Showing posts with label vikramadhithan nambi. Show all posts
Showing posts with label vikramadhithan nambi. Show all posts

Wednesday, November 30, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பிர. தீபன்



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பிர. தீபன்

விக்ரமாதித்தன் நம்பி

விக்ரமாதித்யனின் கவிதை அனுபவம் - பிர. தீபன்

உண்மைதான்,
மலையின் தலையில் இருக்கிறது.
இதன் ஊற்றுக்கண்
உயரத்தில் உதித்தாலும்
நாடுகளுக்கு ஓடிவரும்
ஆறு இது என்று
நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்

துணையாறுகள் அங்கங்கே
கொட்டிக் கலந்து
இது ஹோ என்று கோஷிக்க
தங்களை அர்ப்பணிக்கத்தானே
செய்யும்
அங்குதான் இது பேராறு

வாழ்த்தும் வணக்கமும்
வழியெல்லாம் பெற்று
ஓடுகையில்,
கிளைகளாய்ச் சில நதிகள்
பிரிவகையும்
எப்படித் தடுக்க முடியும்?

துணையின்றி கிளையின்றி
உலகூட்டுக என்று நீங்கள்
ஆற்றுக்குச் சொல்கிறீர்கள்
புறப்பட்ட கொஞ்ச தூரத்தில்
மறைந்து போகும் ஆறு

ஒருவேளை
தலையூற்றின் புனிதம் மட்டும்
மிஞ்சலாம்.

-- பிர. தீபன்
(விருட்சம் கவிதைகள் – தொகுதி 1 பக்கம் 98)

கவிதையைப் பற்றிச் சொல்லப்படுகிற எந்த விஷயத்தையும் விட, எந்தக் கருத்தையும் விடக் கவிதை முக்கியமானது.
-- க.நா.சு.

நான்கு பக்கமும் வாசலுள்ள பெரியகோயில் மாதிரியான கவிதை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் தத்தம் மனசு போல, அனுபவத்துக்கேற்ப. நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்வதை நான் தவரென்று சொல்லமுடியாது, நான் வேறு பொருள் சொன்னால் நீங்கள் அப்படி இல்லை என்றும் மறுக்க முடியாது. கவிஞர், அதுபோலக் கவிதையாக்கியிருக்கிறார். உண்மையிலேயே, இது நல்ல காரியம் சுவாரஸ்யம் புத்தனுபவம்.

ஊற்றுக்கண்ணிலிருந்து தோன்றும் ஆறு மலையுச்சியில் ஓடிவரும் சமவெளியில் துணையாறுகள் பல கலந்து பேராறு வழியெல்லாம் பெறும் வாழ்த்தும் வணக்கமும் கிளைவிடும் தன்போக்கில்.

துணையில்லாமல், கிளைவிடாமல் உலகூட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா. அவ்வாறு இருந்தால், புறப்பட்ட கொஞ்ச தூரத்தில் மறைந்து போக நேரும். மிஞ்சுவது, தலையூற்றின் புனிதம் மட்டும்தான்.

கவிக்கூற்று இப்படி முன்வைக்கப்படுகிறது சரிதான். ஆற்றைப்பற்றிச் சொல்வது போல, ஒரு நிரந்தர உண்மையே சொல்கிறார் கவிஞர்.

இந்தக் கவிதை குறித்து யோசிக்கையில், காந்திதான் நினைவுக்கு வந்தார், அவர் வாழ்வுதான் மனத்தில் தோன்றியது கவிதையின் பொருளை எளிதில் உணரமுடிந்தது, அப்போது நம்முடைய கவிதைமரபில் பெரிதும் பேசப்படுவது, பிறிது மொழிதல் அணி. பிறிது மொழிதல் தானே இது.

உத்தியென்று நமக்குப் படுவது, உண்மையிலேயே, சமயங்களில், கருதிச் செய்ததாகக்கூட இல்லாமலிருக்கலாம் சில விஷயங்களைச் சில முறைகளில்தான் சொல்லமுடியும் என்பதும் இருக்கிறது.

