Wednesday, May 25, 2011

ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்…... - கலாப்ரியா



ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்…...

http://koodu.thamizhstudio.com/thodargal_7_22.php


கலாப்ரியா

புதிய ஊர், புதிய கிளை. ஒரு வகையில் வாழ்க்கையின் புதிய திருப்பம் அது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட முப்பது வருட வாழ்க்கையில் இரண்டே இரண்டு வருடங்கள்தான் சொந்த பூமியை விட்டு வெளியூரில் இருந்திருக்கிறேன். அதிலும் எப்படா சனிக்கிழமை வரும் என்று காத்திருந்து ஊருக்கு ஓடி வந்துவிடுவேன். அது நடு இரவோ நடுப்பகலோ, எந்நேரமானாலும் சரி, எவ்வளவு பசித்தாலும், வயிறு நிறைந்திருந்தாலும் சரி, வீட்டுக்குள் நுழைந்தவுடன், மண்பானையில் பிடித்து வைத்திருக்கும் தாமிரபரணித் தண்ணீரை இரண்டு பெரிய தம்ளர்-அதற்குப் பெயரே ஐஸ் தம்ளர். அருமையான செம்புத்தம்ளர், உருண்டையான வடிவத்தில் கொஞ்சம் அழகிய வேலைப்பாடுடன் இருக்கும். சாப்பிடும்போதும் அதில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டுதான் உட்காருவேன். அது எனக்குப் பிடித்தமான தம்ளர் என்று வீட்டில் எல்லோருக்கும் தெரியும் அதனாலேயே அதை இன்னும் விற்கவோ, அடகு வைக்கவோ செய்யாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளுவேன் –தாமிரபரணித் தண்ணீரை மொண்டு மடக்மடக்கென்று குடிப்பேன். ஒருவாரப் பிரிவையும் ஆற்றிக் கொள்ளுகிற மாதிரி இருக்கும்

இப்போது. ஊரை விட்டு வந்தாயிற்று. சொந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் பெரிய தொலைவில்லை. அங்கே தாமிர பரணியென்றால் இங்கே அருகில் குற்றாலம். ஆனாலும் அந்த ருசி குற்றாலம் தண்ணீருக்கு வராது. இதுவும் செழிப்பான ஊர்தான். காற்றும் குளுமையும் பிரமாதமாய் இருக்கும். சீசனுக்கு சீசன் குற்றாலம் வருவதற்கு அவ்வளவு பிரயாசையும் பிரியமும் காட்டியது போக, குற்றாலம் அருகிலேயே வருவோம் என்று நினைத்தே பார்த்ததில்லை. முதல் நாள் அலுவலகத்திற்குப் போன போது மணி காலை ஒன்பது. யாருமே வந்திருக்கவில்லை. பஸ்வசதி அப்படித்தான். எட்டே முக்காலுக்கு ஒரு தனியார் பஸ் வரும் அதை விட்டால் ஒருமணி கழித்து ஒரு அரசு பஸ், அது நின்றாலும் நிற்கும், அல்லது ‘டாட்டா காட்டி விட்டுப் போனாலும் போய்விடும். ”ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்....”என்று ஒரு கதை கூட எழுதி வைத்திருந்தேன். பிரசுரமாகாத கதை. அதனால் எட்டேமுக்கால் பஸ்ஸில் ஏறி ஐம்பது பைசா டிக்கெட். எடுத்து இறங்கினேன். இறங்கியதும் ஒரு ஆள் அருகே வந்து ரகசியமாய் “அண்ணாச்சி, கடலை விதை வேணுமா என்றான்...” இது ஏதடா புதுப் பாஷையா இருக்கே, இந்த ஊர்ல ’அதுக்கு’ இப்படிப் பேரா....” என்று நினைத்துக் கொண்டே அவனிடமே எங்கள் அலுவலகக் கிளை எங்கே இருக்கிறது என்று கேட்டேன், சார் அதுவா என்று வழியைச் சொன்னான். அங்கே யாருமே வந்திருக்கவில்லை. ஒரு வயதான ஆள் கதவுகளை சும்மா சாற்றி வைத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தான். கதவைத் திறந்த அவனிடம் மேனேஜர் வரவில்லையா என்று கேட்டேன். அவன் பதிலே பேசவில்லை. நல்ல, காதை மறைத்து தலைப்பாகை கட்டியிருந்தார்., நான் கேட்டது காதில் விழவில்லையோ என்று நினைத்தேன். நாலைந்து பள்ளிக்கூடப் பையன்கள், வாசலில் நின்று கொண்டு, உள்ளே எட்டிப்பார்த்து, “ஏய்...கப்பல்..” என்று கத்தி விட்டு ஓடின. கிழவர், “போங்கலே ஒக்காள ஓளிகளா..” என்று தெருவில் இறங்கி வாரியல்க் கையுடன் விரட்டிக் கொண்டே போனார்....” ஆபீஸ் திறந்தே கிடந்தது.

