Showing posts with label sramakrishnan. Show all posts
Showing posts with label sramakrishnan. Show all posts

Tuesday, May 31, 2011

தாகூர் இலக்கிய விருது - 2011



தாகூர் இலக்கிய விருது - 2011

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தாகூர் விருது பெற்றமைக்காக வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை.

கிருஷ்ண பிரபு

1861-ம் ஆண்டு பிறந்து 1941-ல் பூதவுடலைத் துறந்து இயற்கை எய்தினாலும், தன்னுடைய படைப்புகளின் மூலம் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

'ஜனகன மன' - என்ற பாடலின் மூலம் இந்தியர்களின் இரத்தத்தில் இரண்டறக் கலந்திருப்பவர். வங்காள தேசத்தின் தேசியப் பாடலிலும் இவருடைய பங்களிப்பு இருக்கிறது. இலங்கையின் தேசியப் பாடலை எழுதியவர் தாகூரின் கருத்துகளில் பற்றுடையவர் என்பதால் அங்கும் இவருடைய தழுவல் இருக்கிறது. தேசங்களைக் கடந்து உணர்ச்சிகரமான கவிதைகளின் மூலம் ஒலித்தவருக்கு 1913-ல் கீதாஞ்சலிக்காக நேபால் பரிசு கிடைத்தது. அதன் மூலம் நோபல் பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் படைப்பாளி என்ற பெருமையைப் பெற்றார். கவிஞர், நாடகாசிரியர், சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், கல்வியாளர், பதிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். தாகூரின் பன்முக பங்களிப்பைக் கருத்தில் கொண்ட வாங்க அரசு, தேசத்தில் துவங்கப்படும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு "ர" என்ற எழுத்தை திட்டப் பெயரின் முன்னாள் சேர்த்து மகாகவியைப் பெருமைப்படுத்துகிறார்கள். சாகித்ய அகாடமி, லலித்கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தாகூரின் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி வருகின்றன.

தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய விருதின் 2010-ற்கான பட்டியலை (Tagore Literature Award) அறிவித்திருக்கிறார்கள். விருதுக்கான பரிசீலனையில் 24 மொழிகளில் வெளியான இந்திய படைப்புகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் எஸ் ராமகிருஷ்ணனின் "யாமம்" இடம் பெற்றுள்ள மகிழ்ச்சியான செய்தியை நவீன படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இவருடன் சேர்ந்து எட்டு மொழியின் படைப்பாளிகள் இந்த விருதினைப் பெறுகிறார்கள். ஒரு தமிழ் படைப்பாளி இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்றாலும் விருதானது 2009-ல் தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெபாப்ரட்ட தாஸ் எழுதிய அசாமிய சிறுகதைத் தொகுப்பான "Nirabchita Galpa", சந்தோஷ் கஜுர்லவின் டோக்ரி மொழி கவிதை தொகுப்பான "Bandlondian Bahaaraan", விஜய் டான் தெத்தாவின் ராஜஸ்தானி சிறுகதைத் தொகுப்பான "Bataan Ri Fulwari", சிறுபான்மையினர் மொழியான சந்தளியில் 'சொமை கிஸ்கு' எழுதி வெளிவந்த நாவலான "Namalia", பேராசிரியர் RG ஜதவின் மராட்டிய விமர்சன நூலான "Nivadak samiksha", ப்ரஜ்னத் ரத் எழுதிய ஒரிய கவிதை நூல் "Samanya Asamanya", உருதுக் கவிஞர் சந்தர் பான் க்ஹயல் எழுதிய "Subah-e-Mashriq", எஸ் ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலையும் சேர்த்து மொத்தம் 8 படைப்புகள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எஸ்ராவின் படைப்புகள் மாய வசீகரம் கொண்டவை. வாசகனை உள்ளிழுத்து கற்பனைப் போர்வையில் உலாவச் செய்பவை. பனிக்கட்டியானது வெப்பத்தினால் உருகி, நீர்க் கட்டிகளாகச் சிதறி, நதியாக நகர்ந்து நீராகவே விரியும் இயல்புடையது எஸ்ரா-வின் எழுத்து. மையத்திலிருந்து விளிம்பு நோக்கி நகர்ந்து மீண்டும் மையமாக உருக்கொள்ளும் படிமங்களை இவருடைய எழுத்தில் நிறையவே காணலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய சிற்றிதழான "அட்சரம்" இவரைத் தீவிர இலக்கியவாதியாக அடையாளப்படுத்தியது. 2000-த்தில் வெளியான 'உபபாண்டவம்' தான் எஸ்ராவின் முதல் நாவல். இது மலையாளம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பே இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து இருந்தாலும் ஆனந்த விகடனில் வெளியான "துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி" போன்ற தொடர்கள் தான் எஸ்ராவை பரவலான வாசகர்களிடம் கொண்டு சென்றது. 'துணையெழுத்து' - அன்பும் அரவணைப்பும் கொண்ட முகம் தெரியாத மனிதர்களின் நெருக்கத்தைப் பற்றிக் கூறுகையில், 'தேசாந்திரி' - பயணத்தில் விருப்பமுள்ள தேசாந்திரியாக சுற்றி அலையும் இளைஞனின் பார்வையில் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி பேசியது.

இதுவரை வெளியான எஸ்ராவின் நாவல்களான "உபபாண்டவம், நெடுங்குருதி, உறுபசி, யாமம், துயில்" ஆகிய எதுவும் தொடராக பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. எல்லாமே புத்தக வடிவில் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றில் யாமம் என்ற நாவலுக்குத் தான் 2010-ஆம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

இது நிதர்சனத்திற்கும், மாயைக்கும் இடைப்பட்ட நாவல். இந்த நாவல் மூன்று நூற்றாண்டுகளின் கதையை விவரிக்கிறது. அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு பக்கீர் (அல் அசர் முசாபர்) ஞானியிடமிருந்து கனவின் மூலம் வரமாகப் பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் பத்துத் தலைமுறை வியாபாரக் கதையாக ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் ‘யாமம்’. முக்கியக் கதாப்பாத்திரங்கள் தொடர்பற்று தனித்து நின்றாலும், அத்தர் அவர்களுக்கிடையிலான இடைவெளியை காற்றில் கலந்து வாசனையால் நிரப்புகிறது. சமயத்தில் காமத்தின் குறியீடாக புடைத்தெழுகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்ற விழைந்த போது வாசனைத் திரவியமும், தானியமும், நெசவுத் துணிகளும் முக்கிய வியாபாரப் பொருட்களாகப் பயன்பட்டிருக்கிறது. இந்தியா மேற்கத்திய நவீனத்துவம் நோக்கி நகர்வதையும், மேற்கத்திய காலனியாதிக்க மனோபாவம் இந்தியாவில் காலூன்ற எத்தனிக்கும் தருணத்தையும் ஏராளமான உள்மடிப்புகளுடன் நகர்த்திச் செல்லும் நாவல். இரவானது உறக்கத்திலும், முழிப்பிலும் இருக்கும் மக்களைத் தாண்டி ஏராளமான ரகசியங்களை பூனையின் லாவகத்துடன் கவ்விச் செல்கிறது. இரவின் சுவாரஸ்யம் மிகுந்த உள்படிமங்களே கதைக் களன்களாக விரிகிறது. வித்யாசமான முயற்சிகாக எஸ்ரா விருது பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவல் ஏற்கனவே கனடாவின் இயல்விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- கிருஷ்ண பிரபு


http://koodu.thamizhstudio.com/katturaigal_21.php