Thursday, April 7, 2011

உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல் - குட்டி ரேவதி


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -8

உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல்

குட்டி ரேவதி

அன்புமிக்க வாசக நண்பர்களுக்கும், நிரூபனுக்கும்...

வணக்கம். விவாதம் ஒரு நிலைக்கு வரட்டும் என்று காத்திருந்தேன். இந்நீளவிவாதத்திற்கு ஏற்ற பொருள் இது அன்று என்பதே என் தாழ்மையான கருத்து. என்னுடைய முழுமுதற் நோக்கம், வழக்கம்போல ஒரு கவிஞர் பட்டியலை உருவாக்குவதன்று என்பதையும், எவரையும் முழுதாக நிராகரித்து விட்டு மேற்செல்வது என்பதில்லை என்பதையும் முதலில் இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய பேசுபொருளென்பது, ஏற்கெனவே நண்பர், ‘முத்து ரமணி’ குறிப்பிட்டிருப்பது போன்று, “ஆண்மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்” என்பதே. அதற்கான முகவுரையில், எம்மாதிரியான பயணத்தை முன்னெடுக்கப்போகிறேன் என்பதை முன்னமேயே தெளிவாகவும் நிதானமாகவும் விளக்கியிருக்கிறேன். அதுமட்டுமன்றி, முழுத் தொகுப்பாக கவிதைகளை வெளியிட்டு இருப்பவர்களையும் தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்குபவர்களையும், குறைந்த காலத்திலேயே கவிதை இயக்கத்திற்கு பெண்ணிய அக்கறையோடு பங்களிப்புச் செய்தவர்களையும் மட்டுமே இங்கு கவனப்படுத்துவது என் நோக்கம்.

இந்நிலையில், முன்நிகழும் எதையும் வாசித்திராது வந்து தன் வாதங்களை தான்தோன்றித் தனமாக நிரூபன் முன்வைப்பது அவர் அசிரத்தையைத் தான் காட்டுகிறது. எவரையும் நான் ஒருத்தி நிராகரிப்பதால், அக்கவிஞர்கள் இல்லாது போவதற்கும் அவரை இருட்டடிப்புச் செய்வதற்கும் நான் ஒன்றும் கவிதையின் தலைமையிடத்தை எடுத்துக் கொண்டு இங்கு எழுத வரவில்லை. நான் எழுதாமால் போவதால் மட்டுமே நீங்கள் சொல்லும் வரலாற்றின் பொன்னேட்டிலிருந்து, எந்தக் கவிஞரின் பெயரும், அவர் அங்ஙனம் பங்களிப்புச்செய்தவர் என்றால் அழிந்தும் போய்விடப்போவதில்லை. மேலும், இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்தையே சிதறடிக்கும் நிரூபனின் ஆதிக்க உத்தி தான் இது என்று தோன்றுகிறது. இது போல, பெண்ணியக் கவிதை இயக்கம் தீவிரப்படும்போதெல்லாம், ’பொத்தாம்பொதுவாக’ கவிதை என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு உள்நுழைந்துச் சிதறடிப்பவர்களை கடந்து சென்ற காலங்களில் நான் ஏற்கெனவே பலமுறைகள் சந்தித்திருக்கிறேன். அதனால் தான் இத்தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தையும் பெற்றேன் என்று குறிப்பிட வேண்டும், ’தமிழ் ஸ்டுடியோ’ பெண் கவிதை குறித்தத் தொடரொன்றை எழுத வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டதும், சில மாதங்கள் தயாரிப்பிற்குப் பின் தான் இதை எழுதவும் தொடங்கினேன். அதிலும், மையப்பொருள் குறித்த பல விவாத முன்னெடுப்புகளும் ஆலோசனைகளுக்கும் பின் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன்.

