Friday, April 16, 2010

நாஞ்சில் நாடன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு

நாஞ்சில் நாடன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்

கேணி அமைப்பின் பத்தாவது இலக்கிய சந்திப்பு 14.03.10. அன்று நடைபெற்றது. பத்திரிக்கையாளர் ஞாநி அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் இம்மாத சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வந்துள்ளார். இவர் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய உலகில் செயல்பட்டு வருபவர். இன்று நம்மோடு இலக்கியம் சார்ந்த தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். பிறகு அவரோடு விவாதிக்கலாம் எனக் கூறி வரவேற்புரையை நிறைவு செய்தார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

இலக்கியம் படைப்பவனுக்கு சொற்கள் மிகவும் முக்கியமானது. தமிழில் பல இலட்சம் சொற்கள் இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டு வையாபுரிபிள்ளை சென்னை பல்கலைக்கழகப் பதிப்பகத்திலிருந்து ஒரு லக்சின் கொண்டு வந்தார். அவற்றில் சுமார் 1,24,000 சொற்கள் உள்ளன. சுமார் 20 கிலோ எடையுள்ள புத்தகங்கள் ரூ.600க்கே கிடைக்கிறது. ஆனால் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் இரண்டாம் பதிப்பு வெளிவரவில்லை. இந்த முப்பது வருடங்களில் பல புதிய துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. பல லட்சம் வார்த்தைகள் உருவாகி இருக்கும். அவற்றை தொகுக்க யாருமில்லை. எந்த பல்கலை கழகமும் அகராதி கொண்டு வருவதில்லை. சில தனிமனிதர்கள் தங்களது சொந்த முயற்சியில் அகராதி கொண்டு வந்துள்ளார்கள். கரிசல் பகுதி சொல்லகராதியை கி.ரா.கொண்டு வந்தார். நாஞ்சில் நாடு - அ.கா. பெருமாள், கொங்கு நாடு - பெருமாள் முருகன், நடுநாடு - கண்மணி குணசேகரன், எதுகை மோனை அகராதி - அப்பையா ஆகியோரை சொல்லலாம். இன்னும் சில அகராதிகள் இருக்கக்கூடும்.

இவை எல்லாமே எந்த பல்கலைக்கழக உதவியும் இல்லாமல் படைப்பாளியே ஆய்வாளனாக மாறி உருவாக்கியவைகள்.

சொற்கள் தரும் பொருள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. உதாரணமாக பெருச்சாளி என்றால் அனைவரும் அறிவர். ஆனால், ஒரு சில வட்டாரங்களில் அகவான், அகவையான் என்றே கூறுகின்றனர். முந்திரிக்கு கொல்லாம்பழம் என்றும் பெயருண்டு. முந்திரியை பிளக்க பயன்படும் பொருளுக்கு கண்டான் என்ற பெயர் நடுநாட்டில் வழங்கப்படுகிறது. இடைநாகம் என்றால் அடைகாக்கும் பாம்பை குறிக்கும். பல வகையான மீன்களை இனம் பிரித்து பார்க்கத் தெரிந்தவர்களுக்கே 20, 25 வகையான மீன்கள் பெயர்தான் தெரியும். ஆனால் 864 வகையான மீன்கள் உள்ளதாக அண்மையில் வாசித்தேன்.