கவிஞன் உள்ளத்துள்ளேயே இப்படித் தோன்றியிருக்கலாம், நதிமூலம், ரிஷிமூலம் போலத்தான் கவிமூலமும் கவிதை என்பதுதான் விஷயமே.

பிரதீபன், ஒரு செய்தி சொல்கிறார், அது கவிதையாகவே இருக்கிறது அதுதானே வேண்டும்.

சிந்திக்க வைக்கும் கவிதை கருத்துத் தெரிவிப்பது போல இருந்தாலும், கவிதையாகிவிட்டால் ஒதுக்கிவிட முடியாதுதானே.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம் உரைகாரன் உரைப்பதல்ல இந்த மாதிரி கவிதைகள் அந்தமாதரிதான்.

கவிதைரசனை ஒரு கைகாட்டிதான் நீங்களாகத்தான் வரவேண்டும்.

http://koodu.thamizhstudio.com/thodargal_18_11.php



Tuesday, August 23, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்

விக்ரமாதித்தன் நம்பி

பகடியின் உச்சமான கவிதை - ஒரு சிறிய சோப்புப்பெட்டி

நல்வாழ்வின் நற்செதியால் நிரம்பிய
ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
வாழ்வு பற்றிய புனைகதைகளை
எல்லோர்க்கும் பரிசளிக்கும் விதம்
யாரும் அறியாததல்ல
உயிர்த்தெழுதல் பற்றிய அக்கதைகளைக் கேட்போர்
சிறந்த நாவலாசிரியாராகி விடுகிறார்கள்
ஆயினும்
யாரும் எழுதுவதில்லை
ஓர் அழகிய சர்ச்சின் கவலைகளை
கதைகளாகச் சொல்லத் தொடங்குகிறார்கள்
உயிர்த்தெழுதலால் நிரம்பிய பாத்திரங்கள்
நமது வீடுகளில்
குற்றத்தின் பயத்துடன் நடமாடத் தொடங்குகிறார்கள்
அவர்களில் ஒருவரும் மரணிப்பதில்லை
மரித்தாலும்
சவப்பெட்டியை
சோப்புப் பெட்டியாகப் பிறந்து வெளியேறிவிடுவார்கள்
எனவே
உலகம் ஒரு சிறிய சோப்புப் பெட்டியில்
சுற்றிச் சுழல்கிறது.
அதை ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
தன் கையில் வைத்திருக்கிறான்
சடுதியாகப் பெருமழை பெய்யத் தொடங்கினால்
சோப்புப் பெட்டியில் துயிலும் உலகம்
முழுமுற்றாகக் கரைந்துவிட வாய்ப்பியிருக்கிறது அல்லவா?
எனவே
பெருமழை வரும்வரைக்கும்
ஓர் அழகிய சர்ச்
சோப்புப் பெட்டியினுள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது
மரணத்தின் உடலாக

- பாலைநிலவன்
(பறவையிடம் இருக்கிறது வீடு தொகுப்பு, பக்கம் 66-67)

பாலையின் பிற கவிதையிலிருந்து வித்யாசமான கவிதை, இது. பாலைநிலவன் நேர்பேச்சில் பகடி பொங்கி வழியும் (பாலை மட்டுமில்லை, லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், பிரான்சிஸ் கிருபா, ஷங்கர ராம சுப்ரமணியன் ஆகியோர் பேச்சிலும் சிரித்து முடியாது. அந்த நேரம் எந்த ஞாபகமும் வராது? இப்போது இந்தக் கவிதையில் அந்தப் பகடியைப் பார்க்க முடிகிறது..

எவ்வளவு சீரியதான விஷயம் கவிஞன் என்ன நைச்சியமாகச் சொல்கிறான். நவீன தமிழ்க் கவிதையில் இப்படி ஒரு ஏகடியத்தைக் கண்டதேயில்லை. நம்முடைய சமூகத்தில் பகடி பண்ண வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன நவீன கவிஞர்கள் குறைவைக்கலாகாது.

