Monday, June 20, 2011

வலது புறம் செல்லவும் - 13 - இயக்குனர் அகத்தியன்



வலது புறம் செல்லவும் - 13


இயக்குனர் அகத்தியன்20-06-2011, 09:50 PM

தாவீதின் குமாரன் சாலமோன் நீதி சொன்ன மண்ணிலே ஓர் குரல் ஒலித்தது.

கடவுளின் கட்டளைக்கு எதிராக செயல்பட்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்ன ஜக்காரியாவை கல்லெறிந்து கொன்ற ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்தக் குரல் ஒலித்தது.

கொள்ளையடிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த அந்த ஆலயம் அன்றைய தினம் சதுசேயர்களாலும் பரிசேயர்களாலும் வியாபாரத் தலமாக மாற்றப்பட்டிருந்தது.

அவர் பேசினார்:

"என் மக்களே துரோகத்துக்குப் பெயர்போன ஜெருசலேம் இது. எத்தனையோ தீர்க்கதரிசிகளுக்குத் துரோகம் செய்திருக்கிறது.

உங்கள் கண்ணெதிரிலேயே யோவானைக் கொன்று புதைத்திருக்கிறது. ரோமானிய ஆட்சி, ஏரோதுவின் திறமையின்மை இவற்றைப் பயன்படுத்தி மதகுருமார்களும் பரிசேயர்களும் உங்களை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட அங்கிகளையும் அதன் மேல் அழகிய வேலைப்பாடுகள் மிக்க மேலாடைகளையும் அணிந்துகொண்டு, வேதங்கள் எழுதப்பட்ட துணிகளை தலையிலும் கைளிலும் சுற்றிக்கொண்டு, ஆடம்பரமான விருந்துகளிலே முதலிடம் பிடித்துக்கொண்டு, கோவிலில் இவர்களுக்காக தனியிடம் ஒதுக்கிக்கொண்டு செல்வச் செழிப்பில் கொழிக்கிறார்கள்.

ஆலயத்துக்குள்ளே வியாபாரம். காணிக்கைப் பொருட்களை மக்கள் வெளியிலிருந்து கொண்டு வரக் கூடாது. ஆலயத்துக்குள்ளேதான் வாங்க வேண்டும். ஏன்? இதிலே அவர்கள் ஆதாயம் பார்க்கிறார்கள்.

கோவிலினுள் மக்கள் பயன்படுத்தும் நாணயம் செல்லாது. சீசரின் நாணயம் மட்டுமே செல்லும். காரணம் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நாணயம் மாற்றுவதிலும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக.

கோவிலுக்குப் பத்தில் ஒரு பங்கு என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மட்டும் சட்டப்படி வாங்கி விடுகிறார்கள். ஆனால், அதில் சொல்லப்பட்ட நீதி, நேர்மை, இரக்கம், முதலானவற்றைக் கடைபிடிக்கவே மாட்டார்கள்.

அவர்கள் போதிப்பார்கள். அதன்படி நடக்க மாட்டார்கள். அவர்கள் கடவுளை வணங்குவது உங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக.

எங்களை குரு என்று அழை, தந்தை என்று அழை என்று மதத்தின் பெயரால் உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

அப்படி அவர்களை அழைக்காதீர்கள். உங்கள் குருவும் தந்தையும் வானகத்தில் இருக்கும் இறைவன் மட்டுமே.

வெளித் தோற்றத்திலே அழகாக உடையுடுத்தி இருக்கும் அவர்களின் மனதிலே சுயநலமும், வன்முறையும் நிறைந்திருக்கின்றன.

உள்ளே எலும்புகளாகவும் வெளியே அழகாகவும் இருக்கின்ற வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைதான் அவர்கள்.

இவ்வாறு நான் பேசுவதால் நான் சட்டங்களை அழிக்க வந்தவன் என்று நினைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றவே வந்தேன். நீங்கள் சட்டம் சொல்வதை நிறைவேற்றுங்கள். ஆனால் அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை மேற்கொள்ளாதீர்கள். அது சட்டத்திற்கு புறம்பானது.

தீர்க்கதரிசிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் வாரிசுகள் நாங்கள் என்று பெருமையடித்துக் கொள்ளும் கூட்டம் அது.