கவிதைக்குள் ஒட்டுமொத்தமாக பெண்ணியச் சிந்தனை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்றும் அது காலப்போக்கில் அந்தக்கவிஞரின் சுயமுயற்சியினாலேயே என்னனம் வளர்ச்சியுறுகிறது என்றும் அறிய விரும்புபவர்களுக்கும் கவனிக்கத் தவறுபவர்களுக்கும் இக்கட்டுரை உதவக்கூடும். ஆனால், கவிதை என்றால் என்ன என்று அறியாதவர்கள் சிலர், இம்மாதிரியாகச் சீர்மைப்படும் பாதைகளைச் சிதறடிப்பது வழக்கமானது தான். எனது இக்கட்டுரையின் நோக்கம், வெறுமனே பெண்ணியக் கவிதைகளோ, பெண்கள் கவிதைகளையோ தொகுத்து அடையாளம் பெறுவது அன்று. (மீண்டும் சென்று இக்கட்டுரை முகவுரையைப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்). தம் கவிதைகள் வழியாக, உடல் எனும் பிரதியைக் கலைத்துப் போட்டவர்கள் மற்றும் ஆதிக்கமொழிப் பிரதியைச் சிதைத்தவர்கள் வழியாக மட்டுமே கவிதையை ஓர் இயக்கமாக அணுகுவது. இதில், கவிதைகள் அல்லாத பிரதிகளையும் நாம் நிராகரிக்கவே வேண்டியிருக்கும். நான் இதைச் செய்யவேண்டியதில்லை என்றாலும், ‘தமிழ் ஸ்டுடியோ வாசகர்கள்’ தம் தொடர் வாசிப்பின் பயனால், எது சீர்மையான கவிதை என்பதை தாமே கண்டறியும், தெளியும் இடத்திற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் முன்பு, கவிதையல்லாத, கவிதை என்று முன்மொழியப்பட்ட வரிகளாலான தொகுப்பை நான் முன்வைத்தால் அவர்களே முன் வந்து இது கவிதையன்று எனச் சுட்டிக்காட்டும் தேர்ச்சியுடையவர்கள். இதை கவனத்தில் கொண்டு, நான் தேர்ந்தெடுக்கும் கவிஞர்கள் எழுதியவை, கவிதைகளாகவும் இருக்கவேண்டும் என்பதற்கும் அழுத்தம் கொடுக்கிறேன்.

ஏற்கெனவே, செல்வி, சிவரமணி ஆகிய இரு கவிஞர்களையும் அவர்கள் கவிதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளதை இங்கு நினைவுகூறுகிறேன். http://koodu.thamizhstudio.com/thodargal_14_3.php.

அவர்கள், தோன்றி வரும் இயக்கப்பின்னணிகளை வைத்து எழுதினால், என் இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திலிருந்து கவனம் திருப்பும் ஒரு தொடராக இருக்கும் என்பதாலேயே, இக்கட்டுரையின் உள்ளுறையை, ‘உடலரசியல்’ என்றும், என்னளவில் இக்கட்டுரையில், உடலரசியல் என்று எதை முன்மொழிகிறேன் என்றும் திடமான விளக்கம் அளித்து விட்டுத்தான் நாம் இந்தக் கட்டுரைப் பயணத்தைத் தொடர்ந்தோம் என்பதை நினைவு கூறிக்கொள்கிறேன்.

இத்தொடரில் கப்டன் கஸ்தூரி போன்றவர்களையும் நான் விலக்கிவைத்துத்தான் நகர்கிறேன் என்ற கவன விழிப்பையும் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் அடிப்படைக் காரணங்களால் விலக்க முடியாத தகுதிகளைக் கவிஞர் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, அவை கவிதைகளாகவும் இருக்கவேண்டும். பெண்கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாளர், தொகுக்கும் தொகுப்பாளர் ஆகியோரை முன்மொழியும் கட்டுரைத் தொடர் இது இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இம்மாதிரியான நாகரிகம் தான் பட்டியலையும் அதில் படிநிலையையும் உருவாக்கியது என்பதால் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். அப்பணியை நானும் செய்ய ஒப்பவில்லை. மேலும், நிரூபனின் விவாதத்தில் உள்பொருளும் அக்கறையும் சில முக்கியமான கவிஞர்கள் விடுபட்டிருக்கின்றனரே என்பதைக் காட்டிலும் ஆழியாளை முதன்மைப்படுத்தியது தான் காரணமாக இருப்பது ஒரே சமயத்தில் எனக்கு வியப்பையும் நிறைய சந்தேகங்களையும் எழுப்புகிறது. பெண்ணியக் கவிதை மீதான அக்கறையோ தேர்ச்சியோ சிறிதும் ஏதுமில்லை. நிரூபன், தன் ஆதிக்கச் சிந்தனையை நிரூபிக்க இவ்வளவு போராடவேண்டியதில்லை. உங்கள் களம் வேறு என்பதையும் தாழ்மையுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

ஆழியாளின் வழியாக, கவிதைத்தளத்திலும் பெண்ணியத்தளத்திலும் நிகழ்ந்த நகர்வுகள் துல்லியமானவையும் வெளிப்படையானவையும்! நான் வியந்து மிகையாகச் சொல்வதற்கும் ஏதும் இல்லை. இம்மாதிரியான பெண்ணிய அசைவுகளில் அதிலும் கவிதைகளில் நிகழ்வது என்றால், அவை நாம் எல்லோருமே கொண்டாட வேண்டிய நகர்வுகள் தாம்! அம்மாதிரியான நகர்வுகளை தங்கள் சுய மொழியால் கவிதை வடிவத்தால் ஏற்படுத்தியவர்களை மட்டுமே அடையாளப்படுத்துவது என் முயற்சி! விடுபட்டவர்கள், வேறொரு பொருள் கொண்ட அத்தியாயத்தில் ஒருங்கிணையலாம்.

இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமெனில், கடந்த காலக் கவிதை வரலாற்றில் பெண்ணியச் சிதைவுகள் நிகழ்ந்ததை விளக்கியும் ஒரு தொடர், இக்கட்டுரைத் தொடருக்கான எதிர்த்திசையில் எழுதமுடியும். ஆனால், அது என்னுடைய நோக்கமன்று. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனின் ஈழத்து கவிதை வளர்ச்சி மற்றும் பிற ஈழக்கவிதை மரபுகள் குறித்த பேராசிரிய ஆய்வுகளை எல்லாம் நானும் வாசித்திருக்கிறேன். அவற்றின் பேராசிரியத்தன்மை நிஜமாகவே அலுப்பூட்டுகின்றது. அம்மாதிரியான கட்டுரைகள் வழியாக ஈழக்கவிதையின் ஒட்டுமொத்த கவிதைப் புலத்தையும் முன்வைப்பதும் இத்தொடரின் நோக்கமன்று. அதுமட்டுமன்றி, கவிதையை வாசிக்கும் போது பெறும் உணர்வெழுச்சியையும், அரசியல் கிளைத்தல்களையும் அவ்வாய்வேடுகளில் என்னால் ஒருபோதும் நுகரவே முடிந்ததில்லை. கவிதைகளே தமதளவில் முழுமையும் உணர்வெழுச்சியின் சுனைகளாக இருக்கும் போது எனக்கு இந்தப் பேராசிரிய ஆய்வுகள் எந்த வெளிச்சத்தையும் கொடுத்ததில்லை. ஆழியாளின் நூலில், மதுசூதனன் எழுதியிருந்த கட்டுரையின் நேர்மையான குரல் மட்டுமே என் உற்சாகத்திற்குத் துணை சேர்வதாக இருந்தது என்று சொல்லலாம். மொழியின் வழியாக, கவிதை என்று சொல்லிப் பிரசாரம் செய்தவர்கள் இக்கட்டுரையின் பொருளுக்குள் அடங்கமாட்டார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.

மேலும், இம்மாதிரியான வரலாற்றுப் படிநிலைகளுக்கு அழுத்தம் கொடுத்து, அழுத்தம் கொடுத்தே, கவிஞர்களின் தனித்துவ முயற்சிகள் அதிலும், பெண்ணிய முன்னெடுப்புகள் நிகழ்த்தியவர்களின் சித்தாந்தங்களை விவாதத்திற்கு உட்படுத்தாததாலும், சமூகத்தின் இயக்கங்கள் உள்வாங்கிக் கொள்ளாததாலும் அம்முயற்சிகள் முனைமுறிந்து போயின. நீங்கள் முன்மொழிந்திருக்கும் தொடர் கருத்துரைகள் எல்லாமே ஆதிக்கச் சிந்தனைப் புரையோடியவையாக இருக்கின்றன. வரலாறு என்பதற்கு அழுத்தம் கொடுத்து, தனி நபர் படைப்பாற்றலை விவாதப்பொருளாக்குவதைச் சிதைக்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட தமிழ் என்னும் அடையாளம் குறித்த விவாதத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இங்கு நீங்கள் காட்டும் பொருத்தங்கள் தெளிவற்றும் பொருள் மயக்கங்களோடும் விரிகின்றன என்பதால், நீங்கள் வந்து நிற்கும் இடத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டு எழுதுங்கள். அல்லது, நீங்கள் விரும்பும் பொருளில் தொடரொன்றை எழுதுங்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, கவிதையையும் அதன் அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கும் நான் கவிதை பற்றிய எந்த நூலையும் தவறவிடுவதில்லை. விவாதத்தையும் தவறவிடுவதில்லை. நிரூபன் குறிப்பிட்டிருக்கும் நூல்களையும் வாசித்திருக்கிறேன். அதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆதாயங்களை ஒரு விவாதமாக்கவும் விமர்சனமாக்கவும் என் இடம் இது இல்லை என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். ஆனால், நூல் வடிவிலும், கட்டுரை வடிவிலும், தனிமனிதக் குரல் தொனியிலும் வரும் அவதூறுகளுக்கு நான் இது வரை பதிலளித்ததே இல்லை. புறக்கணித்திருக்கிறேன். அதற்காக என் நேரத்தை ஒரு பொழுதும் வீணாக்கியதில்லை. இது ‘ஆழியாள்’ என்ற, நான் இது வரை சந்தித்திராத, நான் உரையாடியிராத ஒரு கவிஞரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை என்பதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். செவிமடுத்த எல்லோருக்கும் நன்றி! இம்முறை கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகளுடன் வந்திருக்கிறேன்! வாருங்கள், நகர்வோம்!!

