Tuesday, May 24, 2011

வலது புறம் செல்லவும் - 9 - இயக்குனர் அகத்தியன்




வலது புறம் செல்லவும் - 9


இயக்குனர் அகத்தியன்24-05-2011, 01:58 PM

கேரளாவில் கோட்டையம் அருகே குடமலூர் என்ற கிராமம். 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ஒரு பெண் பிறந்தார். 1946 ஜூலை 28ல் இறந்து போனார். தான் வாழ்ந்த காலத்தில் துன்பமும் வறுமையும் உடல்நலக் குறைவும் அவரோடு துணைவந்த சொந்தங்கள். ஆசிரியப் பணி புரிந்தார். இறப்பிற்குப் பிறகு மக்களால் வணங்கப் பெற்றார். 1986 பிப்ரவரி 8ந் தேதி ஜான்பால்-II அவரைப் புனிதராக அறிவித்தார் (Deatification). 1996 ஜூலை 19 இந்திய அரசு அவரின் ஐம்பதாவது நினைவு நாளில் தபால் தலை வெளியிட்டது. 2008 ஜூன் ஒன்றாம் தேதி போப் பெனிடிக்ட் - XVI அவரைப் புனிதராக (செயின்ட்) அறிவித்தார். அந்த அன்னையின் பெயர் அல்போன்சா.

நாம் வாழும் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரித்த ஒரு அன்னை இவர்.

இந்து மதப் பாரம்பரியத்தில் இந்த அங்கீகாரம் தேவையில்லை. மக்கள் வழிவழியாக வழிபடும்போது தெய்வநிலையை ஒரு ஆணோ, பெண்ணோ அடைகின்றனர்.

குஷ்புவுக்குக்கூட நாம் கோயில் கட்டியிருக்கிறோம். குஷ்புவுக்கே கோயில் கட்டும்போது இந்த மண்ணில் மனிதகுலத்துக்காக வாழ்ந்த அன்னையர்கள் வணங்கப்பட்டதும், தெய்வமானதும் வியப்புக்கோ நகைப்பிற்கோ இடமளிக்காத ஒன்று.

உழைக்கும் மக்களிடமிருந்து உழைப்பைத் திருடும் ஒரு கூட்டம் மக்களிடம் உருவானபோது திருட்டு என்பது ஒரு தொழிலாக மாறிப்போனது. மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்குள் கூடி ஒருவனை காவலனாக தேர்ந்தெடுத்தனர். இன்றைய காவல்துறையின் ஆரம்பம் அது.

அப்படி ஒருவன் மக்களால் காவலுக்கு நியமிக்கப்பட்டான். மாபெரும் வீரன். மொத்தக் கயவர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்தான். ஆஜானபாகுவான உருவம். கையில் நீண்டக் கத்தி, தானியங்களையோ, தனது மக்களின் வேட்டையாடிய பொருட்களையோ மழைக் காலங்களில் உண்டு, உண்டு தூங்கிய எழ பெரும் பானைகளில் காய்ச்சி புதைக்கப்பட்ட மதுவையோ கயவர்கள் திருடிக் கொண்டு போகாமல் காவல் செய்தான். தன் அடையாளத்திற்காய் கருப்பு நிறத்தில் தொடையில் ஒரு துணி சுற்றிக் கொண்டான். இரவு நேரங்களில் நன்றாக மதுக்குடித்து, மாமிசம் தின்று, கையில் அரிவாளுடன் நான்கு, ஐந்து அடி உயர நாயைக் கையில் பிடித்துக் கொண்டு, கையில் தீப்பந்தம் ஏந்தி கள்வர்கள் வேட்டைக்காக வலம் வருவான். அவன் வந்தால் மொத்தமாய் குலை நடுங்கி வீட்டிற்குள் அடைந்து விடுவார்கள். அவர் பொருளை அவரே இரவில் எடுக்க முடியாது. இன்னைக்கு கருப்பு வருது என்று கயவர்கள் வெகு தொலைவில் முடங்கி விடுவார்கள்.