மேனேஜர் வந்தார். அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. நான் தலைமை அலுவலகத்திலிருந்துதான் மாற்றலாகி வந்திருக்கிறேன். அவர் தலைமை அலுவலகம் வரும் போது என்னைப் பார்த்திருக்கிறார் போல் இருந்தது. ”சார் வாங்க, இன்னக்கி ஜாயின் பண்ணறீங்களா..” என்றார். ஆமாம் சார் என்றேன். அதற்குள் கிழவர் வாரியலுடன் உள்ளே வந்தார்... பின்னாலேயே... “கப்பல்.. கப்பலோட்டிய தமிழன்... ”என்று கேலிக்குரல்கள்.... கிழவர் மறுபடி தெருவுக்கு இறங்க முயற்சிக்க... மேனேஜர் சத்தம் போட்டார். ”ஆபீஸை திறந்துபோட்டூட்டு போகாதீரும் என்று சொல்லியிருக்கென்லா...,” இன்னம நீரு வேலைக்கு வேண்டாம் நின்னுக்கிடும்..” என்றார். கிழவர் உள்ளே போனார். பின்னாலிருந்து பார்க்கையில் தலைப்பாக்கட்டு, கப்பலோடிய தமிழன் போலவே இருந்தது... சிரிப்பு வந்தாலும்.. மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் சின்னப் பையன்கள ‘பட்டப்பேர்’ வைக்கிற ‘சுதந்திரத்தை’, எந்த ஊரானாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தோன்றியது. ஒவ்வொருவராக சக அலுவலர்கள் வந்தார்கள். அறிமுகப் படுத்திக் கொண்டோம். ”எல்லாருமே நான் தலைமை அலுவலகக்காரன் என்கிற மாதிரி சற்று தூரமாகவே நிற்பது போலிருந்தது. ”நானும் அடக்கி வாசிக்கிற முடிவோடுதான் வந்திருந்தேன்... ஆனால் பிறவிக்குணம் சும்மா இருக்குமா... என் ‘கல்யாண குணங்களை’ நானே வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டேன், கொஞ்ச நாளில்.

ஜோயல் நல்லையாதான், ”ச்சே, சாரும் நம்ம கேஸ்தான் போல இருக்கு... நல்ல ஆளாத்தான் கொண்டாந்து போட்ருக்காங்க,”, என்றார் சத்தமாக, ஒரு பின் மத்தியான வேளையில். அநேகமாக அன்றைய வேலைகள் முடிந்து, வீட்டுக்கு புறப்படுகிற நேரம். என்னை அன்று காலையில் தூத்துக்குடியிலிருந்து பார்க்க வந்திருந்த நண்பர் ஒருவர், கையில் ’டெபோனீர்’ இதழ் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்... எழுபதுகளில் அது ரொம்ப பிரபலமான இதழ். அமெரிக்க ’ப்ளே பாய்’ மாதிரி இந்திய ஆண்களுக்கான இதழ். அதில் நல்ல விஷயங்களும் வரும் என்று சொல்வார்கள். நாமல்லாம் நடுப்பக்கம் படம் பாக்கறதோட சரி. ஒரு இந்திய அழகு கொழிக்கும் படங்களை எச்சில் ஒழுகப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.

(ஆசைப்படுகிறவர்களுக்காக தொடர்பு...)

http://www.google.co.in/search?hl=en&biw=1024&bih=
665&gbv=2&tbm=isch&sa=1&q=debonair+
magazine+india&aq=1&aqi=g10&aql=&oq=debonair+

