Monday, April 18, 2011

வலது புறம் செல்லவும் - 4



வலது புறம் செல்லவும் - 4


இயக்குனர் அகத்தியன்18-04-2011, 23:58 PM

இந்த முறை கடவுள் ஒரு அன்னையை அனுப்பியிருந்தார். எழுந்து வணங்கினேன். அடையாளம் தெரியாமல் குழம்பினேன். ``நிவேதிதா’’ என்றார். பேச ஆரம்பித்தார்.

எனக்கு வந்த இடத்தில் விவேகானந்தரின் தோற்றமே முதலில் கவர்ந்து விட்டது. காவியிலேயே தூய்மையாக, ஒரு சிறு கறை கூட இன்றி, அந்த அசத்தலான தலைப்பாகையோடு, அவரைக் காண்பதே ஆரோக்யமாக இருந்தது. இருக்கும் உடையை மற்றவர்கள் மதிக்கும் வண்ணம் அணிந்து கொள்வார். அடுத்து அவரின் செயல்பாடுகள்.

பசிக்கிறது என்றால் கூட லேசாக மேலே பார்த்து ஏதோ விண்ணப்பம் வைப்பார். காலை, மதியம், இரவு மெல்ல மேலே நோக்குகிறார் என்றால் உணவு தேவை என்று அர்த்தம்.

ஏற்கனவே ஆஜானபாகுவான தோற்றம், மிரட்டி விடும் பார்வை. ஒளி என்பது அந்த மகானின் கண்களிலும் உடலிலும் நிரம்பிக் கிடந்தது.

எவ்வளவு பசியாக இருந்தாலும் வாழ்ந்த காலத்தில் அந்த மாமனிதன் பசியோடு இருந்தது தான் அதிகம். என்ன பசியாக இருந்தாலும் அவரின் உணவுப் பழக்கம் மிக வித்தியாசமாக இருக்கும் விள்ளல் என்று சொல்வார்களே, அளவாக வாங்கி, விண்டு, சாப்பிட்டு எழுந்துபோய் விடுவார்.

``ஏன்?’’ என்றால், ``ஏன்?’’ பதிலுக்கு அவர் கேட்பது!.

``அளவான உணவுப் பழக்கமே உணவின் மேல் உள்ள பற்றை மழுங்கடிக்கும். எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் இவ்வளவுதான் எனக்கு என்று முடிவு கட்டிக் கொண்டால் அந்த உணவு கிடைக்காதபோது எண்ணம் தேடாது. என்றாவது ஒருநாள் கிடைக்கும்போது ஆவலுடன் எண்ணம் அதை உண்ணாது’’.

எண்ணம் உண்கிறதா?

உள்ளே சமைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது என்றால் உன் நாவிற்கு முன்பே எண்ணம் அதை சுவைத்து விட்டது என்று அர்த்தம். இது அசைவம், இது சைவம், இது காய்கறி, இது பழம் எனப் பிரித்துப்பார்த்து உன் வயிற்றுக்குள் அனுப்புவது எண்ணம்தான் என்பார்.

ஆட்டிறைச்சி, மானிறைச்சி, மீனிறைச்சி எந்த இறைச்சியாக இருந்தாலும் அது சதையே, ஒவ்வொரு சதையும் வேறு வேறு போல் இருக்கும் என்பதும் எண்ணமே. மீன் இறைச்சியைத் தவிர சொல்லாமல் சமைத்து வைக்கும் பல இறைச்சி உணவுகளை யார் முன் வைத்தாலும் பெரிதாக வித்யாசம் காண்பது இயலாது. பிய்த்து சமைக்கப்பட்ட மீன்களுக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.

ஒரு உணவுக்கு அந்த மகான் அளிக்கும் விளக்கத்தைக் கேட்டு விட்டால் உடனடியாக உணவின் மேல் உள்ள பற்று யாருக்கும் போய்விடும். எங்கோ சமைக்கும்போது நாவில் உமிழ்நீர் ஊறுவது கூட நமக்கு அவமானமாகத் தோன்றும். ``அய்யோ. எண்ணம் உண்கிறது’’ என்று.