கருப்புவை எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஆழ்ந்த தூக்கத்திலும், மது மயக்கத்திலும் கருப்பசாமி என்ற சத்தம் கேட்டால் விழித்துக் கொள்வான். கருப்பசாமியிடம் வழக்குகள் போனால் அவன் நியாய சபைக்கு வரும் முன்பே சம்பந்தப்பட்டவர்கள் வழக்குகளை முடித்துக் கொள்வார்கள்.

இப்படி வாழ்ந்த மனிதன் இறந்தபோது இன்னொருவன் பதவிக்கு வந்தான். இவனைப் போலவே சுடலை ஒரு பிராந்தியத்தில் இருந்தான். மாடன் ஒரு பகுதியைக் காவல் செய்தான். ஐயன் மற்றொரு பகுதியில் மக்களைக் காத்தான். இன்றும் கருப்பசாமியும் சுடலையும், மாடனும் ஐயனும் ஊர் எல்லைகளில் சிலையாக காவல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

வன்முறையைப் பிரயோகித்து மக்களின் வாழ்வைக் காக்க வேண்டிய நிலை அன்றும் இருந்தது. அதிலும் ஆணாதிக்கச் சமுதாயம் நிலைபெற்றபின் பெண்களே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர். மனிதகுல வரலாற்றில் மது பங்கெடுத்த பிறகு மதுவை அருந்தி மங்கையரை விருந்தாக்கிக் கொள்ளும் ஆண்வர்க்கம் உருவாகிவிட்டது. குழுத்தலைவனாகவோ, வலிமையுடையவனாகவோ இருக்கும் ஆண் பெண்களை பாலியல் தேவைகளுக்காக அதிகாரத்தின் பெயரால் பயன்படுத்துவது நடந்தது. அப்போதுதான் அதுவும் நடந்தது.

இன்றைய கொல்கொத்தா, நேற்றைய கல்கத்தா.. மக்கள் சற்று அதிகமாகக் கூடி வாழ ஆரம்பித்த காலக்கட்டம். அந்தப் பெரிய மக்கள் கூட்டத்தில் பெண் இனம் மிகக் கோரமாக நடத்தப்பட்டது. யாரும் யாரையும் இழுத்துச் செல்லலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்யலாம். மூச்சு நின்று விட்டால் அவளைக் கொண்டு போய் கடலில் சேர்க்க கங்கை இருந்தாள்.

அங்கு இருந்த கூட்டத்தின் தலைவன் பெண்களுக்கு கொடுமைகள் இழைத்தான். தாங்க முடியாத பெண்கள் கூடினர். தலைவனின் மனைவியிடம் முறையிட்டனர். தலைவி, நதியில் குதித்து உயிர் துறக்கப் போகிறோம் என்ற பெண்களுக்காக, அன்றிரவு குடித்துப் புசித்து கைத்தடிகளுடன் மெய்த்தடங்கள் தேடிய தலைவனின் உயிர் தலத்தை அறுத்தாள். குடிபோதையில் இருந்த கைத்தடிகளின் தலைகளைத் கொய்தாள்.

விடிந்தபோது தலைகளை மாலையாக்கி கழுத்தில் போட்டு, வெறிகொண்டு அரிவாளுடன் வெளியே வர குலை நடுங்கிப் போனது கூட்டம்.

இந்த பூமியில் ஒரு பெண் மொத்தமாகச் செய்த முதல் கொலை அது.

வாய் வழியாய் காட்டுத்தீபோல் சம்பவம் பரவ, அந்தப் பெண் குழுவுக்கு தலைமை ஏற்று ருத்ர ஆட்சி புரிய, இந்தியா மொத்தத்துக்கும் முதல் முறையாக ஒரு பெண் தெய்வ வழிபாடு ஆரம்பமானது. அன்னை காளி அவதரித்தாள்..