”சும்மா பஸ்ல படிக்கலாமேன்னு வாங்கினேன், சவம் இதை எங்க பஸ்ல வச்சு விரிச்சுப் படிக்க முடியும்.. இந்தா நீயே பாரு, படி, என்ன எழவும் செய்யி.. ”என்று கொடுத்துவிட்டுப் போய் விட்டான். அதை நைசாக எடுத்து ஒரு பெரிய லெட்ஜருக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிறுவனங்களில் அலுவலர்களே புத்தக கிளப் நடத்துவார்கள். அதற்குப் பேரெல்லாம் கூட இருக்கும். நண்பர் ஒருவரின் வங்கியில் புத்தகக் கிளப் பெயர் “THE PAGES” அதற்கு ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் இருக்கும். நண்பரின் டிசைனில் ஒரு புத்தகத்திற்குக் கண்ணாடி போட்டது போல் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கூட உண்டு. அங்கே டெபோனிர் இதழ்கள் எல்லாம் கூட வாங்குவார்கள். நண்பர் ’கணையாழி’ வாங்கிப் போடுவார். ஆனால் அதை யாரும் எடுத்துப் போவதில்லை என்பது வேறு விஷயம். இப்போதும் கூட இதெல்லாம் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலும் இவை ஏதாவது சண்டையினால், அற்பாயுளில் முடிந்து விடும். அநேகமாக சினிமா இதழ்களை முதலில் பெறுவதில்த்தான் சணடை வரும்.

தலைமை அலுவலகத்திலும் நாங்கள் ஒரு புக் கிளப் நடத்தினோம். அதை முதலில் நடத்தியவர், ரொம்ப அழகாக நிர்வாகம் பண்ணினார். பத்து ரூபாய்க்கு ஏகப்பட்ட புத்தகங்கள் படிக்கலாம்.. அவர் பத்துப் பதினைந்து கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஊரிலிருந்து வருவார். அதனால் நாலரை மணிக்கு புத்தக விநியோகத்தை ரகசியமாக ஆரம்பித்து விடுவார். இது நிர்வாகத்தின் கழுகுக் கண்ணுக்கு தெரியாமலா போகும். கூப்பிட்டு விசாரித்தார்கள். நான்தான் யூனியன் கிளைச் செயலாளர். அதனால் என்னிடம், என்ன செய்யலாம் அவரை என்றார்கள். “நான் இதில் என்ன தவறு இருக்கிறது, வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் விநியோகம் செய்து கொள்ளுகிறோம்,” என்றேன். நான் அலுவலகத்திற்கு சில விளம்பர வாசகங்கள், வண்ணதாசனின் படங்களுடன் சில விளம்பரங்கள் எல்லாம் செய்து தந்திருந்தேன். அதனால், அந்த விசாரணை அதிகாரிக்கு என் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. பல அதிகாரிகளும் அதில் உறுப்பினர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியதும். அலுவலக நேரம் முடிந்ததும் ஏதோ செய்து கொள்ளுங்கள்... என்றார்கள். அதனால் விநியோகப் பொறுப்பு என் தலையில் விழுந்தது.