எழுத்தாளனின் வெளியீட்டுத்திறன் அவன் பயன்படுத்தும் சொற்களை பொறுத்தே இருப்பதாக நம்புகிறேன். டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை ஒரே அளவு உடையதுதான். ஒரு பந்திற்கும் மற்றொரு பந்திற்குமான அனுமதிக்கப்பட்ட எடை வித்தியாசம் 0.5 மில்லி கிராம் தான். அவ்வளவு சிறிய எடை வித்தியாசத்தில் கூட விளையாட்டு வீரர் தனக்கு தேவையானதை தேர்ந்து எடுத்த பிறகுதான் விளையாடுகிறார். ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கே இவ்வளவு நுட்பமான தேர்வு அவசியமெனில் பல தலைமுறை கடந்து செல்லக்கூடிய இலக்கியத்தை படைக்கும் படைப்பாளி எந்த அளவுக்கு செறிவான சொற்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும். போர்க்களத்தில் நிற்கும் வில்லாளிகளின் அம்பறாத் துணியில் அம்புகள் நிரப்பப்பட்டிருப்பது போல் படைப்பாளியின் உள்ளத்தில் சொற்கள் நிரம்பி இருக்க வேண்டும். சொற்களை தேடித்தேடி சேகரிக்க வேண்டும். படைப்பை உருவாக்கும்போது சொற்களை யோசித்து யோசித்து எழுத முடியாது. சிறுகதை, நாவல் வாசிப்பதுபோலவே எனக்கு அகராதி வாசிக்கவும் விருப்பமுண்டு. சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை கூட தொல்காப்பியம் சொல்லித் தருகிறது. எனக்கு தெரிந்த சொற்களை என் படைப்பில் பதிவு செய்து வைக்கிறேன். கருக்கு என்றால் பனமட்டையையும், கருக்கு அருவாளையும் தான் பலருக்கு தெரியும். கருக்கு என்றசொல்லுக்கு இளநீர் என்ற பொருளும் உண்டு. அவன் தென்னை மரத்தில் ஏறி கருக்கு பறித்துப் போட்டான் என எழுதும்போது கருக்கு என்பது இளநீர் என்பதை வாசகன் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன். இதுபோல் விமர்சனம் எழுதும்போதும் அபூர்வமான சொற்களை, அபூர்வமான தாவரங்களை முதன்மைப்படுத்தியே எழுதுகிறேன்.

என் மதிப்பீடு சார்ந்து சொற்களை ஆயுதமாக பயன்படுத்துகிறேன். வினையமான என்றால் பணிவான என்று பொருள்படும். அதற்கு விஷமத்தனமான என்றொரு பொருளுமுண்டு. தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை பட்டியலிட்டு பேரா.அருளி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அவற்றில் சுமார் 20,000 சொற்கள் உள்ளன.

நான் முதுகலை பட்டம் முடித்தபிறகு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து பலனில்லாமல் 1973 ஆம் ஆண்டு வேலை தேடி பம்பாய் சென்றேன். ஒரு தொழிற்சாலையில் 8 ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தேன். மாலை நேரங்களில் கம்பராமாயணம் பாடம் படித்தேன். அந்த ஆசிரியர் ராமாயணம் மட்டுமல்லாது திருவருட்பா, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் என தமிழ்பக்தி இலக்கியங்களில் இருந்தும் பாடம் நடத்துவார். நான் நாத்திக வாதியாக இருந்தபோதிலும் இலக்கியச்சுவைக்காக எல்லா பக்தி இலக்கியங்களையும் வாசித்தேன். பம்பாய் வாழ்க்கையில் தனிமையை உணர்ந்தேன். தனிமையை போக்க தீவிரமாக வாசிக்க தொடங்கினேன். ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களை கூட படித்து முடித்துவிடுவேன்.

என் வாசிப்பு அனுபவமும் தனிமையும் என்னை எழுதத்தூண்டின, பம்பாய் தமிழ் சங்கத்தில் வெளிவந்த ஏடு என்ற இதழில் நிகழ்ச்சி தொகுப்புகள் எழுதினேன். பிறகு தீபம் இலக்கிய இதழுக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பி வைத்தேன். அது உடனே பிரசுரமாகிவிட்டது. அந்த மாதம் வெளியான சிறுகதைகளிலேயே சிறந்த சிறுகதையாக உரத்த சிந்தனை அமைப்பால் பாராட்டவும் பெற்றது.

முதலில் திராவிட அரசியலில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பிறகு பொதுவுடமை அரசியல் எனக்கு பிடித்தது.

கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள் தமிழ் மேம்பாட்டுக்கு எதுவும் செய்வதில்லை. குறைந்தபட்சம் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் கடமையை செய்தாலே சிறப்பாக இருக்கும். மிக குறைவான சதவீதத்தினரே பாராட்டும்படியாக உள்ளனர்.

இறுதியாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.



Tuesday, April 13, 2010

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் கோடைக்கால குறும்படப் பயிற்சிப் பட்டறை

நாள்: 07-05-2010 முதல் 14-05-2010 வரை.
இடம்: ஸ்ரீ வில்லிப்புத்தூர்
கட்டணம்: தொலைபேசி வாயிலாக அறிந்துக் கொள்ளவும்.

நிழல் - தமிழ்நாடு குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் இனைந்து நடத்தும் 19 வது குறும்படப் பயிற்சிப் பட்டறை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மே 7 முதல் 14 வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற இருக்கின்றன.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக் கல்வியை, கிராமப்புற மாணவர்கள் - இளைஞர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது. இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.

பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும், உலகப் புகழ் பெற்ற ஐந்து படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு 9444484868.

முகவரி:

12/28 இராணி அண்ணா நகர், சென்னை 600078


கவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010)

கவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010)

கவிதை உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டிகளுக்கு, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

முதல் பரிசு: ரூ.5000/-
இரண்டாம் பரிசு: ரூ.3000/-
மூன்றாம் பரிசு: ரூ.2000/-

நிபந்தனைகள்:

1. குறும்படங்கள் 2009 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

2. குறும்படங்கள் சமூகப் பிரச்சனை சார்ந்து எடுக்கபட்டிருக்க வேண்டும்.

3. கடிதப் போக்குவரத்து வேண்டாம்.

4. குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

5. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய
இறுதித் தேதி: 20-04-2010

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாக்ரிஷ்ணன்,
420 E, மலர் காலனி, அண்ணா நகர், சென்னை - 600040

http://thamizhstudio.com/competitions_16.php



அயல் கவிஞர்கள் - கேரி ஸ்நைடர்

சான்ஃபிரான்சிஸ்கோவில் பிறந்த, வளர்ந்த அமெரிக்க கவிஞர். ஜப்பானிய மற்றும் சீன மொழிகள் கற்றவர். விறகுடைப்பவராக, தச்சராக, மாலுமியாகப் பணிபுரிந்தவர். தற்போது கலிஃபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியர். 1975ல் கவிதைக்கான 'புலிட்ஸர்' பரிசு பெற்றர். ஜென் பௌத்தத்தில் ஈடுபாடுடையவர். சில வருடங்கள் ஜப்பானில் வாழ்ந்தவர்.

'மேற்கத்திய கீழைத்தேய பண்பாடுக்கிடையிலான, அமெரிக்காவின் இயந்திரத் தொழில் நுட்பத்திற்கும் இயற்கைக்குமிடையிலான, நகரத்திற்கும் மண்ணிற்குமிடையிலான, வரலாற்றுக்கும் நிகழ்காலத்து சமூகத்திற்கிடையிலான உறவுகள் குறித்துப் பெரிதும் அக்கறைகொண்டுள்ளவர்.

கவிஞர் மட்டுமல்லாது கட்டுரையாளரும், மொழிபெயர்ப்பாளரும், சுற்றுச்சூழலளாரும் ஆசியருமாக இருந்து வருபவர்.

ஜாக் கெரோக்கின் ''The Dharma Bums'' நாவலின் முக்கிய பாத்திரம் ஒன்றிற்கான உத்வேகமாக இருந்தவர்.

950களின் Beat Generation இயக்கத்தில் ஆலன் கின்ஸ்பெர்க் மற்றும் ஜாக் கெரோக்குடன் சேர்ந்து இயங்கியவர்.

இவரது சிந்தனையில் ஜென் பௌத்தத்திற்கு முக்கிய பங்குண்டு.

நேர்காணல் - கேரி ஸ்நைடர்

கே - தனிப்பட்ட முறையில், கிராமிய வாழ்வில் உங்களுக்குள்ள ஈர்ப்பு என்ன?

