Tuesday, September 20, 2011

இங்கே எழுதப்படுவது ஹைக்கூ அல்ல பொய்க்கூ - கவிஞர் அய்யப்ப மாதவனுடன் ஒரு நேர்காணல்



இங்கே எழுதப்படுவது ஹைக்கூ அல்ல பொய்க்கூ - கவிஞர் அய்யப்ப மாதவனுடன் ஒரு நேர்காணல்

ஆனந்த், செந்தூரன், உதவி: கதிர்வேல் : படங்கள்: சோமசுந்தரம்


சக மனிதர்களிடையே பரிமாறப்படவேண்டிய மனித நேயத்தையும் அதன்பொருட்டு கிடைத்திடும் அத்தனை ரசங்களையும் கவிதைகளாக படைப்பவர் கவிஞர் அய்யப்பமாதவன். எதையும் சார்ந்திராத பற்றற்ற மனநிலையையே உணர்த்தும் இவரின் கவிதைகள் அனுபவ வெளியிலிருந்து உருமாற்றம் கண்டவை. சிலர் அழகியலோடு தத்துவார்த்தமாக, கவிதை நயத்தோடு எழுதுவார்கள். ஆனால் நேரில் ஒரு இறுக்கமான நிலைகாட்டி முரணுணர வைப்பார்கள். எத்தனையோ எதிர்மறை அனுபவங்களைக் கண்டபின்னும் பழகிய அடுத்த நொடியே நெருக்கமுணர்த்தி நெகிழ்வுண்டாக்குகிறார். உலகம் அன்புமயமாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்று மனதார விழையும் மனிதர். மனிதர்க்கு விளைந்திடும் அத்தனை உணர்வுகளுக்குள்ளும் காற்றைப் போல் நிறைந்து கவிதைகளாக வெளிப்படுகிறது அய்யப்பமாதவனின் நல்மனது. தீரா ஆவலுடன் கவிதைகளாகவும், கதைகளாகவும் திரைத்துறை சார்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். "கவிதை எழுதும்போது சாமானியனின் வாழ்வை விட்டு நீங்கிவிடுகிறேன்" என்று சொல்லும் கவிஞர் அய்யப்பமாதவனிடம் ஒரு நேர்காணல் :

நீங்கள் இலக்கியத்துக்குள் பிரவேசித்தது எப்படி?

சிவகங்கைச் சீமையிலிருக்கும் நாட்டரசன்கோட்டைதான் நான் பிறந்த ஊர். பிரபலமாக இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன் பால்ய காலத்திலிருந்தே நண்பர். அவரைப் பார்க்க அடிக்கடி சிவகங்கைக்குச் செல்வேன். கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்துக்கு செழியன் அழைத்துச் செல்வார். அங்குதான் தமிழிலக்கியத்தின் ஆளுமைகளை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மீராவின் மகன் கதிர் நூல்களைப் படிக்ககொடுத்தார் காசில்லாமல் இறுக்கமாயிருந்த நட்பின் அடிப்படையில். நாங்கள் மூவரும் இலக்கியம் பற்றி விவாதிக்க, விவாதிக்க எனக்குள் சிந்தனையும், பேரார்வமும் என்னை செதுக்கிக் கொண்டிருந்தன. அப்போது ஜப்பானிய மொழியிலிருந்து பேராசிரியர் வீ.உண்ணாமலை அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. எளிமையான வடிவமும் வலிமையான பொருளும் ஒருங்கேயமைந்த ஹைக்கூ என்னை ஈர்த்தது. அத்தகைய கவிதைகளை வாசிக்க, வாசிக்க நாமும் எழுத வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. மூன்று வரிகளில் எழுதினால் போதுமென்ற ஹைக்கூவின் இலக்கணம் எனக்கு வசதியாகயிருந்தது. ஆனால் ஹைக்கூவின் மற்ற இலக்கணங்களைத் தூக்கியெறிந்துவிட்டேன். வெறும் மூன்றுவரிக் கவிதைகள்தான் அவை. ஹைக்கூவே அல்லயென்பதையும் பொய்க்கூ என்பதையும் புரிந்துகொண்டேன். இங்கு எழுதப்படுபவை ஹைக்கூ என்ற போர்வையில் எழுதப்படும் கவிதைகளேயன்றி ஹைக்கூ கவிதைகளல்ல என்பது உலகமறிந்த விசயம்.

