணாமலையை நோக்கித்தான் ஓடி வரவேண்டுமாம். விவசாயத்துடன் கறவை மாடுகளின் வளர்ப்பும் நடைபெறுகிறதாம்.

நெல் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல், இயந்திரம் கொண்டு தான் (அந்த சிறுகிராமத்திலும்) அறுவடை செய்கிறார்களாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கிடைத்ததாம். இந்த சட்டமன்ற தேர்தலுக்கும் பணம் வருமென எதிர்பார்த்து அப்பெரியவர் நம்பிக்கையோடு கூறினார். அதற்குள் ஆசிரமத்திலிருந்து நண்பர்களின் அழைப்பு வந்ததினால் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டோம். இன்றைய காலை நல்ல துவக்கமாக இருந்ததாக உணர்ந்தேன்.

காலை உணவு முடிந்த பிறகு சிலர் பந்து விளையாடினர். சிலர் புத்தகம் படித்தனர். மற்றும் சிலர் இன்று நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை இறுதி போட்டி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். மதியம் பன்னிரெண்டு மணியளவில் ஆசிரம பொறுப்பாளர் மாணிக்க வாசகத்தோடு ஆன்மீகம் சார்ந்த உரையாடல்களுக்காக பூசைக்கான குடிலில் ஒன்று கூடினோம். ஆனால் உரையாடல் அவரை நேர்காணல் காணுவது போல் அமைந்துவிட்டது.

எனக்கு அரிப்பு வந்தது சொறிஞ்சிக்கிட்டன் இப்படித்தான் ஆன்மீகம் பற்றிய அவரது உரையாடல் தொடங்கியது. எப்படி ஆன்மீகத்துக்கு வந்தீங்க என நாங்கள் கேட்டதற்கு மேற்கண்ட பதிலை ஜென்தத்துவ கதைகளில் வருவது போல் நறுக்கென பதில் கூறினார். அதை தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் கூறினார். என்னால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. சிலர் புரிந்து கொண்டது போல் தெரிந்தது. இன்னும் சிலர் எதையும் வெளிக்காட்டாமல் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தனர். இதுதான் ஆன்மீகம் என நிறுவுவதற்கோ அல்லது தர்க்கத்திற்கோ அல்லது விவாதத்திற்கோ தான் தயாரில்லை என மாணிக்கவாசகம் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.

படங்கள் எல்லாம் வைத்து பூ வைத்து, பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி பூசை செய்துள்ளீர்களே, இதெல்லாம் தேவையா என கேட்டால், அவசியமில்லை நேற்று ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார், பூசை செய்ய வேண்டுமென கேட்டார் செய்தேன். அவ்வளவுதான். சில நாட்கள் பூசை இருக்கும். பல நாட்கள் இல்லாமலும் இருக்கும். இது ஒன்றும் கட்டாயம் கிடையாது. ஒரு நாத்திகவாதியின் குரல் போலவே சில நேரம் அவரது குரல் ஒலித்தது.

நீங்கள் ஏன் தாடி மீசை வளர்க்கவில்லை, காவி உடுத்தவில்லை.

அவசியமில்லை. அப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கட்டாயமில்லை என்றார். நீட்டலும் மழித்தலும் வேண்டா என வள்ளுவரின் சிந்தனையும் மாணிக்க வாசகம் பிரதிபலிக்கிறார்.

"உங்கள் நாங்கள் எப்படி அழைப்பது?"
"என் பெயர் சொல்லி அழைத்தாலே போதும்."
"பிரபல சாமியார்கள் போல் நீங்களும் மாறுவீர்களா?"
"அது என் கையில் இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். செருப்படி படணும் என்று இருந்தா பட்டுதான் ஆகணும்."

ஒரு நிலையில் ஆன்மீக தேடல் உள்ளவர் போலவும், மற்றொரு நிலையில் எதையும் தேடி செல்லாமல் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு எந்த முறையீடும் அற்ற வாழ்க்கையை வாழும் மாணிக்க வாசகத்தை, தேடினால் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கும் எங்களால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை.