***************************

பெண்ணிய இயக்கங்கள், ஒரே நோக்கத்திற்காகப் போராடும் பெண்களை ஒன்றாக இணைப்பவை. இவ்வியக்கங்களில் இணைய முடியாமல் குடும்பத்தின் வலைகளில் சிக்கிக் கொண்ட பெண்கள் எப்படி தங்கள் உரிமைகளை வென்றெடுக்கின்றனர் என்ற கேள்விக்கான பதில்களைத் தேடிப் பெறுகையில், காலந்தோறும் பெண்கள் தம்மீதான குடும்ப வன்முறையை வென்ற வரலாற்றையும் பெறலாம். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் எங்குமே ஆவணப்படுத்தப்படுவதில்லை. ஆனால், மானுட இனத்தின் சரிப்பாதியான பெண்ணினம் தம்மீதான எல்லா வகையான வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எவ்விதம் எதிர்த்து நிற்கின்றனர் என்பதை நாம் அறிய பெண்ணெழுத்து மிகத் துல்லியமான ஆவணமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

எழுத்தைத் தன் போராட்டத்திற்கான ஆயுதமாகக் கொண்டு, தான் சார்ந்த குடும்பம், மதம், தன் இருப்பு இவற்றுடன் தொடர்புடைய அடிமைத்தனங்களை தன்னளவிலும் தன்னைச்சேர்ந்த பெண்கள் அளவிலும் புரிந்து கொண்டு மொழி வழியாக அவற்றை எதிர்க்கும் ஒற்றைப் பயணம் என்பதை நிறுவுவதாய் உமா மகேஸ்வரியின் எழுத்து தொடர்கிறது. தன் வீட்டை எல்லையாகத் திணித்த தன் இருப்பை மீறும் எழுத்தைப் படைப்பவர் இவர். குடும்பத்திற்குள் நின்று இயங்கும் பெண்கள் தம் உயிரைப் பேணுதலை மட்டுமே அதிகபட்ச உரிமையாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், தம்மீது திணிக்கப்பட்ட தாய்மை எனும் மதிப்பையும், மனைவி எனும் பாரத்தையும் ஒரே சமயம் சுமக்கவேண்டியிருக்கிறது. குடும்பம் எனும் மண்டபத்தின் தூண்களாக எழுந்து நின்று தோள்களில் அதன் விதானத்தைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றிலிருந்து விட்டேகும் விடுதலைக்கான கற்பனைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய கற்பனைகளை எவரும் அவர்களிடமிருந்து அபகரித்துவிடவே முடியாது. விடுதலைக்கான கற்பனை தான் பெண்ணெழுத்தின் சீரிய நெடுஞ்சாலை.

உமா மகேஸ்வரியின் எழுத்து வீட்டுக்குள்ளேயே தன் முழு காலத்தையும் கழிக்க வேண்டியதொரு பெண்ணின் சிந்தனைகளை அன்றாடம் எழுத்தாக்குகிறது. எதிர்ப்பின் தொனியாக்குகிறது. கற்பனைகளின் வெளி கொண்டு அச்சூழலின் இறுக்கத்தை வெல்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ‘அன்றாடம்’ என்பதன் அரசியலைப் புரிந்து கொள்ள பெண்ணெழுத்து தான் உதவுகிறது. நாட்குறிப்புகள் என்றும் அழுகைப் புலம்பல்கள் என்றும் விமர்சிக்கப்பட்ட பெண்ணெழுத்து, மறுக்கப்பட்ட அவற்றிற்கான வெளியாக எழுத்தைக் கண்டுகொண்டது தான் பெண்விடுதலையின் தொடக்கம். தினந்தோறும், தான் காண நேரும் ஜன்னல் சட்டமிட்ட காட்சி, அடுப்பு மேடை, படுக்கையின் எல்லை, ஒரே மாதிரியான தோசைகளை உருவாக்கும் பணி ஆகியவற்றிலிருந்து விடுபட, ஜன்னல் கம்பியில் வந்து அமரும் ஒரு சிட்டுக் குருவி போதும். அது சிறகடித்துப் பறக்கும் வெளியைத் தனதாக்கிக் களிக்கும் கற்பனை போதும், விடுதலையைத் தொடங்க!

