| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | |||||||||||||||||
நாள்: சனிக்கிழமை (12-06-2010) முதல் பகுதி: (3 மணி) - களம் இந்த பகுதியின் இரண்டாவது மாத முயற்சியாக கேமரா பயிற்சி அளிக்கப்படுகிறது. கேமரா சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும். ஆர்வலர்களை கேமராவை இயக்கவைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும இந்த மாதம் கேமரா பயிற்சி கொடுக்கவிருப்பவர், ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார். இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், லீனா மணிமேகலை அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களை விருதுகளுக்கு அனுப்புவது தொடர்பான வழிகாட்டல் நடைபெறும். மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட நடிகர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். இராமகிருஷ்ணன் அவர்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கோரிப்பாளையம் போன்ற திரைப்படங்களின் கதாநாயகன்ஆவார். மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: |
Thursday, June 10, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
Monday, May 24, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு
| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு | ||
| ||
இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார். இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார். திரையிடப்படும் படங்கள்: தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'ஆழத்தாக்கம்' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படத்தின் இயக்குனர் திரு. பைசல் அவர்கள். உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Huozhe (1994) in english To Live இயக்கம்: Zhang Ymou இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0110081/ (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.) முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268 |
Friday, May 21, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..
தமிழ்ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (14-05-2010) தொடங்கி திங்கள் (17-05-2010) காலையில் முடிவடைந்தது.
தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கும்போதே அதில் மிக முக்கியப் பகுதியாக இடம்பெற்றது ஊர் சுற்றலாம் வாங்க பகுதி. குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்களையும், அந்த மக்களின் கலாச்சார கூறுகளையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் பயணங்களின் புனிதங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும், ஊர் சுற்றுவது எத்தகைய உயரியப் பண்பு என்பதையும் வாசகர்களுக்கு விவரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்தப் பகுதி. மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல் "காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்யஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.
அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம்பொருளை அதில் காணமுடியும் என்பதுபோலத்தான் அதுவும்.
அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்கவேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.
இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.
ஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே"..
இப்படிப் பட்டதாக பயணங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம். பொறுமை, ஏமாற்றம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவற்றின் பல கூறுகளை ஒரு பயணம் நமக்கு கற்றுக் கொடுத்துவிடும். எவ்வித எதிர்ப்பார்த்தலும் இல்லாத ஒரு பயணமாகவே இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி இருக்க வேண்டும். இதில் பங்கு பெற நீரில் மாட்டிக்கொள்ளும்போது நீரின் சுழளுக்கேர்பவும், புயலில் சிக்கிக் கொள்ளும்போது காற்றின் திசைக்கேற்ப வளைந்துக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
தமிழ் ஸ்டுடியோ.காம் அத்தகைய உணர்வுகளையே அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் பங்கு பெற நினைக்கும் அனைவரும் இதனை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வுகளும் ஒரு முன்னோட்டமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி நிச்சயம் ஒரு பரவச நிலையை, அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்கும் என்பது திண்ணம்.
இனி இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் சில முக்கிய கூறுகள் உங்களுக்காக,
இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு உதகையில் உள்ள மசினக்குடிக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டதும் அதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பதினைந்து ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. கடைசி நேரத்தில் மூன்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விலகிக் கொள்ள 12 ஆர்வலர்களுடன் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கோவை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.
காலை ஒன்பது மணியளவில் கோவையை பேருந்து அடைந்ததும் குறும்பட வட்டம் உறுப்பினரும், நண்பருமான திரு. சாசு அவர்கள் எங்களை வரவேற்றார். கோவையில் இருந்து மசினக்குடி செல்வதற்கான பயண ஏற்பாட்டையும் அவரே செய்திருந்தார்.
மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை வழியாக மசினக்குடியை சென்றடைய சனிக்கிழமை மாலை ஆறு மணியாயிற்று. வழியில் குன்னூர் மற்றும் உதகையில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான இடங்களில் வண்டியை நிறுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
மசினக்குடி சென்றடைந்ததும் அங்கே எங்களுக்காக காத்திருந்த பெங்களூருவை சேர்ந்த பிரசாத் மற்றும் அஷ்வின் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். பின்னர் "Blue Valley " எனும் தாங்கும் விடுதியில் மூன்று அறைகள் எடுத்துக் கொண்டு இரவுப் பொழுதை அங்கே கழிக்கலானோம். காடுப் போன்ற பரப்பில் அங்கேக் குடில் குடிலாக அமைந்துள்ள பகுதிதான் நாங்கள் தங்கியிருந்த குடில்கள். இதில் தங்கியது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை ஆர்வலர்களுக்கு கொடுத்திருக்கும்.