இப்படி இதுபோல் பொருட்களின் மேல் உள்ள அவா ஆகட்டும், நில நீச்சங்களில் உண்டான பற்று ஆகட்டும், ஒரு ஐந்து நிமிடம் அந்த மகான் பேசுவதைக் கேட்டாலே போதும்.

அதுமட்டுமில்லை அவர் பேசும் சில சபைகளில் அறுபது வயதுப் பெரியவர்கள் அதிகமாக இருந்தால் அன்று இரவு அவர் வருந்திக் கொண்டிருப்பார். ``ஏன் சுவாமி’’ என்று கேட்டால், இவர்கள் போகும்போது புண்ணியம் தேடிக் கொள்ளும் ஆசையில் வந்திருக்கிறார்கள். மாலை நேரங்களில் இவர்களின் பொழுது போயாக வேண்டும், ஒரு இரண்டு மணி நேரம், மருத்துவர்கள் சொன்னது போல், மதுவை மறக்க வேண்டும், திண்ணைகளில் அமர்ந்து எனது பேச்சுக்கள் பற்றி அவர்களது அறிவை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், ``விழலுக்கு இறைத்த நீர்’’ என்பார்.

``நான் பேசுவது இளம் ரத்தங்களுக்கு உரித்தானது. இளம் ரத்தங்கள் உலகை மாற்றும் சக்தி கொண்டவை’’. நிறைந்த கூட்டமாய் இருக்கும் சபைகளில் அவர் பார்வை மகாராஜாவே அமர்ந்து இருந்தாலும் இளைஞர்களைத்தான் தேடும். என்று சொல்லி

``உன் பார்வையும் இளைஞர்கள் மீது இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டுப் புன்னகையுடன் புறப்பட்டார் அன்னை..

நண்பர்களே..

நிறைய நட்புக்களைப் பார்த்திருப்பீர்கள். நண்பனைத் தேடி இருப்பீர்கள். நண்பனாய் இருந்திருப்பீர்கள். ``அக நக’’ நட்பும், ``இடுக்கண் களைகிற நட்பும்’’ கண்டு ``நவில்தொறும் நூல்நயம்’’ உணர்ந்திருப்பீர்கள். நட்பு (Friendship) நட்பாராய்தல் (Choosing) பழமை (Old Friends) தீ நட்பு (Bad Friends) கூடா நட்பு (False Friends) என்று நட்பைப் பற்றி ஐந்து அதிகாரங்களில் பேசுகிறது வள்ளுவம்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்புதான் எனக்குக் காதல்கோட்டை கதை கொடுத்தது. கோகுலத்தில் சீதையும் நான் சந்தித்த நட்பின் கதைதான். ஆனால் நான் சந்தித்த, மிகச் சிறந்த, உயர்ந்த, கதைகளிலோ, எடுக்கவோ கோர்க்கவோ என்ற மனநிலையிலோ, செஞ்சோற்றுக் கடன் தீர்த்த சூழ்நிலையிலோ காணக் கிடைக்காத நட்பைப் பற்றி நான் இப்போது பேசப் போகிறேன்.

அது எனது பள்ளிப் பருவம். உயர்நிலைப் பள்ளி மாணவன் நான். என் முதல் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை, பள்ளி நேரம் போக மீதி நேரம் கழிந்தது எனது அத்தானின் முடிதிருத்தும் கடையில் (Saloon), அங்கு நான் சந்தித்தவர்களே இதுவரை என்னை சிந்திக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பிய மாலைவேளை, கூட்டம் இல்லாத நேரம், பக்கத்து கிராமத்தில் இருந்து ஒருவர் வந்தார். நான் கடையின் மூலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். தனது முன் நெற்றி வழுக்கை விழாத் தலையில் ஒரு சுடப்படாத அப்பளத்தின் பாதிபோல், முடியை அகற்றி வழுக்கை ஏற்படுத்தி இருந்தார். இரண்டு மூன்று நாட்கள் தாடிபோல் அந்த அரை அப்பள முன் மண்டையில் முடி முளைத்து நின்றது. கடைக்குள் வந்து அமர்ந்து முண்டாசு அவிழ்த்தபோதுதான் அது தெரிந்தது. அங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கு அந்தக் காட்சி கேள்விகளை எழுப்பியது. நானோ பதில்களுக்காக காத்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த அரை அப்பள முன்மண்டைக்கு அவரது கிராமத்தில் நிறைய நண்பர்கள். ஒரு மாலை வேளை. ஏரிக்கரையோரம், செடிகள் மறைவில், காலையில் கழிக்க முடியாத கடனை மாலையில் கழித்துக் கொண்டிருந்தார்.