என்னால் முடியவில்லை, ஐந்து அடித்ததும் பாதிப் பேர் ஓடி விடுவார்கள், அதனாலெல்லாம் கொஞ்ச நாளில் அதை ஊற்றி மூடி விட்டோம். 120 பேருக்கு மேல் அங்கே உண்டு. பலமான யூனியன் உள்ள கிளை. மேதினம், யூனியன் ஆரம்ப தினம் என்றால் அலங்காரங்கள், கோஷங்கள் என்று அமர்க்களப் படுத்துவோம். யூனியன் ஃபௌன்டிங் டே அன்று வானம்பாடி பாணியில், ஒரு வருஷம் கவிதை எழுதி வாசித்தேன். அப்புறம் யாரும் ரிட்டயர் ஆனால் அதற்கும் கவிதை எழுத வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கைகளில் என் பங்களிப்பைப் பார்த்து, சேர்மனே, ”எதற்கப்பா உனக்கு இந்த வம்பெல்லாம்.. பேசாம அதிகாரியாகிற வழியைப் பார். .”..என்று சொல்லுவார். அதெல்லாம் கேட்க முடியுமா. இல்லை கேட்கும்படியாகத்தான் வளர்ந்திருக்கிறேனா. ஆனால் இந்தக் கிளைக்கு வந்த பின் சில புதிய இளைஞர்கள் “ என்ன சார் யூனியன்” என்று விட்டேற்றியாகக் கேட்டு சரியான ஒத்துழைப்புத் தராத போது கஷ்டமாக இருக்கும். ஒரு இயக்கத்தைக் கட்டி வளர்ப்பது என்பது எவ்வளவு முக்கியமான காரியம். அதுவும் ஒரு தனியார் நிறுவனத்தில் போராடுவது அவ்வளவு எளிதல்ல. இன்றைய இளைஞர்கள் கூட அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருப்பதைப் பற்றி ஒரு மூத்த போராளி சமீபத்தில் சில ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நல்லையா, நான் டெபோனிர் படிப்பதைப் பார்த்து விட்டு மற்றவர்களிடம் சொன்னார்,” சார் புத்தகம் படிக்கிறாரே. நம்ம இனம்தான் போலிருக்கு” என்று. “என்னது, புத்தகம் படிப்பாரா” என்று சிலர் கோரஸாகக் கேட்டார்கள். அப்புறம்தான் அவர்கள் அகராதியில், புத்தகம் என்றால் பெண்கள் என்று. அய்யயோ நான் உண்மையிலேயே தாள்ப்புலிதான் என்று விளக்க வேண்டியதிருந்தது. ஜோயல் நல்லையா எதைப்பற்றியும் கவலைப்படாத ஆள் என்று தெரிய வந்தது. அவர் பக்கத்துக் கிளைக்கு மாறுதல் ஆகிச் சென்ற பின்னரே நிறையத் தெரியவந்தது. நான் வந்த சில மாதங்களிலேயே அவர் மாறுதலாகி விட்டார். மற்றவர்கள் சொல்லுவார்கள். ரொம்ப ஜாலியான் ஆள் சார் என்று. மாதம் தவறாமல் கேரளா ப்ரோகிராம் ஒன்று போட்டு விடுவாராம். கடன் வாங்க அஞ்சவே மாட்டார். அப்போது எம்.ஜி ஆர் ஆட்சி. இரண்டாம் முறையாக முதல்வர் ஆகியிருந்தார். மது விலக்கு அமலில் இருந்தது. ஜோயல் கடனோ உடனோ வாங்கி இரண்டு மூன்று பேருடன் பக்கத்தில் புனலூர் சென்று விடுவார். அங்கே தாகம் தீர்ந்த பின் “புத்தம் புதிய புத்தகமாகப் படித்துவிட்டு’ வருவார்களாம். எல்லாரும் செலவைப் பங்கு போட்டுக்கொள்வார்கள். புத்தகச் செலவு அவர் மட்டும். அவர் மட்டும்தான் ’புத்தகம்’ படிப்பார். மற்றவர்கள் சரக்கோடு சரி.

அப்புறம் மதுவிலக்கைத் தளர்த்தி 25 ரூபாய்க்கு ஒரு பெர்மிட் வாங்கினால் போதும், கூட்டுறவு அங்காடிகளில் சரக்கு கிடைக்கும், என்று கொண்டு வந்தார்கள். பேருக்குத்தான் பெர்மிட். எல்லோருக்கும் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் புனலூருக்குப் போவது குறைந்து விட்டது. .கடன் கொடுத்தவர்கள் அவரைப் பார்க்க வரும் போது வேடிக்கையாக இருக்கும். ஒரு நாள் காலையில் நாங்கள் அலுவலகம் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒருவர் வந்தார். ஒரு நண்பரிடம், சார் ஜோயல் இருக்காரா என்றார். இருப்பாரே என்றார். ”என்ன சார், கடையில ஜவுளி எடுத்த வகையில் பாக்கி இருக்கு, முதலாளி கேட்டுக்கிடே இருக்காரு தரமாட்டேங்கிறாரே.. இன்னக்கி ‘சலுப்பை’ (கேவலமாக நடத்தி) இழுத்தாவது வசூல் பண்ணாம போக மாட்டேன்” என்று கூடவே நுழைந்தார். அவரைப் பார்க்கவே எனக்குச் சற்று பயமாக இருந்தது. நல்லையா கவிழ்ந்த தலையோடு சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிரில் வந்து நின்றார், வந்தவர். நாங்கள் எல்லாம் அவரவர் சீட்டில் உட்கார்ந்து விட்டோம். ஜோயல் நிமிரவே இல்லை. வந்தவரும் கூப்பிடவும் இல்லாமல், பேசாமல் நின்று கொண்டிருந்தார். பயங்கரமான தகராறு ஒன்று நடக்கப்போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தால், ஒன்றுமே இல்லை.