பறவையிடம் இருக்கிறது வீடு, தொகுப்பில் எத்தனையோ சிறந்த கவிதைகள் இருந்தும் - இநத்க் கவிதையை எடுத்துப் பேச முன்வந்திருப்பது, இதன் விஷயத்துக்காகவும் சொல்லியிருக்கும் விதத்துக்காகவும் தாம்..

மதங்கள் எல்லாமே நிறுவனமயமாகிவிட்டன, கவிஞர்கள் விமர்சிக்கிறார்கள். இந்தக் கவிதை, தமிழுக்குப் புதிது இந்தச் சொல்முறை, முற்றிலும் புதிது. நவீன கவிதை எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இது.

கவிதையின் முதல் வாசகமே நல்ல கிண்டல் முதல் வரியே கேலிதான்.
தொடரும் கிண்டலும் கேலியும் சுவாரஸ்யமானவை
உயிர்தெழுதல் பற்றிய அக்கதைகளைக் கேட்போர்
சிறந்த நாவலாசிரியராகிவிடுகிறார்கள்
ஆயினும்
யாரும் எழுதுவதில்லை.
இன்னும் கூடக் கூர்மையானவை இந்த வரிகள்
அவர்களில் ஒருவரும் மரணிப்பதில்லை
மரித்தாலும்
சவப் பெட்டியை
சோப்புப் பெட்டியாகப் பிறந்து வெளியேறிவிடுவார்கள்.
அடுத்தடுத்து புனைவுகளும் கண்டனமும்.
ஓர் அழகிய சர்ச் என்று திரும்ப திரும்ப வருவதைக் கவனிக்க வேண்டும்.
எனவே
உலகம் ஒரு சிறிய சோப்புப் பெட்டியில்
சுற்றிச் சுழல்கிறது
அதை ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
தன் கையில் வைத்திருக்கிறான்
பகடியின் உச்சம் இது.

சடுதியாக பின் பெருமழை பெய்யத் தொடங்கினால்
சோப்புப் பெட்டியில் துயிலும் உலகம்
முழுமுற்றாகக் கரைந்துவிட வாய்ப்பிருக்கிறது அல்லவா?
எனவே
பெருமழை வரும் வரைக்கும்
ஓர் அழகிய சர்ச்
சோப்புப் பெட்டியினுள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது
மரணத்தின் உடலாக,
சுழற்றியடிக்கும் புனைவுகள்.
பாலையின் அழியாத கவிதைகளில் ஒன்றாக இருக்கும் இது.

நவீன கவிதை தந்திருக்கும் சுதந்திரத்தையும், வசதியையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவனே நல்ல கவிஞன். பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறவன் மோசமான கவிஞன். ஒரு விஷயம், எப்போதுமே முன்வரிசைக்குக் கொஞ்சம் பேர்தான் வருகிறார்கள். நிறைய பேருக்குப் பின்வரிசையில் இருப்பதே தெரிவதில்லை. பெயர் சொல்லும்போது மட்டும் விழித்துப் பார்த்துக் கொள்கிறார்கள். நிறைய இருக்கைகள் காலியாகவே கிடக்கின்றன. முன்வரிசையில் நாமாகத்தான் போய் அமர வேண்டும். எப்போது வேண்டுமானால் – பிந்தி – வருவதற்கும் நினைத்தால் எழுந்து போவதற்கும் முன்வரிசை தோதுப்படாது பின்வரிசைதான் சௌகரியம்.