எந்த மண்ணில் எந்த இடத்தில் கோபம் கொண்டு, ரத்தம் கண்டு அன்னை காளி உருவானாரோ.. எந்த மண்ணில் ஒரு ஆணைக் கொலை செய்தாரோ .. அதே மண்ணில் அதே இடத்தில் அதுவும் அன்னை காளியின் இல்லத்தில் அமைதியும் பொறுமையும் சாந்தமும் கொண்டு அன்னை சாரதாதேவி உருவானார். ஒரு ஆண் கடவுள் நிலையை அடைய உதவினார். எப்போதுமே காலம் தன் கணக்குகளை விதிகளோடு போடுகிறது. நாம் விதி என்கிறோம்.

ராமகிருஷ்ணருக்காக அவர் அன்னை பெண் தேடிக்கொண்டிருந்தார். பல இடங்களில் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. ஒரு நாள் தன் அன்னையிடம் ஜெயராம்பாடி என்ற ஊரைக் குறிப்பிட்டு, ஒரு வீட்டைக் குறிப்பிட்டு, எனக்காக ஒருத்தி அங்கிருக்கிறாள் என்றார்.

சாரதைக்கு அப்போது வயது ஐந்து. திருமணம் முடிந்து, பதினெட்டு வயது மங்கையாக, அன்னை ராமகிருஷ்ணரை கல்கத்தா வந்து சந்திக்கிறார்.

ராமகிருஷ்ணருக்கு மனமும் உடலும் தெய்வீகமாக மாறி இருந்த நேரம். ஆனால் மனைவியின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கணவன். அன்னையிடம் கேட்டார்.

நீ என்ன என்னை உலகியலுக்கு இழுக்கவா வந்திருக்கிறாய்? அன்னை உடன் பதில் சொன்னார். இல்லை உங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவவே வந்திருக்கிறேன்.

ராமகிருஷ்ணர் பரமஹம்சராக மாறியது அன்னையின் தியாகத்தினால்..

அன்னை கேட்டார். நீங்கள் எப்படி என்னைப் பார்க்கிறீர்கள்? "அன்னையாக, அன்னை பராசக்தியின் வடிவாக, அவள் கோவிலில் சிலையாக நிற்கிறாள். நேரில் உன் வடிவத்தில் வீற்றிருக்கிறாள்" என்றார். வெறும் வார்த்தையல்ல அது. அன்னையை அமர வைத்து சாத்திர விதிகளுக்கேற்ப, மந்திரங்கள் உச்சரித்து, புனித நீரைத் தெளித்து, தேவியாக எண்ணி வணங்கி, உணவு படைத்து, வாயில் ஊட்டி, பூமியில் அன்னையின் வடிவமாக மனைவியைக் கண்டார். தெய்வநிலைக்கு தகுதியானவராக அன்னை இருந்தார். இல்லற வாழ்வில் ஈடுபட்டு தன்னை அம்மா வென்றழைக்க குழந்தை பெற்றுக் கொள்ளாத அன்னையை இன்று வரையல்ல, நாளை பிறக்கும் குழந்தையும் அம்மா என்று அழைத்துக் கொண்டுதான் இருக்கப்போகிறது. பூமி உள்ள மட்டும் ஒரு பெண் அம்மாவாக இருப்பது பெண்ணினதுக்கு எவ்வளவு பெருமை.

இன்னொரு அன்னையும் கல்கத்தாதான் நமக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவர் பணிபுரிந்த பள்ளி, ராணுவ நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டது. வேறு இடம் பெயர்ந்த அந்த அன்னை, கல்கத்தாவின் சேரிப்பகுதிகளை அருகிருந்து காண ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிதான் அவரை ஏழைகளின் பால் ஈர்த்ததா எனக் கேட்டபோது, இல்லை எனக்கு ஏசுவின் அழைப்பு என்றார்.