எனது நதி

சிறுவயதில் பார்த்த போது
அம்மாவின் புடவையென
அலையோடிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்;
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப்பாய்ந்து மிரட்டும்.
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு.
வேறுதிசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பி வந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுந்த அடி நீரோட்டத்தோடு

எனது நதி என்ற இக்கவிதை ஒரே சமயத்தில் நதியின் அடையாளம் தூர்ந்து போவதையும் அம்மாவின் புடவை வேறுருக் கொண்டு மாற்றமடைதலையும் ஒப்புமைப்படுத்துகிறது. ’பெண்மை’ என்பதன் மீது திணிக்கப்பட்ட தொடர் மாற்றங்களையும் திரிபுகளையும் சொல்லியிருக்கிறார். அவரது நதியின் பண்புகள் இன்னனம் தாம் அவருக்கு அர்த்தமாகியிருக்கின்றன என்பதைக் கவனப்படுத்துகிறார். இம்மாதிரியான புறவுலக மாற்றங்களை அகப்பண்புகளுடன் தொடர்புப்படுத்தும் பணியை உமா மகேஸ்வரி தொடர்ந்து தன் கவிதைகளில் செய்த வண்ணம் இருக்கிறார். இது ஒருவகையான சங்கேதங்களைத் தனக்குத்தானே நிகழ்த்திக்கொள்ளும் வெளிப்பாடு. இதுவே கலையுருவம் கொள்கிறது கவிதையில்.

பெண்களின் மாதாந்திர உதிரப்பெருக்கை, ‘பெரும்பாடு’ என்கிறது சித்தமருத்துவம். பெண்களின் உதிரப்பெருக்கு பெண் கவிதைகளாக்கிய போதெல்லாம் அதன் வலியும் அதை ஒட்டிய உடற்சங்கடங்களுமே பதிவாகியிருக்கின்றன. இங்கு உமா மகேஸ்வரி, அந்நிகழ்வின் காலாகாலங்களையும் தாமதங்களையும் காலம் தாண்டித் தொடர்தலையும் அரசியலாக்குகிறார். பெண்களுக்கு இடையிலான ’பேத அரசியல்’ என்பதே ஆண்களைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளும் ஹார்மோன் அரசியலைத் தான் அடிப்படையாகக்கொண்டது. இவர் கவிதையிலும் மாமியார் கேட்கிறார்: ’மாமியாரின் ஆதங்கமோ ‘இன்னும் வருதா’ என.’ தனது இழப்பில் கொள்ளும் கவலையினும் இன்னொருவரின் அனுபவிப்பின் மீது கொள்ளும் ஆற்றாமை. இது நான் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளபடி, குடும்பத்தைத் தொடர்ந்து இயக்குவதற்கு மாமியாரையும் மருமகளையும் ஒருவருக்கொருவர் எதிரான நபர்களாய் நிறுத்தி ஆதாயங்களை அறுவடை செய்யும் நிகழ்தகவு. இதில் பெண்ணினம் பகுக்கப்படுவதுடன், ஒரே மாதிரியான பிரச்சனைகளையே இருவருமே அனுபவித்தாலும் அங்ஙனம் அடையாளம் காணமுடியாதவாறு முகம் பார்க்கும் கண்ணாடிகளைத் திருப்பிவைக்கும் ஆதிக்கத்தந்திரம். ’காட்டுத் தீ மரமோ பருவங்களைக் கவனியாது பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.’ என்ற தன் ஆதங்கத்தைப் பதிலாக்கி விடுதலையுறுகிறார்.

