Monday, August 10, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.

கடந்த சனிக்கிழமை (08-08-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. விழா வழக்கம் போல் காலை பத்து மணிக்கே தொடங்கியது. இந்த மாதம் அரங்க நிர்வாகிகள் செய்த ஒரு சில தவறினால் காலை நிகழ்வில் உலகத் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

பிறகு ஒருவாறு நண்பகல் ஒரு மணியளவில் சரி செய்யப்பட்டு இருந்த குறுகிய இடைவெளியில்இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய, "தக்கையின் மீது நான்கு கண்கள்" குறும்படம் திரையிடப்பட்டது. இது ச. கந்தசாமி அவர்களின் சிறுகதையிலிருந்து உருவாக்கப்பட்ட குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் குறும்பட வட்டம் வழக்கம் போல் சரியாக மூன்று மணியளவில் தொடங்கக்கபட்டது. இந்த மாதம் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

முதல் பகுதி:

இலக்கியம் பகுதி நடைபெறாது என்று சென்ற மாதம் அறிவித்த போதிலும் பெரும்பாலான ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாதமும் இலக்கியம் பகுதி நடைபெற்றது. இதில்பேராசிரியர் திரு. பெரியார்தாசன் அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பொதுவாக இலக்கியம், திரைப்படங்கள் என தனது பேச்சை தொடங்கினார்.

அதில் இருந்து சில துளிகள்:

அது பச்சையப்பாக் கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். கேள்வி இதுதான். அசோக வனத்தில் சீதா நிலையை விளக்குக? (கேள்வி சரியாக நினைவில் இல்லை. தவறு இருப்பின் வாசகர்கள் மன்னிக்கவும்) இதற்கு அனைவரும் அமைதியாக தேர்வு எழுதிக் கொண்டிக்க ஒரு மாணவன் மட்டுமே அமைதியாக இருந்தான். நான் இருமுறை சென்று அவனிடம் எழுது தம்பி என்று கூறிவிட்டு

வந்தேன். அவன் அப்போதும் அமைதியாக இருந்தான். மூன்றாவது முறை நான் சென்று அவன் தாளை வாங்கிப் பார்த்தேன். அதில் எழுதி இருந்தான். வனத்தில் அனைத்து மலர்களும் சிரித்துக் கொண்டிருந்தன. ஒரு மலரை தவிர. என்று. அந்த மலர் சீதா. இதை எழுதியது இன்றையக் கவிப் பேரரசு வைரமுத்து. என்று முடித்தபோது அரங்கில் கரவொலி எழுந்தது.

அந்தக் காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே நல்ல கவிஞனாக வந்தான். ஆனால் இன்று தடுக்கி விழுபவன் எல்லோருமே கவிஞனாக இருக்கிறான் என்று பெருமைப் பொங்க சொன்னார்.

சேசாச்சலம் என்கிற தன்னுடைய இயற்பெயர் எப்படி பெரியார்தாசன் என்று மாறியது என்பதையும் சுவைபடக் கூறினார். மேலும் இந்தக் காலத்தில் ஒருத் துறையில் வளர்ந்த ஒருவன் மற்ற யாரையும் அந்த துறையில் வளர விடுவது இல்லை என்று வருத்தப்பட்டார். மேலும் பல உண்மைகளையும் போட்டு உடைத்தார். அது சார்ந்த நம் பலரும் இணையதளத்தை படிப்பதால் அதனைத் தவிர்த்து விடுவோம்.

தொடர்ந்து நகைச்சுவைத் தெறிக்க பேசிய பெரியார்தாசன் அவர்கள் அரங்கில் இருந்த அனைவரையும் மெய்மறக்க செய்தார். முடிவில் தன்னிலை மறந்து ஒரு சிலர் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. அரங்கில் இருந்த ஒருவர் சிரித்து சிரித்து, இறுதியில் சிரிக்க முடியாமல் அழுதே விட்டார்.