மாணிக்க வாசகம் இருபது வருடங்களுக்கு முன்பே கட்டடவியல் (B.E) படித்துள்ளார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே ரமணர் மீது ஈடுபாடு கொண்டுள்ளார். படிப்பு முடிந்து டெல்லியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது வேலை இதுவல்ல என தோன்றிய தருணத்தில் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

ரமணர் ஈடுபாடு காரணமாக திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். முதலில் ரமணர் ஆசிரம விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் விட்ட வேலையை மறுபடியும் ஆசிரமத்திலும் செய்ய விரும்பாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறியுள்ளார். சில காலம் பிச்சை எடுத்து வாழ்ந்ததாகவும் கூறினார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத்தான் இந்த ஆசிரமத்தில் இருக்கிறாராம். இன்னும் ஆறுமாதத்தில் இங்கிருந்து வெளியேற வேண்டுமாம். அதற்கு பிறகான வாழ்க்கைக்கு திட்டங்கள் ஏதுமில்லை. எல்லாம் அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார் என கூறுகிறார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுபற்றி கேட்டால் முப்பது வயதுக்குள் இருக்கும்போது ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்வேன் என்றோ (அ) திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றோ கூறினார் அர்த்தமுள்ளதாக இருக்கும், முப்பது வயதை கடந்தவன் எதை கூறினாலும் நகைப்புக்கு இடமாகும் என மாணிக்கவாசகம் கூறினார்.

ஒருவருக்கு எது பிடிக்கிறதோ அதுதான் அவருக்கான ஆன்மீகம். இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் என்பதுதான் அவரது மனபோக்காக உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த உரையாடல் (அ) நேர்காணல் சுமுகமான முடிவுக்கு வந்தது. மதிய உணவுக்கு தயாரானோம். சாப்பாடு, சாம்பார், கோசு பொறியல், மோர் என சுவையான மதிய உணவு எங்களுக்க பரிமாறப்பட்டது. மதிய உணவுக்கு பிறகு அனைவரும் உலகக் கோப்பை (கிரிக்கெட்) இறுதி ஆட்டத்தை பார்க்க ஆயத்தமானார்கள். ஆசிரமத்தில் தொலைக்காட்சி பெட்டி இருந்தது. ஒரு மாணவன் தங்கி படிக்கிறான். ஒரு அம்மா சமையலுக்காக வந்து போகிறார்.

மாலை நான்கு மணிக்கு ரமணர் ஆசிரமத்திற்கு பயணமானோம். ஆசிரமம் செல்வதற்கு பேருந்து வசதி ஏதுமில்லை. அதனால் நடந்தே சென்றோம். கிரிவல பாதையின் இருமருங்கிலும் புளியமரங்கள் காய்ந்து தொங்கின. சில நண்பர்கள் புளியம்பழம் ருசி பார்த்தார்கள். எங்களை கடந்து பல தாடி வைத்த சாமியார்கள், சடைமுடி வளர்ந்து கழுத்தெல்லாம் மணிமாலை சூடிய சாமிகள், காவியுடை உடுத்திய சாமிகள் என விதவிதமான மனிதர்கள் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் பிச்சை கேட்கவும் செய்தனர்.

நாங்கள் மூன்று குழுக்களாக பிரிந்து அவர் அவருக்கு பிடித்தமான விசயங்களோடு உரையாடியபடியே சென்றோம். சாலையின் இருமருங்கிலும் சிறு சிறு கோயில்கள், பாறை வெட்டி உண்டாக்கிய குளங்கள் கூட இருந்தன. நாங்கள் சென்ற பாதையில் நித்தியானந்தாவின் ஆசிரமும் இருந்தது. ஆசிர வளாகத்தினுள் மக்கள் நடமாட்டமில்லை. ஆனால் விரைவில அந்த இடத்தில் மக்கள் கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை காண முடிந்தது.

