Monday, April 18, 2011

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -9


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -9

சுல்பிகா – கெழுத்தி முட்களைப் பிரவசிக்கும் நாரைகள்

குட்டி ரேவதி



ஒரு பெண்ணோ ஆணோ பிறக்கும்போதே இன்னின்ன பால்நிலை, சாதி, மதம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிறப்பதில்லை. வாய்ப்பின் அடிப்படையில் பிறந்ததும் அவர் அந்த நிலையின் எல்லா அரசியல் நிலைப்பாடுகளுக்கும் எல்லா வகையிலும் பொறுப்பேற்பவராக இருக்கிறார். ஏனெனில், அச்சமூகத்தில் தான் அவரது இருப்பு நிலைநிறுத்தப்படுகிறது. அந்தச் சமூகத்திடமிருந்து பண்பாடு, சூழல், அன்றாட உணவு, இருப்பிடம் எல்லாவற்றையும் கேட்டுப் பெறுபவராயும் தன்னிலையிலிருந்து சமூகத்திற்கு அளிப்பவராகவும் இருக்கிறார். ஆகவே, அச்சமூகத்தின் மீது சுமத்தப்படும் எல்லா வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நிவாரணம் தரவும் முயலவேண்டியது அவரது பொறுப்பு. எனக்கென்ன என்று அவர் இருந்துவிடமுடியாது. அப்படி இருக்கும்பட்சத்தில், அவர் தான் சார்ந்த சமூகத்திற்குத் துரோகம் இழைத்தவராகவே இருக்கிறார்.

அம்பேத்கர் தன் கருத்து நிலைப்பாடுகளில் தொடர்ந்து இதை முன்வைக்கிறார். அதாவது, ஆதிக்க இனம், அவ்வினத்தால் ஒடுக்கப்பட்ட இனம் என இரண்டு வகையினம் தாம் இருக்க முடியும். ஆதிக்க இனம், ஒடுக்கப்பட்ட இனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு வசதியாக, ஒடுக்கப்பட்ட இனத்தைப் பலக் குழுக்களாகப் பிரித்து அவற்றை ஒன்றோடொன்று மோதச் செய்து, குளிர்காய்வதில் முனையும். இம்மாதிரி வெவ்வேறு காலக்கட்டங்களில் தொடர்ந்து பெரும்பான்மையினம் ஒடுக்குமுறையின் வடிவமைப்பால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முஸ்லீம் இனமும் அவ்வாறாக வேற்று மதத்தின் பெயரால் அர்த்தப்படுத்தப்பட்ட ஓர் ஒடுக்கப்பட்ட இனமே. விடுதலை இயக்கத்தை ஆதரிப்பவர், விடுதலை இயக்கத்தை ஆதரிக்காதவர் இவை இரண்டும் தாண்டி, ’இந்த இரண்டு வகையையுமே சாராதவர் என்ற மூன்றாவது வகை நான்!’ என சிலர் என்னிடம் தன்னை அடையாளப்படுத்துக் கொள்கின்றனர். இம்மூன்றாவது வகையினமே கூட, ஒரு வகையில் பொறுப்பிலிருந்தும், போராட்டத்தின் நுண்வடிவத்தை உணரும் முயற்சியிலிருந்தும் தப்பிக்கும் ஆதிக்க இனத்தைத்தான் சுட்டுவதாய்த் தோன்றுகிறது.

பெண்களுக்குத்தாம் விடுதலைக்கான இயக்கம் முதன்மையாகத் தேவைப்படுகிறது. ஆனால், அவை அதிகார ஆதாயங்களால் அரசியல் அடையாளம் பெறும் போது, தன் உடல், தன் கருப்பை, தன் குழந்தை, தன் அம்மா மற்றும் பாட்டி என பெண்ணுடல்களைப் பாதிக்கும் பெண்ணியச் சிந்தனை அல்லது பெண்ணினம் என்னவாகிறது என்ற அக்கறையற்ற இடத்தில் தான் போரைக் கடுமையாக எதிர்த்தனர். விடுதலை இயக்கங்களில் போராடிய பெண் போராளிகளும் இச்சிந்தனையையே கொண்டிருந்தனர். தன் இனத்தின் மீது நிகழ்த்திய கடுமையான ஒடுக்குமுறையை போரின் பெயரால் நிகழ்த்திய ஆணாதிக்கச் சிந்தனை வடிவப் போரைக் கடுமையாக எதிர்த்தனர். அதற்காகக் களம் சென்று நின்று போராடினர். கிராமங்களிலும் நகரங்களிலும் என தன் நாட்டில் குழந்தைகளையும் முதிய பெண்களையும் காத்து நின்ற ஒற்றைப் பெண்களுக்காகப் போராடினர். போராட்டத்தில் நின்று போராடிய பெண்களுடன், சென்று போராடாதவர்களும் கவிதைகள் எழுதினர். ஆணும் பெண்ணும் ஒரே மொழியைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் வேறு வேறு அர்த்தங்களில் அவை புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதன் எதிர்ப்பாய்க் கவிதைகள் எழுதினர். தாய் மொழியின் சொற்கள் ஆணதிகாரமயப்பட்டிருப்பதைச் சிதைப்பதன் முதன்மையான உத்தியாகப் பெண்கள் கவிதை எழுதுகின்றனர்.