பின்னர் அதிகாலை ஐந்து மணியளவில் விலங்குகளை காண முதுமலை காடுகள் அமைந்துள்ள வனப்பகுதியில் எங்கள் பயணம் தொடங்கியது. பல விலங்குகள் காணக்கிடைக்கும் என்று பலரும் கூறி இருந்தாலும், மான், மயில், பறவைகள், யானைகள் போன்றவற்றை மட்டுமே அங்கேக் காண முடிந்தது. இருந்தாலும் காட்டு வழிப் பயணம் மனதுக்கு ஒரு புத்துணர்வையும், உடலுக்கு நல்லக் காற்றை சுவாசித்த ஆறுதலையும் கொடுத்தது.
மசினக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உதகை, கொடநாடு வழியாக கோவையை வந்தடைந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் உதகை அருகே ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் எங்கள் பயணம் மட்டுமின்றி பலரது பயணமும் சில மணி நேரங்கள் தாமதமானது. இதனால் நாங்கள் பார்க்க வேண்டிய சிலப் பகுதிகளை தாரை வார்த்துவிட்டு கோவை நோக்கி விரைந்தோம். கோவையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டு திங்கள் காலை சென்னை வந்தடைந்தோம்.
மிக நுட்பமாகவும், மிக நேர்த்தியாகவும், அனைத்து விடயங்களையும் இங்கே பதிவு செய்ய இயலவில்லை. நிச்சயம் அடுத்த ஊர் சுற்றலாம் வாங்கப் பகுதி இன்னும் சிறப்பாக அமையும் என்றே கருதுகிறோம். பயண சிரமங்களை பொறுத்துக் கொண்டும், இடையில் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளையும் பொறுத்துக் கொண்டு பயணத்தின் சங்கடங்களையும் கூட சந்தோசமாக மாற்றியநண்பர்கள், ரமேஷ், கணேஷ், தயாளன், லிவிங்க்ஸ்டன், சத்யானந்தன், ராகோ, நந்தகுமார், சாசு, பிரசாத், அஸ்வின் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள் பல.
மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://picasaweb.google.co.in/thamizhstudio/GXfAsJ?authkey=Gv1sRgCOb5j4iG-O2FkQE#
Monday, May 17, 2010
கேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்
கனடாவின் இளம் எழுத்தாளர்களுள் நம்பிக்கை அளிக்கின்ற ஒருவராக விளங்கும் கேரென், 'ஒரு நாடோடிக்கவி' என்று அழைக்கப்படுபவர். தாய்லாந்து, பர்மா, ஸ்பெயின் என்று அலைந்து திரிந்து, கவிதைகளும், பயண நூலும், நாவல்களும் எழுதி இருப்பவர். தீவிரமான வாழ்க்கை அனுபவங்களுக்குள்-பரிசோதகைளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவர். அடுத்த கட்டத்தில், "வீடென்பது குழந்தை வளரும் இடம் மட்டுமல்ல, அகம், விரியும் ஆழமும் கொள்ளும் இடமுமாகும்" என்று உணர்ந்திருப்பவர்.
கேரெனின் தந்தை ரோமன் கத்தோலிக்கர்; தாய் Jehovah's witness-பிரிவைச் சேர்ந்தவர். கேரெனின் குடும்பத்தில் சதா பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்து வந்து கொண்டிருப்பது இந்த சமய உட்பிரிவு பேதம். அத்துடன் தந்தை குடிகாரர். மூத்த சகோதரி ட்ரெஸி போதை மருந்துக்கு அடிமையாகி, 24-வது வயதில் தற்கொலை செய்து கொண்டவர். கேரென் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து, தாய்லாந்து சென்றவர். அடுத்து, ஸ்பெயினில் ஆங்கிலம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.
இவரின் முதல் கவிதைத் தொகுதி 'The small words in my Body'. பிற பண்பாடுகள் பற்றி எழுதுகையில், பார்வையாளரா தன்னை உணர்ந்து கொள்ளும் கேரென், "கவிதை என் குருதியிலிருந்து வெளிப்படுகின்றது. அது ஒவ்வொன்றினுடைய நாடியாகவும் சுவாசிப்பாகவும் உள்ளது" என்கிறார்.
"இது ஐந்தாம் பருவம்
வரலாறு போய்விடும்போது
வார்த்தைகளுக்கு எதிரொலிகளோ
அர்த்தங்களோ இல்லாதபோது
எனது தந்தை காணாதுபோகும்போது
என் அக்கா தனித்து வதைபடும்போது ..."
என்று தொடங்குகிறது அவரது ஒரு கவிதை.