இவரின் நண்பர்கள் இருவர். ஒருவருக்கு ஒரு பெண் மேல் காதல், கிராமத்தில் காதல் என்பது காமம் சார்ந்தது. வைக்கோல் போரில் முட்டை ஒளித்து வைத்து காதலனின் உடல் தேற்றும். பத்துப் பேருக்கு மத்தியில் பெண்ணின் கையிலிருக்கும் குழந்தையை வாங்கும்போதே அவள் ஜாக்கெட்டுக்குள் பணம் சொருகும். யாருமில்லா நேரத்தில் வயல்காட்டில் புல் அறுத்துக் கட்டிய அந்தப் பெண்ணின் தலையில் புல்லுக்கட்டை தூக்கி வைத்து பட்டென்று தள்ளிவிட்டு கட்டிப்பிடித்துக் கொள்ளும். வெட்ட வெளியில் வினாடிகளில் ஆடையுயர்த்தி.. கால் பரப்பி காமம் தணிந்து கோழியாகும். எல்லாம் முடிந்து. யாருக்கும் தெரியாமல் பப்பாளிக்காய் தின்று, உதிரம் கக்கி, கன்னிமை காப்பாற்றி ஒரு நாள் மாங்கல்யம் வாங்கி அடுத்த ஊர் போகும்.

அரை வழுக்கை செடிக்குள். கரையில் இரண்டு நண்பர்கள்.

ஒருவன் சொன்னான் இரவுகளில் நான் என் காதலியை தேடிப் போவேன். கதவு திறந்திருக்கும். கதவருகே படுத்திருப்பாள். தொடுவேன். என் முன் நெற்றி வழுக்கையைத் தடவுவாள். அனுமதிப்பாள்.. இணைவேன்.. (இணைவோம் இல்லை) பிரிவேன்.’’

செடிக்குள் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். உடல் மலம் கழுவி, மனமலம் சேர்த்து வெளியே வந்தான். பேச்சுக் கொடுத்தான். பேச்சு விவாதம் ஆகியது. அந்தப் பெண் பொருளானாள். செடிக்குள் இருந்த நண்பன் சவால் விட்டான். ஒரு மாலைப்பொழுதில் அவள் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை இருவரும் பார்வையிடுவோம். அன்று இரவு அதைக் கழட்டிக் கொண்டு வந்து நான் காட்டுகிறேன் என்று.

ஒரு மாலைப்பொழுது கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த அந்த ஜாக்கெட் இருவரின் பார்வைகளில் பதிவு செய்யப்பட்டது. இரவு வந்தது. வழுக்கைத் தலையனின் வழுக்கைபோல சவால்விட்டவன் ஒரு சலூனில் அமர்ந்து அப்பளத்தின் அரை வட்டவடிவமாக தன் முன் மண்டையில் இருந்த முடிநீக்கினான். இரவில் சென்று தான் செடிமறைவில் ஒளிந்து கேட்டதுபோல் அடிநீக்கினான். மடி நீக்கினான். அவள் நெற்றி தொட்டாள். வழுக்கையை வழுக்கிக் கொண்டாள். ஜாக்கெட்டை திருடி, நண்பனிடம், உடுக்கை எடுத்தவன் என்றான்.

``உடுக்கை எடுத்தவன் கையாலே ஆங்கே
இடுக்கண் விளைத்ததாம் நட்பு’’

இந்த உயர்ந்த நட்பை இன்று நினைத்தாலும் நண்பன் என்பவன் ஜாக்கெட் கழட்டுபவனோ என்று எனக்குத் தோன்றும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே தர்மபுரி பெண்ணாகரம் தாண்டி ஏரியூர் என்னும் இடத்தில் இருந்து நண்பர் விஜயன் ``நண்பா.. எப்படி இருக்கீங்க’’ என்று அழைத்தார். காலையில் பேசுகிறேன் என்று கைபேசியை துண்டித்தேன்.