பாலை, தன்னை ஒப்புக்கொடுத்த கலைஞன் தொடர்ந்தும் சீராகவும் இயங்கியே வருகிறார், அவருடைய எம். ஜி. ராமச்சந்திரனும் கார்ல்மார்க்ஸீம் சிறுகதைத் தொகுப்பு. சமீபத்திய சாட்சியம். அவரைப் போன்ற படைப்பாளிகள் கவனிக்கப் பெறுவதும், கௌரவிக்கப் பெறுவதும நிகழும் போதுதான் தமிழ்ச் சூழல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள முடியும்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_3.php


Wednesday, August 17, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஞானக்கூத்தன்

விக்ரமாதித்தன் நம்பி

சன்னமும் நுணுக்கமான மனம்சார்ந்த கவிதை - ஆச்சி

ஐப்பசி என்கிற துலாமாதம் வந்தது.
சொந்தக்காரர்களுக்கெல்லாம்
துலாஸ்நாநம் செய்து புண்ணியராகும்படிக்கு
அப்பா கடிதம் எழுதிப் போட்டார்
காலரா ஊசியும் கையுமாய் ஒரு வெள்ளைக்காரர்
மற்றும் அவரது உதவியாளர்
தெருவில் தகுந்த இடம் பார்த்து நின்றனர்.
எடுத்துச் செல்லும் அடுப்பில்
வெந்நீர் கொதிக்கிறது. தமிழ் சிப்பந்தி
தெருவில் வருவோர் போவோரை
காலரா ஊசி போட்டுக் கொள்ள
இன்ஸ்பெக்டர் சொல்வதாய் அழைக்கிறான்.
உள்ளுர் வாசிகள் ஓடுகின்றனர்.
சொந்தக்காரர்கள் வந்துவிடுவார்.

செலவுக்குப் பணம் வேண்டும்.
அப்பா என்னை சிவானந்தம் பிள்ளை
வீட்டுக்குப் போய் ட்யூஷன் பணத்தை
முன்கூட்டித் தரும்படி கேட்கச் சொல்கிறார்.

பிள்ளைமார் பையன்களை நானறிவேன்.
அவர்கள் வீட்டைப் பார்த்ததில்லை.

சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
வீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.
வைக்கோல் மேயும் பெரிய காளைகள்.
பிள்ளைக்குக் குதிரை பிடிக்காதாம்.
உள்ளே யாரென்று கூவினேன்.

உள்ளே யாரென்று கூவினேன்.
மாமா என்பதா மாமி என்பதா?
ஆச்சி வெளியே வந்தார். என்னை
யாரென்று கேட்டார். வந்த காரணம்
என்ன என்றார். வீட்டுக்குள்
கிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று
வானொலிப் பெட்டியோ கிராம போனோ.

உள்ளே வா என்றார். வெளியிலேயே
இருக்கிறேன் என்றேன் அரிசி மாவினாலா
இழைத்த கோலங்கள் எங்கும் தெரிந்தன.
அரிசி, காய்கறி, சாப்பாட்டுப்
பலா இலை ஒரு கட்டு
வாழைப்பழங்கள்,. வெல்லம் இவற்றைப்
பையில் போட்டு ஆச்சி வைத்தார்.
ட்யூஷன் பணத்தை எண்ணிக் காட்டினார்
வாங்கிக் கொண்டு புறப்படும் போது
காப்பி சாப்பிடு தம்பி என்றார்.
தாமதம் இல்லாமல் வேண்டாம் என்றேன்.
குடிக்கக் கூடாதென்று அம்மா, அப்பா
சொன்னார்களா என்றார் ஆச்சி
இல்லை என்றேன் தலையை நிமிர்த்திப்
பேசு தம்பி என்றார் ஆச்சி.
அப்பா குடிப்பாரா? சீண்டவா? உண்மையா?
எனக்கு வேண்டாம் என்றேன்
உறுதியாக மறுத்ததில் எனக்கு சந்தோஷம்.

அம்மா எப்படி இருப்பார்? என்றார் ஆச்சி.
பூவுடன் சம்பந்தப் படாத
வாசனை ஒன்று ஆச்சிக்கிருந்தது.
அம்மாவின் உருவம் மனதில் வந்தது.
அம்மா அழகுதான் என்றார் ஆச்சி.
உண்மைதான். ஆனால்
ஆச்சி அழகாய் இருப்பதைப் பார்க்க
மனத்தில் எனக்குக் குறை.