கவிதையின் கட்டமைப்பில் பெண்கள் தீவிரமாக ஈடுபடலாயினர். கவிதைப் பாரம்பரியத்தின் உயரம் என்று சொல்லப்பட்டு வந்ததை தம் மொழியாலும் கவிதை சொல்லல் முறையாலும் எட்டிக் குதித்தனர். இலங்கும் கவிதை வடிவ முறைகளைக் கற்காமல் அவற்றைக் குலைக்கவும் முடியாது என்பதால், புத்தெழுச்சியுடன் மொழியின் வித்தைகளை ஆண்டனர். முஸ்லீம் பெண்கள் கவிதை எழுத வந்ததும், இதன் அடிப்படையில் தான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டம் வென்று கவிதை எழுத வந்த முஸ்லீம் பெண்ணான சுல்பிகாவின் படைப்புப்பணியை இவரைத் தொடர்ந்து எழுத வந்த பஹீமா ஜகான் மற்றும் அனார் இருவருடனும் தொடர்ப்புப்படுத்திப் பார்க்கிறேன். இன்று பஹீமாவும், அனாரும் தமிழ் மொழியை, அதிகார நசிவிற்கு உட்படுத்திய குழைவுடன் ஆளும் வல்லமை மிக்கவர்களாய் இருந்தாலும் இப்பயணம் சுல்பிகாவிடமிருந்து தொடங்குகிறது என்பதற்கான எழுச்சிகளை சுல்பிகாவின் சில கவிதைகளில் காண நேர்ந்தது.

தனது முதல் தொகுப்பான, ‘விலங்கிடப்பட்ட மானுடம்’ பெரும்பாலும் உணர்ச்சியான பிரகடனங்களாகவே இருக்கின்றன. தன் பெண்ணிய கருத்தை அழகும் வடிவமும் இன்றி முறையிடும் வாக்குமூலங்களாகவோ அல்லது பிரச்சாரங்களாகவோ பதிவு செய்து விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுவதுடன், மனதில் ஒரு துண்டிப்பு நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.

சேற்றில் செழித்த,
செங்கமல அரும்புபோல
மென்மஞ்சள் நிறமுலைகள்,
வெண்ணய்யில் செதுக்கிய
உடல் வண்ணம்,
மென்மையான
பெண்மையின் அங்கங்கள்.
இவை மட்டுமா கொண்டு
இப்பூதம் உருவாகியுள்ளது?

செறிந்த பொருள்சேர்
சிந்தனைத் திறமையும்
அரியதிறன் மிகு
கொள்கையும்,
நெஞ்சுரமும்,
எம்மில் புதைந்துள்ளன.

பாலியல் உணர்வு
மட்டுமா எம்மில் கலந்துள்ளது?
பார்த்தல், கேட்டல்
ருசித்தல் மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும்
எமக்கு உண்டு.

கண்களும், மூக்கும்
செவிகளும், நாவும்
உணர்மிகக் கொண்ட தோல்முடியும்
எம்மைக் காவலிட்டுள்ளன.
இவற்றினுள்ளே,
இப்பிரபஞ்சத்தின் உயிர்ப்பே
உறைந்து கிடக்கின்றது.

மேற்கண்ட கவிதையை, உரைநடையாக்கி வாக்கிய அமைப்புகளுக்குள் கொண்டு வந்தாலும் அவை, படிந்து நிற்கின்றன. கவித்துவம் அடையும் முன் கருத்தைப் பதிவுசெய்யும் அவசரமாகவும் கொள்ளலாம்.

இதயராகம்

நீலவானில் நிலா
வைகறைப் பொழுதில் எழுந்திருக்கின்றது.
மேகத்தின் மெல்லிய திரை அதனைச் சுற்றி
மோகன வட்டமிட்டுள்ளது.

அதன் மருங்குகளில்
வானவில்லின் வர்ணங்கள் ஒளிர்கின்றன.
அமைதி எங்கும் ஆட்கொண்டுள்ளது
மெல்ல செவிமடுத்துக் கேள்,

எங்கிருந்தோ பாடும் அவளது
இதய ராகம் காற்றோடு கலந்து வருகின்றது
ஆக்காண்டிப் பறவை அவள் குரலை
எங்கும் எடுத்துச் செல்கின்றது

இளம் தென்றல் அவள் மென்மணத்தை
எங்கும் தூவிச் செல்கின்றது
அவளது வரவை உன்னால்
உணர முடிகின்றதா?

இதோ அழகிய நட்சத்திரங்கள்
அவள் கண்ணிலிருந்து ஒளிபெற்று
மின்னுகின்றன.
கடலும் தொடுவானமும் அவள் வண்ணம்
கொண்டு மிளிர்கின்றன.
அதே ஒலி...
அதே ராகம்...
மீண்டும் மீண்டும் தொடர்கின்றது.