``நண்பன் ’’ என்பது பற்றியும் ``தோழி’’ என்பது பற்றியும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. கிட்டதட்ட பனியுகம் (Ice Age) முடிய ஆரம்பித்து மனித இனம் விதைக்கப்பட்டது. சந்ததி பெருகியது.

பெண் தலைமையேற்றாள். வேட்டையாடினாள். உணவு கொணர்ந்தாள். மனித இனம் ஆங்காங்கே சந்ததியைப் பெருக்கியது. கொடுமையான மிருகங்களின் தொல்லை. ஜந்துக்களின் தொல்லை. மழை, பனி போன்ற சீற்றங்களின் தொல்லை. பனி என்றால் நடுநடுங்க வைக்கும் குளிர்.

மனிதர் குழுக்களாக ஆயினர். அந்தந்தக் குழுவைத் தவிர எந்தக் குழுவும் வேறு எந்த குழுவோடும் பழகாது. தங்களின் கூட்டத்திலேயே இரண்டு குழந்தைகள் மேலும் பெருகிவிட்டால் பங்கு போட இரண்டு வந்து விட்டதே என்று அஞ்சுவார்கள். சில குழுக்களில் தலைவி வேட்டையாடிக் கிளம்பி திரும்பி வருவதற்குள் குழந்தைகள் கொன்று வீசப்பட்டன.

அதீத அவாவோடு அதிக மாமிசம் தின்னும் ஒருவன் கூட்டத்தில் இருந்தான். தலைவி எல்லோருக்கும் போதுமான அளவு கொடுத்து அவனைத் தனியாக மண்டிபோட வைத்து மீதம் இருப்பதைக் கொடுப்பாள். நாளடைவில் அளவு தீனிக்கு அவன் பழகிக் கொள்வான். பழக இயலாதவன் தனியே பிரிந்து செல்வான். எங்காவது ஒரு தனிப்பெண் கிடைப்பாளா! (வேட்டை ஆடி உணவு தர) எந்தக் குழுவாவது தன்னைச் சேர்த்துக் கொள்ளாதா?

பசியிலும், பனியிலும் விறைத்து எங்கோ ஒரு குழுவைப் பார்த்துவிட்டால் பசிகூட இரண்டாம பட்சம்தான், எரியும் நெருப்புக்கு அருகில் இடம் கொடுக்க மாட்டார்களா?

கொடுக்கவே மாட்டார்கள். ஊர்ப்பிடாரியை விரட்டி விடும் என்பதற்காக.

எல்லோரும் தின்ற களைப்பில் தூங்கும்போது ஆப்பிரிக்காவில் (மனித இனம் தோன்றிய முதல் இடம்) அந்த அடர்ந்த காட்டில் ஒரே ஒரு மூர்க்கன் நெருப்பில் காய, பரிதாபமாக தூரத்தில் நின்ற அந்த நாடோடியைப் பார்த்து, என்ன தோன்றியதோ சைகையில் அழைத்து நெருப்புக்கு அருகில் இடம் கொடுத்தான். மொழியறியா காலத்தில் வாய்க்கு வந்த ஒலி எழுப்பும் மன நிலையில் நெருப்பில் இடம் கொடுத்தவனைப் பார்த்து இடம் பெற்றவன் ``நம்பெ’’ என்றான்..

வாய்க்கு வந்த ஒலி அது. முதல் நட்பு தோன்றியது. நம்பெ அந்த நாடோடியைப் பகலில் தன் கூட்டத்தின் கண்களில் மறைத்து, ஒளித்து வைத்தான். உணவு கொடுத்தான். இருவரும் காடு சுற்றினார்கள். பசி வெறி அதிகமுள்ள அந்த நாடோடி மிகத் திறமையாக கல்லால் எறிந்து விலங்குகளை வீழ்த்துவதில் வல்லவன். வீழ்த்தி, நெருப்புக் கங்குகளைத் திருடி `நம்பெ’க்கு கொடுத்தான். நம்பெ கூடவே சுற்றும் அந்தப் பெண்ணுக்கும் கொடுத்தான்.