கண்களுக்கு தூண்டிலிட்டேன்
மாட்டிக்கொண்டது
இதயம்.

இதுதான் நான் எழுதிய முதல் கவிதை. பல நண்பர்களிடம் வாசித்துக் காட்டினேன். ஆனால் செழியன் மட்டும்தான் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அவரின் அந்த வழிகாட்டுதல்தான் அப்போதைய ஆகப்பெரிய உந்துசக்தி. இப்பொழுது இதுமாதிரி கவிதைகளை எழுதமாட்டேன். ஹைக்கூ கவிதைக்கென்று இலக்கணம் இருக்கிறது. முதல் வரியில் ஐந்து அசைகளும், இரண்டாவது வரியில் ஏழு அசைகளும் மூன்றாவது வரியில் ஐந்து அசைகளும் இருப்பதுதான் 'ஹைக்கூ' கவிதைக்கான இலக்கணம்.

கவிதை எழுத ஆரம்பித்த பிறகு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. அத்தருணங்களில் "இதயகீதா" எனும் புனைப்பெயரில் வார இதழ்களுக்கு கேள்வி பதில் அழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். கேள்வி தேர்வானால் பத்து ரூபாய் அனுப்புவார்கள். இதயகீதா என்று இதுவரைக்கும் யாருக்கும் பெயர் கிடையாது. இதயத்தின் கீதம்தான் கவிதை எனும் பொருளில் அப்பெயரை வைத்துக்கொண்டேன். அமரர் வலம்புரிஜான் அவர்கள் நடத்திய "தாய்" வாரப் பத்திரிக்கையில் என் முதல் கவிதை பிரசுரமாகியது. முதன் முதலாக என் படைப்பை அச்சில் பார்த்த தருணத்தில் பொங்கி பிரவாகமெடுத்த பரவசத்தைச் சொல்லிலடக்க இயலாது. ஊரில் நண்பர்கள் குழுவாக இயங்கி நாடகங்கள் போடுவோம். கதைகளுக்கான விடயங்களைச் செழியன் பார்த்துக்கொள்வார். ஆனால் எங்களின் முதல் நாடகத்துக்கு இயக்குனர் பேரரசுதான் கதை எழுதினார். அவரும் அவர் தம்பி முத்துவடுகுவும் எங்கள் நண்பர் குழுவிலிருந்தனர். சொன்னால் நம்புங்கள், பேரரசும், முத்துவடுகுவும் ஆரம்பத்தில் கவிதை தளத்தில் இயங்கியவர்கள். என் முதல் கவிதைத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. அதற்காக கைக்கடிகாரத்தையும், மோதிரத்தையும் அடகு வைத்தேன். இதுவரை என்னுடைய நான்கு புத்தகங்களை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது . ஒரு சமயம் ஜூனியர் விகடன் நடத்திய ஹைக்கூ போட்டியில் என் கவிதையும், நண்பன் ஆதவன் கவிதையும் தேர்வாகியிருந்தது. ஒரு கிராமத்தில் இரண்டு பேரின் கவிதைகள் தேர்வாகியிருந்தது எங்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய விடயமாகிப்போனது. அந்த போட்டிக்கு நான் எழுதிய கவிதையை எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள் மாற்றியிருந்தார்.

எது நிரந்தரம்?
மழையில் கரையும்
சமாதி..

என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். ஹைக்கூ கவிதையில் வினா விடையாக வரக்கூடாது.
எனவே சுஜாதா இப்படி மாற்றம் செய்திருந்தார்.

மண்ணால் அமைத்த சமாதி
மழையில்
கரைகிறது


வெகுவாக கவிதைகள் புனைய ஆரம்பித்த பிறகு திரைத்துறை மீது என் கவனம் குவிந்தது. நானும் செழியனும் சென்னை வந்து மிகவும் கஷ்டப்பட்டோம். பேரரசுவிடம் திரைப்படம் சார்ந்து அலைவரிசை ஒத்துப்போகவில்லை. செழியன் இன்று வரை நெருங்கிய நட்புடனிருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு பிறகு கவிதை ஆர்வம் "ஹைக்கூ"விலிருந்து புதுக்கவிதைக்கு மாறியது.

இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்து உங்கள் இலக்கு என்ன?

முழுமையான கவிதையை நான் எழுதிவிட்டேனா? அல்லது எழுதிவிடுவேனா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு கவிஞனாக வாழ்வதில் பெருமையும், சந்தோஷமும், கர்வமும் அடைகிறேன். சக மனிதர்களிடமிருந்து நான் எப்போதுமே வேறுபடுகிறேன். வேலை, சாப்பாடு, தூக்கமென்று சதவிகித அடிப்படையில் சராசரியாக என்னால் இயங்கமுடியாது. இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

உங்களை சந்தித்ததும், உரையாடிக் கொண்டிருப்பதும் கூட ஆச்சர்யம்தான். காற்றிலசையும் ஓர் இலை துளிர்த்து மரமாவதும், உதிர்ந்து உரமாவதும் வியப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் அள்ளித் தந்துகொண்டேயிருக்கிறது. இப்படியான ஒரு வியத்தல் நிலையிலிருந்தே என் கவிதைகள் முளைவிடுகின்றன. கண்டதை படிப்பவர் பண்டிதர் ஆவாரென்பார்கள். நான் கண்டதையும் படிப்பதில்லை, பண்டிதராகவும் விரும்பவில்லை. மிகக் குறைவாக தேர்ந்தெடுத்தே வாசிக்கிறேன். அதுவும் மிக நிதானமாக. என்னுடைய மிகப்பெரிய கனவே திரைப்படம் இயக்க வேண்டுமென்பதுதான். இன்றைய சூழலில் திரைப்படத்துறை வியாபாரமாகிவிட்டது. வலிமை மிக்க ஊடகம் கேளிக்கைக்கான ஊடகமாக மட்டுமே தோற்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னால் உலக கிளாசிக் வரிசை படத்தைக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு அரிது. எனவே என்னுடைய முதல் படம் பெரிய பரீட்சார்த்த முயற்சிகள் இல்லாமல்தான் இருக்கும். பொருளாதர வெற்றி மிக முக்கியம் நண்பரே. ஆக்சன் கதை ஒன்று தயராக இருக்கிறது. அது நிச்சயம் கமர்சியலுக்கு வேறு வண்ணம் கொடுக்கும். திரைத்துறையில் இது குறுகிய கால இலக்கு. இலக்கியத்தில் ஒரே இலக்குதான். அங்கு சமரசத்துக்கு சிறிதும் இடமேயில்லை.

உங்களுக்கு பிடித்தமான கவிஞர்கள் யார்?

தமிழில் எனக்கு பிடித்தமான கவிஞர் ஆத்மநாம். அவரின் கவிதைகளில் வெளிப்படும் இருண்மையும், உண்மையும் எனக்கு மிகவும் நெருக்கமாகவும், ஈர்க்கக் கூடியதாகவும், இயக்கக் கூடியதாகவும் இருக்கிறது. நகுலன், பிரமிள் போன்ற பெரிய ஆளுமைகளின் கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். ஆனால் அவை என் மனவெளியிலிருந்து எங்கோ தொலைவில் இருக்கின்றன. இப்பொழுது எழுதும் செல்மா ப்ரியதர்ஸன், யவனிகாஸ்ரீராம், கண்டராதித்தன், பாலை நிலவன், லட்சுமி மணிவண்ணன், சங்கர் ராமசுப்பிரமணியன். ஸ்ரீநேசன், ராணிதிலக், பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தென்றல், உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, போன்றோரின் கவிதைகள் மிக அருமையாக இருக்கின்றன. புதிதாக நிறைய கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், நரன், வெயில், மண்குதிரை, ஊர்சுலா, நிலா ரசிகன், விஸ்வநாதன் கணேசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையப் பேர் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கின்றனர்.

என்ன மாதிரியான கவிதைளை விரும்பி படிக்கிறீர்கள்?