அவர்களுக்குச் சொல்கிறேன். இந்த ஜெருசலேமில் இருந்து கொண்டு, இந்த ஆலயத்தின் பேரால் பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல. இந்த ஆலயத்துக்கும்தான். உங்கள் பாவங்களினால் இந்த திருக்கோவில் இடிந்து விழுந்து ஒரு கல் கூட அதனிடத்தில் இல்லாமல் போகும்.

இந்த உலகத்தைப் பாவங்களிலிருந்து விடுதலை செய்யவே நான் வந்திருக்கிறேன்.

நான் இந்த உலகத்திற்கு ஓர் ஒளியாய் வந்திருக்கிறேன்.

என்னை நம்பாதவர்களின் வாழ்க்கை இருளாகவே இருக்கும்.

உங்களில் யாராவது என் வார்த்தைகளைக் கேட்டு நடக்காவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

நான் உங்களுக்குத் தண்டனை கொடுக்க வரவில்லை. விடுதலை கொடுக்கவே வந்திருக்கிறேன்.

நீங்கள் ஒளியைக் கையில் வைத்துக் கொண்டு இருளில் நடக்கிறீர்கள்.

உங்கள் ஒளி அணையாத ஒளி என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

என்றும் அணையாத ஒளியாகிய கடவுளின் குழந்தைகள் நீங்கள்.

ஒருவருக்கொருவர் உண்மையாயிருங்கள். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வையுங்கள். ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்துங்கள். இந்த மூன்றிலும் அன்பே உயர்ந்தது".

புத்தர் அன்பைப் போதித்த சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு... ஒலித்த குரல் இது.

பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்திலே அந்த ஒளி பிறந்தது. அந்த ஒளியின் பெயர் இயேசு.

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு"

சகிப்புத் தன்மைக்கு இதைவிட அதிகமான வார்த்தை இன்று வரை பூமியில் இல்லை.

"உன்னைப் போல் பிறரையும் நேசி"

நாம் நம்மளை எப்படிப் பார்த்துப் பார்த்து நேசிக்கிறோம். நல்ல உடை, நல்ல சாப்பாடு, நல்ல பெர்ஃபியூம், நல்ல வண்டி, நல்ல அழகான சிவப்பான மனைவி வேண்டும். இப்படி நீ உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதுமாதிரி அடுத்தவனையும் நேசி. அன்பு காட்டுவதற்கு இதைவிட அதிகமான விளக்கம் இல்லை. இதற்கு அடுத்த நிலையில் உள்ளதுதான்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"

"உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல்லை அவள் மேல் எறியட்டும்"

இதற்கு இணையான தீர்ப்பு இன்றுவரை இல்லை.

"கடவுளே இவங்க பண்றது பாவம்னு கூடத் தெரியல. இவங்களை மன்னிச்சுடு"

சகிப்புத் தன்மைக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு உண்டா?

காலங்காலமாக அடக்கு முறைக்கு ஆளான இனம் யூத இனம். எகிப்தை விட்டு வெளியேறி இடம் தேடி அலைந்து, அரசு கண்டு, அடக்கு முறைகளைச் சந்தித்து, நசுக்கப்பட்டு, இறுதியில் ரோமானியர்களின் ஆட்சியில் ஏரோது மன்னனின் அடக்கு முறையில் தங்களை மீட்டெடுக்க ஒரு தேவதூதன் வருவான் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த ஒளி பூமியில் பிறந்தது.

தங்களைக் காக்க ஒருவன் கையில் ஆயுதம் ஏந்தி குதிரையில் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த இனத்திற்கு ஒரு ஏழையின் வீட்டில் தச்சுத் தொழிலாளி மகனாகப் பிறந்து அன்பை ஆயுதமாக்கிய இயேசுவை அடையாளம் தெரியவில்லை. அதனால்தான் வழக்குகளைச் சந்தித்து, நாள் முழுவதும் சவுக்கடி வாங்கி, ஏளனப்படுத்தப்பட்டு, அவமானம் செய்யப்பட்டு, முற்களைத் தலையில் வைத்து அடித்து, சிலுவை சுமக்க வைத்து அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. நீ கடவுளின் குமாரன் என்றால் சிலுவையை விட்டு இறங்கி வா என்று கேலி பேசியது.