பூத்தல்

சிறுமியில் ஆரம்பித்தபோது
‘அதற்குள்ளேயா” என
அம்மாவின் பதற்றம்.
அடுத்தடுத்த மாதங்களில்
‘இன்னும் வரவில்லையா?’
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்.
மாமியாரின் ஆதங்கமோ
‘இன்னும் வருதா’ என.
தனியாய்ப் போனால் பிடிக்கும் முனி,
தலை குளியாதிருந்தால் அடையும் தேள்கள்
என்று நீளும் கதைகளில்
குத்திக் கோர்த்தெடுக்கப்பட்ட என் தினங்கள்.
காட்டுத் தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.
நான் நடமுடியாது
என் இஷ்டப்படி பூக்கும்
எந்த நாற்றையும் என்னுள்.
மஞ்சளில் ஆரம்பித்து
ஆரஞ்சில் ஆழ்ந்து
குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது
உபயோகித்த சானிடரி நாப்கின்களைக்
கொளுத்திய தீ

சிலந்தி

எனக்குள் இருக்குமொரு சிலந்தி
எப்போதும் வலை பின்னியவாறே.
மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக்
காத்துக் கிடக்கும்.
நினையாத் தருணங்களில்
எதிர்முகத்தில்
கொடுக்கைச் சுழற்றி
சொடுக்கும் வார்த்தை நஞ்சை.
சின்னஞ்சிறு கனவுகளையோ,
எண்ணற்ற விரல்களால்
நசுக்கி விழுங்கும்.
வெறுப்பென்றும் கோபமென்றும்
மறைகுணங்கள் மிகைத்து
குறுக்கும் நெடுக்கும் திரியும் ஊர்ந்து
இரவின் அமைதிகளில் விழி வழி நகர்ந்து
உலகைப் பார்க்கும்.
கண்ணாடிக் காகிதத்துள்
பொத்திய மலர் போன்று
அழகு காட்டும் சிலசமயம்.
விலக்கவே விருப்பமெனினும்,
பழகிப் பழகியே
பரிச்சயமாற்று தினமும்
எதுவும் செய்யக்
கூடுவதில்லை என்னால்
என்னுள் இருக்கும்
இந்தச் சிலந்தியை

தோசை என்பதைப் பெண்ணடிமைத் தனத்தின் குறியீடாக்கி நோக்கும் கவிதை! அதன் வடிவையும் தன்மையையும் பெண்மையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இக்கவிதையை வாசிக்கையில், பெண்கள் தங்கள் வாழ்வில் கணவனுக்காகச் சுடவேண்டிய தோசைகளின் எண்ணிக்கையற்ற தன்மையைப் பேசும் அம்பையின் சிறுகதையொன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் உமா மகேஸ்வரியின் ’தோசை’, கவிதையின் நவீனத்துவத்துடன் பிரச்சனையைத் துலங்கவைக்கிறது.

தோசை

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்
விளிம்பு தாண்டாதது அவற்றின் விட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒரு போதும் இழப்பதில்லை மென்மையை.
விரிவும் திருப்பமுமற்ற
வெற்றுச் சுழற்சி.
எதனோடும் இணைந்து போகும் சுயமின்மை.
இழப்பின் விழிப்பற்று
மூடிக்குள் புழுங்கி வேகும்.
உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
சுருட்டித் திருப்புகையில்
சோர்ந்த முனகலன்றி
வேறெதுவும் சொல்லாதவை.
நகர்த்தவில்லை அவற்றை,
நவீன வகைப்படுத்தல்கள்
நிஜமான சுதந்திரத்துள்.
வருடங்களால் வளர்ச்சியுறாது,
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.

இன்றைய காட்சி

நிராசைகள் கொப்புளிக்கும்
நம் படுக்கையில் நிகழ்த்துவோம் இன்றும்
திரை நியமங்கள் விலகாத
எண்ணிக்கையில் வராத இன்றைய காட்சியை.
நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை
ராஜபாட்டையென்று கருதி
நிறுவிக்கொள்கிறாய் நீயாகவே
இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.
அனுசரணைகள் பூசிமெழுகல்கள்
சம்பிரதாயங்கள் சமரசங்கள்
மூடிய புதைகுழிகளினூடாக
அடையமுடியாது நாம் என்றைக்குமே
ஆதிக்காதலின் வனத்தை
புதர்கள் தாண்டிப் பூத்த உச்சி மலரை
செய்வதொன்றுமில்லை இனி
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்
சில்லிடும் தரை
ஒண்டிய சுவர்.
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்.

மேற்கண்ட கவிதையில், ‘சில்லிடும் தரை / ஒண்டிய சுவர்’ என்ற முந்தைய வரிகளிலேயே சுருண்ட பூனையின் உளைச்சல்களை உணரமுடிகிறது பாருங்கள். ’நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை / ராஜபாட்டையென்று கருதி / நிறுவிக்கொள்கிறாய் / நீயாகவே / இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.’ ஆணுடனான பாலுறவின் இலக்கணத்தை விமர்சிக்கிறார். ஆணே நிர்மாணித்த சுலபப்பாதையை ராஜப்பாட்டையென்று கொள்ளுதல் தான் பாலியல் உறவிற்காக ஆண் கொண்டிருக்கும் நியமங்களில் முதன்மையானது. அப்படியான ஒருதலைப்பட்ச நியமம் கொண்ட உறவில் ஆதிக்காதலின் எந்தச் சுவடும் சுகமும் இருக்கமுடியாது. ’இன்றைய காட்சி’யின் தொடர்ச்சியாக உணரப்பட்ட இன்னொரு கவிதை.