ஏசு என்ற ஆணைப் பெருமைப்படுத்திய ஒரு பெண் அவர். அவருடைய கருணை உள்ளத்தினால் மதங்களைக் கடந்த மனிதனாக ஏசு வணங்கப்பட ஆரம்பித்தார். ஏசுவின் மதத்தைத் திணிக்காமல் அவரின் மனிதநேயத்தை மக்களிடையே எடுத்துச் சென்றவர். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதுகூட ஒரு குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு என்னெதிரே கருணை பொழிந்து கொண்டிருக்கிறார், அன்னை தெரசா.

ஆண் பாதி பெண் பாதி என்ற இறைத்தத்துவத்தில் சக்தி ஆணில் உறைகிறாள். தன் உடலில் பெண்ணுக்கு பாதியை கொடுத்ததாகத் தான் சொல்கிறார்கள். சக்தி தன்னில் பாதியை சிவனுக்கு கொடுத்தாள் என்று ஏன் சொல்வதேயில்லை.

பூமியில் பிறக்கின்ற யாரும் அன்னையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது என் எண்ணம். அன்னைதான் இவன் என் மகன், மகள் என்ற தேர்ந்தெடுக்கிறார். (தேர்ந்தெடுப்பதா.. பின்னால் பேசத்தான் போகிறோம்)

ஒரு பெண் பிறக்கும்போது பூமிக்கு அல்லது பூமியில் ஒரு அன்னை பிறந்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்களேன்.

திராவிட மொழிகளின் தாய் தமிழ். அ என்ற மொழியின் முதல் எழுத்தில் பெண் அம்மா என்றழைக்கப்படுவது நம்மைத் தவிர வேறு எங்கும் இல்லையென்றே நினைக்கிறேன். மனிதர்க்கு பால்தரும் பசு, ஆடு இவைகளின் ஒலி மட்டும் "ம்மா" என்றும் "ம்மே" என்றும் அமைந்திருப்பதை வியப்போடு கவனித்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன் "மா மனிதன்" என்றால் நற்குணங்கள் நிறைந்த உயர்ந்த மனிதன். "அம் மா மானிதன்" என்பது கூட அம்மா மனிதனாக ஆரம்பத்திருக்குமோ என்று.

மொழியின் சிதைவைப் பற்றி நான் வணங்கும் அன்னை ஒருவர் (இப்படிக்கூட சொல்லலாம்). என் வணக்குத்துக்குரிய அன்னை ஒருவர் என்னிடம் சொன்னார்.

பெண்ணின் பிறப்புறுப்பு தமிழில் பூ உருண்டை என்று அதன் வடிவம், மென்மை கருதி அழைக்கப்பட்டது. ஆணின் பிறப்புறுப்பு பூவிதழ் என்று அழைக்கப்பட்டது. காலத்தின் மருவலில் அது இன்றயை வடிவம் பெற்றது என்றார்.

அவர் மேலும் ஒரு குறிப்புத் தந்தார். ஆங்கிலத்தில் Allthee என்பதற்கும் தமிழில் ஆதி என்பதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்றார்.

பெண்ணின் பிறப்புறுப்பு மங்களகரமான வார்த்தையால் குறிக்கப்படும்போது Holy என்றே அது குறிக்கப்பட்டது. அதுவும் மருவி வேறுவிதமாக உச்சரிக்கப்படுகிறது என்றார். மங்களமான சொற்கள் மருவியதுபோல் மங்களமான பெண்மையும் மாறித்தான் போய் இருக்கிறது.

ஒரு பெண்ணின் மாற்றம் குடும்பம் சார்ந்ததாகவோ, சமுதாயம் சார்ந்ததாகவோ அமைந்து விடுகிறது. இங்கே இப்போது சமுதாயத்தால் மாற்றமடைந்த ஒரு பெண்ணைப் பற்றிப் பேசப் போகிறேன். கொஞ்சம் விரிவாக, நான், கௌரவப்படுத்தப்படவேண்டிய அன்னை என்று பல காலம் எண்ணியிருக்கிறேன். எனக்கு அறிமுகமானதோ வேறு பெயரில், அவரை அறிந்து கொண்ட பின் அன்னையாகவே அவரைப் பார்க்கிறேன்.