- ஞானக்கூத்தன்
(பென்சில் படங்கள் தொகுப்பு, பக்கம் 76-77)


சிறுவயது நிகழ்ச்சி ஒன்று, சித்திரமாக – விவரிப்புகள் வழியே. மனம்சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு மனநுட்பம் கூடியதும் ஆகும். கடைசிப் பத்திதான் கவிதையின் மையமே. பொதுவாக, ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாமே எளிமையானவையும் நேரடியானவையும் தாம் - சோதனை முயற்சியாலனவை நீங்கலாக. இதுவும் அப்படித்தான். இந்த இயல்புகளாலேயே எல்லோரையும் சென்றடையக் கூடியவை. தமிழ் வாழ்வைச் சொல்லும் கவிஞன் அங்கீகாரம் பெறுவது, தன்னைப் போலவே நடக்கும், நவீன தமிழ்க் கவிதையில் ஞானக்கூத்தன் ஸ்தானம் இப்படித்தான்.

மாயூரத்தில் துலாஸ்னானம் விசேஷம். முந்தைய தலைமுறையினர் தங்கள் ஊர்த் திருவிழா, தேரோட்டம் முதலானவற்றிற்கு உறவினர்களை அழைப்பது வழமை. அதுபோலத்தான், இந்தக் கவிதையில் வரும் அப்பாவும் கடிதம் எழுதுகிறார்.

விருந்தாளிகள் வந்தால் கூடுதல் செலவாகத்தானே செய்யும். தத்தம் சக்திக்கேற்பப் புரட்டிக் கொள்வதும் வழக்கம் தான். இங்கே ட்யூஷன் பணம் முன்கூட்டிக் கேட்டு வாங்கும்படியாகிறது. பையனை அனுப்பி வைக்கிறார்.

கவிதையே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.
எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துப் பேசத்தானே கவிதைரசனை.

கவிதையின் இரண்டாவது பத்தியில் காலம் காண்பிக்கப் பட்டிருப்பதைச் சுட்ட வேண்டும், அந்தக் காலத்தில் காலரா ஊசி போடுவார்கள், ஊர் ஊருக்கும், கவிதையில் உள்ள நிகழ்வு எந்தக் காலத்தில் என்பதை அறிய உதவுகிறது, .இது.

பிள்ளைமார் பையன்களை நானறிவேன்
அவர்கள் வீட்டைப் பார்த்ததில்லை.
இந்த வரிகள் சொல்வதும் நுணுக்கமானதுதான்.

சிவானந்தம் பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
வீட்டு வாசலில் கட்டப்படாத கூண்டு வண்டி.
வைக்கோல் மேயும் பெரிய காளைகள்.
பிள்ளைக்குக் குதிரை பிடிக்காதாம்.
வெற்று விவரணங்கள் இல்லை இவை – கடைசி வரி கூறிவிடுகிறது.
கிருஷ்ணா முகுந்தா என்று பாடிற்று என்பதிலும் காலத்தைக் காணலாம்.
உள்ளே யாரென்று கூவினேன்.
மாமா என்பதா மாமி என்பதா
மனம் கொள்ளும் தயக்கம்.
இதே போலத்தான் -

உள்ளே வா என்றார். வெளியிலேயே
இருக்கிறேன் என்றேன் என்ற வரிகளும்.

கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தி முழுக்கச் சின்ன வயதின் கூச்சமும் பாரம்பர்யமிக்க குடும்பத்தின் குண நலனும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
கடைசிப்பத்திதான் கவியுளம்.
கடைசி வரிதான் கவியழகு.

யோசிக்கும் வேளையில், ஞானக் கூத்தனின் மனம் சார்ந்த கவிதைகள் அத்தனையுமே சன்னமும் நுணுக்கமும் கூடியவை என்பதை உணரமுடிகிறது. காலத்தில் நின்று நிலைக்கக் கூடியவையும் அவையாகத்தாம் இருக்கும். மனம் சார்ந்த கவிதைகள்தாம் எப்பொழுதுமே மன்பதையில் நிலைபேறு கொண்டிருக்கின்றன - ஒரு கவிஞன் என்னென்ன எழுதினாலும்.