மக்களுக்காகப் பேசுகிறான். மக்களாட்சி என்கிறான். யூதக் கொள்கையை எதிர்க்கிறான் என்று பயந்த அரசும், ஆலயக் கூட்டமும் யூதக் கொள்கைகளை எதிர்க்க இனி ஒருவன் பிறக்கவே கூடாது என்று வெறி கொண்டு அடித்தது.

சவுக்கு வேறு. கசை வேறு. ஒரு கைப்பிடியின் கீழ் பத்து சிறு சிறு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு அதில் முழுவதிலும் தாறுமாறாக வெட்டப்பட்ட தகரத் துண்டுகள் இணைக்கப்பட்டது கசை. அந்தக் கசையால் வெறி கொண்டு அடித்தார்கள்.


இயேசுவின் "இறுதிப் பன்னிரெண்டு மணி நேரம்" என்ற நோக்கில் "Passion of Christ" என்ற படம் வந்தது. மெல்கிப்சன் இயக்கியது. பார்த்தால் பல இரவுகள் தூக்கம் கெடும். மெல்கிப்சனிடம் மீடியா கேட்டது. "இப்படியெல்லாமா அடித்திருப்பார்கள்?"

"நான் காட்டியது 50%. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த யூத ராஜாக்களின் தண்டனையை அணு அணுவாக ஆராய்ந்த பின்னேதான் அதில் 50% எடுத்தேன்" என்றார்.

யூதரில் பிறந்த ஒருவன் யூத அஸ்திவாரத்தையே அசைக்கிறான் என்ற வெறியில் கொடுக்கப்பட்ட தண்டனை என்றார் அந்த இயக்குனர்.

இயேசுவைப் பற்றிய செய்திகளை விவிலியத்தில்தான் தேட வேண்டி இருக்கிறது. எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை.

பன்னிரெண்டு வயதுவரை வாழ்ந்த ஒரு சிறுவன் யூதேயாவிலேயோ, அந்த வட்டாரங்களிலேயோ எங்குமே இல்லாமல் போய் மக்களால் மறக்கப்பட்டு, பின் திடீரென்று தோன்றி, மாபெரும் புரட்சிகள் செய்து, பகுத்தறிவு பேசி, மறுபடியும் மறைந்து போன மனிதனை அன்றைய வரலாற்று ஆசிரியர்கள் சட்டை செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அந்த புரட்சிக்காரன் கடவுளாக்கப்பட்டது, கடவுளின் விளையாட்டா, காலத்தின் தேவையா என்பதை நாம் அலசப் போவதில்லை.

ஆனால் 12 வயதில் அறிவும் ஞானமும் ஊற்றெடுத்து ஆலயத்தின் நடுவே நின்று கொண்டு பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் திகைக்கத் திகைக்கப் பதில் சொல்லி விட்டு, எங்கேயோ சுற்றி மீண்டும் வந்து, இரண்டு வருடங்களை அதிர வைத்து இஸ்ரவேலர் பூமியை இவனை அடக்காவிட்டால் சாம்ராஜ்யம் வீழ்ந்து போகும் என்று பயப்பட வைத்து, ஏரோது மன்னனையும் அவனது சகாக்களையும் உடனடியாக இயேசுவை தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்து, இயேசுவுக்கும், அவரின் இயக்கத் தோழர்களுக்கும் வலைவிரிக்க வைத்து, சிலுவை மரணத்தை சந்தித்து, பூமிப்படி உயிர்த்தெழுந்து, அவர்கள் சாம்ராஜ்யத்தில் இயேசு முடிந்து போனார்.

ஆனால் இயேசுவை மக்களிடம் கொண்டு போனவர். St. Paul. அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் பிரச்சாரம். ஒரே ஒரு பால் ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களையும் தன்பால் இழுத்தார்.

சீடர்கள் அதாவது தோழர்கள் பதினோரு பேரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். தோமா இந்தியாவுக்கு வந்து விட்டார். மற்றவர்கள் அண்டை நாடுகளுக்கெல்லாம் தோழனைப் பரப்பச் சென்று விட்டார்கள்.

பால், புனிதப்பால் உயிரோடு இருக்கும் வரை வீதி வீதியாகச் சென்றார். உங்களுக்காக, நீங்கள் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காக, நீங்கள் நோயோடு போராடக் கூடாது என்பதற்காக, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவன் உயிர் நீத்தான்.