ஓஷோவை தினசரிகள், வாரப்பத்திரிகைகள், செக்ஸ் சாமியார் என்றே எனக்கு அறிமுகப்படுத்தின. அவரைப் படித்த பின், உலகின் தலைசிறந்த மனநல மருத்துவர் என்று புரிந்து கொண்டேன். அப்படித்தான் இந்த அன்னையும்.

அந்தப் பெண்ணுக்கு திருமணம். அப்போது அவள் பதினோரு வயதைக் கடந்திருந்தாள். திருமணம் என்றால் என்னவென்று அவள் இளைய சகோதரி சந்தேகம் கேட்டபோது எனக்குத் தெரியாது என்று சொல்லும் வயது. அவள் சகோதரி மாப்பிள்ளையைப் பார்த்து சொன்னாள். "உனக்கு இரண்டு அப்பாக்கள்".

அம்மா பசிக்குது, சாப்பாடு போடு என்று கேட்ட சிறுமியை அழைத்துபோய் மணவறையில் அமர்த்தினர். பருத்த தொந்தியும் நரைத்த முடியுமான அந்த மனிதன் சொன்னான். வீட்டில் வேலை செய்ய உணவு தர யாரும் இல்லை, அதனால் மட்டுமே இவளைத் திருமணம் செய்து கொள்கிறேன். இவள் பெரிய மனுஷி என்று தன்னைத்தானே உணரும் வரை இவளை உடலளவில் மனைவியாக பயன்படுத்த மாட்டேன்.

வறுமையும், சொன்ன சொல்லின் நம்பிக்கையும் அவளை அனுப்பி வைக்க அவள் பெற்றோருக்கு காரணமாயிற்று. பதினோரு வயதில் கணவன் வீடு வந்த அந்தப் பெண்ணின் மேலாடையை அவிழ்த்துப் பார்த்து ஊர்ப்பெண்கள் சிரித்தனர். "இவளுக்கு முலை கூட இல்லை" என்றனர். முளைவிடாத விதையாகவே இருந்தாள்.

வீட்டிற்கு வேலை செய்ய பெண் வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்த அந்த முதிய கணவன் "சேலையை அவிழ்க்கும்போது, உனக்கு பத்து வயதாகிவிட்டது, எந்த ஆணின் முன்னும் உடம்பைக் காட்டக்கூடாது என்ற அம்மாவின் அறிவுரைதான் அவள் நினைவிலிருந்தது".

அந்த மனிதனுக்கு அவள் குழந்தை என்று தெரியவில்லை. குழந்தையைக் கொடுப்பவள் என்றுதான் தெரிந்தாள். ஓடி ஒளிந்து, மறைந்து, பசிமறந்து, அடிவாங்கி, இல்லறம் என்பது தொல்லை என்று மனதில் கொண்டு, தப்பித்து, தாய்வீடு வந்து மீண்டும் பெற்றோரால் கணவன் வீடு அனுப்பப்பட்டு, மீண்டும் பெற்றோரிடம் ஓடி வந்து, மறுபடியும் கணவனிடம் அனுப்பப்பட்டு, அந்த பிஞ்சு, காயாகி, பழுக்காமல், கணவன் என்ற மிருகத்தால் கசக்கப்பட்டு ரத்தம் வடித்தது.

அந்தக்குழந்தையின் பெயர் பூலான், பின்னாளில் இந்திய சரித்திரம், பூலான்தேவி என்றும், கொள்ளைக்காரி என்றும் பதிவுசெய்து கொண்ட பெண்.

எனக்கு அந்தப் பெண்ணை கொள்ளைக்காரி, கொலைக்காரி என்றுதான் தினசரிகள் அறிமுகப்படுத்தின. ஆனால் அவளைத்தான் கொள்ளையடித்தார்கள், வாழும்போதே பலமுறை கொலை செய்தார்கள். இறுதியிலும் அந்த அன்னையை கொலைதான் செய்தது ஆண் வர்க்கம்.