முத்தங்களின்றி புகையும் நம் உடல்களைப்
புணர்ச்சிக்கு நகர்த்தலாம்;
மூலைகளில் உறைந்த பல்லியின்
மேற்செதில்களைப் போல்
அருவருப்பூட்டுகின்றன
உள்ளூர இந்த பாவனைகள்.
கனவின் தளிரசையும் பள்ளத்தாக்குகள்.
பிரியத்தின் நுனியிலாடும் வெறிக்கூர்மை;
நனைந்த வானம் விலக்கிவரும் மெதுவெயில்;
பட்டாம்பூச்சியின் நிற நிழலாடும் தோட்டச்சுவர்
எல்லாவற்றிலும் ஒரு தகரத்தன்மை ஏறுகிறது
பகல் சரிகிறது மெல்ல

அடி

நூற்றாண்டுகள் கண்ட
சாட்டைகள், சவுக்குகள்
ஈட்டிகள், கத்திகள்
எல்லாம் உண்டு அதில்; அடி

உன் வலு காட்டும்
வழி மட்டுமன்று,
என் பலவீனத்தை அடிக்கோடிடும்
வகையுமாகும்; அடி

மழுங்கிய உணர்வுகளை
மாற்றிக் கூராக்கும்;
எதிர்த்துக் குத்தவோ
எதையேனும் தைக்கவோ.
எனவே, மீண்டும்..
தழும்புகள்
கண்ணீர் பெருக்கவென்பதோடு
கலகம் துவக்கவும்
காரணமாகலாம்

தொடல்களை இனிமையற்றதாக்கும்
அடிகளாலான வலி.
நம் தூரம் நீட்டி
என்னை விடுவிக்கும் எதிலிருந்தாவது.

ஒருவேளை உன் மொழி
அதுவென்றால்
வேறெப்படிப் பேசுவாய் நீ?
ஆகவே, அடி.


’அடி’ என்பதே ஆணின் மொழியாக இருப்பதன் முரண் நியாயங்களை எழுதும் கவிதை இது. குடும்ப வன்முறை என்பது இன்றும் பேசாப்பொருளாக இருக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு பால்நிலைப் பயிற்சிப்பட்டறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தேன். அதில் ஓர் அமர்வில், அவரவர் உடல் குறித்த துன்பங்களையும் அவற்றிற்கு அடிப்படையான காரணங்களையும் ஏதேனும் படைப்பாக்க வடிவில் வெளிப்படுத்த வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட இருபத்திநான்கு வயதுப் பெண், இரு குழந்தைகளின் தாய். கணவன் குடித்து விட்டு வந்து அவளிடம் காசு கேட்க, இல்லையென்பதால் கணவன் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்படுகிறாள். இதில், மாமியாரும் கணவன் பக்கம் நின்று அவளை விரட்டுகிறாள். கொட்டும் மழை. நடுநிசி. தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறாள். அவளையும் குழந்தைகளையும் கண்ட அவள் பெற்றோரோ, ‘இது உன் குடும்பத்தின் பிரச்சனை. நாங்கள் தலையிட உரிமை இல்லை’ என்று கதவைச் சாத்திக்கொள்ள அவள் முழு இரவும் தன் குழந்தைகளுடன் தெரு ஓரக்கடையின் தாழ்வாரத்தில் கழிக்க நேர்ந்த தன் வரலாற்றைப் பகிர்ந்தாள். குடும்பத்தின் வன்முறை பலமுனைகளைக் கூர்மையாகக் கொண்ட ஆயுதம் என்பதைச் சொல்லும் இக்கதை உடனே அங்கிருந்த நாடகக் கலைஞர்களால் அவள் விருப்பத்தின்பேரில் நாடகமாக்கப்பட்டது. மேற்கண்ட கவிதையில், ஆண் அடிப்பதை தன் திசை பொருள் விளக்கங்களுடன் அணுகுகிறார், கவிஞர். அதாவது, ஆண் பேசுவதற்குத் தேர்ந்தெடுக்கும் ஒரே மொழியாக வன்முறையைக் குறிப்பிடுகிறார்.