கால் மணி நேரம் கழித்து, நல்லையா நிமிர்ந்து, என்ன வேண்டும் என்று தலையை மட்டும் அசைத்த படி கேட்டார்.” இல்லை.... ஐயா.... இந்தப் பாக்கியை வாங்கீட்டு வரச் சொன்னாரு..” என்று இழுத்தார். ஜோயல் கொஞ்சங்கூடப் பதறாமல் “யோவ்... அண்ணாச்சி, மனுஷன் எதுக்கு கடன் வாங்குதான்.... கையில இல்லாமத்தானெ கடன் வாங்குதான்.... இப்பவும் இல்லையே, இருந்தாத்தான் கொடுத்துருவேனே... முதலாளி என்ன தெரியாமலா இருக்காக..” சொல்லிவிட்டு தலையைக் கவிழ்ந்தவர்தான். நிமிரவே இல்லை. வந்தவர் அரை மணி நேரம் கழித்துப் பெட்டிப்பாம்பாக அடங்கிப் பேசாமல் போய்விட்டார். சாயந்தரம் அதற்கு எதிர்த்த கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு எல்லாக் கடைக்காரர்களையும் தெரியும். எல்லாரிடமும் ஏதாவது வரவு செலவு இருக்கும். பஸ் கண்டக்டர், டிரைவரிடம் கூட கடன் சொல்லிவிட்டு இறங்கி விடுவார். கண்டகடர் முனுமுனுப்பார், ஜோயலோ கண்டுகொள்ளவே மாட்டார். ஆனால் எங்காவது வழியில் கையைக் காட்டினால்க் கூட நிறுத்தி ஏற்றிக் கொள்ளுவார்கள். அவர் ராசி அப்படி.

இதை விடப் பெரிய விஷயம் நடந்தது. ஒருநாள் காலை பத்துப் பதினோருமணி இருக்கும். அலுவலகம் பரபரப்பாக இருந்தது. திடீரென்று ஒரு பெண் வந்தார். கொஞ்சம் மலையாள ஜாடை. நல்லையா தற்செயலாக பாத் ரூம் போய் விட்டு பின்புறமாக நின்று தம் அடித்துக் கொண்டிருந்தார்.வந்தவள், ’ஜோயல் எங்கே’ என்றாள். யாரும் பேசவில்லை.. கொஞ்சம் மனநிலை சரியில்லையோ என நினைக்கும்படி, கேட்டுக் கொண்டே இருந்தாள். “வரலை, லீவு” என்று ஒருவர் சொன்னார். அவரைப் பிடித்துக்கொண்டாள்..” அப்படீன்னு சொல்லச் சொன்னாரா.. எனக்குத் தெரியும் இன்னக்கி வந்திருக்காரு.. கூப்பிடுங்க...” என்று. ”சொன்னாக் கேளும்மா, அவர் வரலை” என்று சற்று காட்டமாக அவர் சொன்னார்.பட்டென்று சேலையை உருவி அவர் முகத்தில் எறிந்து விட்டு ஜம்பரும் பாவாடையுமாக நின்றாள். “ அவர் நல்ல சிகப்பாக இருப்பார், அவர் காது கன்னமெல்லாம் மேலும் சிவந்துவிட்டது. ”யோவ் ஐயரா இருந்துகிட்டுப்.... பொய் சொல்லாதீரும்.. மரியாதையாக் கூப்பிடும்..” என்றாள். அவர், எம்மா நான் ஐயரில்லம்மா... என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டார். அவருக்கு அடுத்த சீட், நான். கால் கையெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. அவர் இருக்கும் வரை அவளது வாளிப்பான உடலை நான் ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு கிட்டத்தட்ட நேருக்கு நேர் வந்த போது, தலை தானாக கவிழ்ந்து விட்டது.