நன்றாகச் செவிமடுத்துக் கேள்-
அவள் இதயத்தின் ஒலிக்கூடாக
உன் பெயர் உச்சரிக்கப்படுகின்றது.
உதடுகளால் அவள் அதை உச்சரிப்பதில்லை.

காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது
ஆயினும்,
உதடுகளுக்கு இல்லாத சக்தியை
அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதனால் தானோ என்னவோ,
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும்
அவளது ராகம் ஒலிக்கின்றது.
முடிந்தால் அதற்கப்பாலும் சென்று
செவிமடுத்துக் கேள்.

காற்று;
அதனால் அவளது
இதயத்தினுள் புக முடியாது.

அது; அவளது ராகத்தைத்
தடுக்க முடியாது தவிக்கட்டும்.
அவள் கண்களில் மினுங்கும்
சோகக் கதிர்களை
உன் மனத்திரை பதிவு செய்யக்கூடும்.

நீ பெற்றுக் கொண்ட
துலங்கலைக் கூட
அவள் கண்கள்
மீளவும் பெறவும் கூடும்.

எனினும்,
அவளது இதயராகம்
உண்மைக் கவிஞனின்
பேனா முனையினால் கூட
இதுவரை எழுதப்படாதவை
அவளைச் சுற்றி
எத்தனை வேலிகள்.

இவைகளைத் தாண்டி,
உன் மனத்திரையை அடையும்படி
அவள் இசைத்துக் கொண்டேயிருக்கிறாள்.
விடியற் காலையில் அவள் ராகத்தை
உன் செவிகள் கேட்கக்கூடும்.
யாருமே அறியாதபடி
அவள் இதயராகம் மீட்டப்படுகின்றது.
இப்போது உன்னால் மிகத்
தெளிவாகக் கேட்க முடிகிறதா?

உடன் பதிவு செய்து கொள்,
இந்தப் பொல்லாத காற்று,
அதனைக் கூட அள்ளிச் செல்லக்கூடும்.

ஆழ்மனக் காதல் கொண்டதொரு பெண்ணின் கவிதை. காற்று எதிரியின் உருவில் வருகிறது. காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது. ஆயினும், உதடுகளுக்கு இல்லாத சக்தியை அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள் என்ற வரிகளால் காதலின் வல்லமையைப் பதிவு செய்கிறார். ஈழக்கவிதைகள், தமிழ்க்கவிதைகளில் இல்லாத அளவிற்கு அகம் புறம் என்ற இரு நிலைகள் கவிதையின் தளத்தை ஆண்டிருக்கின்றன. நிரப்பியிருக்கின்றன. போர் என்பது காலம், நிலம் இரண்டின் பகுதிகளையும் சூறையாடிக் கொண்டபோதும், காதலும் மறமும் அதை ஆற்றிக்கொள்ளும் அருமருந்துகளாக, சொற்களால் ஆன மூலிகைச் சாறாகக் கவிதைகளில் வழிகின்றது. இக்கவிதை முழுமையும் காதல்ரசம் பொழியும் கவிதை.

சபதம்

சருகுகள் ஓதுங்கிகிடக்கும்
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர்

சாக்கடையின் சகதிக்குள்
சிக்குண்டிருந்தது உனது சடலம்

நேற்றுக் காலை நீ கணவனுடன்
கரையில் உலவியதாய்
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன

உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும்
உன் மீதில்லை
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும்
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன.

தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று

எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள்
இன்னும் அழிய உள்ளன

தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எமது யோனிகள்
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.

போர் எனும் வடிவில் விடுதலை இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் தேவைப்பட்ட மனித இனங்களும் பூமியில் உண்டு. ஆனால், பெண்கள் அதை வேறு வடிவில் அணுகுகின்றனர். எதிர்ப்பை வன்முறைக்குறியீடுகள் அல்லாத வகையில் பதிவு செய்கின்றனர். ’எமது உடல்கள் மற்றொரு காமுகனைப் பெற்றுப் போடாதிருக்கட்டும்’ என்னும் வரியில் கருவிருக்கும் இடம் சென்று, காமுகனைக் கருவறுக்கும் வரை எதிர்ப்பு வலுப்பெற்றப் பெண்ணாகிறாள். இங்கு தாய்மை என்பதன் அர்த்தங்களும் வரையறைகளும் நொறுங்கிப் போகின்றன. பெண்ணின் எதிர்ப்புகள் எல்லாமே வன்முறையை வலுவிழக்கச் செய்யும் குறியீடுகள் ஆகும் கட்டத்தில், ஆண்களின் எதிர்ப்புகள் எல்லாமே வன்முறையைச் செயல்படுத்தும் குறியீடுகள் ஆகின்றன. போர் அத்தகைய வன்முறை ஆயுதங்களையும் உத்திகளையும் உள்ளடக்கிய அடக்குமுறைக் குறியீடு. மேற்கண்ட கவிதையில்,

தேசியத்தின் பேரால் ஒரு யோனி


moe: http://koodu.thamizhstudio.com/thodargal_14_9.php



No comments:

Post a Comment