சிலாம்புகள்

உதிரத்தின் சுவையோடிருந்தது
அந்தக் கூடல்
என்னைக் குத்திய சிலாம்புகள்
பிடுங்கப்படாமலிருந்தன

பயணக்களைப்பையும்,
ரணங்களின் நோவையும்,
பசிக்கும் வயிற்றையும்,
உன் கண்ணசைவு
புறக்கணித்தது.

தகிக்கும் உடலைத்
தண்மைப்படுத்தவில்லை
குளிர்சாதன இயந்திரம்.
பிரிபடாத உணவுப்பொட்டலம்
பேசித்தீர்க்காத உணர்வுகள்
முத்தங்களால்
மாறி மாறித் தாக்கிக் கொண்டோம்
ஒருவரையொருவர்

கொன்ற கோழியிறகுகளைப்
பிய்த்தெறிவது போல்
என் ஆடைகளை.
நாம் தழுவத் தழுவ
அவை நழுவிவிட விரும்பினேன்
தானாகவே

பகலொளி படக் கூசும் என் உடல்.
படபடத்து அதிரும் சுவர்கள்,
மோகம் பருகும்
என் மூடிய கண்களும்
உன் திறந்த பார்வையும்.

இறுகித் தவிக்கும் மனம்
உன் வருடலின் ஆறுதல் தேட
தேகமோ இளகிவிடுகிறது
வெண்ணையில் செய்த மலராக
உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.

காதல் தனக்குள் பொதிந்த வன்முறைகளுடன் வெளிப்படுவதைக் கவிஞர், அக்காதல் வெளிப்படும் அவசர உணர்வின் வேகத்துடனேயே வெளிப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் புறக்கணித்து வெளிப்படுத்துவதிலேயே வேகமாய் இருக்கும், காதல். வன்முறைக்கான தடங்கள் இடம்பெற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள்! ‘உதிரத்தின் சுவையோடிருந்தது / அந்தக் கூடல் / என்னைக் குத்திய சிலாம்புகள் / பிடுங்கப்படாமலிருந்தன’

அடுத்து, ‘முத்தங்களால் / மாறி மாறித் தாக்கிக் கொண்டோம் / ஒருவரையொருவர்’.

தொடர்ந்து, கொன்ற கோழியிறகுகளைப் / பிய்த்தெறிவது போல் / என் ஆடைகளை. / நாம் தழுவத் தழுவ / அவை நழுவிவிட விரும்பினேன் / தானாகவே.’

’உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.’ என முடிக்கிறார்.

தன் நிராசைகளைத் தொடர்ந்து பதிவு செய்தலையே தன் விடுதலைக்கான வழியாகக் கொண்டிருக்கிறார் உமா மகேஸ்வரி. இதற்காகத் தன் நிராசைகள் என்னவென்று கண்டறியும் அயரா பணியையும் தொடர்கிறார். இவை, எந்தவொரு மனித ஆளுமை பயிற்சி ஏட்டிலும் பட்டியல் பெறுவதில்லை. ஏனெனில், இவை சுயத்தின் நதியில் தீவிரமான தொடர் நீச்சலால் கண்டறியப்படுபவை. தனது தனிமையிடத்தையும் தனிமைத்துவத்தையும் அவர் கண்டு அடையும் மொழி, சீரிய அழகியலையும் பெண்பாற் விசனங்களையும் கொண்டவை. புற உலகத்தைப் புறக்கணித்து, தன்னை அக உலகத்தின் சிலந்தியாக்கிக் கொண்டிருப்பவை. மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக் காத்துக் கிடப்பவை!

புல்

விருட்சங்கள்
விரிந்து கிளைக்க
கொடிகள்
பந்தலைப் பற்றிப் படர
புதர்கள்
போக்கின்றி அடர –
மிதிபடுகிறது; நசுங்குகிறது;
நீரற்று வாடுகிறது;
எனினும் எழுதுகிறது
பசுமையின் வரியைத்
தனியாக –
ஒற்றைப் புல்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: மதுரையில் பிறந்து ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் உமா மகேஸ்வரி ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்புப் பெற்றவர். ’நட்சத்திரங்களின் நடுவே’ (1990), ‘வெறும் பொழுது’ (2002), ‘கற்பாவை’ (2004) மற்றும் ‘இறுதிப் பூ’ (2008) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிரவும் சிறுகதை மற்றும் நாவல் வடிவங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டு நூல்களைப் படைத்திருக்கிறார்.

http://koodu.thamizhstudio.com/thodargal_14_8.php


No comments:

Post a Comment