Wednesday, February 1, 2012

சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_31.php

சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்

குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்.
சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.

அணு சக்தியும் அணு ஆயுதங்களும் வேறு வேறு அல்ல

இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.

1988 லிருந்து துவங்கப்பட்ட கூடங்குளம் இரட்டை அணுவுலைகளுக்கெதிரான போராட்டம் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அணுசக்தித் துறையின் போராட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், மக்களை சாதி ரீதியில் பிரித்து போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் அரசாங்க உத்திகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் இப்போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளனர். அணுக்கொள்கையில் அரசாங்கத்தின் பிடிவாதமும், இந்திய பிரதமர் ரஷ்யா சென்று அணு வுலைகள் தொடர்பாக செய்த அறிவிப்பும் மேலும் இப்போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ள இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து வருபவர் சுப. உதயகுமார். தொடர்ந்து அணுசக்தியும், அணு ஆயுதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்துவரும் சுப. உதயகுமார் காந்திய வழியில் போராடி வருபவர். காந்தியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். நாகர்கோவிலுள்ள இசங்கன்விளை என்னும் ஊரைச் சார்ந்த உதயகுமாரை குமுதம் தீராநதீ நேர்காணலுக்காக, 02.12.2011 அன்று இடிந்தகரையில் சந்தித்துப் பதிவு செய்த உரையாடல் இது.

தீராநதி: உங்களுடைய இளம்பிராயம் பற்றிச் சொல்லுங்கள்?

உதயகுமார்: நான் பிறந்தது நாகர்கோவில்ல கோட்டார் பகுதியில் உளள இசங்கன்விளையில். அப்பா திகவிலும் பின் தி.மு.க. விலும் தீவிரமாக தீவிரமாக இருந்தவர். அப்பாவின் பெயர் பராமார்த்த லிங்கம். அப்பா எங்க ஊர் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் கோட்டையில் அப்பா பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் பேசக்கூடியவர். பொதுக்கூட்டங்கள் நடத்துவாங்க. பெரும்பாலான கூட்டங்கள் அப்போது வன்முறையில்தான் முடியும். அப்பாவை அடிக்க வருவாங்க. அப்போ நானும் தங்கச்சிகளும் கூட நின்று பாதுகாப்போம். அப்படி இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.

அம்மா கல்லுப்பட்டியில் காந்திய ஆஸ்ரமத்தில் படிச்சாங்க. அவங்களுக்குச் சொந்த ஊர் நாகர்கோவில், ராமன்புதூர் காந்தியத்தில் ஆழமான பிடிப்பு அம்மாவுக்கு உண்டு. எஸ்பொன்மணி அம்மாவின் பெயர். அம்மா ஒரு காமராஜர் பக்தை. காங்கிரஸீக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க ஆதரிப்பாங்க நேர் எதிர்நிலையில் அப்பா திராவிட சிந்தனை கொண்டவர். ஆனால் வீட்டுக்குள்ள எல்லாம் ஐனநாயக முறைப்படித்தான் நடக்கும். அப்பா யாருக்கும் ஓட்டுப்போடச் சொல்ல மாட்டாங்க. அம்மாவும் சொல்ல மாட்டாங்க. வீட்டுக்கு முன்பு பெயிர காமராஜர் படம் இருக்கும். அப்பா பெரியார், அண்ணா படங்களை வீட்டில் வைத்திருப்பாங்க. எனினும் ஒரு ஐனநாயகச் சூழலில் தான் நாங்க எல்லோரும் வளர்ந்தோம். அம்மா, அப்பா இரண்டுபேரும் பொது வாழ்க்கையில் ரொம்ப ஆர்வமாக இருந்தாங்க. அம்மா சமூக நலத்துறையில் பணிபுரிந்ததால் இந்தக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக பால்வாடி மற்ற பிற இடங்களிலிருந்து கிறிஸ்துவப் பெண்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் அவர்கள் பிரார்த்தனை செய்வாங்க. என்னையும் செய்யச் சொல்வாங்க அதன் மூலமாக சிறு வயதிலிருந்தே கிறிஸ்துவ மதத்தின் மீது மரியாதை இருந்தது. ஆனால் நடைமுறையில் பழக்கவழக்கத்தில் நாங்கள் இந்துவாக இருந்தோம். சுடலை மாடசாமி கோயிலிருந்து இசக்கியம்மன் கோயில் வரை ஒரு கோயிலையும் அம்மா விடமாட்டாங்க. எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுடலைமாடன் கோயில, முத்தாராம்மன் கோயில் எல்லாம் உண்டு. கொடைவிழாக்களுக்கு அந்தக் கோயில்களுக்கு வரிகொடுத்து வந்தோம். அப்பா தி.கங்கறதுனால அவருக்கு இவற்றில் பிடிப்பில்லை. இவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார். ஆனாலும் அம்மாவோடும் எங்களோடும் அவர் கூட வருவார். அப்பா விபூதி, சந்தனம் எதுவும் பூசமாட்டாங்க. பூஜையில் பங்கெடுக்கமாட்டாங்க.