பின்னர் இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கப்பட்டது. இந்த மாதம் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை கோவையை சேர்ந்த உளவியல் பேராசிரியர் திரு. செல்வராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். தன்னுடைய வலைப்பதிவில் பல்வேறு விடயங்கள் குறித்து எழுதும் இவர் உளவியல் குறித்து எழுதிய ஒரு சிலக் கட்டுரைகள், மற்றும் புரட்சியாளர்கள் புத்தக அறிமுகம் யாவும்

படிக்க படிக்க திகட்டாதவை. விருதைப் பெற்றுக் கொண்ட செல்வராஜ் அவர்கள் சில நிமிடங்கள் தன்னுடைய வலைப்பதிவு குறித்தும், கட்டுரைகள் குறித்தும் பேசி சென்றார். இவர் வலைப்பூ முகவரி: gestaltselvaraj.blogspot.com/

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதிக்கு சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறை பேராசிரியர் திரு. அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நடிப்பு துறையில் பல நுணுக்கங்கள் பற்றி ஆர்வலர்களுக்கு விரிவாக சொல்லிக் கொடுத்தார். மேலும் திரைப்படங்களில் நடிப்பது குறித்தும், நடிகர்கள் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

அதில் இருந்து சில துளிகள்:

நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது.

வீதி நாடகம், மேடை நாடகம், தெருக்கூத்து என்று பல இருந்தது. இன்றும் அதன் நவீன வடிவமான சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என்று பலவித நடிப்புகள் வந்து விட்டன.

ஒவ்வொரு ஊடக நடிப்பும் வெவ்வோறு வகையில் வேறுபடும். உதாரணமாக மேடை நாடகத்தில் முதல் சில வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு நடிகரின் நடிப்பு சரியாக சென்றடையும். ஆனால் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவன் அதனை வேறுவிதமாக புரிந்துக் கொள்வான். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்பதை மேடையில் வசனமாக சொல்லும்போது முன் வரிசை ஆர்வலர்கள் சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். ஆனால் கடைசி வரிசை ரசிகனையும் சென்றடைய நடிப்பை வேறு விதமாக பயன்படுத்த வேண்டும். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று குரலை உயர்த்தி, உடல் மொழியால் நடித்துக் காட்ட வேண்டும்.

இந்தக் காலத்தில் ஒரு படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த நடிகர்தான் மனதில் நிற்பாறேத் தவிர, அந்தக் கதாப்பாத்திரம் நம் மனதில் நிற்காது. ஆனால் அதில் யார் நடிக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அது எண்ணக் கதாப்பாத்திரம் என்பதுதான் நம் மனதில் பதிய வேண்டும். அதனை யார் பதிய வைக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த நடிகர்கள். என்று நடிப்பு பற்றி தனது சுவையான பேச்சைத் தொடர்ந்தார்.

மேலும், சிவாஜி கணேசன் மிக சிறந்த நடிகர்தான். அவர் செய்வது ஓவர் ஆக்ட் என்று யாராவது சொன்னால் அது பொய். ஒரு நடிகனிடமிருந்து போதுமான நடிப்பை வாங்க வேண்டியது ஒரு இயக்குனரின் பொறுப்பே தவிர இவ்வளவுதான் நடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது ஒரு நடிகனின் வேலையல்ல. என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.

நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது.

நடிப்பு பற்றி ஒரு பயிற்சி வகுப்பையே நடத்திய அவர் இறுதியாக சில காட்சிகளை நடித்தும் காட்டினார். அதிலும் தன தாய் இறந்துக் கிடப்பதைக் கவனிக்காத ஒரு மகன் பின்னர் அதனைக் கவனிக்குபோது அவனுக்குள் ஏற்படும் உணர்வுகளை மிக தத்ரூபமாக நடித்துக் காட்டினார். மேடையில் அவர் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் அழ, அரங்கில் அமர்ந்திருந்த சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்களில் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு சிலர் எழுந்து சென்று வெளியில் அழுதே விட்டனர்.