ப - கவிதை மற்றும் நகரம் (அ) கிராமப்புறம் குறித்துள விவாதங்கள் ஒருபுறமிருக்க, நகரம் சிக்கலாகியிருக்கிறது என்பது தெளிவானது. முற்றிலும் தெளிவானது. வாழ்வதற்கு மககள் பிற வழிவகைகளைத் தேடத் தொடங்குவது இயல்பானதே. கிராமப்புற வாழ்வில் உள்ளார்ந்த நிறைவு இருக்கிறது. சில பேருக்காவது நிறைய சந்தோஷங்கள் இருக்கின்றன. வேலை சிரமமானது. தனது தண்ணீர், எரிபொருள், காய்கறிகள் முதலானவற்றிலிருந்து அந்நியப்பட்டிருப்பதில்லை. அவை அடிப்படையானவை. பழங்காலத்து மானுட அடிப்படைகள்.

லட்சோப லட்சம் ஆண்டுகளாக மக்கள் எப்படி வாழ்ந்து வந்திருந்தார்கள் என்னும் அடிப்படைகளிலிருந்து மிகவும் விலக்கப்பட்டுவிட்டால், மானுட படைப்பாக்கமும் கலைகள் அனைத்தும் வாடத் தொடங்கிவிடும் என்று கூறுவது அதீதமானதாய் இருக்காது. வெயில், தண்ணீர் மற்றும் இலையின் நிகழ்ச்சிப்போக்கால் இவ்வுயிர் மண்டலத்திற்கு கொண்டுவரப்பட்ட மிருகமே நாம் அவற்றிடமிருந்து மிகத் தொலைவுக்கு விலகிச் செல்கிறோமாயின் தாயிடமிருந்தும் நமது பாரம்பரியத்திலிருந்தும் மிகத் தொலைவுக்கு விலகிச்செல்பவர்களாகவே இருப்போம். ஆனால் எனது சில நல்ல கவிதைகளை, மாதக்கணக்கில் ஒரு பசிய இலையினையோ ஈயினையோ காணாது. கப்பல் டேங்கரில் இயந்திர அறையில் பணிபுரிகையில் எழுதியிருக்கிறேன். அது ஒரு பிரச்சினையல்ல. உங்கள் பாதங்களை எங்கே பதிக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகளை எங்கே வளர்க்கிறீர்கள். உங்கள் கைகளால் என்ன செய்கிறீர்கள் என்பதே பிரச்சனை. இப்போது கப்பலின் இயந்திர அறையில், என் உடலாலும் கைகளாலும் வேலைசெய்வது சில வகைகளில், இந்த அழகான காட்சி கண்ணுக்குக் கிடைக்கின்றன இடத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசுவது, தட்டச்சுப் பொறியைத் தொடாதபடி தட்டச்சு செய்வது என்பவற்றைவிடவும், குறைந்த அளவே அந்நியமாதல் கொண்டது. அத்தருணத்தில் உடம்பைப்பயன்படுத்துவது புலன்களை ஈடுபடுத்துவதுதான் முக்கியமானது.

கே - எலியட்டைக் குறிப்பிட்டீர்கள். எலியட் மிகவும் அறிவார்த்தான கவிஞர் இல்லையா?