எனக்கு எப்போதும் விருப்பமானவை "ஹைக்கூ" கவிதைகள்தான். அதன் எளிமையான வடிவமும், ஆழ்ந்த அர்த்தங்களும் என்னை வியக்கச் செய்கின்றன. அதை ஒரு துளி சமுத்திரம் அல்லது அணு எனலாம். நீண்ட இடைவெளிக்குபின் ஹைக்கூவின் சரியான இலக்கணங்களுடன் ஹைக்கூக்களை எழுதிப் பார்த்து குவளைக் கைப்பிடியில் குளிர்காலம் என்ற ஹைக்கூ கவிதை நூலை தமிழ்வனம் வெளியீடாக கொண்டுவந்தேன். ஹைக்கூ கவிதையினை ஒரு போதும் ஜப்பானியர்கள்போல நம்மால் எழுதிவிட முடியாதென்பதைப் புரிந்துகொண்டேன்.

பிரம்மராஜன் மொழிபெயத்த உலகக் கவிதைகளை அவ்வப்போது எடுத்து வாசித்து என்னை உற்சாகப்படுத்திக்கொள்வேன். அதில் குறிப்பிடும்படியான கவிஞர்கள் நிறைய இருக்கின்றனர். கவிஞர் ஆத்மநாமின் கவிதை நூலை பைபிள் போல வாசித்துக் கொண்டேயிருக்கப் பிடிக்கும். அதே போல் பிரெஞ்சுக் கவிஞர் லாக் பிரவரின் கவிதைகளையும் விரும்பி வாசிப்பேன். வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸின் கவிதைகளும், போர்ஹஸ்ஸின் கவிதைகளையும், ரைமண்ட் கார்வரின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பேன். முக்கிய விசயம் என்னவெனில் தமிழிலும் உலகக் கவிதைகளுக்கிணையான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்களேன் இந்த தளத்தை விடுத்து வைரமுத்து, பா.விஜய் போல் செயல்படக்கூடாது?

நான் கவிதையின் வடிவத்தை தேர்ந்தெடுப்பதில்லை. எழுத ஆரம்பித்ததும் என் கவிதையே அதற்கான வடிவத்தை அனிச்சையாக அமைத்துக் கொள்கிறது. எனக்கு அவர்களைப் போல கவிதை எழுதத் தோன்றவில்லை. எழுத விரும்பவுமில்லை. வானம்பாடிக் கவிஞர்களில் மீராவின் கவிதைகள் பிடித்தமானவை. சினிமாவில் பாட்டெழுதுபவர்களின் கவிதைகள் என்னைப் போன்றவர்களை அதிகம் ஈர்க்கவில்லை. அதில் உணர்ச்சியிருக்காது. உரைநடைகளை மடக்கி, மடக்கி எழுதிவிட்டு கவிதையென்றால் அது உரைநடைக்கும் அவமானம், கவிதைக்கும் அவமானம். என்னுடைய இயல்பிலிருந்துதான் கவிதைகளை எழுதுகிறேன். எளிமையாக்குகிறேனென்று வலிந்து எழுதி வீரியமிழக்கச் செய்வதில்லை.

புரிந்தால் மட்டுமே கவிதையாகிவிடாது. கவிதை புரியவில்லையென்றால், புரிந்துகொள்வதற்கான மனநிலையை வாசகர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும். என் கவிதைகள் கரடு முரடானவை அல்ல. மறுவாசிப்பிலேயே புரிந்துவிடும். எளிமைப்படுத்துங்கள் என்றால் மாட்டேன். என் எண்ணம் குவிமையமாகும் பொழுது உருவாகும் உணர்ச்சிகளுக்கு சொற்களால் உருவம் கொடுக்கிறேன். உதாரணத்திற்கு குரங்கை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பிச்சையெடுத்த ஒரு பெண்மணியைக் கண்டபோது அக்காட்சிக்குள்ளிருக்கும் வலியும், வேதனையும் மனிதாபிமானமும் என்னை ஒரு கவிதையை எழுதத் தூண்டியது. இப்படி உலகினிடையே நடக்கும் அபூர்வக்காட்சிகளிடையே நான் வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிகிறேன். அதையேதான் என்னால் கவிதையாகவும் வடிக்கமுடிகிறது.

உங்களுக்காக அந்தக் கவிதை:


மேலும் படிக்க:


No comments:

Post a Comment