உள்ளே என்னதான் இருக்கிறது பார்த்து வரலாம் என நாங்கள் உள்ளே சென்றோம். வாயிலின் இடபுறம் ஒரு பெரிய குடில் பழைய விசயங்களின் எச்ச சொச்சங்களை தாங்கியபடி இருந்தது. அதற்கு எதிர்புறம் கட்டட வேலை நடைபெறுகிறது. பெரிய மைதானமாக காட்சியளிக்கும் ஆசிரமத்தில் சில சீடர்கள் நடமாடியபதை காண முடிந்தது. ஒரு சீடர் எங்களுக்கு பிடாதிபதியின் மகிமைகளை சொல்லி எங்களையும் பங்கேற்க அழைத்தார். நடந்த தவறுகள் அனைத்தும் உண்மையல்ல என்பதை விளக்கும் நோட்டீசை எல்லாம் கொடுத்தார். அவரின் செயல்பாடுகள் ஒரு சாவி கொடுத்த பொம்மையின் செயல்பாடுகளை ஒத்திருந்தது. மக்களின் மறதியை ஆதராமாக வைத்து செயல்படுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. உடன் வந்த நண்பர்களில் யாருக்கும் சீடரின் கருத்துகளின் மேல் நல்ல அபிப்ராயம் ஏதுமில்லை.

சாலையோர தேநீர் கடைகளில் தொலைக்காட்சியில் உலகக்கோப்பை போட்டியை சன்னியாசிகளும் கண்டு ரசித்தபடி நின்றதை காண முடிந்தது. நண்பர்களில் சிலரும் அவர்களோடு அவ்வப்போது ஒன்றிபோயினர். பகல் கரைந்துவிட்டிருந்தது. சுமார் ஏழு மணி அளவில் ரமணர் ஆசிரமத்தை சென்றடைந்தோம்.

ரமணர் ஆசிரமம் வளமையோடு காட்சியளித்தது. அங்கு நடமாடு மனிதர்களும் பெரும்பாலும் வனப்போடுதான் காணப்பட்டனர். நிறைய வெளிநாட்டு மனிதர்கள் சூழ்ந்த தியானத்தில் இருக்கும் புறதோற்றத்தில் காணப்பட்டனர். நாங்கள் சென்றபோது கூட்டு தியானம் அல்லது கூட்டு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. எல்லா இடங்களும் தூய்மையாக இருந்தது. ஏழு கிலோ மீட்டர் நடந்த களைபுப் தீர வாசற்படியில் அமர்ந்து மனிதர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். எங்களை சுற்றிலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஏதோ ஒரு பரவசநிலையோடு நடமாடுவதை காண முடிந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த தருணத்திலேயே கூட்டு தியானம் முடிவடைந்து மனிதர்கள் வெளியேற தொடங்கினர். நாங்களும் ஆசிரமத்திற்கு வந்தோம் என்ற அடையாளத்தோடு வெளியேறினோம்.

ஆசிரமத்திற்கு எதிரே இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தினோம். அங்கு பல வெளிதேச மனிதர்கள் சாவகாசமாக அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். சாலையோரம் வண்டியில் வேர்கடலை விற்பவனிடம் வேர்கடலை வாங்கி கொறித்தபடியே நாங்கள் தங்கியிருந்த ஆசிரமம் நோக்கி நடக்க தொடங்கினோம். சாலையோரங்களில் ஆங்காங்கே சன்னியாசிகள் கூட்டமாகவும், தனியாகவும் படுத்து கிடந்தனர். அவர்களின் பெரும்பான்மையினர் ஆண்களே. பெண்களுக்கு ஆன்மீக தேடல்கள் இல்லையா என எனக்குள் ஓர் எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இருளும், ஒளியும் மிகுந்த அந்த சாலை பயணம் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு தெம்பாக இருந்தது. உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? வெல்லாதா என்ற ஐயப்பாடுகளுடன் நண்பர்கள் தொலைபேசியின் உதவியை நாடினர். சாலையில் உலகக்கோப்பை பற்றி பேசிக்கொண்டு வரும்போது சாலையோரம் படுத்திருந்த சன்னியாசி ஒருவர் இந்தியாவின் நிலை என்ன என்பதை மிக ஆவலோடு கேட்டு தெரிந்து கொண்டார்.

இரவு ஒன்பதரை மணிக்கு ஆசிரம் வந்தடைந்தோம். எல்லோரும் கிரிக்கெட் பார்க்க அமர்ந்து விட்டனர். இந்தியா உலகக்கோப்பை வென்றதை பார்த்த பிறகுதான் அனைவரும் இரவு உணவு உண்டோம்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/padimai.thamizhstudio/rxRFLC#

http://thamizhstudio.com/others_article_13.php


No comments:

Post a Comment