உத்திரப்பிரதேசம்தான் இந்திராகாந்தி என்ற அன்னையை நமக்குத்தந்தது. பூலான் தேவியைத் தந்ததும் அதுதான். இருவரும் சுட்டுத்தான் கொல்லப்பட்டார்கள். இந்திரா காந்தி இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்கு எத்தனையோ கையெழுத்துக்கள் போட்டிருக்கிறார். மன்னர்மானியம என்று மக்களின் பணத்தை தின்று கொண்டிருந்தது ஒரு கும்பல். வயிற்றுப்போக்கு என்று காரணம் காட்டி அன்று மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து எஸ்.எஸ்.ஆர் என்று தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ராசேந்திரன் என்ற நடிகர் மன்னர் மானிய ஒழிப்பிற்கு ஆதரவாக ஓட்டுப் போடாமல் ஒளிந்து கொண்டார். அன்று அவருக்கு ஏதோ தேவை இருந்திருக்கிறது. தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தன் வலிமையான கையெழுத்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றினார் அன்னை இந்திரா. அன்னை பூலானோ தன் சுயசரிதையை சொல்லி, அதை எழுதிக்கொண்டு வந்த தாள்களில், கைநாட்டுத்தான் வைத்தார். எழுதப் படிக்கத் தெரியாமல் பாராளுமன்றம் சென்ற முதல் பெண், இன்று எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் நாடாளுமன்றத்தில் தின்றது செரிக்காமல் (குசு) விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை பல ஆண்டுகளுக்கு முன் வந்த குஷ்வந்த் சிங்கின் சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி இது.

அந்த சிறுமி கசக்கப்பட்டாள், தன் பதினைந்து வயதில் திருடி என்று காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டாள். மேல் சாதி ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த தனது கிராமத்தில் தாய், தந்தையரை துப்பாக்கி முனையில் நிறுத்தி, அவர்களின் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்டாள்.

அதே மேல் சாதி வர்க்கத்தால் ஒரு கொள்ளைக் கும்பல் மூலமாக எங்கள் ஊரில் ஒரு கொள்ளைக்காரி இருக்கிறாள் அவளைக் கடத்திச் செல்லுங்கள் என்று சொல்லப்பட அவள் கடத்தப்பட்டாள்.

பாபு என்ற கொள்ளைக்காரன் அவளைப் புணரப்படர்ந்தபோது விக்ரம் என்ற கொள்ளைக்காரனால் சுடப்பட்டு, அவள் காப்பாற்றப்பட்டு, விக்ரமை திருமணம் செய்து கொள்ளைக்காரியாக மாற்றப்பட்டு, ஒரு கொள்ளைக்காரி இந்தக் கட்டுரையில், அன்னையாக பதிவு செய்யப்படுகிறார்.

இதன் அடிப்படைக் காரணம் என்ன? ஆணாதிக்க சமூகம்தான். எந்தப் பெண்ணுக்காவது உடலுறவு பிடிக்காமல் இருக்குமா? ஆனால் பூலானுக்கு பிடிக்கவில்லை. சிறுவயதில் ஆணால் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் வேதனையும், வலியும்தான் அவர் மனதில் இருந்தது. விக்ரம் மெல்ல மெல்ல கொள்ளைக்காரி என்று இந்திய சமூகம் பதிவு செய்த அந்த அன்னையை இல்லற வாழ்விற்கு தயார் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

விக்ரமுடன் இணைந்த பிறகு பதினோரு வயதில் தன்னை திருமணம் என்ற பெயரில் அழைத்து போய் கற்பழித்த அந்த மிருகத்தைப் பழிவாங்கினார். தன்னை தன் தாய் தந்தையின் கண்முன்னே கற்பழித்தவர்களுக்கு பாடம் புகட்டினார்.