ப - எலியட்டிடம் வேடிக்கையாக காணப்படுவது அவரது புத்திசாலித்தனம் மற்றும் குறிப்பிட்ட திசை வழிக்கு உங்களைச் செலுத்திடும் மேற்கத்தைய குறியீடுகளை மிகவும் தெரிந்தெடுத்த விதத்திலும் வசீகரமாகவும் பயன்படுத்திக் கொள்வது '''From Ritual to Romance'' -னை வாசித்துவிட்டு 'Prolegomena'', "Greek Religion'' என்றெல்லாம் வாசித்துக் கொண்டே போனேன். கடைசியில் அது உங்களை, ஃப்ரான்சின் ட்ராயி ஃப்ரெரிகுகைகளுக்குக் கொண்டு சேர்க்கும் சாரமுள்ள எதனையும் பின்தொடர்ந்து போனால் அது உங்களை அங்கே கொண்டு சேர்க்கும். ஆகவே எலியட் அதனை அறியாமலேயே, ஆழ்ந்த திசைவழிகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். எலியட்டின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது அது ஒரு பெரும் படைப்பு என்றெண்ணுகிறேன். வேர்கள் பற்றிய உணர்வு கொண்டிருந்தார். பவுண்டால் திரும்பிப்பார்க்க இயலாது போயிற்று. வெண்கல காலம் வரை போகக்கூடியவர்தான் அவர். அவரது கற்பனை மேலும் செல்லவிடாது தடுத்துவிடும். ஆனால் புதிய கற்காலம் வரையாவது போக முடிந்தது.

கே. நவீன கவிஞர்களால் புதியகற்காலம் வரை போக முடிகிறது என்னும்போது என்ன கூற வருகிறீர்கள்?

Sunday, April 11, 2010

அங்காடித்தெரு: அன்றாட நெருக்கடிகளுடனான முதல் காதல்



தகவல்-சார் படைப்பு என்ற வகைமை நாவல்களிலும் திரைப்படங்களிலும் உண்டு. நாவல்களில் ஆர்தர் ஹெய்லி உடனே நினைவுக்கு வருபவர். பாலிவுட் படங்களில் மதுர் பண்டார்க்கர் தகவல்-சுவாரஸ்ய படங்களுக்கு பேர் போனவர். உதாரணமாக ”சாந்தினி பார்” மதுக்கூட நடனப்பெண்ணின் வாழ்க்கையை சொன்னது. ”பேஜ் 3” மேல்தட்டு மக்களின் உள்ளீடற்ற பாசாங்கு வாழ்க்கை. ”கார்ப்பரேட்” தனியார் நிறுவனங்களின் இரக்கமற்ற அரசியல். ”டிராபிக் சிக்னல்” பிச்சைக்காரர்களின் சில்லரைகள் நாட்டின் அதிகார வர்க்கத்தையே இயக்குவது குறித்தது. ”பேஷன்” மாடல் பெண்களின் நிரந்தரமற்ற பணி நிலை ஏமாற்றங்கள் மற்றும் சறுக்கல்கள். இத்தகைய தகவல்சார் படங்களின் முக்கிய பண்பு தகவல் செறிவே அவற்றின் சுவாரஸ்யமாக இருப்பது. இந்த பாணி படங்களில் இரண்டு வகை. ஒன்று தகவல்களின் வலிமையால் நிற்கும் படம். இது பலவீனமான திரைக்கதை கொண்டிருக்கும். எந்த உள்ளார்ந்த தேடலும் இருக்காது. மதுர் பண்டார்க்கரின் ”டிராபிக் சிக்னல்” தவிர்த்த பிற படங்கள் அத்தனையும் இந்த வகையறா. இயக்குனரின் அவதானிப்புகளும் தரிசனமும் ஒரு தகவல்-சார் படத்தை மேம்பட்ட தளத்துக்கு கொண்டு செல்லலாம். உலகப்படங்களிலும் ஹாலிவுட்டிலும் பல உதாரணங்கள் சொல்லலாம். எனக்கு பிரியமானது Perfume. பாலிவுட்டில் ”டிராபிக் சிக்னல்” மற்றும் Black Friday ஆகியவற்றை சொல்லலாம். நிழலுலக தாதா வகை படங்களை இவற்றுடன் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. என்னதான கள-ஆய்வுகளால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு உணர்வு அல்லது சமூகரீதியான பிரச்சனை அல்லது மோதலை தனது மையமாக கொண்ட படங்கள் இவை. உதாரணமாக ”சத்யா”, ”புதுப்பேட்டை”, ”அஞ்சாதே”. தமிழில் அசலான தகவல்-சார் படத்திற்கான முதல் முயற்சி வசந்தபாலனது: ”அங்காடித் தெரு”. இதை யாரும் கவனிக்காதது, அல்லது பொருட்படுத்த முடியாதபடி படம் உருவானது அதன் தோல்விக்கு முக்கிய காரணம்.