"மக்கள் என்னிடம் கதைகள் சொல்லும்போது, அவற்றை உலகிற்குக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு நான் கூறும்போது, அவை பல்வேறு மக்களின் பல்வேறு காலங்களின் கதைகளாகின்றன" என்று கருதும் கேரென், 1996-இல் பர்மாவுக்கு ஒரு பயணியாக வந்தார். அங்கிருந்த இராணுவ ஆட்சி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், ஆங்-ஸான்-சூ-கீ போன்ற போராளிகள், பௌத்த மதத்தினரும் விலகி நிற்காமல் போராட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது, நாடெங்கிலும் நிலவிய வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்கள் அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து பர்மா மீது அவரது கவனம் குவிந்திருந்தது. Pencanada அமைப்புக்காக 1994-95 இல் அவர் பணியாற்றியபோது, அதில் உறுப்பினராயிருந்த மாதிடா என்னும் எழுத்தாளர் பர்மா அரசுக்கு எதிர்நிலையில் எழுதிவந்தமையால், 20 ஆண்டுகள் தனிக் கொட்டடியில் வைக்கப்பட்டிருந்ததும், அவருக்குள் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
காட்டில் பதுங்கிப் போராட்ட வாழ்வு நடத்தும் போராளிகளைச் சந்தித்தபோது, புரட்சியாளர்களுள் ஒருவருடன் அவர் காதல் வயப்படவும் நேர்கிறது. பல்கலைக்கழகங்கள், மடாலயங்கள்
read more... http://koodu.thamizhstudio.com/ayal_ilakkiyam_thodargal_1_3.php
Tuesday, May 4, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | ||
நாள்: சனிக்கிழமை (08-05-2010) முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும். இவர், திருடா திருடி, பொறி, யோகி போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார். இந்த மாதம் திரையிடப்படும் படம்: இந்த மாதம் மூன்றாவது பகுதியில், ஆவணப்பட இயக்குனர் திரு. கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "நீருண்டு நிலமுண்டு" ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கிராமங்களில் நீர் சேகரிப்பின் தேவையை, அதன் சாத்தியங்களை மிக விரிவாக பேசும் ஆவணப்படம். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: |
Thursday, April 29, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..நிகழ்வு.
| தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..நிகழ்வு. |
நாள்: மே 15 -16 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தமிழ் ஸ்டுடியோ.காம் வாசகர்களே.. தமிழ் ஸ்டுடியோ.காம்மின் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் உங்களுடன் புறப்படத் தயாராகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும், ஆர்வலர்களுக்கு தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளின் திரை விலக்கி காட்டவும், இந்த முறை நமதுப் பயணம் மசினங்குடியை நோக்கி செல்கிறது. மசினங்குடிப் பகுதி நீலகிரி மழைப் பகுதியில் உதகமண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில், இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில், வனத்துறை ஏற்பாட்டில் விலங்குகள் சுற்றித் திரியும் பகுதியை கண்டு கலைக்கலாம். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிலில் தங்கியிருந்தும் விலங்குகளை கண்டு களிக்கலாம். மேலும், மசினங்குடியில் இருக்கும், இயற்கை வனப்பை, அதன் அழகை பெரும்பாலான மனிதர்களின் காலடிப் படாத பகுதிகளையும் பார்த்துவிட்டு வருவதே இந்த ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியின் நோக்கம். மலைப் பகுதி சார்ந்த குறும்படங்கள் எடுக்க விரும்பும், ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முழுக்க முழுக்க குறும்பட ஆர்வலர்கள், இயக்குனர்கள் என குறும்பட கலைஞர்கள் ஒன்றிணைந்து செல்லவிருக்கும் இந்த ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வில் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் 2000/- பயணத்தின் போது குறும்படங்கள் சார்ந்தும், தமிழ் மற்றும் உலக இலக்கியத்தின் சிறுகதைகளை குறும்படமாக உருமாற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இலக்கிய குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம். |
Tuesday, April 27, 2010
கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்
| சுஜாதா தேசிகன் |
மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும்.
பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம்.
தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும்.
அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட்டோம். பந்தை ஸ்டிராங்காக்க வெய்யிலில் காய வைத்தால் சூட்டுக்கு பிளந்துவிடும், அல்லது அணில் வந்து கடித்துவிடும். உருட்டிய பந்தைக்கொண்டு ஓர் ஓவர் கூட இதுவரை விளையாடியதில்லை.