பால் எடுத்துக் கொண்டது மூன்று விஷயங்கள்.

எப்படியெல்லாம் பிச்சை எடுத்தீர்கள்?

எப்படியெல்லாம் பிச்சை எடுக்குறீர்கள்?

எப்படியெல்லாம் பிச்சை எடுக்கப் போகிறீர்கள்?

பாமர ஜனங்களின் மனதை அசைத்தார். பேசினார். அறிவுப் பூர்வமாகப் பேசினார். நோயோடு போராடுகிறீர்கள். வறுமையோடு போராடுகிறீர்கள். இரட்சிப்பு யார் தருவார்? ஏன் தருவார்? யார் தந்தார்? எதற்காகத் தந்தார்?

மீடியாக்கள் இல்லை. வாய்வழியாகப் பரப்புவதைத் தவிர வேறு ஊடகங்கள் இல்லை. ஆனால் அந்த வாய்வழிச் செய்திகள் கிரீக் வரை பரவி எதிரொலித்தது. மாபெரும் கிரேக்க மனிதர்கள் எல்லாம் வாழ்ந்த ஒரு மனிதனை - சற்று முன்பே வாழ்ந்த ஒரு மனிதனை - தீர்க்கதரிசி என்றும் இரட்சகன் என்றும் ஏற்று அவரைக் கடவுள் ஆக்கினார்கள். ஒரு புரட்சிக்காரன் செயின்ட் பாலால் கடவுள் ஆக்கப்பட்டார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாமனிதன் புரட்சிகரமாக சிந்தித்திருக்கிறான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் விவிலியம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.

ஒரு பரிசேயன் "நாங்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதா? அரசாங்கத்திற்கு வரி கொடுப்பதா?" என்று கேட்டபோது இயேசு, "இறைவனுக்குரியதை இறைவனுக்கும் அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் கொடு" என்கிறார். ஒரு புரட்சிக்காரன் இறைவனுக்குரியது என்று சொன்னதை காணிக்கையாகவோ பலியாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓரிடத்தில் "விசுவாசம் உள்ளவன் பாக்கியவான். பரலோக ராஜ்ஜியம் அவனுக்குரியது" என்கிறார். கடவுளை நம்பு, உண்மையாயிரு, அன்பு செய் அது போதும். ஆனால் அரசு செயல்பட வரி கொடு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு முக்கியமான விஷயம். இயேசு எதையுமே அவர் சொன்ன ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. கூடவே இருந்த சீடர்கள் கூட எந்த வார்த்தையையும் எழுதி வைக்கவில்லை.

லூக், மார்க், மாத்யூ, ஜான், எபேசியர், எபிரேயர், கொரீந்தியர் போன்ற, அவருடன் முற்றிலும் தொடர்பில்லாத ஆசிரியர்களே விவிலியத்தை எழுதி இருக்கிறார்கள். ஒரு பார்வைக்காக நாம் சில யூகங்களுக்குள் போகலாம். புத்தருக்கு அரண்மனையின் ஆடம்பரம் மக்களைப் பற்றி யோசிக்க வைத்தது என்றால் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்திருக்கும்.

குழந்தை இயேசுவின் தந்தை யோசேப் தச்சுத் தொழிலாளி. தச்சர்கள் பரம்பரையில் வந்த நேர்த்தியான ஒரு தச்சர். பல கிருத்துவ மதக் காலண்டர்களில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். தந்தையும் பாலகன் இயேசுவும் ஒரு வெட்டிய மரத்தை இருபுறமும் பிடித்து இழைத்துக் கொண்டிருப்பார்கள்.

நவீனத் தொழில்கள் அறிமுகம் இல்லாத அந்தக் காலத்தில், பாடசாலைகள் இல்லாத அந்த காலத்தில், மீனவன் மகனாகப் பிறந்தால் தோணியில் ஏற்றிக்கொண்டு தொழிலுக்குப் பழக்குவார்கள். அப்போதெல்லாம் படிப்பு என்பது யூத மதத்தின் வேதங்கள்தான். அதுவும் யூதக் கோவில்களில். தச்சுத் தொழிலும் அப்போது அப்படித்தான். ஏழு வயது முதலே சிறுவர்களை குலத் தொழிலில் ஈடுபடுத்துவது அக்கால வழக்கம். என் நினைவுக்கெட்டிய செய்தி ஒன்று. ராஜாஜி முதல்வராக இருந்த போது அரை நாள் குலத் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் வந்து பின் எதிர்ப்புகளால் திரும்பப் பெறப்பட்டது என நினைக்கிறேன்.