Friday, April 9, 2010

குறும்பட ஆலோசனை



உங்கள் குறும்படங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தயாரிப்பு செலவு, உபகரணங்கள் (கேமரா, லைட்டிங், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து தேவையை தெரிவிக்க, மேலும் சந்தைப்படுத்துதல் போன்ற குறும்படங்கள் சார்ந்த உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட முகவரியில் ஆலோசனை பெறலாம். (முன் அனுமதி பெற்று சந்திக்கவும்)

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை

இச்சேவை முற்றிலும் இலவசம்

நூலக வசதி:

ஏதேனும் சிறுகதையை குறும்படமாக்க விருப்பமிருந்து, கதை தேடலில் இருந்தால் நீங்கள் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலக வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே அனைத்து வகையான சிறுகதைகளும் அடங்கிய நூல்களுடன் கூடிய ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
தொலைபேசி: 9840698236, 9894422268

வேண்டுகோள்:

தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலகத்திற்காக அனைத்து விதமான திரைப்பட தொழில்நுட்பங்கள், சிறுகதைகள், நாவல், வெளிநாட்டு கதைகள், முக்கிய சம்பவங்கள் அடங்கிய அனைத்து விதமான நூல்களும் தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நூல்கள் தந்து உதவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நூல்கள் எப்படி நிலையில் இருந்தாலும் அனுப்பலாம். இந்த நூல்கள் அனைத்தும், தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் ஆர்வலர்கள் அனைவருக்கும் படிக்க வசதியாக வைக்கபட்டிருக்கும்.

இதுமட்டுமின்றி, முக்கிய சம்பவங்கள், உதாரணமாக வீரப்பன் இருந்தபோது சத்தியமங்கலத்தின் நிலை, தற்போது அந்த கிராம மக்களின் நிலை சார்ந்த தகவல்கள், கிராமங்களின் நிகழும் வித்தியாசமான சடங்குகள், ஏதனும் உங்களிடம் இருப்பின் அவற்றையும் தந்து உதவலாம். அவை தமிழ் ஸ்டுடியோவின் உதவியுடன், ஆர்வலர்களைக் கொண்டு ஆவணப்படமாக உருமாற்றப்பட்டு உலகம் முழுவதும், மக்களின் பரவலான கவனத்திற்கு வைக்கப்படும்.

அனைத்து விதமான நூல்களையும், சம்பவங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி:

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024



Thursday, April 8, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 19 வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


நாள்: சனிக்கிழமை (10-04-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

சென்ற மாதம் புதிதாக தொடங்கிய குறும்பட கலந்தாய்வு பகுதியில் "படமெடுக்கலாம் வாங்க" திட்டத்தின் கீழ் கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி பெற்ற ஆர்வலர் செந்தில் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படம் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் குறித்தும், குறும்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் போன்றவை குறித்து அனைத்து ஆர்வலர்களும், தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

மேலும், இந்த மாதம் ஆர்வமுள்ள ஒரு உறுப்பினருக்கு கேமரா மற்றும் படத்தொகுப்பு வழங்குவது குறித்தான அறிவிப்பும் வெளியாகும்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. அகத்தியன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

திரு. அகத்தியன், வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, ராமகிருஷ்ணா போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்திற்காக பெற்றவர்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
வாழ்வின் நடனம்செந்தில் 13 நிமிடங்கள்
யோசிஆரோக்கியராஜ்15 நிமிடங்கள்
வாழ்க ஜனநாயகம்கணபதி20 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. துவாரகநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

துவாரகநாத் அவர்கள், ஆடோக்ராப், மாயக்கண்ணாடி, காவலர் குடியிருப்பு போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

www.thamizhstudio.com