தீராநதி: முறைசார்ந்த கல்வி, முறைசாராத கல்வி பற்றிக் கூறுங்கள்?

உதயகுமார்: எதிரும் புதிருமாக இருந்தாலும் சேர்ந்து வாழணுங்கற நிலைப்பாடும் எங்களுக்கு காந்தியத்தின் மீதான நம்பிக்கையும் எல்லாமே அம்மாவிடமிருந்து வந்ததுதான். துவக்க கல்விக்குப்பின் நாகர்கோவில் டி.விடி. மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தமிழ் மீடியம் படிச்சாலும் எனக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடு உண்டு. சுவாமிதாஸ்னு ஆங்கில ஆசிரியர் இருந்தார். அவரிடம் ஆங்கில டியூஷன் போவேன். கல்லூரிப் படிப்பு பயோனியர் குமாரசுவாமி கல்லூரி பொறியியல் படிக்க வேண்டுமென அப்பா ரொம்ப விரும்பினாங்க. எனக்கு கடுகளவும் அதில் விருப்பமில்லை. எபனேசர் பால்ராஜ்ன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். குமாரசுவாமி கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியர். அவங்க இன்ஜினீயரிங் உனக்கு ஒத்து வராதுன்னு சொன்னாங்க. அது சரிதான். அவர்தான் எனக்கு குறிக்கோள் ஊட்டினார். நீ சமூக அறிவியல் படின்னு சொல்வாங்க. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முயற்சி செய்யும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எத்தியோப்பியால பள்ளி ஆசிரியர் வேலைக்கு விளம்பரம் வந்தது. வேலைக்குப் போனேன். அப்போ கம்யூனிஸ சித்தாந்தத்தில ஈடுபாடு இருந்தது. வீட்டுல அப்பா நிறைய புத்தகங்கள் வச்சிருப்பார். லெனிபைப் பற்றி, மார்க்ஸ் பற்றி, மூலதனம் பற்றி அப்பாகிட்ட அது தொடர்பா கேள்விகள் கேட்டிருக்கிறேன். அப்பாவும் தி.க. பெரியாரிய, கம்யூனிஸ சிந்தனை உள்ளவங்கங்கறதுனால நிறைய விவாதித்திருக்கிறோம்.