பின்னர் வாசகர்கள் கேள்விகள் கேட்க அதற்கு அருணாச்சலம் விடையளித்தார். தொடர்ந்து பத்து மாதங்களாக நடைபெற்ற குறும்பட வட்டங்களில் ஆர்வலர்களை கேள்விகள் கேட்க சொன்னால், உங்கள் முதல் படம் எது? நீங்கள் ஏன் இந்து துறைக்கு வந்தீர்கள் என ஒரு நடிகையை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி எடுப்பது போல் கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து பத்து மாதங்களாக, தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளைக் கேளுங்கள், உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் உதவும் வகையில் கேள்விகளைக் கேளுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம். அதன் பலனை இந்த மாதம் அனுபவித்தோம். கேள்வி கேட்ட அனைவரும் கண்களில் ஒத்திக் கொள்வதுப் போல் கேள்விகள் கேட்டனர். மிக சிறந்த விவாத மேடையாக இந்த மாதம் அமைந்தது. நாங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சியை பல இடையூறுகளுக்கிடையில் நடத்துகிறோமோ, அதன் பலனை அனுபவித்தது போல் இருந்தது.

மூன்றாம் பகுதி

இந்த மாதம் குறும்படத் திரையிடல் பகுதிக்கு திரைப்படக் கல்லூரியில் இயக்கத் துறை தலைவராக இருக்கும் திரு. ரவிராஜ்அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நான் விளம்பர இயக்கம் பிரிவில் பட்டயப் படிப்பு படிக்கும்போது எனக்கு பேராசிரியராக இருந்தவர் திரு. ரவிராஜ் அவர்கள். எனவே அவர்கள் இந்த மாதம் எங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த மாதம் திரையிடல் பகுதியில் முதலாவதாக திரு. ராஜ்குமார் இயக்கிய "எனது நூலகத்தின் கதை" குறும்படமும் அடுத்ததாக திரு. ஸ்ரீராம் இயக்கிய "அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில்" குறும்படமும், மூன்றாவதாக திரு. சி.ஜெ. முத்துக்குமார் இயக்கிய "கோத்தி" குறும்படமும் திரையிடப்பட்டது.

இதில் எனது நூலகத்தின் கதை குறும்படம் நூல்கள் மேல் காதலாக இருக்கும் ஒருவனது உணர்வுகளை கவிதைகளாக படம் பிடித்திருக்கும் படம். அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் குறும்படம், நடத்திக் கேட்ட மனைவிக்கு கிடைக்கும் தண்டனையை கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்லி இருக்கும் படம். கோத்தி குறும்படம் அரவாணிகளின் துயரங்களை பதிவு செய்திருக்கும் படம்.

மூன்று படங்களின் நிறை குறைகள் பற்றி அதன் இயக்குனர்களுக்கு சுட்டிக்காட்டிய திரு. ரவிராஜ் அவர்கள், ஆர்வலர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மூன்றுக் குறும்பட இயக்குனர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த மாதம் பேராசிரியர்கள் மாதமாகவே அமைந்து விட்டது. மூன்று சிறப்பு விருந்தினர்கள், சிறந்த வலைப்பதிவர் பெற்ற திரு. செல்வராஜ் என அனைவரும் பேராசிரியர்களாகவே இந்த மாதம் அமைந்து விட்டனர்.

தொடர்ந்து பதினோரு மாதங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்ற குறும்பட வட்டம் அடுத்த மாதம் முறையாக தொடங்கப்படும். அதற்கான விழா அடுத்த மாதம் செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி காலையில் நடைபெறும். மாலை மூன்று மணியளவில் வழக்கம்போல் குறும்பட வட்டம் நடைபெறும்.

விருதுடன் ஸ்ரீராம்


விருதுடன் முத்துக்குமார்


No comments:

Post a Comment