பென்சில் படங்கள் தொகுப்பிலேயே நிறைய நல்ல கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. முதலில் கவிதைகள் படிப்பதற்குத்தான் பிறகு, ரசிப்பதற்கு அதாவது, Reading pleasure க்குத்தான். அப்படிப் பார்க்கையில், ஞானக்கூத்தன் ஏமாற்றமளிக்காத கவிஞர்தான். வேறென்ன வேண்டும்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_2.php





Tuesday, August 9, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர் -- விக்ரமாதித்தன் நம்பி



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர்


விக்ரமாதித்தன் நம்பி

தலைமுறைகளின் வாழ்வைக் கலாபூர்வமாகப் பதிவு செய்திருக்கும் கவிதை

அவள் சிறுமியாயிருந்த போது
பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை
பரிசளித்தனர்
அப்போது அவளுடைய தந்தை ஒரு சிறுநகரத்தில்
ஆசிரியராய் இருந்தார்
வீட்டின் பின்புறம் ராட்டைக் கிணறும்
வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன
வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
பருவமடைந்த போது
தந்தை தலைமையாசிரியராகியிருந்தார்
வெள்ளியோனிக்கு
நகரத்தின் தலைமைச்செயலக உதவி அதிகாரியுடன்
திருமணம் செய்விக்கப்பட்டது
சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின்
சப்தம்
நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில்
ஒலித்துக்கொண்டு இருந்தது
குடித்தனத்தின் சத்தத்தில் கிணற்றின்
முனகல் அமிழ்ந்தே போனது,
இப்போது வெள்ளியோனி தூர்ந்து மந்திர ஜெபங்கள்
முணுமுணுக்கத்
தொடங்கிவிட்டது
ஊரின் கிணற்று ராட்டை சப்தம்வேறு
கனவுகளில் வர ஆரம்பித்திருந்தது
தலைமைச் செயலக அதிகாரியும்
வெள்ளியோனி அம்மாவும்
தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர்
தங்கயோனியை
சிறிதாய் இருந்தபோது
தங்கயோனி பட்டு மென்மையாக
மடிந்தபடி இருந்தது
ஒரு கண்ணில் கனிவு
மறு கண்ணில் குறும்பு
ஒரு கவிதையை அறிவதற்கு முன் அதை உணர்ந்து கொள்வதுதான் முதன்மையாது. கவிதை அறியத்தக்கதாக இல்லாவிட்டாலும் உணரமுடிந்தால் அதுவே வாசகவெற்றி என்று கூடச் சொல்லப்படுவதுண்டு.
- சி.சு. செல்லப்பா
(பிச்சமூர்த்தி கவிதைகள் முன்னுரையில்)

இந்த கவிதை, அனுபவமா. நிச்சயமாக, இல்லை. உணர்வா. அதுவும் இல்லை. பிறகு? கண்டதும் கேட்டதுமான அவதானிப்பு? இருக்கலாம். அப்படியானால், அதுவும் அனுபவம்தான், உணர்வு தான் - ஒரு வகையில். எப்படியோ கவிஞன் கவிப்பொருளை வசப்படுத்திவிடுகிறான். இப்படிதான் சொல்லமுடிகிறது. நம்மால்.

நாமே கூட அநேக குடும்பங்களைப் பார்த்திருப்போம் ஒரு தலைமுறை. சாதாரணமாக இருக்கும், அடுத்த தலைமுறை கொஞ்சம் விருத்தியாகி வந்திருக்கும் அதற்கடுத்த தலைமுறை செல்வச் செழிப்பாக வளர்ந்து நிற்கும்.

கீழ் நடுத்தரவர்க்கம், நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் என்று வசதியை வைத்துத்தானே வகுத்திருக்கிறார்கள்.

ஷங்கர், இந்த விஷயத்தைத்தான் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ஐம்பது - அறுபதாண்டுக் காலத்தில் ஒவ்வொரு தலைமுறையினரும் தழைத்து வளர்ந்துவருவதை கலாபூர்வமாகப் பதிவுசெய்கிறார், இதனாலேயே அருமையான கவிதையாகிவிடுகிறது.