எத்தியோப்பியாவுக்குப் போன பின்னர் தான் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதைப் படித்தேன், பார்த்தேன். மெங்கிஸ்ட் ஹெலமெரியம் என்கிற ஒருத்தர்தான் எத்தியோப்பியால ஆட்சியாளரா இருந்தார். ராணுவ ஆட்சியாளர் படுபயங்கரமான இரும்புக்கரத்தோட அந்த நாட்டை ஆட்சி செய்தார். தனி மனித சுதந்திரம் அங்கு சுத்தமாகக் கிடையாது. ரொம்ப இறுக்கமாக ஒருங்கிணைந்து மக்கள் மூச்சுவிடமுடியாத அளவுக்கு நெருக்கி வச்சிருந்தாங்க. அப்ப சோவியத் யூனியனின் நெருங்கிய நாடாக எத்தியோப்பியா இருந்தது. கம்யூனிஸம் அமல் ஆனா இப்படித்தான் இருக்கும் என்பதை அங்குதான் பார்த்தேன். அப்ப சோவியத்தில் பிரஷ்நேவ் ஆட்சியாளர். இது எண்பத்தொன்று எண்பத்தேழுகளிலிருந்த நிலை. ஹெலமெரியம் எல்லா சோசலிஸ்ட் நாடுகளுக்கும் போவாரு. அந்த நாட்டுத் தலைவர்கள் இங்க வருவாங்க. அந்த நாடுகளிலிருந்து நிறைய உதவிகள் கொடுப்பாங்க. இவையெல்லாம் எனக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் பற்றிய கல்வியாக இருந்தது. கம்யூனிஸ அரசாங்கம் என்பது நாம் நினைக்கிற மாதிரி சுதந்திரமான அதிகார மையமாக இருக்காது. ஒரு குழு பிறரை ஒடுக்கக்கூடிய மற்றொரு அதியார மையமாகத்தானிருக்கும் அப்படின்னு தெரிந்தது. 81, 87 வரையில் அங்கிருந்தேன். அங்க ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இருந்தபோது யுனெஸ்கோ கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்தேன். அகில உலக புரிதலைக் கொண்டு செல்வதற்காக அதுவொரு உலகளாவிய இயக்கம். அரசாங்கத்துக்கு இந்த இயக்கம் தர்ம சங்கடமாக இருந்தது. நடத்தாதன்னு சொல்ல முடியல. யுனெஸ்கோ கூரியர் இந்த இயக்கம் நடத்திய இதழ்தான். உலகம் முழுவதும் சமாதானம் சுற்றுப்புறச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளை அது உலகம் முழுக்கக் கொண்டு சென்றது.

தீராநதி: இளமையிலேயே எப்படி இயக்கத்திற்கான தூண்டுதல் ஏற்பட்டது?

உதயகுமார்: கல்லூரி வாழ்க்கையின்போது மாணவர் அமைப்பை வைத்திருந்தோம். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் கூட்டங்களுக்குச் சென்று வந்தோம். ஆனால் அவங்க பேசியது எதையுமே எங்களுக்குப் புரிஞ்சுக்க முடியல. அவங்க அவ்வளவு உயர் தமிழிலி பேசினாங்க நாங்க எறும்புகள்னு ஒரு அமைப்பை ஆரம்பித்தோம். நானும் அகம்மது ஹமீர் ஒரு இஸ்லாமிய நண்பர், இளங்கடை ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து வாரந்தோறும் கூட்டம் போடுவோம். இலக்கியக் கூட்டங்கள்தான். அப்போது எங்க பேரைக் கூட எறும்புகள்னுதான் போடுவோம். எறும்புகள் உதயகுமார், எறும்புகள் ஜெயக்குமார் இப்படி காகங்களில் எங்களைச் சேர்க்க முடியல. எங்களால சேர்ந்துக்க முடியல என்பது உண்மை.

பிறகு இயக்கம் ஒன்றை நாங்க ஆரம்பித்தோம். அப்ப இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் கப்பற்படைகள் எல்லாம் நிலைகொண்டிருந்தன. இப்படியிருந்தா நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்னு அந்நியப் படைகள் வேளியேற வேண்டுமென்று குரல் கொடுத்தோம். அப்பகுதியில் இவங்களுக்குள்ள ஒரு அணு ஆயுத யுத்தம் வந்தால் நாமெல்லாம் அழிந்து போவோம். இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய கப்பற்படைகள் நிற்கக்கூhது அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்பில் தீர்மானம் போட்டோம். வித்தியசமான ஒரு குழு எங்கள் குழு உலகளாவிய விஷயங்களில் ஆர்வம் காட்டினோம். அது முக்கியமான காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் முதன்முதலாக நாங்கள் அணுசக்தி பற்றிப் பேச ஆரம்பித்தோம். அணுசக்தியும் அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டவை என்பதை இணைத்துப் பேசினோம்.