இப்போதும் நீங்கள் ஒரு காட்சியைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு பெண் சமையல் வேலை செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். எப்போதாவது விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களையோ சிறுமியையோ அழைத்து வருவார். அப்போது அந்தக் குழந்தை என்ன செய்யும்? அந்த வீட்டில் L.C.D, Digital T.V இருந்தால் அது ஆச்சர்யமாகப் பார்க்கும். கூடவே ஒரு ஏக்கம் பிறக்கும். கட்டில், மெத்தை, பொமரேனியன் நாய்க்குட்டி, ஊஞ்சல், உயர்ரக துணிமணிகள், என்று ஆச்சரியமும் ஏக்கமும் அந்தக் குழந்தைக்குப் பிறக்கும். அப்படியே சற்று பின்னோக்கிப் போகலாம்.

சுவர்களின் மேலே மூங்கில்களைப் பிணைத்து ஓலைகள் வேய்ந்து வீடுகள் கட்டுவது ஒருமுறை. கான்கிரீட் அல்லது தச்சு வேலை என்பது பணக்காரர்கள் இல்லங்கள் அமைக்கும் போதுதான் அக்காலங்களில் இடம் பெற்ற ஒன்று. தந்தையோடு கைவேலைக்குச் சென்ற இயேசு, மாளிகையின் படாடோபத்தையும் இழைத்து இழைத்து அமைக்கும் அலங்கார வேலைகளையும், அறை எங்கும் நிறைந்த தேக்குப் பொருட்களையும், சீனத்துக் களிமண் ஜாடிகளையும், பெல்ஜியம் கண்ணாடிப் பொருட்களையும் தங்கம் வெள்ளியால் இழைக்கப்பட்ட உள் வேலைகளையும் பார்த்து ஆச்சரியமும் ஏக்கமும் கூடவே வருத்தமும் அடைந்திருக்க வேண்டும். அந்தப் பாலகனுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களும் மழைக்காலங்களில் ஆலயங்களுக்குள் அல்லவா தஞ்சம் அடைய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். தச்சு வேலைக்குச் செல்லும்போது களியோ, ரொட்டியோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டே அறுசுவை உணவுகளை மாட மாளிகை வாசிகள் உண்டிருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளுக்குக் கூட உயர்ந்த ரக உணவுகளை பரிசேயர்கள் கொடுத்திருக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் பாலகன் ஏசுவை சங்கடப்படுத்தி சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஒருபுறம் உழைப்பும் வறுமையும் பசியும் மறுபுறம் அதற்கு நேர்மேறாக உழைப்பைப் பெறுபவர்களின் ஆடம்பர வாழ்க்கை. ஏன் அந்தப் பாலகனை உறுத்தி இருக்கக் கூடாது?

அமெரிக்க மக்களிடையே விவிலியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விவிலியம் வானொலி நாடகமாக 1947 ல் "The greatest story ever told" என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்டது. பின் புத்தகமாகவும், திரைப்படமாகவும், வந்தது. அந்தப் புத்தகத்தில் அதன் ஆசிரியர் Fulton Oursler விவரிக்கும் ஒரு காட்சி.

இயேசு தனது 12 வயதில் ஆலயத்தில் நின்று கேள்விகள் கேட்டதாக விவிலியம் பதிவு செய்திருக்கிறது. நாசரேத்திலிருந்து ஜெருசலேம் செல்லும் அந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் பார்த்த காட்சிகளை அவர் விவரிக்கிறார்.

ஒருபுறம் மாடமாளிகைகள், அரண்மனைப் படாடோபங்கள் மறுபுறம் ஏழைக் குடிசைகள். ஆலயங்களுக்குள் சீசரின் உருவம் பொறித்த நாணயங்கள் மட்டுமே செல்லும். ஏழை மக்களிடம் இருந்து அவர்கள் பணத்துக்கு பாதி மதிப்பான சீசரின் நாணயங்களைக் கொடுத்து ஆலயவாசிகள் வளமாக மாறி இருந்தனர்.