இந்த மரத்தின் தாவர பெயர் Samanea saman என்று ஹிந்தி பட டைட்டில் மாதிரி இருந்தாலும், இந்த மரத்துக்கு பெயர் 'ரெயின் டிரீ' ( Rain Tree ). மெக்ஸிகோ பிரேசிலிலிருந்து வந்தது என்று சொல்லுகிறார்கள். தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர்.
இந்த மரத்துக்கு கீழே வளரும் புல் செழிப்பாக இருப்பதையும், முழுவதும் பூத்திருக்கும் மரத்த்தில் இந்த பூக்கள் கொட்டும் போது அடுத்த முறை ரசித்து பாருங்கள்.
- * - * - *
விதூஷகன் சின்னுமுதலி என்ற சிறுகதை, கல்கி 1930 விமோசனம் இதழில் எழுதியது. விதூஷகன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஜெஸ்டர்(Jester) என்று பொருள். "Gopal the Jester" என்ற "அமர் சித்ர கதா" காமிக் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம். அரசவையில் வேலைக்கு வைத்திருக்கும் புத்திசாலியான கோமாளி என்று வைத்துக்கொள்ளலாம். தெனாலிராமன் கூட விதூஷகன் தான்.
பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் தெருக் கூத்தில் ராமாயணமோ, மஹாபாரதமோ விதூஷகன் என்று ஒரு கதாப்பாத்திரம் வரும். ஷேக்ஸ்பியர் நாடங்களில் வரும் க்ளவுன் கதாபாத்திரம், பாலச்சந்தர் படத்தில் அதிகப்பிரசங்கி கதாப்பாதிரம் இந்த வகை தான். கல்கி கதையில் வரும் விதூஷகனால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், அவன் வாழ்க்கையில் அவனும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ? என்பதே கதை.
கல்கி கதையில் வரும் சின்னுமுதலி என்ற இந்த விதூஷகன் சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் இருப்பவன், எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனுடைய நடை உடை பாவனை, பட்லர் ஆங்கிலம், வாய்க்கு வந்த படி பாடலுடன், சர்க்கஸ் கோமாளி மாதிரி அவன் செய்யும் செய்கையால் அவன் ரொம்ப பிரபலம். தேங்காய் மூடி கச்சேரி செய்யும் பாகவதர் மாதிரி இவன் செய்யும் வேலைக்கு தேங்காய், வாழைப்பழம், முறுக்கு போன்றவை தான் கிடைக்கிறது. மனைவியும், பிள்ளையும் செய்யும் நெசவுத் தொழிலில் குடும்பம் பிழைக்கிறது. இவனுக்கு குடிப் பழக்கம் வேற இருப்பதால் குடும்பம் கஷ்டப்படுகிறது.
மேடை நாடகங்களில் நாம் பார்க்கும் கோமாளிகளும், சினிமாவில் காமெடி என்ற பெயரில் அடிவாங்குபவர்களும் அவர்கள் வீட்டில் அதை பார்த்தால் அவர்களின் மன நிலை எப்படி இருக்கும் சில சமயம் யோசித்ததுண்டு. முதல் முதலில் விதூஷகனின் மனைவி இவன் செய்யும் கூத்தை பார்க்கிறாள். கல்கி அதை இப்படி விவரிக்கிறார்.
"கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசிங்கமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்."
என்னை கவர்ந்தது இந்த கதையின் முடிவு தான். நான் இந்த கதையை எழுதியிருந்தால், கடைசியில் "அவன் கால் ஒற்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும்" என்ற வரியுடன் கதையை முடித்திருப்பேன். கல்கி இதற்கு அப்பறம் கூட மூன்று வரிகள் எழுதியிருக்கார். இரண்டு விதமான முடிவிலும் சுவாரஸியம் இருக்கு. அதை வாசகர்கள் அனுபவிக்கலாம்.
இந்த கதையின் அமைப்பை பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளில் பார்க்கலாம். நிச்சயம் படிக்க வேண்டிய கதை.
- * - * - * -
தோசைக்கு சிறந்த இடம் பெங்களூரு. சென்னை தோசை மெல்லிசான வாயில் புடவை மாதிரி என்றால், பெங்களூரு தோசை கனமாக பட்டு புடவை மாதிரி. மசால் தோசைக்கு பூர்வீகம் மைசூர். தோசைக்கு நடுவில் உருளைக்கிழங்கை வைத்தால் நமக்கு மசால் தோசை ஆனால் பெங்களூர்/மைசூரில் தோசையில் சிகப்பு சட்னி தடவி பிறகு உருளைக்கிழங்கு வைத்தால் தான் மசால் தோசை. சிகப்பு சட்னிக்கு தான் மசாலா!.
தாவங்கரே பென்னே....
for more.. http://koodu.thamizhstudio.com/thodargal_9_2.php