தீராநதி: உங்களுடைய அரசியல் சார்பு நிலை கட்சிகள் சார்ந்து இருந்ததா?

உதயகுமார்: எதுவும் கிடையாது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். உறுப்பினரெல்லாம் இல்லை. ஈடுபாடு இருந்தது. யுனெஸ்கோ அமைப்பை எத்தியோப்பியாவில் ஆரம்பித்ததை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசியல் கல்வியை அங்க பாடத்திட்டத்திலேயே சொல்லிக் கொடுப்பாங்க. அவற்றில் மேற்கத்திய நாடுகளில் எதுவும் கிடையாதுங்கிற மாதிரி பாடங்கள் இருக்கும். அரசியல் கல்வியை நானும் அந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறேன்.

அங்கே என்னுடைய சம்பளத்தையே யுனெஸ்கோ தான் கொடுத்தது. யுனெஸ்கோ கிளப்பில் மாணவர்களைத்தான் தலைவராய் நியமிப்போம். செயலாளர், பொருளாளர் எல்லாம் மாணவர்கள்தான். ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடத்துவோம். பிற தூதரகங்களுக்குக் கடிதம் எழுதி தகவல்கள் வாங்கி அதனை வெளியிடுவோம். தொடர்ந்து மாணவர் இதழ் ஒன்றை கையெழுத்துப் பிரதியாகக் கொண்டு வந்தோம்.

இந்த நடவடிக்கைகள் எத்தியோப்பிய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியது. அரசாங்கம் எங்களைக் கண்காணிக்க மாணவ ஒற்றர்களை நியமித்திருந்தது. அவர்கள் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரா பேசுறோம் என்கிற செய்தி பரவி, அரசாங்கம் சந்தேகப்பட்டது. மீண்டும் அடுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் எத்தியோப்பியாவில் ஆசிரியர் வேலையிலிருந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிரவம் என்கிற நிலைமை. அதனால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் திரும்பி வந்துவிட்டேன்.

தொடர்ந்து யுனிவர்சிட்டி ஆஃப் நோட்டர் டேம்ல சமாதானத்திற்கான ஆய்வு பற்றிப் படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்தது. என்னைப் பரிந்துரை செய்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பெண்மணி. அவர்களை 1986-ல் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கில் கட்டுரை படிக்கும் போது சந்தித்தேன். உன்னைப் பரிந்துரை செய்திருக்கிறேன். அட்மிஷன் கிடைத்து உனக்கு விருப்பமும் இருந்தால் போ என எழுதியிருந்தார்கள். நானும் அந்தக் காலகட்டத்தில் குழப்பத்திலிருந்தேன். தங்கை ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பெரிய தங்கைக்குத் திருமணத்தில் சில பிரச்னைகள் இருந்தன. அப்போ எனக்கு ஊரில் இவற்றைத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை. 89ன் பிற்பகுதியில் பிரச்சினைகள் ஓரளவு சரியான பின் ஆஸ்திரேலிய அழைப்பை ஏற்று அங்க போயி எம்ஏ பண்ணினேன். பயணச் செலவு, படிப்புச் செலவு உணவுச் செலவு, தங்கும் செலவு எல்லாம் அவங்க கொடுத்தாங்க. அதோடு கைச் செலவுக்கு 100 டாலர் கொடுத்தாங்க. பதினைந்து நாடுகளிலுள்ள பதிமூன்று ஆண்களும் பெண்களும் ஒரே கட்டடத்தில் தனித்தனியறையில் தங்கியிருந்து படித்தோம். அந்த இடத்தின் பெயரே பீஸ் அவுஸ். அப்போ என்னுடைய பேராசிரியர் ஒருவர் யுனிவர்சிட்டி அவாய்ல வேலை பெற்றுத் தந்தார். ஒரு பேராசிரியருக்கு ஆய்வு உதவியாளராக வேலை செய்தேன். பின்னர், அங்கு தான் பிரசின்டிங் த பாஸ்ட் என்கிற என்னுடைய பி.எச்.டி ஆய்வுப் படிப்பையும் முடித்தேன்.

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_31.php

No comments:

Post a Comment