கடவுளை வணங்கச் செல்லும் மக்களுக்கு ஆலயத்துக்குள் எதற்குப் பணம். கடவுளுக்கு பலியிடும் புறாக்களையும், ஆட்டுக் குட்டிகளையும் மக்கள் ஆலயத்துக்குள் விற்பவர்களிடம்தான் வாங்க வேண்டும். அதுவும் 5 மடங்கு அதிக விலை கொடுத்து.

ஆலயத்தில் எங்கு பார்த்தாலும் குருமார்கள். கிட்டத்தட்ட 20000 பேர். அனைவரும் கடவுளின் பேரால் ஏழைகளை ஏமாற்றி வசதியாக வாழ்ந்தனர்.

இன்றும் நிறையக் காட்சிகள். அந்த 12 வயதுச் சிறுவனுக்கு மனதில் கேள்விகள் பிறந்தன.

ஏன் உயிர்களைப் பலியிடுகிறார்கள்? இரத்தத்தினாலும் நறுமணப் புகையாலும்தான் இறைவன் மகிழ்ச்சியடைவார் என்று ஏன் எண்ணுகிறார்கள்?

எதற்காக குருமார்களிடம் இருந்தே அவைகளை வாங்க வேண்டும்? அந்தப் பணத்தை குருமார்கள் என்ன செய்கிறார்கள்? இது கடவுளுக்கு எதிரான செயல் இல்லையா?

இயேசுவுக்கு தான் கற்ற வேதத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.

கடவுள் சொல்கிறார். "நான் உங்கள் மதத்தின் விழாக்களை வெறுக்கிறேன். என்னால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் கொடுக்கும் பலிகளையும், தானியங்களையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கூச்சலிடும் உங்கள் பாடல்களை நிறுத்துங்கள். உங்கள் வாத்தியங்களை இசைக்காதீர்கள். இவற்றுக்குப் பதிலாக நீதியையும், நேர்மையையும் வற்றாத ஜீவநதியாய் ஓடவிடுங்கள்"

இப்படியெல்லாம் இயேசு சிந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு யூகத்தையும் பார்த்து விடுவோம். 12 வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட இயேசுவின் பணிக் காலத்தைப் பதிவு செய்கிறது விவிலியம். பதினெட்டு வருடங்கள் இயேசுவைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை.

12 வது வயதில் சிறுவன் இயேசு எங்கே போனான். வீட்டைவிட்டு தானாகச் சென்றானா? நோக்கத்தின் அடிப்படையில் யாராவது அழைத்துச் சென்றார்களா? அல்லது கடத்திச் சென்றார்களா? அப்படி என்றால் அழைத்தோ அல்லது கடத்தியோ எங்கு கூட்டிச் சென்றார்கள்?

அக்காலத்தில் 12 வயதில் வெகுதூரம் தனியே பயணிப்பதெல்லாம் 98 சதவிகிதம் சாத்தியம் இல்லாத விஷயம். இயலாத காரியம். நவீன போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை. Transport என்ற அமைப்பே இல்லை. கடல் வழித் தடங்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. நில மார்க்கமாகச் சென்றாலும் 12 வயதுச் சிறுவன் எந்த இலக்குமின்றி எங்குதான் எவ்வளவு நாள் பயணிக்க முடியும்?

இங்கு ஒரு கேள்வி முளைக்கிறது. இயேசு பிறந்தபோது வானத்து நட்சத்திரம் வழிகாட்ட மூன்று பேர் குதிரைகளில் வந்து அந்த ஒளிக்கு பரிசளித்ததாக விவிலியம் பதிவு செய்திருக்கிறதே. அவர்கள் கீழ்த்திசை நாட்டிலிருந்து வந்ததாக செய்தி இருக்கிறதே.

அவர்கள் மீண்டும் வந்து அழைத்துச் சென்றிருப்போர்களோ?

அந்த 18 வருடங்கள் எங்கு எப்படிக் கழிந்தது?

நாமும் பயணிப்போம் இயேசுவுடன்.

வானுலகத்தை வணங்கி
அகத்தியன்.




1 comment:

sivasubramanian said...

what happened to director ahakthiyan ? why its stopped? is he wrote anywhere else? let me show the status

Post a Comment