பார்க்காமப் போக மாட்டேன்.... என்று மாடிக்குச் செல்லும் படியில் அமர்ந்து கொண்டாள். அது மாடியில் எங்கள் டைனிங் ஹாலுக்குப் போகும் படிக்கட்டு.சேலை பக்கத்து சீட்டில் கிடந்தது.டார்க் ரோஸ் நிறச் சேலை. லைட் ரோஸில் சட்டை அணிந்திருந்தாள்.அற்புதமான உடல்.ஆனால் பார்க்கிறவ்ர்கள் எல்லாம், தலையை பட் பட்டென்று கவிழ்ந்து கொண்டார்கள். ஜோயல் ஆபிஸுக்குள் வரவே இல்லை. மேனேஜர் பாடுதான் சங்கடமாயிருந்தது. போலீஸுக்குச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். சுமார் ஒருமணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். என்ன நினைத்தாளோ, மறுபடி, யோவ் சாமி, அந்த சேலையை எடுத்துப் போடுமென்றாள். அவர் விரல் நுனியால் எடுத்து கௌண்டர் மேலே போட்டார். சுற்றிக் கொண்டு கிளம்பிப் போனாள். நல்லையா ஒன்றுமே நடக்காதது போல சீட்டில் உட்கார்ந்து வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று சாயந்தரம் நாங்கள் கடை வீதி வழியாக நடந்து கொண்டிருந்தோம். ஒரு ஜவுளிக்கடையிலிருந்து, “அட்டென்ஷன் ப்ளீஸ்” என்று குரல் கேட்டது. ஜோயல்தான். அருகே ரோஸ் நிறச் சேலை கட்டிக் கொண்டு அவள். தலை நிறையப் பூ. அன்றைக்கு ஆஃபீஸ் வந்து பணம் கேட்க வந்தவர், புதிய சேலைகளைக் காட்டிக் கொண்டிருந்தார். ”வாங்க காம்ரேட்” என்று கூப்பிட்டார்....ஜவுளிக்கடை கல்லாவில் உட்கார்ந்திருந்தவரிடம் ”அண்ணாச்சி, எல்லாம் நம்ம காம்ரேட்ஸ், சீனி தூக்கலா மூனு டீ சொல்லுங்க...” என்றார். அவரும் டீ வாங்கி வரச் சொன்னார். ஏதோ துணிப் பொட்டலங்களுடன் கடையை விட்டுக் கிளம்பி, “அண்ணாச்சி, ஒன்னாந்தேதி ஆளை அனுப்பிருங்க.. எல்லாத்தையும், ’சப்ஜாடா’ (முழுசா) செட்டில் பண்ணிருவோம்...” என்றார். முதலாளி வாயெல்லாம் பல்லாக, ”அதுக்கென்ன அனுப்பிருதேன்...” என்றார்.

கொஞ்ச நாளில் அவர் பக்கத்து கிளைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு போய் விட்டார். தினமும் அவரைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். அவரது மனைவிக்கும் அவருக்கும் நல்ல உறவு இல்லை. இவர் நன்றாக, புத்தகம் படிக்காமல், புனலூர் போகாமல், இருக்கும் போதே அவர் மதிக்க மாட்டாராம். அவர் மனைவிக்கு சொந்தத்தில் ஒரு ஸ்கூல் இருந்ததாம். நல்ல வசதி. ஆனால் ஜோயல் ஒரு நாள் கூட மனைவியைப் பற்றி ஆவலாதி சொல்லி நான் கேட்டதில்லை. சொல்லவும் மாட்டாராம். ஆனால் வேலையில் ரொம்ப கெட்டிக்காரர். அப்போது கால்குலேட்டரெல்லாம் கிடையாது. இரட்டை இலக்கமாகவே கூட்டிவிடுவாராம். அதாவது 43,55,14,23,89,74,15,20,14,99,...

என்றால், அப்படியே,43+55+14+....... என்று கூட்டி விடுவாராம். 3,5,4,3,9,4,5,0,4,9........என்று முதல இலக்கத்தினைக் கூட்ட மாட்டாராம். எந்த சர்க்குலரைக் கேட்டாலும் சொல்லுவாராம்...அவருக்கு திடீரென்று ப்ரோமோஷன் கிடைத்த போது அவரது இந்த பிரதாபங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

ப்ரொமோஷன் ஆகி கொஞ்ச நாள்த்தான் ஆகியிருந்தது. காலையில் கிளையின் யூனியன் செயலாளருக்குப் ஃபோன் வந்திருப்பதாக மேனேஜர் சொன்னார். போய்ப் பேசினவர் அப்படியே வெளியே போய் கருப்பு ரிப்பன் வாங்கி வந்து, சிறிய துண்டாக வெட்டி எல்லோருக்கும் கொடுத்தார். என்ன என்று கேட்டபோது. யூனியன் தலைவர் சொன்னதாகச் சொன்னார்,” ஜோயல் சார் கிட்னி ஃபெயிலியராகி இறந்து போயிட்டாராம்...” மௌனமாக எல்லோரும் பேட்ஜை அணிந்து கொண்டோம். அன்று மாலை வாயில்க் கூட்டம் போட்டு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போன போது.. பஸ் ஒன்று ஸ்டாப்பில் நிற்காமலே போனது.... ஜோயலைப் பார்த்தால் எப்போதும் நடுவழியில்க் கூட பஸ்ஸை நிறுத்துகிற டிரைவர்தான் ஓட்டிப் போனார்..



1 comment:

Post a Comment