விக்ரமை அவர் கூட்டாளிகள் கொலை செய்து விட தனிமைப்படுத்தப்பட்டார். எதிர்க்கும்பலால் கிட்டத்தட்ட ஒரு வாரம் நிர்வாணமாகவே வைக்கப்பட்டார். வரிசையில் நின்று மேல் சாதி ஆண்கள் அவரைக் கற்பழித்தார்கள். மனிதாபிமானமுள்ள ஒரு ஆணால் தப்புவிக்கப்பட்டார். மீண்டும் பலம் பெற்று தன்னைக் கற்பழித்த ஆண்களை வரிசையாக நிறுத்தி ஆண்குறிகளை வெட்டியெறிந்தார்.

தன் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கீழ்சாதி பெண்களை அழைத்து அவர்களோடு தூங்கச் சொல்லும் கேவலமான கலாச்சாரம் இருந்த ஊரில் அப்படிச் செய்தவனின் ஆண்குறியை வெட்டி எறிந்தார்.

தன்னந்தனியாக காட்டில் மாதக்கணக்கில் வாழும் நிலையெல்லாம் அவருக்கு வந்திருக்கிறது. அவரால், அவரைப் பிடிக்க முடியாமல், ஒரு மாநில முதல்வர் பதவி இழந்தார். அவரை சரண் அடைய முயற்சி செய்து வெற்றி பெற்று "முதலமைச்சரிடம் சரண் அடையுங்கள் என்று சொல்லி", "சரண் அடையும் போது CM வந்து விட்டார், சரண் அடையுங்கள் என்று சொல்ல, "நான் CM இடம் எல்லாம் சரண் அடைய "மாட்டேன்", "நீங்கள் சொன்னபடி முதலமைச்சரை வரச் சொல்லுங்கள்", என்று சொன்னவர் அவர்.

சரண் அடையும்போது தன்மேல் மீடியாவின் ஒளிவிளக்குகள் வீழ்ந்தபோது தன்பக்கத்தில் இருந்த உதவியாளன் "இந்த வெளிச்சம் பட்டா நாம சீக்கிரம் செத்துப்போயிடுவோம்" என்று சொல்ல கேமராவின் விளக்குகளுக்கு பயந்து ஒளிந்தவர்.

இப்படி அப்பாவியாக ஒரு கொள்ளைக்காரி இருக்க முடியுமா?

ஆணாதிக்க சமூகம் பெண்ணை நிறைய மாற்றி இருக்கிறது. நம் தங்கையை, குழந்தையை பதினோரு வயதில் திருமணம் செய்து கொடுப்போமா? கோவையில் அந்த மகள், பிஞ்சு மகள் புணரப்பட்டதை அறிந்தபோது நெஞ்சு வலித்தது. தமிழகம் கொதித்தது. அந்த என்கவுன்டர் கூட வரவேற்கப்பட்டது.

பூலனும் அப்படி ஒரு குழந்தைதானே. நம் மகள் தானே. சகோதரிதானே. அன்னைதானே. அன்று அன்னை ஒருத்தி பெண்களைக் காக்க கணவன் உயிர்த்தலத்தை அறுத்து கைத்தடிகளைக் கொன்று கழுத்தில் மாலையாக தலைகளைப் போட்டு காளி என்று பெயர் தாங்கினாள். "அவள் மட்டும் அன்னை காளி என்று வணங்கப்படலாம். இவள் மட்டும் கொள்ளைக்காரியா?" இவளும் காளிதான். இன்னொரு அன்னை காளிதான். பூமியில் பூலான் வணங்கியது அன்னை துர்க்கையை. நானும் அப்படித்தான், அன்னை துர்க்கையாகத்தான், பூலானை வணங்குகிறேன். விரும்பினால், நீங்களும் சிரம் தாழ்த்தி ஒரு வணக்கம் செய்யுங்கள், "அன்னைக்கு".

அன்னையர்களை வணங்கி .. அகத்தியன்.





No comments:

Post a Comment