நம்பெ நாடோடிக்கு தன்னுடன் சுற்றும் பெண்ணைக் கொடுத்தான். அவள் ஒத்துழைத்தாள். அந்த நாடோடி வீழ்த்திய விலங்குகளை நம்பெ தன் கூட்டத்துக்கு கொடுத்தான். பின் அவனைத் தன் கூட்டத்தில் சேர்த்தான். வெகு காலம் கழித்து நாடோடி தன் உறவுகளைப் பார்க்கும்போது நம்பெயை தன் குழுவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். நட்பு காரணமாக உலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு குழுக்கள் இணைந்தன.

பெண்களும், ஆண்களும் தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். உறவுகள் தோன்றியது நட்பில்தான். இந்த உறவுகளில் விரிசல் ஏற்படுவதும் அதே நட்பால் தான்.

மனிதன் தோன்றிய புதிதில் அவனுக்கு நிறைய எதிரிகள் சுற்றிச் சுற்றி வந்தனர். உதாரணமாக கூட்டமாக வரும் விஷத்தேனிக்கள் எதிர்பாரா நேரத்தில் நூறுபேர் கொண்ட குழுவை நொடியில் சாகடித்துக் கொன்றுவிடும். இப்படி நிறைய இருப்பினும் பெண்ணுக்குப் பெண் எதிரி என்பதுதான் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து நியதியாய் இருந்திருக்கிறது. காரணம் வேட்டையாடுவதும், உழைப்பதும், காப்பதும் தாய்களின் கையில் இருந்திருக்கிறது.

வானம் பார்த்து, பருவம் பார்த்து, சப்தம் பார்த்து, இரைச்சல் பார்த்து, வீசும் காற்று பார்த்து, கதிரவனின் நிறம் பார்த்து, இந்த இடத்தில் இதை சுலபமாகத் தட்டலாம் என்று கல் ஆயுதத்தோடு கிளம்பும்போது அதையெல்லாம் பார்த்த இன்னொரு தாய் மிக எளிதாக இரையை வீழ்த்தி இருப்பாள். இவளின் குடும்பம் பல நாள் பட்டினி கிடக்கும். ஆக எங்காவது இருகுழுப் பெண்கள் வேட்டையில் சந்தித்து விட்டால் கொலைவெறித் தாக்குதல் கூட நடக்கும்.

``பசி’’ பசியே முதன் முதலில் பெண்ணைப் பெண்ணுக்கு எதிரியாக்கியது. பத்தாவது மாதத்தில் பிரசவ வலியால் காடுகளில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு குழுவில் உள்ள இன்னொரு பெண் பார்த்தால் போய்க்கொண்டே இருப்பாள். அவளும் எங்கோ துடித்துக் கொண்டிருந்தவள்தான். கடந்து போகிறவள் சிசுவை சுமந்து கொண்டிருந்தாலும் துடிப்பவளுக்கு கருணை செய்ய மாட்டாள்.

அப்படி ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் பார்த்தாள். இருவருமே ஓரிரு முறை மோதிக் கொண்டவர்கள். என்ன தோன்றியதோ அருகே சென்று இளநீரைப் பிளந்து அவள் வாயில் ஊற்றி, இடுப்பில் மிதித்து குழந்தை வெளியே வர உதவினாள்.

சில காலம் கழித்து ஒரு இரைக்காக இருவரும் சந்தித்துக் கொண்டபோது தான் வீழ்த்திய இரையை எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள் வலியால் துடித்தவள். முதன் முதலில் அங்கு நட்பு அரும்பியது. உதவிய பெண்ணை வாய்க்கு வந்தபடி அழைத்த பெயர் "தொலி".

ஒருவருக்கொருவர் உதவினால் பெண்கள் நட்பாகிக் கொள்ளலாம் என்பதும் அங்கு தோன்றியது.

ஓரு ஆழிப்பேரலையில் அந்தப் பகுதி ஆப்பிரிக்காவில் இருந்து பிய்த்துக் கொண்டு வந்து ஆசியாவில் மோதியது. இந்தியா ஆனது. அந்த ``நம்பெ’’யும் ``தொலி’’யும் அந்த நிலப்பரப்பின் தெற்கே வாழ.. அது தமிழகம் ஆனது."நண்பன்".. "தோழி".. என்றானது.

நட்பைத் தொடருவோம்.
அகத்தியன்.


http://koodu.thamizhstudio.com/thodargal_16_4.php


No comments:

Post a Comment