உள்ளபடியே. கவிதையாக்குவதற்குக் கடினமான பாடுபொருள்தான் கருத்தாக்கக் கவிதையாகச் சரிந்துவிடும் அபாயம் நேர்ந்துவிடும் கவிதையாகத் திரளாமல் போகும் ஆபத்து வந்துவிடும் அதுபோல எல்லாம் ஆகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்திருப்பது திறமான கவித்துவம்தான்.

இவ்வளவும் கவிதையின் பொருள் குறித்து…

இனி, சொல்முறைபற்றி

இந்தக் கவிதையின் பெரிய பலமே இதன் சொல்முறை தான்.

மூன்று தலைமுறையினரின்வாழ்வே கதைச் சுருக்கம் போல - அவர்களின் வளர்ச்சி, மாற்றம், உயர்வு அனைத்தும் ஒரு சேர - செய்தி சொல்லில்பாங்கில் முன் வைக்கப்படுகிறது.

காலமாற்றத்துக்குத் தக, அவர்களின் மனப்பாங்கு வடிவு கொள்வது கட்டாக விவரிக்கப்படுகிறது, வெள்ளியோனி என்ற உருவகம் (குறியீடு/புனைவு), நடுத்தர வர்க்கத்தைச் சுட்டுவதாகவும், தங்கயோனி என்ற உருவகம் உயர் நடுத்தரவர்க்கத்தைக் குறிப்பதாகவும் வருகிறது.

கவிதையின் ஆரம்ப வரியே அதே சமயம், புனைவும் விரவ. அவள் சிறுமியாயிருந்த போது / பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை / பரிசளித்தனர்.
அதே சமயம், புனைவும் விரவ. அப்போது அவளுடைய தந்தை ஒரு சிறுநகரத்தில் ஆசிரியராய் இருந்தார். இந்த வரி முழுக்கச் செய்தி சொல்லல்.

வீட்டின் பின்புறம் நாட்டைக் கிணறும் வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன. தகவல் போலத்தாம் தெரியும், எனில் அப்படியல்ல. அவர்கள் வசதியைக் காட்டுவது மேலும், அவள் வாழ்க்கையில் ராட்டைக் கிணறு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நினைவாக, கனவாக, பழம் பொருள் அலங்காரமாக.

வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
பருவமடைந்த போது
தந்தை தலைமையாசிரியராகியிருந்தார்.
வெள்ளியோனிக்கு
நகரத்தின் தலைமைச்செயலக உதவி அதிகாரியுடன் திருமணம் செய்விக்கப்பட்டது.

இந்த இரண்டு வாசகங்களுமே செய்தி சொல்வது போலத்தாம் சொல்லப்படுகின்றன. இதிலும் கவிதை சொல்லலாம் போல இதுவே தமிழுக்குப் புதிதுதான் நவீன கவிதையின் சாதனைதான்.

சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின் / சப்தம் நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
ஊர் ஞாபகம்? பிறந்தவீட்டு நினைவு?
குடித்தனத்தின் சத்தத்தில் கிணற்றின்
முனகல் அமிழ்ந்தே போனது.
ஏதார்த்தத்தையே அழகாகச் சொல்லிவிடுகிறான் கவிஞன்.
இப்போது வெள்ளியோனி தூர்ந்து மந்திர ஜெபங்களை முணுமுணுக்கத் / தொடங்கிவிட்டது.
ஊரின் கிணற்று ராட்டை சப்தம் வேறு
கனவுகளில் வர ஆரம்பித்திருந்தது,

இந்த கவிதைக்கு தான் சரிபோல தெரிந்தேதான், கவிஞன் இப்படிக் கவிதை கூறல்த் தேர்ந்தெடுத்திருப்பான்போல. இதில் அநேகம் சாதகங்கள் முதலில், நிறைய விஷயங்களை நாசூக்காகச் சொல்ல முடிகிறது, பிறகு பட்டுக்கொள்ளாமல் – விட்டேற்றியாக இருக்க முடிகிறது. அதே வேளை வெறும் சொல்லும் அல்ல இது, நூதனமான பின்னல் வேலை உள்ளதும் தான்.

தலைமைச் செயலக அதிகாரியும் / வெள்ளியோனி அம்மாவும் / தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர் / தங்கயோனியை.
உதவி அதிகாரி, அதிகாரியாகிவிட்டார்.
பரிசளிப்பு, வெள்ளியிலிருந்து தங்கமாகியிருக்கிறது.
சிறிதாய் இருந்தபோது
தங்கயோனி பட்டு மென்மையாக
மடிந்தபடி இருந்தது.
ஒரு கண்ணில் கனிவு
மறு கண்ணில் குறும்பு
மலர்கள் பூத்த உள்ளுடைகள்
மேலுடைகள்
மனதின் உருத்தெரியாத
கைகள் போஷித்தன
தங்க யோனியை.
விவரிப்புகள் வழியே ஓர் ஓவியத்தையே வரைந்திருக்கிறான் கவிஞன் கவித்துவ சாத்யங்களுடன்.

இப்போது வெள்ளியோனி பூஜை பீடமாகி விட்டது
தங்கயோனி பருவத்திற்கு வந்துவிட்டது
உடலெங்கும் பரவுகின்றன அதன்
கட்டளைகள்
நிழல்களை பிரதிபலிக்கும் தங்கயோனி
எந்தக் காதலையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை
சிறுநகரத்தில் வெள்ளியோனியின்
நினைவிலிருந்த ராட்டைக் கிணறு
வீட்டின் நடுவில்
பழம்பொருள் அலங்காரமாய் நிற்கிறது
வெள்ளி யோனி மந்திரங்களை ஜெபித்துக்
கொண்டு இருக்கிறது
தங்க யோனி
நகரத்தை தலைக்கழித்தபடி
சாலையில் விரைகிறது.

தேர்ந்த மொழிதல் பெண்மணியின் இருப்புநிலையை, மனநிலையைச் சொல்லி யுவதியின் வாழ்நிலையை, மனப்போக்கை சித்தரித்து – இரண்டையும் மாறி மாறி / அடுத்தடுத்து பூர்த்தியடையும் கவிதை காட்டும் உலகம் நுட்பமானது.

பெரிய விஷயம் நுணுக்கமான உத்தியினால், எளிமையாகச் சொல்வது போலப் படுகிறது. ஆகச் சிறந்த கவிதை ஆகச் சிறந்த கவிஞன்தான் ஷங்கர்.

வெள்ளியோனி – தங்கயோனி என்று உருவகப்படுத்தியிருக்கும் பெண்களின் மனமும் உலகமும் சுருதிசுத்தமாக – லயம்பிசகாமல் -சொல்லப்ட்டிருப்பதாலேயே இது கவனம் கொள்ள வேண்டிய கவிதை ஆகும். ஷங்கரின் மணிபாப்பா கௌரி / கௌரி அம்மாள் கவிதைகள் போலவே இதுவும் பிறர் பற்றிய கவிதைதான். நவீன தமிழ்க் கவிதையில் பிறர் குறித்த கவிதைகள் குறைவு. ஏனெனில். அது எளிதானதில்லை அதனாலயே கௌரவிக்கப் பெறவேண்டியதும் ஆகும்.

இந்த மூன்று கவிதைகளையுமே, ஷங்கர் இருபத்தெட்டு வயதுக்குள்ளாகவே எழுதிவிட்டார் அவரை சீரிய கவிஞன் என்று அங்கீகரிக்கவும், அவர் °தானத்தை உறுதிப் படுத்தவும் இதுவே போதுமானது. பிறகும், இவை தமிழ் வாழ்வை மையமாகக் கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.

நல்ல கவிஞனுக்குத்தான் பொறுப்புகளும் அதிகம்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_1.php